Return   Facebook   Zip File

Obligatory

சுருக்கமான கட்டாயப்பிரார்த்தனை

இருபத்து நான்கு மணிக்கு ஒரு முறை நண்பகலுக்கும் சூரிய அஸ்தமனத்திற்கும் இடையில் கூறப்பட வேண்டும்.

என் கடவுளே, உம்மை அறிந்து வழிபடுவதற்கெனவே என்னைப் படைத்திருக்கின்றீர் என்பதற்கு நான் சாட்சியமளிக்கின்றேன். இத்தருணம் என் பலவீனத்திற்கும் உமது வலிமைக்கும், என் வறுமைக்கும் உமது செல்வத்திற்கும் சாட்சியம் கூறுகின்றேன்.

ஆபத்தில் உதவுபவரும், தனித்து இயங்க-வல்லவருமான இறைவன் உம்மையன்றி வேறெவருமிலர்.

#5082
- Bahá'u'lláh

 

நாள்தோறும் காலையிலும் மாலையிலும் நண்பகலிலும் கூற வேண்டியது.

பிரார்த்தனை செய்ய விரும்பும் ஒருவர் கைகளைக் கழுவட்டும்; அவ்வாறு செய்திடும் வேளையில் அவர் இவ்வாறு கூறட்டும்:

என் இறைவா, என் கரத்தினைப் பலப்படுத்துவீராக, அதனால் அது தன் முன்னால் உலகச் சேனைகளெல்லாம் சக்தியற்றுப் போய் விடுமளவு பற்றுறுதியுடன் உமது திருநூலினைக் கையிலெடுத்திடக் கூடும். பின்பு, அதனைத் தன்னுடையது அல்லாதவற்றில் தலை-யிடுவதிலிருந்து பாதுகாத்திடுவீராக. மெய்யாகவே, நீரே எல்லாம் வல்லவர், அதி சக்தியுடையவர்.

பிறகு அவர் முகத்தைக் கழுவிடும் பொழுது இவ்வாறு கூறட்டும்:

என் பிரபுவே, எனது முகத்தை உம்பால் திருப்பியுள்ளேன்! உமது வதனத்தின் பிரகாசத்தினால் அதனை ஒளி பெறச் செய்வீராக. பின்பு அதனை உம் ஒருவரைத் தவிர மற்றெவர்பாலும் திரும்பிடாதிருக்குமாறு பாதுகாப்பீராக.

பிறகு அவர் எழுந்து நின்று, கிப்லியின் திசையில் (வழிபாட்டிற்குரிய குறி, அதாவது பாஹ்ஜி, அக்காநகர்) முகத்தைத் திருப்பி இவ்வாறு கூறட்டும்:

தம்மைத் தவிர கடவுள் வேறு எவருமிலர் என்பதற்குக் கடவுளே சாட்சியமளிக்கின்றார். வெளிப்பாடு, படைப்பு என்னும் இராஜ்யங்கள் அவருடையவையே.

உண்மையாகவே, அவரே வெளிப்பாட்டின் பகலூற்றானவரையும் ஸைனாயில் உரையாடிய-வரையும், எவர் மூலமாக அதி உயரிய அடிவானம் பிரகாசிக்கச் செய்யப்பட்டு, கடந்து சென்றிட இயலா திருவிருட்சம் வாய் மலர்ந்ததோ, எவர் மூலமாக “அதோ சகலத்தையும் கொண்டுள்ளவர் வந்துவிட்டார்; உலகமும் சுவர்க்கமும் ஒளியும் இராஜ்யமும் மனிதர்களுக்கெல்லாம் பிரபுவானவரும், மேலுலகிலும் மண்ணுல-கிலுமுள்ள அரியாசனத்தைக் கொண்டுள்ள-வருமான இறைவனுடையதே” என்னும் அழைப்பு பிரகடனம் செய்யப்பட்டுள்ளதோ, அவரை, வெளிப்படுத்தியுள்ளார்.

பிறகு, அவர் குனிந்த பாங்கில் தனது கரங்களை முழங்கால் முட்டுவில் வைத்து இவ்வாறு கூறட்டும்:

எனது புகழ்ச்சிக்கும் என்னையன்றி மற்றவரின் புகழ்ச்சிக்கும், எனது வருணனைக்கும் விண்ணுலகிலும் மண்ணுலகிலுமுள்ள அனைவரின் வருணனைக்கும் மேல் உயர்வானவர் நீரே.

பிறகு நின்றவாறு அவர் கைகளை விரித்து, தனது உள்ளங் கைகளை முகத்தை நோக்கி திருப்பிய வண்ணம் இவ்வாறு கூறட்டும்:

என் இறைவா, மன்றாடும் விரல்களினால் உமது கருணை, கிருபை என்னும் அங்கியின் நுனியைப் பற்றிக் கொண்டுள்ளவனைக் கருணை காட்டுபவர்களிலேயே அதி கருணையாளரான நீர் நம்பிக்கை இழக்கச் செய்திடாதீர்.

பிறகு அவர் அமர்ந்து கொண்டு இவ்வாறு கூறட்டும்.

உமது ஏகத்துவத்திற்கும் ஒருமைத் தன்மைக்கும், நீரே கடவுள் என்பதற்கும், உம்மையன்றிக் கடவுள் வேறிலர் என்பதற்கும் நான் சாட்சியம் கூறுகின்றேன். நீர் மெய்யாகவே உமது சமயத்தை வெளிப்படுத்தியுள்ளீர். உமது ஒப்பந்தத்தைப் பூர்த்தி செய்துள்ளீர்; மண்ணுலகிலும் விண்ணுலகிலும் வாழும் அனைவருக்கும் உமது அருட் கதவினை அகலத் திறந்துள்ளீர். எவரை இவ்வுலகின் மாற்றங்களும் தற்செயல் நிகழ்வுகளும் உம்பால் திரும்புவதிலிருந்து தடுத்திட இயலவில்லையோ, எவர் உம்மிடம் உள்ளவற்றைப் பெற வேண்டுமென்ற எதிர்பார்ப்பின் காரணமாகத் தாம் கொண்டுள்ள அனைத்தையும் துறந்தனரோ அவ்வன்பர்களின் மீது அருளும் அமைதியும் வணக்கமும் ஒளியும் நிலைத்திடுமாக. நீர் உண்மையாகவே, என்றும் மன்னிப்பவர், சர்வ வள்ளன்மையாளர்.

(எவராவது, கூறுவதற்கு நீண்ட வாசகத்திற்குப் பதிலாக “ஆபத்தில் உதவுபவரும், தனித்து இயங்கவல்லவருமான அவரைத் தவிர கடவுள் வேறிலர் என்பதற்குத் தாமே சாட்சியம் ஆகின்றார்”, எனும் வார்த்தைகளைத் தேர்ந்தெடுப்பாராகில் அது போதுமானது. அவ்வாறே அவர் அமர்ந்தவாறு கூறுவதற்கு, “உமது ஏகத்துவத்திற்கும் ஒருமைத் தன்மைக்கும் உம்மையல்லாது இறைவன் வேறிலர் என்பதற்கு நான் சாட்சியமளிக்கின்றேன்.” எனும் வார்த்தைகளைத் தேர்ந்தெடுப்பாராகில் அது போதுமானது.)

(பஹாவுல்லாவின் பிரார்த்தனையும் தியானமும் என்ற நூலிலிருந்து,182)

#11432
- Bahá'u'lláh

 

இருபத்து நான்கு மணி நேரத்திற்கு ஒரு முறை கூறப்படவேண்டும்.

எவர் இப்பிரார்த்தனையைக் கூற விரும்புகின்றாரோ, அவர் எழுந்து நின்று கடவுள்பால் திரும்புவாராக. அவர் அவ்வாறு நிற்கையில் பெருங் கருணையும் இரக்கமும் கொண்ட அவரது ஆண்டவரின் கருணையை எதிர்பார்த்திருப்பது போன்ற பாவனையில் வலப்புறமும் இடப்புறமும் அவரது பார்வையைச் செலுத்தட்டும். பின் அவர் இவ்வாறு கூறுவாராக:

நாமங்கள் அனைத்திற்கும் அதிபதியும் விண்ணுலகங்களைப் படைத்தவரும் நீரே! அதி மேன்மையும் எல்லா மகிமையும் மிக்க, கண்ணுக்குப் புலனாகா, உமது சாராம்சத்தின் பகலூற்றுகள் மூலமாக உம்மை இறைஞ்சு கின்றேன். என் பிரார்த்தனையை உமது அழகிலிருந்து என்னை மறைத்திடும் திரைகளை எரித்திடும் நெருப்பாகவும் உமது முன்னிலை எனும் சமுத்திரத்திற்கு வழிகாட்டிடும் ஒளி விளக்காகவும் ஆக்கிடுவீராக.

