சேவை (#11340)

கடவுளே, நாமங்கள் அனைத்தின்  இறைவனே, விண்ணுலகங்களை உருவாக்கியவரே! எந்த நாமத்தின் வாயிலாக, உந்தன் வலிமையின் பகலூற்றானவரும், உந்தன் சக்தியின் உதயபீடமானவருமான அவர் அவதரிக்கச் செய்யப்பட்டரோ, எதன் மூலமாக ஒவ்வொரு திடப் பொருளும் வழிந்தோடிட  செய்யப்பட்டதோ, மற்றும் உயிரற்ற ஒவ்வொரு சடலமும் மீண்டும் உயிர்பெறச் செய்யப்பட்டதோ; மற்றும், ஒவ்வோர் அசையும் ஆவி உறுதிச் செய்யப்பட்டதோ, அவரைக் கெஞ்சிக் கேட்கின்றேன் — உம்மைத்தவிர வேறெவருடனான எல்லாப் பற்றுக்களையும் என்னிலிருந்து பற்றறுத்திடவும், உமது சமயத்திற்குச் சேவையாற்றிடவும், உந்தன் மாட்சிமையின் சக்தியின் வாயிலாக, நீர் விரும்பியவற்றையே விரும்பிடவும், உமது விருப்பத்தின் நல்மகிழ்வுக்கு உகந்தவற்றைச் செய்திடவும், என்னை இயலச் செய்யுமாறு நான் மன்றாடுகிறேன். 

என் கடவுளே,  உம்மைத் தவிர வேறெவரையும் நாடாதிருக்கும் அளவிற்கு மேலும் என்னைச் செல்வந்தராக்கிடக்  கூடியவற்றை எனக்கே விதித்தருள உம்மிடம்   கெஞ்சிக் கேட்கிறேன். என் கடவுளே, உம்மை நோக்கி என் முகத்தைத் திருப்பிடவும், என் கரங்கள் உமது கிருபை எனும் கயிற்றினைப் பற்றிக் கொள்ளவும் செய்திட்ட என்னை நீர்  பார்க்கின்றீர்.  உந்தன் கருணையை என் மீது அனுப்பிடுவீராக; உம்மால் தேர்ந்தெடுக்கப் பட்டோருக்கென நீர்  எழுதியுள்ளவற்றை எனக்கும் எழுதிடுவீராக. உமக்கு விருப்பமானவற்றைச் செய்வதற்குச் சக்திப்படைத்தவர் நீரே. என்றென்றும் மன்னிப்பவரும், சர்வ வல்லமை வாய்ந்தவரான  கடவுள், உம்மைத் தவிர வேறிலர்.

-Bahá'u'lláh
-----------------------

சேவை (#11341)

என் கடவுளே! உமது அன்புக் கருணையின் நறுமணம் என்னை மெய்ம்மறக்கச் செய்தமைக்காகவும், உமது கருணை எனும் மென்மையான தென்றல் உந்தன் தாராளத் தயைகள் எனும் திசையை நோக்கி என்னை ஈர்த்திடச் செய்தமைக்காகவும், நான் உம்மைப் போற்றுகிறேன்.  என் பிரபுவே, அதனைப் பருகிட்ட ஒவ்வொருவரையும், உம்மைத் தவிர மற்றனைத்தின் மீதுமுள்ள பற்றுகளை அறுத்திட்ட, உமது  உயிரினங்கள் அனைத்திலிருந்தும் பற்றறுத்தல் எனும் மண்டலத்தில் உயரப் பறக்கச் செய்திட்ட, அவர்களின் பார்வையை உமது அன்புத் திருவருளின் மீதும், உமது எண்ணற்ற பரிசுகளின் மீதும் ஊன்றச் செய்திட்ட உயிர் நீரை, உமது தயாளம் எனும் விரல்களிலிருந்து என்னைப் பருகச் செய்வீராக.

என் பிரபுவே, எல்லாச் சூழ்நிலைகளிலும், உமக்குச் சேவையாற்றிடவும், உமது திருவெளிப்பாடு, உமது திருவழகு எனும் வழிபடுவதற்குரிய சரணாலயத்தை நோக்கிச் சென்றிட என்னை ஆயத்தமாக்கிடுவீராக.  இது உமக்கு மகிழ்வளிக்குமேயானால், உமது கிருபை எனும் புல்வெளியில் என்னை ஓர் இளம்  மூலிகைச் செடியாக வளரச் செய்வீராக; அதனால் உமது விருப்பம் எனும் மென்மையான காற்றுகள், என் அசைவும், என் அசையாமையும்  முற்றிலும் உம்மால்  இயக்கப்படுபவையாக ஆகிட, என்னை உமது  விருப்பத்திற்கு ஏற்றவாறு அசையவும் வளையவும் செய்திடக்கூடும். 