பிறகு ஆசீர்வதிப்பும் மேன்மையும் மிக்கக் கடவுள்பால் அவர் தமது கரங்களை இறைஞ்சிக் கேட்கும் பாவனையில் உயர்த்தி இவ்வாறு கூறுவாராக:

உலகின் ஆவலானவரே! நாடுகளின் நேசரே! உம்மைத் தவிர மற்ற எல்லாவற்றிலும் உள்ள பற்றினைத் துறந்து, உமது இயக்கத்தின் மூலம் படைப்பினம் முழுவதையுமே கிளர்ந்தெழச் செய்த உமது கயிற்றினை இறுகப் பற்றி, உம்மை நோக்கி நான் திரும்பியுள்ளதை நீர் காண்கின்றீர். என் பிரபுவே, நான் உமது ஊழியனும் உமது ஊழியனின் மைந்தனுமாவேன். உமது விருப்பத்தினையும் உமது அவாவினையும் நிறைவேற்ற நான் சித்தமாய் நிற்பதையும் உமது நல்விருப்பத்தையன்றி மற்ற எதனையும் நான் விழையாதிருப்பதையும் காண்கின்றீர். உமது ஊழியனை உமது விருப்பத்தின்படியும் திருவுளத்தின்படியும் நடத்துமாறு உமது கருணை என்னும் சமுத்திரத்தின் மூலமாகவும் கிருபை என்னும் பகல் நட்சத்திரத்தின் மூலமாகவும் உம்மை நான் மன்றாடிக் கேட்கின்றேன். எல்லாக் குறித்துரைக்கும் புகழ்ச்சிக்கும் அதி மேலான உமது வலிமையின் சாட்சியாக! உம்மால் வெளிப்படுத்தப்பட்டது எதுவோ அதுவே என் இதயத்தின் ஆவலும் என் ஆன்மாவின் அன்புக்குரியதுமாகும். கடவுளே, என் கடவுளே, எனதாவல்களையும் எனது செய்கைகளையும் கண்ணுறாதீர்! மாறாக, மண்ணுலகையும் விண்ணுலகங்களையும் உள்ளடக்கியுள்ள உமது விருப்பத்தினையே கண்ணுறுவீராக. தேசங்கள் யாவற்றுக்கும் பிரபுவானவரே, உமது அதி உயரிய நாமத்தின் சாட்சியாக! நீர் விரும்பியதையன்றி வேறெதனையும் நான் விரும்பியதில்லை; நீர் எதனை நேசிக்கின்றீரோ அதனையே நானும் நேசிக்கின்றேன்.

பின் அவர் மண்டியிட்டுத் தன் நெற்றியைத் தரையை நோக்கித் தாழ்த்தி இவ்வாறு கூறுவாராக:

உம் ஒருவரது வருணனையைத் தவிர மற்றெல்லாரது வருணனைக்கும், உமது ஒருவரது புரிந்துகொள்ளலைத் தவிர மற்றெல்லாரது புரிந்துகொள்ளலுக்கும் அதி மேலானவர் நீரே.

பின் அவர் எழுந்து நின்று இவ்வாறு கூறுவாராக:

என் பிரபுவே, என் பிரார்த்தனையை ஒரு ஜீவநீர் ஊற்றாக ஆக்குவீராக. அதனால் உமது அரசுரிமை நிலைத்திருக்கும் வரை நான் வாழ்ந்து, உமது உலகங்கள் ஒவ்வொன்றிலும் உம்மைப் பற்றிக் கூறிடுவேன்.

பின் அவர் மீண்டும் தன் கரங்களை இறைஞ்சிக் கேட்கும் பாவனையில் உயர்த்தி, இவ்வாறு கூறுவாராக:

உம்மிடமிருந்து பிரிவுற்றதால் இதயங்களும் ஆன்மாக்களும் உருகின; உமது அன்புத் தீயினால் உலகமுழுமையும் கிளர்ச்சி கொண்டது! மனிதர் யாவர் மீதும் ஆட்சி புரிபவரே! படைப்பினம் முழுவதையும் கீழ்ப்படியச் செய்த உமது நாமத்தின் சாட்சியாக உம்மைக் கெஞ்சிக் கேட்கின்றேன்; உம்மிடம் இருப்பதை எனக்குக் கொடுக்காது இருந்து விடாதீர்! என் பிரபுவே, உமது கம்பீரம் என்னும் விதானத்தின் கீழும் உமது கருணை என்னும் எல்லைகளுக்குள்ளாகவும் உள்ள தனது அதி உயரிய உறைவிடத்தை நோக்கி இந்த அந்நியன் விரைந்து செல்வதையும், இப்பிழையோன் உமது மன்னிப்பு எனும் சமுத்திரத்தையும், இத்தாழ்ந்தோன் உமது புகழ் எனும் அவையினையும் இவ் வறிய சிருஷ்டியானவன் உமது செல்வம் எனும் ஒளிச்சுடரையும் தேடுவதை நீர் காண்கின்றீர். நீர் எதனை விரும்புகின்றீரோ அதனைக் கட்டளையிடும் அதிகாரம் உமக்கே உரியதாகும். உமது செயல்களில் நீர் போற்றப்பட வேண்டும் என்பதற்கும் உமது கட்டளைகளில் நீர் வணங்கிடப்பட வேண்டும் என்பதற்கும் உமது ஆணைகளில் நீர் என்றும் கட்டுப்படுத்தப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்கும் நானே சாட்சி.

பின் அவர் தன் கரங்களை உயர்த்தி, அதி உயரிய நாமத்தை மும்முறை உச்சரிக்க வேண்டும். பிறகு அவர் புகழும் மேன்மையும் மிக்க இறைவன் முன் குனிந்த பாங்கில் தன் கரங்களை முழங்கால் முட்டுவில் வைத்து இவ்வாறு கூறுவாராக:

என் கடவுளே, உம்மை வழிபடும் தனது ஏக்கத்திலும், உம்மை நினைவு கூர்வதிலும், உம்மை உயர்த்திப் புகழ்வதிலும், அது கொண்ட பேராவலில் எங்ஙனம் எனதான்மா எனது அங்கங்களிலும் அவயவங்களிலும் கிளர்ச்சியுறச் செய்யப்-பட்டுள்ளது என்பதையும், எதற்கு உமது வெளியிடுகை என்னும் இராஜ்யத்திலும், உமது அறிவு என்னும் சுவர்க்கத்திலும், உமது கட்டளை என்னும் நா சாட்சியம் கூறிற்றோ, அதற்கு எங்ஙனம் எனதான்மா சாட்சியம் கூறுகின்றது என்பதையும் நீர் காண்கின்றீர். என் பிரபுவே, இந் நிலையில் உம்மிடமுள்ள யாவற்றையும் எனக்குத் தந்து அருளுமாறு உம்மை மன்றாடிக் கேட்க விழைகின்றேன். அதனால், நான் எனது வறுமையை மெய்ப்பித்துக் காட்டி உமது அருட்கொடையினையும் செல்வங்களையும் மிகைப்படுத்திடவும் எனது வலுவின்மையைப் பிரகடனப்படுத்தி, உமது ஆற்றலையும் வலிமையையும் வெளிப்படுத்தவும் கூடும்.

பின் அவர் எழுந்து நின்று இறைஞ்சிக் கேட்கும் பாவனையில் தன் கரங்களை இரு முறை உயர்த்தி, பின் இவ்வாறு கூறுவாராக.

சர்வ வல்லமை பொருந்தியவரும், மாபெரும் வள்ளலுமான கடவுள் உம்மையன்றி வேறிலர். ஆதியும் அந்தமும் ஆகிய இரண்டிலும் விதித்தருளும் இறைவன் உம்மையன்றி வேறிலர். கடவுளே, என் கடவுளே, உமது மன்னிக்குந் தன்மை எனக்குத் துணிவைத் தந்தது; உமது கருணை என்னைப் பலப்படுத்தியது; உமது அழைப்பு என்னை விழிப்புறச் செய்தது; உமது கிருபை என்னை எழச் செய்து, உந்தன்பால் வழிநடத்திச் சென்றது. அவ்வாறில்லையெனில் உமது அருகாமை எனும் நகரின் முன் வாயிலில் துணிவுடன் நிற்கவோ, உமது விருப்பம் என்னும் சுவர்க்கத்திலிருந்து ஒளிரும் விளக்குகளின்பால் எனது முகத்தைத் திருப்பவோ நான் யார்? என் பிரபுவே, இந்த ஈன சிருஷ்டியானவன் உமது கிருபை என்னும் கதவினைத் தட்டுவதையும் அநித்தியமான இவ்வான்மா உமது அருட்கொடை என்னும் கரங்களிலிருந்து நித்திய வாழ்வு என்னும் நதியைத் தேடுவதையும் நீர் காண்கின்றீர். நாமங்கள் யாவற்றுக்கும் அதிபதியே, எல்லாக் காலங்களிலும் ஆணையிடும் அதிகாரம் உமக்கே உரியதாகும். விண்ணுலகங்களைப் படைத்து அருளியவரே, உமது விருப்பத்திற்குச் சரணடைந்து, உளமாறக் கீழ்ப்படிதல் எனக்குரியதாகும்.

பிறகு அவர் தன் கரங்களை மும்முறை மேலுயர்த்தி, (ஒவ்வொரு முறை கரங்களை மேலுயர்த்தும் போதும்) இவ்வாறு கூறுவாராக:

உயர்ந்தோர் ஒவ்வொருவரினும் அதி உயர்ந்தவர் இறைவனே!

பிறகு அவர் மண்டியிட்டுத் தன் நெற்றியைத் தரையை நோக்கித் தாழ்த்தி இவ்வாறு கூறுவாராக:

உமது அருகில் உள்ளோர்களின் புகழுரை உமது அருகாமை என்னும் சுவர்க்கத்தை நோக்கிச் செல்லவோ, உம்மிடம் பக்தி கொண்டோரின் இதயங்கள் என்னும் பறவைகள் உமது வாயிற் கதவினை அடையவோ இயலாத அளவிற்கு நீர் அதி உயர்ந்திருக்கின்றீர். பண்புகள் அனைத்திற்கும் மேலாகப் பரிசுத்தமானவராயும் நாமங்கள் அனைத்திற்கும் மேலாகப் புனித மிக்கவராயும் இருந்திருக்கின்றீர் என்பதற்கு நானே சாட்சி. அதி மேன்மைமிக்கவரும் சகல மகிமை பொருந்தியவருமான கடவுள் உம்மையன்றி வேறிலர்.

பிறகு அவர் அமர்ந்தவாறு இவ்வாறு கூறுவாராக:

நீரே கடவுள், உம்மையன்றி கடவுள் வேறிலர் என்பதற்கும் அவதரிக்கச் செய்யப்பட்டுள்ளவர், மறைபுதிரும் பொக்கிஷமும் எனப் பாதுகாக்கப்பட்ட சின்னமுமானவர் என்பதற்கும் அவர் மூலமே “ஆ” மற்றும் “கு” (ஆகு) என்பதன் அட்சரங்கள் இணைக்கப்பட்டு ஒன்றாய்ப் பின்னப்பட்டுள்ளன என்பதற்கும் எல்லாப் படைப்பினங்களும் உயர்விலுள்ள விண் கூட்டத்தினரும் அதி உயர்வான சுவர்க்கவாசிகளும் அவற்றுக்கும் அப்பால் சர்வ மகிமை பொருந்திய அடிவானத்திலிருந்து மகோன்னதரின் நாவும் சாட்சியம் அளித்திருத்திருப்பதற்கும் நானும் சாட்சியம் அளிக்கின்றேன். அதி பெரும் உயர்வுமிக்கோனின் எழுதுகோலால் குறிக்கப்- பட்டுள்ளவரும் மேலுலக அரியணைக்கும் மண்ணுலக அரியணைக்கும் அதிபதியாகிய கடவுளின் திருநூல்களில் குறிப்பிடப்- பட்டுள்ளவரும் அவரே என்பதற்கு நான் சாட்சியம் கூறுகின்றேன்.

பிறகு எழுந்து நின்று இவ்வாறு கூறுவாராக:

படைப்பினம் அனைத்திற்கும் அதிபதியே! கண்ணுக்குப் புலனாகும், புலனாகா அனைத்தையும் உடைமையாகக் கொண்டவரே! நீர் என் கண்ணீரையும் நான் விடும் பெருமூச்சினையும் காண்கின்றீர்; என் வேதனைக் குரலையும் என் புலம்பலையும் என் இதயத்தின் கதறலையும் கேட்கின்றீர். உமது வல்லமையின் சாட்சியாக! எனது வரம்பு மீறிய செயல்கள் உம்மை நெருங்கி வருவதினின்று என்னைத் தடுத்துள்ளன; எனது பாவங்கள் உமது புனித அவையிலிருந்து என்னைத் தூரத்தே நிறுத்தி வைத்துள்ளன. என் பிரபுவே, உமது அன்பு என்னைச் செல்வந்தனாக்கியுள்ளது; உம்மிடமிருந்து பிரிவு என்னை அழித்துள்ளது. உம்முடன் தொடர்பின்மை என்னை இல்லாதானாக்கியுள்ளது. இவ் வனாந்திரத்தில் உமது அடிச்சுவடுகளின் சாட்சியாகவும், இம்முடிவில்லா பெரும் பரப்பினில் உம்மால் தேர்ந்தெடுக்கப்பட்டோர் உதிர்த்திட்ட “இதோ நான் இங்கே, இதோ நான் இங்கே”, என்னும் சொற்களின் சாட்சியாகவும், உமது வெளிப்பாட்டின் மூச்சுகளின் சாட்சியாகவும், உமது அவதாரம் என்னும் அதிகாலையின் தென்றல் காற்றுகளின் சாட்சியாகவும் உம்மைக் கெஞ்சிக் கேட்கின்றேன்; உமது அழகினைக் கண்ணுறவும், உமது புனித நூலில் உள்ளனவற்றை யெல்லாம் பின்பற்றவும் எனக்கு அருள்பாலிப்பீராக.

பிறகு அவர் அல்லா-உ-அப்ஹா எனும் அதி உயரிய நாமத்தை மும்முறை உச்சரிக்க வேண்டும். பிறகு குனிந்த பாங்கில் தனது கரங்களை முழங்கால் முட்டுவில் வைத்து இவ்வாறு கூறுவாராக:

என் கடவுளே, நான் உம்மை நினைவு கூர்ந்து போற்றிப் புகழ்ந்திட உதவியமைக்காகவும், உமது அடையாளங்களின் பகலூற்றான அவரை நான் அறிந்திடச் செய்தமைக்காகவும், உமது பிரபுத்துவத்தின் முன்னிலையில் என்னைத் தலை வணங்கச் செய்தமைக்காகவும், உமது இறையம்சத்தின் முன்னிலையில் என்னைப் பணிவாக நடந்திடச் செய்தமைக்காகவும், உமது மகோன்னதத்தின் நாவினால் நவின்றவற்றினை ஏற்றுக் கொள்ளச் செய்தமைக்காகவும் நீர் போற்றப்படுவீராக.

பிறகு அவர் நிமிர்ந்து நின்று இவ்வாறு கூறுவாராக:

கடவுளே, என் கடவுளே! என் பாபச் சுமையினால் எனதுடல் வளைமுதுகாகியது. எனது கவனமின்மை என்னை அழித்துள்ளது. எனது தீயச் செயல்களையும் உமது தயவினையும் நான் ஆழ நினைத்திடும் போதெல்லாம் என் நெஞ்சம் என்னுள் உருகுகின்றது; என் நாளங்களில் என் இரத்தம் கொதிக்கின்றது. உலகின் ஆவலே! உமது அழகின் சாட்சியாகக் கூறுகின்றேன்; உம் முன் என் முகத்தை உயர்த்திட நாணுகின்றேன்; உமது அருட்கொடை என்னும் சுவர்க்கத்தை நோக்கி நீண்டிட என் ஏங்கும் கரங்கள் வெட்கங் கொள்கின்றன.

மேலுலக அரியணைக்கும் கீழே மண்ணுலக அரியணைக்கும் அதிபதியானவரே, எங்ஙனம் என் கண்ணீர் உம்மை நினைவு கூர்வதிலிருந்தும் உமது பண்புகளைப் போற்றுவதிலிருந்தும் என்னைத் தடுத்துள்ளது என்பதை நீர் காண்கின்றீர். படைப்பிற்கெல்லாம் அதிபதியே! கண்ணுக்குப் புலனாகும் கண்ணுக்குப் புலனாகா அனைத்திற்கும் அரசரே! உமது இராஜ்யத்தின் அடையாளங்களின் சாட்சியாகவும் உமது அரசாட்சியின் மர்மங்களின் சாட்சியாகவும் உம்மைக் கெஞ்சிக் கேட்கின்றேன்; உமது அன்பர்களை உமது அருட்கொடைக்கும் கிருபைக்கும் பொருந்த நடத்திடுவீராக.

பிறகு “அல்லா-உ-அப்ஹா” என்னும் அதி உயரிய நாமத்தை மும்முறை உச்சரித்ததும், மண்டியிட்டுத் தன் நெற்றியினால் தரையைத் தொட்டு இவ்வாறு கூறுவாராக:

என் கடவுளே, உமது அருகாமைக்கு எங்களை ஈர்க்கக் கூடியவற்றினை எங்கள்பால் அருளியமைக்காகவும் உம்மால் அனுப்பப்பட்ட திருநூல்களிலும் மறைநூல்களிலும் எங்களுக்குத் தந்து அருளிய ஒவ்வொரு நன்மைக்கும் உமது புகழ் போற்றி. என் பிரபுவே, எண்ணிலடங்கா பயனற்றக் கனவுகளிலிருந்தும் வீண் கற்பனைகளிலிருந்தும் எங்களைக் காத்தருளும்படி உம்மைக் கெஞ்சிக் கேட்கிறேன். மெய்யாகவே வல்லவரும் எல்லாம் அறிந்தவரும் நீரே.

பிறகு அவர் தன் சிரசினை உயர்த்தி, அமர்ந்தவாறு இவ்வாறு கூறுவாராக:

என் கடவுளே, உம்மால் தேர்ந்தெடுக்கப்பட்டோர் எதற்குச் சாட்சியம் கூறினரோ அதற்கு நானும் சாட்சியம் கூறுகின்றேன். மிக உயர்வான சுவர்க்கத்தின் வாசிகளும், உமது ஆற்றல் மிக்க அரியணையை வலம் வருபவர்களும் எதனை ஏற்றுக் கொண்டனரோ அதனை நானும் ஏற்றுக் கொள்கின்றேன். உலகங்களின் பிரபுவே, மண்ணுலக இராஜ்யங்களும் விண்ணுலக இராஜ்யங்களும் உமக்கே உரியவையாகும்.