எவரது நாமத்தினால், மறைந்திருந்த  இரகசியம் புலப்படுத்தப் பட்டதோ, நன்கு பாதுகாக்கப்பட்ட திருநாமம் வெளிப்படுத்தப்பட்டதோ, மற்றும் முத்திரையிட்டு மூடப்பட்ட கோப்பையின் முத்திரைகள் திறக்கப்பட்டு, அதனால் அதன் நறுமணம், கடந்தகால, எதிர்கால படைப்பு முழுவதன் மீதும் சிந்தப்பட்டதோ, அவர்  நீரே ஆவீர். என் பிரபுவே, தாகமுற்றோர், உமது கிருபையின் உயர் நீர்களை அடைந்திட விரைந்துள்ளனர்; அந்த இழிவான உயிர்ப்பிராணி, உமது செல்வங்கள் எனும் சமுத்திரத்தின் அடியில் தன்னையே  மூழ்கடித்திட ஏக்கங்கொண்டுள்ளான்.

உலகின் நேசராகியப் பிரபுவே, உம்மை அறிந்தோர் அனைவரின் ஆவலே, உமது  பேரொளியினால் நான் சத்தியம் செய்கிறேன்! 

உமது முன்னிலை எனும் பகல் நட்சத்திரம், அதன் பிரகாசத்தை உமது  மக்களின் மீது பொழிந்துள்ள நாள்களில், உம்மிடமிருந்து துயர்மிகு என் பிரிவினால் நான் கடுமையாகப் பாதிப்புக்காளானேன். ஆதலால், உமது வதனத்தைக் கண்ணுற்றும், உமது உத்தரவினால், உந்தன் அரியாசனத்தின் அரசவைக்குள் நுழைந்தும், உமது கட்டளைக்கிணங்கி, உம்மை நேருக்கு நேர் சந்தித்தோருக்கும் விதிக்கப்பட்ட பிரதிபலன்களை எனக்கும் எழுதி வைத்திடுவீராக. 

என் பிரபுவே, பூமியையும் விண்ணு- லகங்களையும் சூழ்ந்துள்ள உமது  திருநாமத்தின் பிரகாசங்களின் பெயரால், உமது  நிருபங்களில் நீர்  ஆணையிட்டுள்ளவற்றுக்காக என் விருப்பத்தைச் சரணடையச் செய்திடவும், அதனால் உமது மாட்சிமை எனும் சக்தியின் மூலமாக, நீர்   விரும்பியதைத்  தவிர வேறெதனையும் என்னுள் நான் கண்டறியாது இருந்திடவும், என்னை இயலச் செய்யுமாறு நான் உம்மை மன்றாடுகிறேன்.

என் கடவுளே, தங்களால்  தேர்ந்தெடுக்கப்-பட்டோருக்கு, நீர் அமைத்துள்ள வழியைத் தவிர வேறெந்த வழியையும் கண்டறிவதற்கு சக்தியற்று இருக்கையில், வேறெங்கே நான் திரும்புவது?  உலகிலுள்ள எல்லா அணுக்களும் நீர்தாம் கடவுள் எனப் பறைசாற்றி, உம்மைத் தவிர வேறு கடவுள் இலர் என்றும் சாட்சியம் பகர்கின்றன. நித்திய காலம் முதல் நீர் விரும்பியதைச் செய்வதற்கும், நீர்   நேசித்ததை விதிப்பதற்கும் சக்திப்படைத்தவராக நீரே இருந்துள்ளீர். 

என் கடவுளே, எல்லா நேரங்களிலும் உம்மை  நோக்கிச் சென்றிட என்னால் இயலச் செய்வனவற்றை எனக்காக விதித்தருள்வீராக; உமது  கிருபை எனும் கயிற்றினை இடைவிடாது பற்றிக்கொள்ளவும் இயலச் செய்வீராக; உந்தன்   எழுதுகோலிலிருந்து வழிந்தோடி வரும் எதனையும் தேடிட என்னை இயலச் செய்வீராக. என் பிரபுவே, நான் வறியவனும், தனித்தொதுக்கப்பட்டவனும் ஆவேன்; நீரே சகலமும் வைத்திருப்பவர், அதி உயர்வானவர். ஆகையால், உமது கருணை எனும் அற்புதங்களின் வாயிலாக, என் மீது கருணைக் காட்டிடுவீராக; எப்பொருள்களைக் கொண்டு, உந்தன்  ஒற்றுமையைக் கண்டுணர்ந்த உமது  எல்லா உயிரினங்களின் இதயங்களையும், உந்தன்  மீது முழுமையாக பக்திக்கொண்ட மக்களின் இதயங்களையும், நீர்  மறுவுருவாக்கம் செய்கின்றீரோ, அப்பொருள்களை என் வாழ்வின் ஒவ்வொரு கணமும், என் மீது பொழிந்திடுவீராக. 

மெய்யாகவே, சர்வ வல்லவரும், அதி மேலானவரும், எல்லாம் அறிந்தவரும், சர்வ விவேகியும் நீரே ஆவீர்.

-Bahá'u'lláh
-----------------------