#11433
- Bahá'u'lláh

 

General

ஆன்மீக சபை

நீங்கள் கலந்தாலோசனை அறையில் நுழையும் பொழுதெல்லாம், இறைவனின் அன்பினால் துடிக்கும் உள்ளத்தோடும், அவரது நினைவைத் தவிர மற்றெல்லாவற்றிலிருந்தும் தூய்மைப்படுத்தப்பட்ட நாவோடும் இப்பிரார்த்தனையைக் கூறுங்கள்; அதனால் நீங்கள் மகத்தான வெற்றியை அடைவதற்கு, சர்வசக்தி வாய்ந்தவர் உங்களுக்கு அருள் கூர்ந்து உதவக்கூடும்.

கடவுளே, என் கடவுளே! மகத்துவம் பொருந்திய இந் நாளில் உம்மைத் தவிர வேறு பற்றுகளை எல்லாம் துறந்து பக்தியுடன் உமது திருமுகம் நோக்கி நிற்கும் நாங்கள் உமது ஊழியர்களாவோம். எங்கள் கருத்திலும் சிந்தனையிலும் ஒன்றுபட்டு உமது திருமொழியினை மனித இனத்தின் மத்தியில் உயர்வுறச் செய்ய வேண்டும் என்ற நோக்க ஒற்றுமையுடன் நாங்கள் இவ்வான்மீகச் சபையில் கூடியிருக்கின்றோம். பிரபுவே, எங்கள் இறைவா! எங்களை உமது தெய்வீக வழிகாட்டுதலின் அடையாளங்களாகவும், மனிதர்களிடையே உமது உயரிய சமயத்தின் விருதுக்கொடிகளாகவும், உமது வலிமைமிகு ஒப்பந்தத்தின் ஊழியர்களாகவும்—எங்களின் அதி மேன்மையான பிரபுவானவரே—உமது அப்ஹா இராஜ்யத்தினில் உமது தெய்வீக ஒற்றுமையின் வெளிப்படுத்துதலாகவும், எல்லாப் பகுதிகளிலும் ஒளிவிட்டுப் பிரகாசிக்கும் விண்மீன்களாகவும் ஆக்குவீராக. பிரபுவே! உமது வியத்தகு அருள் அலைகள் நிறைந்த கடலாகவும், உமது ஒளிமயமான உச்சத்திலிருந்து வழிந்தோடும் நீரோடைகளாகவும், உமது விண்ணுலகச் சமயமெனும் விருட்சத்தின் மீதுள்ள இனிய கனிகளாகவும், உமது வள்ளன்மை என்னும் தென்றல் காற்றினில் அசைந்தாடிடும் திராட்சைத் தோட்டத்தின் மரங்களாகவும் ஆகிட எங்களுக்கு உதவி புரிவீராக. கடவுளே! உமது அருட்பொழிவினால் எங்களின் உள்ளங்களைக் களிப்புறச் செய்து, எங்களின் ஆன்மாவை உமது தெய்வீக ஒற்றுமையென்னும் வாசகங்களைச் சார்ந்திருக்கச் செய்வீராக; அதனால் நாங்கள் ஒரே கடலின் அலைகள் போல் ஒன்றிணைந்து, உமது பிரகாசமிக்கத் தீபத்தின் ஒளிக்கதிர்கள் போல் ஒன்றிணைந்திடுவோமாக; அதனால் எங்கள் சிந்தனைகள், கருத்துகள், உணர்ச்சிகள் ஆகிய யாவும் ஒரே மெய்ப்பொருளாகி, உலக முழுவதிலும் ஒற்றுமையுணர்வை வெளிப்படுத்திடுமாக. நீரே அருள்மிகுந்தவர், வள்ளன்மை மிக்கவர், வழங்குபவர், எல்லாம் வல்லவர், கருணைமிக்கவர், இரங்குபவர்.

— அப்துல்-பஹா

#11434
- `Abdu'l-Bahá

 

கலப்பற்ற மகிழ்வுடன் ஒன்றுகூடுங்கள்; பின்னர் கூட்டத்தின் ஆரம்பத்தில், தூய்மையுடன் இப்பிரார்த்தனையைக் கூறுங்கள்.

இராஜ்யத்தின் அதிபதியே! எங்களின் உடல்கள் இங்கு ஒன்றுகூடியிருந்த போதும், மெய்மறந்த எங்கள் இதயங்கள் உமது அன்பினால் கிளர்ச்சியுற்று, நாங்கள், உமது பிரகாசமிகு வதனத்தின் ஒளிக்கதிர்களினால் பரவசமடைந்துள்ளோம். நாங்கள் பலவீனர்களாயினும் உமது வல்லமை, சக்தி ஆகியவற்றின் வெளிப்பாடுகளுக்காகக் காத்திருகின்றோம். நாங்கள் பொருள்களோ, வழிவகைகளோ அற்ற வறியவர்களாயினும், உமது இராஜ்யத்தின் பொக்கிஷங்களிலிருந்து செல்வங்களை எடுத்துக் கொள்கிறோம். நாங்கள் துளிகளேயாயினும், உமது சமுத்திரத்தின் ஆழங்களிலிருந்து நீரை எடுத்துக் கொள்கிறோம். தூசுகளேயாயினும், நாங்கள் உமது சுடரொளி வீசிடும் கதிரவனின் மகிமையில் பிரகாசிக்கின்றோம்.

எங்களின் போஷகரே! உமது உதவியினை அனுப்பிடுவீராக, அதன்வழி இங்குக் கூடியிருக்கும் ஒவ்வொருவரும் ஓர் எரியும் மெழுகுவத்தியாகவும், ஈர்ப்பின் மையமாகவும், உமது தெய்வீக இராஜ்யங்களின்பால் அழைப்பவர்களுமாக ஆகி, இறுதியில் இக்கீழுலகினை உமது சுவர்க்கத்தின் பிரதிபலிப்பாக ஆக்கிடக் கூடும்.

#11435
- `Abdu'l-Bahá

 

ஆன்மீகச் சபைக் கூட்டத்தின் முடிவில் கூறவேண்டிய பிரார்த்தனை

கடவுளே, கடவுளே! உம்மிலும் உமது அடையாளங்களிலும் நம்பிக்கை வைத்து, உமது ஒப்பந்தத்திலும் இறுதி சாஸனத்திலும் உறுதியடைந்து, உந்தன்பால் கவரப்பட்டு, உமது அன்பெனும் நெருப்பினால் பிரகாசமடைந்து, உமது சமயத்தில் உண்மையுள்ளவர்களாகவும் இவ்வான்மீகச் சபையில் கூடியிருக்கும் எங்களை, நீர், கண்களுக்குப் புலனாகாத உமது ஒருமைத் தன்மை என்னும் இராஜ்யத்திலிருந்து பார்க்கின்றீர். நாங்கள் உமது திராட்சைத் தோட்டத்தின் ஊழியர்கள், உமது சமயத்தைப் பரப்புபவர்கள், உமது திருமுகத்தைப் பக்தியுடன் வணங்குபவர்கள், உமது அன்பர்கள்முன் பணிவானவர்கள், உமது வாயிலின் முன் தாழ்மையானவர்கள். உம்மால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைச் சேவையில் உறுதிப்படுத்துமாறும், பார்க்கவியலா உமது படைகளைக் கொண்டு எங்களுக்கு ஆதரவளிக்குமாறும், உமது சேவையில் எங்களின் இடைகளை வலுப்பெறச் செய்யுமாறும் மன்றாடுகின்றோம்; அதனால் நாங்கள் உமக்குக் கீழ்ப்படிந்து, பூஜித்து, உம்முடன் உரையாடும் குடிகளாக ஆகக்கூடும்.

எங்கள் பிரபுவே! நாங்கள் வலுவற்றவர்கள்; நீரே வல்லவர், சக்தி மிக்கவர். நாங்கள் உயிரற்றவர்கள், நீர் உயிரளிக்கும் பரமாத்மா. நாங்கள் வறியவர்கள், நீரே பராமரிப்பவர், சக்தி வாய்ந்தவர்.

எங்கள் பிரபுவே! எங்கள் முகங்களை உமது கருணைமிகு வதனத்தின்பால் திரும்பச் செய்வீராக; உமது தெய்வீகப் பீடத்திலிருந்து உமது அபரிமிதமான அருளைக் கொண்டு உணவூட்டுவீராக; உமது அதிமேலான தெய்வ கணங்களைக் கொண்டு எங்களுக்கு உதவி புரிந்து அப்ஹா இராஜ்யத்திலுள்ள உமது தூய ஆன்மாக்கள் மூலமாக எங்களை உறுதிப்படுத்துவீராக.

மெய்யாகவே, நீரே தாராள குணமுடையவர், கருணை மிக்கவர். நீரே பெரும் வள்ளன்மையுடையவர், மெய்யாகவே, நீரே இரங்குபவர், அருள் மிகுந்தவர்.

#11436
- `Abdu'l-Bahá

 

ஆன்மீக வளர்ச்சி

என் இறைவா, உமது நித்தியம் என்னும் இனிய நறுமணமிகு நீரோடையிலிருந்து என்னைப் பருகச் செய்வீராக. என் நம்பிக்கையே, உமது மெய்நிலை என்னும் விருட்சத்தின் கனிகளைச் சுவைத்திட எனக்கு உதவுவீராக; எந்தன் பேரொளியே! உந்தன் அன்பு என்னும் தெளிவான நீரூற்றிலிருந்து என்னை அருந்திடச் செய்வீராக. எந்தன் பிரகாசமே! உமது நித்திய அருள்பாலிப்பு என்னும் நிழலின்கீழ் என்னை வசித்திடச் செய்வீராக. எந்தன் நேசரே! உமது அருகாமை என்னும் பசும்புல்வெளிகளில், உமது முன்னிலையில், என்னை நடமாடச் செய்வீராக. எனதாவலே! உமது கருணை என்னும் அரியாசனத்தின் வலப்பக்கத்தில் என்னை அமரச் செய்வீராக. எந்தன் குறிக்கோளே! உமது மணங்கமழ் மகிழ்ச்சி என்னும் இளங்காற்றுகளில் ஒன்றினை என்மீது வீசிடச் செய்வீராக. எந்தன் வழிப்பாட்டிற்குரியவரே! உமது மெய்ம்மை என்னும் சுவர்க்கத்தின் உச்சங்களினுள் என்னைப் பிரவேசிக்கச் செய்வீராக. பிரகாசமிக்கவரே! என்னை உமது ஒருமைத் தன்மை என்னும் புறாவின் கீதங்களைச் செவிமடுக்கச் செய்வீராக. எந்தன் அருளாளரே! உமது ஆற்றல், வல்லமை என்னும் உயிர்ப்புச் சக்தியின் மூலம் என்னைத் துரிதப்படுத்துவீராக. எந்தன் ஆதரவாளரே! உமது அன்பு என்னும் உயிர்ப்புச் சக்தியினில் என்னை உறுதியுடன் இருக்கச் செய்வீராக. என்னை ஆக்கியோனே! உமது நல்விருப்பம் என்னும் பாதையில் என் காலடிகளை வலுப்படுத்துவீராக. என்பால் கருணையுடையவரே! உந்தன் இறவாமை என்னும் பூங்காவினில், உமது வதனத்தின் முன், என்னை என்றென்றும் உறைந்திடச் செய்வீராக. என்னை உடைமையாகக் கொண்டுள்ளவரே, உமது மகிமை என்னும் இருக்கையின் மீது என்னை நிலைபெறச் செய்வீராக. என்னைத் துரிதப்படுத்துபவரே! உமது அன்புப் பரிவு என்னும் விண்ணுலகின்பால் என்னை உயர்த்துவீராக; என்னை ஈர்ப்பவரே! உமது வழிக்காட்டல் என்னும் பகல் நட்சத்திரத்தின்பால் என்னை வழிநடத்துவீராக! எனது மூலமுதலும் அதிவுயர் விருப்பமும் ஆனவரே! உமது கண்களுக்குப்-புலனாகா ஆவியின் வெளிப்பாடுகளுக்கு முன்னால் என்னைப் பிரசன்னமாகிட அழைப்பாணை விடுப்பீராக. என் இறைவனானவரே, நீர் வெளிப்படுத்தவிருக்கும் உமது அழகு என்னும் நறுமணத்தின் சாரத்தின்பால் என்னைத் திரும்பி வந்திடச் செய்வீராக!

தான் விரும்பியதைச் செய்யும் ஆற்றலுடையவர் நீரே ஆவீர். மெய்யாகவே, நீரே அதி மேன்மைமிக்கவர், ஒளிமயமானவர், அதி உயர்வானவர்.

#11243
- Bahá'u'lláh

 

என் கடவுளே, என்னில் ஒரு தூய உள்ளத்தை உண்டாக்குவீராக. என் நம்பிக்கையே! என்னுள் ஒரு சாந்தமான மனசாட்சியைப் புதுப்பிப்பீராக. என் அதி நேசரே! சக்தியின் ஆவியின் வழி உமது மார்க்கத்தில் என்னை உறுதிப்படுத்துவீராக. எனது ஆவலின் நோக்கமே! உமது ஒளியின் பிரகாசத்தின் வழி எனக்கு உமது வழியை வெளிப்படுத்துவீராக. என் உயிரின் பிறப்பிடமே, உமது உன்னத சக்தியால், என்னை உமது புனிதத் தெய்வீகத் தன்மைக்கு உயர்த்துவீராக. என் இறைவன் ஆனவரே! உமது நித்தியம் எனும் தென்றலினால் என்னை மகிழ்விப்பீராக. என் தோழரே, உமது நித்திய கானங்கள் என் மீது அமைதியை ஊதி அருளுமாக, என் பிரபுவே, உமது ஆதி வதனத்தின் செல்வங்கள் என்னை உம்மைத் தவிர மற்றெல்லா- வற்றிலிருந்தும் மீட்டருளுமாக; தெளிவான-வற்றுள் எல்லாம் அதி தெளிவானவரே, மறைவாய் உள்ளவற்றுள் எல்லாம் அதி மறைவாய் உள்ளவரே! உமது மாசுபடுத்திட இயலா வெளிப்படுத்துதலின் செய்திகள் எனக்கு மகிழ்ச்சி கொண்டு வருமாக.

#11244
- Bahá'u'lláh

 

கிருபையாளரும், சர்வ வல்லவரும் அவரே! கடவுளே, என் கடவுளே! உமது அழைப்புக்குரல் என்னைக் கவர்ந்துள்ளது; உமது பேரொளி எனும் எழுதுகோலின் குரல் என்னைத் தட்டியெழுப்பியுள்ளது. உமது புனித சொற்கள் எனும் ஓடை என்னை மெய்ம்மறக்கச் செய்துள்ளது; உமது அகத் தூண்டல் எனும் மதுரசம் என்னைப் பரவசப்படுத்தியுள்ளது. பிரபுவே, உம்மைத் தவிர மற்றனைத்திலிருந்தும் நான் பற்றறுத்தும், உமது அருட்கொடை எனும் கயிற்றினைப் பற்றிக்கொண்டும், உமது கிருபை எனும் அற்புதங்களுக்காக ஏங்குவதையும் நீர் காண்கின்றீர். உமது அன்புக் கருணை எனும் நித்தியப் பேரலைகளினாலும், உமது கனிவான பாதுகாப்பு, தயை எனும் பிரகாசமான ஒளிகளினாலும், உந்தன்பால் என்னை நெருங்கச் செய்யக்கூடியவற்றையும், உமது செல்வத்தில் என்னைச் செல்வந்தராக ஆக்கக்கூடியவற்றையும் எனக்கு அருளுமாறு நான் உம்மை வேண்டுகிறேன். எனது நா, எனது எழுதுகோல், எனது முழு உயிருரு ஆகிய அனைத்தும், உமது சக்தி, உமது வலிமை, உமது கிருபை, உமது அருட்கொடை ஆகியவற்றுக்கும், நீரே கடவுள் எனவும், சக்தி-மிக்கவரும், வல்லவருமான கடவுள் உம்மைத் தவிர வேறிலர் என்பதற்கும் சாட்சியம் பகர்கின்றன.

என் கடவுளே, இத்தருணம், எனது ஆதரவற்ற நிலைக்கும், உமது அரசாட்சிக்கும், எனது வலுவற்ற நிலைக்கும் உமது சக்திக்கும் நான் சாட்சியம் பகர்கின்றேன். எவை எனக்கு நன்மை தரக்-கூடியவை, அல்லது தீமை தரக்கூடியவை என்பதை என்னால் அறிந்திட இயலவில்லை. மெய்யாகவே, சர்வமும் அறிந்தவரும், சர்வ விவேகியும் நீரே ஆவீர். பிரபுவே, எனதாண்டவரே, உமது நித்திய ஆணையைக் கொண்டு, என்னை மனநிறைவு அடையச் செய்யக் கூடியவற்றையும், உமது எல்லா உலகங்களிலும் என்னைச் செழிப்படையச் செய்யக்கூடியவற்றையும் எனக்காக ஆணையிடுவீராக. உண்மையாகவே, கருணை-மிக்கவரும், வள்ளன்மைமிக்கவரும் நீரே ஆவீர்.

பிரபுவே, உமது செல்வம் எனும் சமுத்திரத்திலிருந்தும், உமது கருணை எனும் சொர்க்கத்திலிருந்தும் என்னைத் துரத்திவிடாதீர்; இம்மையிலும் மறுமையிலும் உள்ள நன்மைகளை எனக்கு விதித்திடுவீராக; மெய்யாகவே அதி உயர்வில் அமைக்கப்பட்டுள்ள, கருணை எனும் இருக்கைக்குப் பிரபு நீரே ஆவீர்; ஏகமானவரும், சர்வமும் அறிந்தவரும், சர்வ விவேகியுமான உம்மைத் தவிர, வேறு கடவுள் இலர்.

#11245
- Bahá'u'lláh

 

என் பிரபுவே! உந்தன் அழகையே என் உணவாகவும், உந்தன் பிரசன்னத்தையே என் பானமாகவும், உந்தன் மகிழ்ச்சியையே என் நம்பிக்கையாகவும், உம்மைப் புகழ்வதையே என் செயலாகவும், உம்மை நினைத்தலையே என் தோழனாகவும், உந்தன் இறைமை சக்தியையே என் உதவியாகவும், உந்தன் வாசஸ்தலமே என் இல்லமாகவும், உம்மிடமிருந்து ஒரு திரையைப் போன்று, மறைக்கப்பட்டோருக்கு விதிக்கப்பட்ட வரையறைகளிலிருந்து நீர் புனிதப்படுத்தியுள்ள ஆசனத்தை என் இருப்பிடமாகவும் ஆக்கிடுவீராக.

மெய்யாகவே, சர்வ வல்லவரும், சர்வ ஒளிமிக்கவரும், அதி சக்திமிக்கவரும் நீரே ஆவீர்.

#11246
- Bahá'u'lláh

 

பிரபுவே, எனதாண்டவரே, உந்தன் நாமம் போற்றப்டுவதாக! உமது மென்கருணை எனும் கயிற்றைப் பிடித்துக் கொண்டும், உமது வள்ளன்மை எனும் அங்கியினைப் பற்றிக்கொண்டுமுள்ள உமது ஊழியன் நானே. அருவமும், உருவமுமான, எல்லாப் படைப்புப் பொருள்களையும் நீர் வசப்படுத்தி, எதன் மூலமாக உயிர் மூச்சாகவே இருக்கும் சுவாசமானது, படைப்பு முழுவதன் மீதும் வீசப்பட்டுள்ளதோ, அந்த உமது திருநாமத்தினால்; விண்ணுலகங்களையும் பூமியையும் சூழ்ந்துள்ள உமது சக்தியைக் கொண்டு என்னைப் பலப்படுத்துமாறும், எல்லா நோய்களிலிருந்தும், பேரிடர்களிலிருந்தும் என்னைக் காத்தருளுமாறும் நான் உம்மிடம் மன்றாடுகிறேன். எல்லா நாமங்களுக்கும் நீரே பிரபு என்றும், உமக்கு விருப்பமான எல்லாவற்றையும் விதித்திடுபவர் நீரே என்றும் நான் சாட்சியம் அளிக்கின்றேன். வல்லவரும், எல்லாம் அறிந்தவரும், சர்வ விவேகியுமான கடவுள் உம்மைத் தவிர வேறிலர்.

என் பிரபுவே, உமது உலகங்கள் ஒவ்வொன்றிலும் எனக்கு நன்மை பயப்பனவற்றை எனக்கு விதித்தருள்வீராக. ஆகையால், பழி சுமத்துவோனின் பழிப்போ, நாஸ்திகனின் இரைச்சலோ, உம்மிடமிருந்து விலகிச் சென்றோரின் பேதமோ, உந்தன்பால் திரும்புவதிலிருந்து தடுத்திடா-தோரான உமது உயிரினங்கள் மத்தியில் தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கென நீர் எழுதியுள்ள-வற்றை எனக்கும் வழங்கிடுவீராக.

உண்மையாகவே, உமது அரசாட்சி எனும் சக்தியைக் கொண்டு ஆபத்தில் உதவுபவர் நீரே ஆவீர். வல்லவரும், அதி சக்திமிக்கவருமான, உம்மைத் தவிர வேறு கடவுள் இலர்.

#11247
- Bahá'u'lláh

 

என் கடவுளே, வள்ளன்மை, கருணை, ஆகியவற்றின் கடவுளே! எவரது கட்டளையிடும் வார்த்தையின் வாயிலாகப் படைப்பு முழுமையும் உருவாக்கப்பட்டதோ, அவ்வார்த்தையின் மன்னர் நீரே ஆவீர்; எவரது ஊழியர்களின் செயல்கள், தம் கிருபையைக் காட்டுவதிலிருந்து அவரை என்றுமே தடுத்ததில்லையோ, தம் அருட்கொடையின் வெளிப்பாடுகளைத் தடை செய்ததில்லையோ, அவற்றின் சர்வ வள்ளன்மை மிக்கவர் நீரே ஆவீர்.

உமது உலகங்கள் ஒவ்வொன்றிலும், அவனது மீட்புக்குக் காரணமாக இருந்துள்ளவற்றை இவ்வூழியனை அடையச் செய்யுமாறு நான் உம்மிடம் மன்றாடுகிறேன். மெய்யாகவே, வல்லவரும், அதி சக்திமிக்கவரும், சகலத்தையும் அறிந்தவரும், சர்வ விவேகியும் நீரே ஆவீர்.

#11248
- Bahá'u'lláh

 

பிரார்த்தனைகளைச் செவிமடுத்திடும், பிரார்த்தனைகளுக்குப் பதிலளித்திடும் கடவுள் அவரே!

இறையன்பரே, உலகுக்கு ஒளி வழங்குபவரே, உமது மேன்மையினால்! பிரிவெனும் தீப்பிழம்புகள் என்னை இரையாக்கிக் கொண்டன; எனது வழிதவறல், என்னுள்ளே எனது இதயத்தை உருகச் செய்துள்ளது. உலகின் ஆவலும், மனுக்குலத்தின் நல்லன்பருமானவரே, உமது அகத்தூண்டல் எனும் இளந்தென்றல் எனது ஆன்மாவை ஊக்குவித்தும், உமது அற்புத குரலோசை, எனது செவிகளை அடைந்திடவும், உமது நாமங்கள், உம்முடையத் தன்மைகள், ஆகியவற்றின் அவதரிப்புகளில் வெளிப்படுத்தப்பட்ட உமது அடையாளங்களையும் உமது ஒளியையும் எனது கண்கள் கண்ணுற்றிடவும் அருளுமாறு, உமது அதிவுயரிய நாமத்தினால், அனைத்துப் பொருள்களையும் உமது பிடிக்குள் வைத்திருப்பவரான உம்மை நான் வேண்டிக் கேட்கிறேன்.

பிரபுவே, எனதாண்டவரே, உம்மிடமிருந்து அவர்கள் பிரிந்ததன் காரணத்தால், உந்தன் ஆதரவைப் பெற்றவர்களால் சிந்தப்படும் கண்ணீரையும், உந்தன் புனித அரசவையிலிருந்து வெகுதூரத்தில் இருப்பதனால் ஏற்படுகின்ற, உமது பக்திக்கொண்டோரின் அச்சங்களையும் நீர் காண்கின்றீர். புலனாகும், புலனாகா அனைத்துப் பொருள்களையும் அசையச் செய்திடும் உமது சக்தியினால்! உலகிலுள்ள துஷ்டர்கள், கொடுமையாளர்கள் ஆகியோரின் கரங்களால் விசுவாசிகளுக்கு நேர்ந்துள்ளவற்றுக்காக, உமது அன்புக்குரியவர்கள் இரத்தக் கண்ணீர் சிந்துவது அவர்களின் கடமையாகும். என் கடவுளே, இறை பக்தியற்றோர் உமது நகரங்களையும், உமது சாம்ராஜ்யங்களையும் எவ்வாறு சூழ்ந்துள்ளனர் என்பதை நீர் காண்கின்றீர்! உமது தூதர்கள், உம்மால் தேர்ந்தெடுக்கப்பட்டோர், மற்றும் உமது ஊழியர்களின் மத்தியில், உந்தன் தெய்வீக ஒற்றுமை எனும் விருதுக்கொடியை ஊன்றியவர் ஆகியோரை, உமது அருட்கொடையைக் கொண்டு அவர்களைப் பாதுகாக்குமாறு, நான் உம்மை வேண்டிக் கேட்கிறேன். மெய்யாகவே, கருணை மிக்கவரும், அதிதாராளமானவரும் நீரே ஆவீர்.

மேலும், உமது கிருபை எனும் இனிய பொழிவுகள், உமது தயை எனும் சமுத்திரத்தின் பெரும் அலைகள் ஆகியவற்றின் பெயராலும், அவர்களின் கண்களுக்கு ஆறுதல் தரக்கூடியவற்றையும், அவர்களின் இதயங்களுக்கு அமைதியைத் தரக்கூடியவற்றையும் விதித்- தருளுமாறு நான் மீண்டும் உம்மை வேண்டிக் கேட்கிறேன். பிரபுவே! மண்டியிட்டு வணங்குபவன் எழுந்து, உமக்குச் சேவையாற்றிட ஏங்குவதையும்; மாண்டோர், உமது தயை எனும் சமுத்திரத்திலிருந்து நித்திய வாழ்வுக்காகவும், உமது செல்வம் எனும் வானங்களில் உயரப் பறப்பதற்காகவும் குரல் எழுப்புவதையும்; அயலான், உமது கிருபை எனும் விதானத்தின் கீழ் அவனது புகழொளி எனும் புகலிடத்திற்காக ஏங்குவதையும்; தேடுபவன், உமது கருணையினால், உந்தன் அருட்கொடை எனும் வாசலை நோக்கி விரைவதையும்; பாவிகள், மன்னிப்பு, பிழைபொறுத்தல் எனும் சமுத்திரத்தை நோக்கித் திரும்புவதையும் நீர் காண்கின்றீர்.

மனிதர்கள் இதயங்களில் போற்றப்படுபவரே, உமது அரசாட்சியினால்! உமது புனித விருப்பம், மகிழ்ச்சி ஆகியவை என்னுள்ளே ஆட்சி செய்து, உமது நித்தியக் கட்டளை எனும் எழுதுகோல் எனக்காக விதித்துள்ளவற்றுக்குப் பொருந்திய-வாறு என்னை இயக்கிடக் கூடும் என்பதற்காக, எனது சொந்த விருப்பம், ஆசை ஆகியவற்றைக் கைவிட்டு விலகி, உந்தன்பால் நான் திரும்பியுள்ளேன். பிரபுவே, ஆதரவற்றிருந்தாலும், இவ்வூழியன் உமது சக்தி எனும் விண்கோளத்தை நோக்கித் திரும்பியுள்ளான்; தாழ்த்தப்-பட்டிருந்தாலும், புகழொளி எனும் பகலூற்றை நோக்கி விரைந்துள்ளான்; ஏழ்மையில் இருந்தாலும், உந்தன் கிருபை எனும் சமுத்திரத்திற்காக ஏங்கியுள்ளான். உமது தயை, அருட்கொடை ஆகியவற்றினால், அவனைத் துரத்திவிடாதீர் என நான் மன்றாடுகிறேன்.

மெய்யாகவே, சர்வ வல்லவரும், மன்னிப்பவரும், இரக்கமுடையவரும் நீரே ஆவீர்.

#11249
- Bahá'u'lláh

 

பிரபுவே எனதாண்டவரே, நீர் மகிமைப்படுத்தப்-படுவீராக! உமது நாள்களில் என்னை உருவாக்கி, உமது அன்பையும் அறிவையும் என்னுள் உட்புகுத்தியமைக்காக உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன். உம்முடன் அணுக்கமாக இருக்கும் உமது ஊழியர்களின் உள்ளங்களெனும் பொக்கிஷங்களிலிருந்து, உமது விவேகம், சொற்கள் ஆகிய நல்முத்துகள் வெளிக்கொணரப்பட்ட உமது நாமத்தின் பேராலும், இரக்கமுடையவர் எனும் உமது நாமமெனும் பகல் நட்சத்திரத்தின் மூலமாக, உமது சுவர்க்கம், உமது பூமி ஆகிய அனைத்தின் மீதும் அதன் பிரகாசத்தைப் பொழிந்திட்ட அந்நாமத்தினாலும், உமது கிருபை, கொடை ஆகியவற்றின் பேராலும், உமது அற்புதமான-வையும், மறைவாய் உள்ளவையும் அருட்கொடை-களைத் தந்தருளுமாறு நான் உம்மிடம் இறைஞ்சுகின்றேன்.

என் கடவுளே, உமது சொந்த நாள்களோடு நீர் இணைத்துள்ள என் வாழ்வின் ஆரம்ப நாள்கள் இவையே. நீர் என் மீது அத்துணைப் பெரும் மதிப்பை இப்போது பொழிந்துள்ள காரணத்தால், உமது தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கு நீர் விதித்தருளியவற்றை எனக்கும் தரமறுத்து விடாதீர்.

என் கடவுளே, உமது அன்பெனும் நிலத்தில் விதைத்தும், உமது கொடை எனும் கரத்தினால் துளிர்விடச் செய்துமுள்ள ஒரு சிறு வித்துதான் நான். எனவே, இவ்வித்து, அதன் மன ஆழத்தில், உமது கருணை எனும் நீர்களுக்காகவும், உமது கிருபை எனும் உயிரூற்றுக்காகவும் ஏங்குகிறது. உமதன்புக் கருணை எனும் சுவர்க்கத்திலிருந்து, உமது நிழலின் கீழும், உமது அரசவையின் எல்லைகளுக்குள்ளும் அது செழுமையாகிட உதவக்கூடியவற்றை, அதன் மீது பொழிந்திடுவீராக. உமது நிறைவான ஓடையிலிருந்தும், உந்தன் உயிர் நீர் எனும் ஊற்றுக்களிலிருந்தும், உம்மை கண்டுணர்ந்த அனைவரின் இதயங்களிலும் நீர் பாய்ச்சுபவர் நீரே ஆவீர்.

உலகங்களுக்கெல்லாம் பிரபுவான இறைவன் போற்றப்படுவாராக.

#11250
- Bahá'u'lláh

 

என் கடவுளே, யாவற்றுக்கும் மேலான பேரொளி எனும் உமது திருநாமத்தினால், உமது அன்புக்குரியவர்களை நீதி எனும் அங்கியினால் அணிவித்து, அவர்களின் உயிருருவை நம்பிக்கைக்குப் பாத்திரமாய் இருத்தல் எனும் ஒளியால் ஒளிரச் செய்யுமாறு நான் உம்மை இறைஞ்சுகிறேன். நீர் விரும்பியவாறு செய்யவல்ல சக்தியுள்ளவரும்; கண்ணுக்குப் புலனாகும், புலனாகா அனைத்துப் பொருள்களின் அதிகாரத்தை உமது பிடிக்குள் வைத்திருப்பவரும் நீர் ஒருவர் மட்டுமே.

#11251
- Bahá'u'lláh

 

என் கடவுளே, உமதன்பு, நல்விருப்பம் ஆகியவற்றின் முழு அளவினை எனக்குத் தந்தருள்வீராக; அதிவிழுமிய ஆதாரமும், சர்வ ஒளிமயமானவரும் ஆனவரே, உமது பிரகாசமிகு ஒளியின் ஈர்ப்புகளின் வாயிலாக, எங்கள் இதயங்களைப் பரவசமடையச் செய்திடுவீராக. கோடையின் பிரபுவே, பகல் வேளையிலும் இரவு காலத்திலும், உமது வலுவூட்டும் இளந்-தென்றல்களை, உமது கிருபையின் ஓர் சின்னமாக என் மீது பொழிந்திடுமாறு செய்திடுவீராக.

என் கடவுளே, உமது திருவதனத்தைக் கண்ணுறத் தகுதி பெறுவதற்கு நான் எந்த நற்செயலையுமே செய்ததில்லை; இவ்வுலகம் நிலைத்திருக்கும் வரை நான் வாழ்ந்திருந்தாலும், இச்சலுகைக்காகத் தகுதி பெறுவதற்கு நான் எச் செயலையும் சாதித்திடத் தவறி விடுவேன் என, நான் நிச்சயமாக அறிவேன். ஏனெனில், உமது கொடை என்னை வந்தடைந்தால் அன்றி, உமது மென்கருணை என்னை ஊடுருவினால் அன்றி, உமது அன்பிறக்கம் என்னைச் சூழ்ந்திட்டால் அன்றி, ஓர் ஊழியனின் ஸ்தானம் உமது புனித சந்நிதானத்தை நெருங்குவதற்கு என்றுமே தகுதியற்றதாகவே இருக்கும். உம்மைத் தவிர வேறு கடவுள் இலர் என்பதற்குரியவரே, புகழ் எல்லாம் உமக்கே உரியதாகுக. உம்மை நெருங்கி உயர்ந்திடவும், உந்தன் அருகிலேயே வசித்திடும் பெருமையை வழங்கப்பெறுவதற்கும், உம்மோடு மட்டுமே உரையாடுவதற்கும், கிருபைகூர்ந்து என்னை இயலச் செய்வீராக. உம்மைத் தவிர கடவுள் வேறிலர்.

மெய்யாகவே, ஓர் ஊழியன் மீது நீர் ஆசி வழங்கிட விரும்பினால், நீர் அவனது இதயம் எனும் இராஜ்யத்திலிருந்து, உம்மைப் பற்றியே சொல்வதையல்லாது மற்றெல்லாச் சொல்லையோ, நினைவையோ அழித்திடுவீர்; மேலும், உமது வதனத்தின் முன், அவனது கரங்கள் அநீதியாக இழைத்திட்ட காரியங்களின் காரணமாக, நீர் ஓர் ஊழியனுக்குத் தீங்கினை விதித்திட்டால், அவன் அதில் தன்னைமறந்து ஈடுபடுவான் என்பதற்காகவும், உம்மைப் பற்றி நினைப்பதையே மறந்து விடுவான் என்பதற்காகவும், இவ்வுலகம், மறுவுலகம் ஆகியவற்றின் நன்மைகளைக் கொண்டு நீர் அவனைச் சோதித்திடுவீர்.

#11252
- The Báb

 

என் கடவுளே! என் கடவுளே! உமது ஒருமையினை ஒப்புக்கொண்டமைக்காக என்னை உறுதிப்படுத்தி, உமது தனித்தன்மையான சொல்லின்பால் என்னை ஈர்த்து, உமது அன்பெனும் நெருப்பினால் என்னைத் தூண்டி, உம்மை குறித்துரைப்பதிலும், உமது அன்பர்கள், பணிப்பெண்கள் ஆகியோரின் சேவையில் ஈடுபடுத்தியமைக்காகவும், புகழ் உமக்கே உரித்தாகுக.

என் பிரபுவே, அடக்கமானவனாகவும், கர்வமற்ற-வனாகவும் இருந்திட எனக்கு உதவிடுவீராக; அனைத்திலிருந்தும் நான் பற்றறுத்திடவும், உமது மகிமை எனும் அங்கியின் விளிம்பைப் பற்றிக்கொள்ளவும் எனக்குப் பலமளிப்பீராக; அதனால், எனதுள்ளம், உமது அன்பினால் நிரப்பப்பட்டு, உலகம், அதன் பண்புகள் மீதான பற்றுகள் ஆகியவற்றின்பாலான அன்பு எதற்கும் இடந்தராதிருக்கக் கூடும்.

கடவுளே! உம்மைத் தவிர மற்றெல்லா-வற்றிலிருந்தும் என்னைப் புனிதப்- படுத்துவீராக; பாவங்கள், அத்துமீறல்கள் ஆகியவற்றின் மாசுகளிலிருந்து என்னை முற்றிலும் தூய்மைப் படுத்துவீராக; என்னை ஓர் ஆன்மீக உள்ளத்தையும், மனசாட்சியையும் பெற்றிடச் செய்வீராக.

மெய்யாகவே, எல்லா மனிதர்களாலும் உதவிக்காக நாடிடப்படுபவரான கருணைமிக்கவர் நீரே ஆவீர்; மெய்யாகவே, அதி தாராளமானவர் நீரே ஆவீர்.

#11253
- `Abdu'l-Bahá

 

என் பிரபுவே! என் பிரபுவே! இது உமது அன்பெனும் தீயால் ஏற்றப்பட்ட ஒரு விளக்காகும்; மற்றும் உமது கருணை எனும் விருட்சத்தினுள் கொளுத்தப்பட்ட ஜூவாலையால் சுடர்வீசுகிறது. என் பிரபுவே, உமது திருவெளிப்பாடெனும் சைனாயின் மீது தூண்டப்பட்ட தீயைக்கொண்டு, அவனது எழுச்சி, வெப்பம் மற்றும் சுடர் ஆகியவற்றை அதிகரிப்பீராக. மெய்யாகவே, உறுதிசெய்பவரும், உதவுபவரும், சக்திமிக்கவரும், தாராளமானவரும், அன்பானவரும் நீரே ஆவீர்.

#11254
- `Abdu'l-Bahá

 

என் கடவுளே! என் கடவுளே! உமது இவ்வூழியன், உம்மை நோக்கி முன்னேறி வந்துள்ளான்; உமது அன்பெனும் பாலைவனத்தில் அலைந்து திரிகின்றான்; உமது சேவை எனும் பாதையில் நடந்து செல்கின்றான்; உமது ஆதரவை எதிர்ப்பார்க்கின்றான், உமது அருட்கொடையை நம்பி இருக்கின்றான்; உமது இராஜ்யத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளான்; உமது பரிசு என்னும் மதுரசத்தால் மதிமயங்கியுள்ளான். என் கடவுளே, உம்மீதுள்ள அவனது நேசம் எனும் உணர்வெழுச்சியையும், உம்மைப் போற்றும் அவனது சீர்மையையும், உம்மீதான அவனது அன்பின் ஆர்வத்தையும் அதிகரிப்பீராக.

மெய்யாகவே, அதி தாராளமானவரும், பொங்கிவழிந்திடும் அருள்நிறை பிரபுவும் நீரே. மன்னிப்பவரும், கருணைமிக்கவருமான கடவுள், உம்மையன்றி வேறிலர்.

#11255
- `Abdu'l-Bahá

 

கடவுளே, என் கடவுளே! உந்தன்பால் ஈர்க்கப்பட்டு, உமது முன்னிலையை அணுகியுள்ள இவன், உமது பிரகாசமிகு ஊழியனும், உமது ஆன்மீக அடிமையும் ஆவான். அதி வள்ளன்மைமிக்கப் பிரபுவே, இவன் உமது வதனத்தை நோக்கித் திரும்பியுள்ளான், உமது ஒருமையை அங்கீகரித்தும், உமது தனித்துவத்தை ஒப்புக்கொண்டும், நாடுகளுக்கிடையே உமது நாமத்தின் பேரில் குரல் எழுப்பிடும், உமது கருணை எனும் வழிந்தோடும் நீர்களின்பால் மக்களை வழிநடத்தியுமுள்ளான். கேட்போருக்கு, உமது அளவிடற்கரிய கிருபை எனும் மதுரசத்தினைப் பொங்கி வழிந்திடும் கிண்ணத்திலிருந்து பருகிடச் செய்துள்ளான்.

பிரபுவே, எல்லாச் சூழல்களிலும் அவனுக்கு உதவிடுவீராக; நன்கு பாதுகாக்கப்பட்ட உமது மர்மங்களை அவன் கற்றுக்கொள்ளச் செய்திடு-வீராக; உமது மறைக்கப்பட்ட முத்துகளை அவன் மீது பொழிந்திடுவீராக. உமது தெய்வீக உதவி எனும் காற்றினால், கோட்டை உச்சிகளில் பறந்திடுகின்ற ஒரு பதாகையாக அவனை ஆக்கிடுவீராக; தெளிவான நீருடைய ஓர் ஊற்றாக அவனை ஆக்கிடுவீராக.

மன்னித்தருளும் என் பிரபுவே! எங்கும் ஒளிவீசிடும் ஒரு விளக்கின் கதிர்களைக் கொண்டு உள்ளங்களை ஒளிர்ந்திடச் செய்து, நீர் தாராளமாகச் சலுகை வழங்கியுள்ள உமது மக்கள் மத்தியில், யாவற்றின் மெய்ம்மைகளையும் வெளிப்படுத்து-வீராக.

மெய்யாகவே, வலிமைமிக்கவரும், சக்தி-மிக்கவரும், பாதுகாப்பவரும், பலமானவரும், கொடையாளரும் நீரே ஆவீர்! மெய்யாகவே, கருணையனைத்திற்கும் பிரபு நீரே ஆவீர்!

#11256
- `Abdu'l-Bahá

 

கடவுளே, என் கடவுளே! இவர்கள் உமது வலுவற்ற ஊழியர்கள்; உமது மேன்மைமிகு சொற்களுக்குச் சிரந்தாழ்த்தி, உமது ஒளி எனும் திருவாசலில் தங்களையே தாழ்த்திக் கொண்டும், எதன் மூலமாக நண்பகல் பேரொளியில் பகலவன் பிரகாசிக்கச் செய்யப்பட்டுள்ளதோ, அந்த உமது ஒருமைக்குச் சாட்சியமளித்திடும் உந்தன் விசுவாசமிக்க அடிமைகளும், பணிப்பெண்களும் ஆவர். நீர் உமது மறைவான இராஜ்யத்திலிருந்து வெளிப்படுத்திய ஆணைகளுக்கு இவர்கள் செவிசாய்த்தும், அன்பினாலும் பரவசத்தாலும் துடிப்புறும் இதயங்களுடன், அவர்கள் உமது அழைப்புக்கு மறுமொழியளித்துள்ளனர்.

பிரபுவே, உமது கருணைமிகு பொழிவுகள் அனைத்தையும் அவர்கள் மீது பொழிவீராக; உமது கிருபை எனும் நீர்கள் அனைத்தையும் அவர்கள் மீது பொழிந்திடச் செய்திடுவீராக.

சுவர்க்கம் எனும் தோட்டத்தில் அழகிய செடிகளாக அவர்களை வளரச்செய்திடுவீராக; உமது வழங்குதல் எனும் முழுமையாக, நிறைந்து வழிந்திடும் மேகங்களிலிருந்தும், உமது தாராள கிருபை எனும் ஆழமான குளங்களிலிருந்தும், இத்தோட்டத்தை மலர்ந்திடச் செய்வதோடு, அதை என்றும் பசுமையாகவும், செழிப்பாகவும், என்றும் புதிதாகவும், பளபளப்பாகவும், அழகாகவும் ஆக்கிடுவீராக.

மெய்யாகவே, வலிமையானவரும், மேன்மை-மிக்கவரும், சக்தியுடையவரும் நீரே ஆவீர்; விண்ணிலும் மண்ணிலும் மாறாது நிலைத்திருக்கும், தனியொருவர் நீரே. வெளிப்-படையான சான்றுகளுக்கும், அடையாளங்-களுக்கும் பிரபுவான உம்மையன்றி வேறு கடவுள் இலர்.

#11257
- `Abdu'l-Bahá

 

அவரே கடவுள்! கடவுளே, என் கடவுளே! இவர்கள், உமது நாள்களில், உந்தன் புனிதத்தன்மை எனும் நறுமணங்களினால் ஈர்க்கப்பட்டும், உமது புனித விருட்சத்தில் எரியும் தீச்சுடரால் தூண்டப்பட்டும், உமது குரலுக்குச் செவிசாய்த்தும், உமது போற்றுதலை உச்சரித்தும், உமது தென்றலால் விழிப்பூட்டப்பட்டும், உமது இனிய நறுமணங்களினால் கிளர்வுற்றும், உமது அடையாளங்களைக் கண்ணுற்றும், உமது வசனங்களைப் புரிந்துகொண்டும், உமது வார்த்தைகளுக்குச் செவிசாய்த்தும், உமது வெளிப்பாட்டில் நம்பிக்கை வைத்தும், உமது அன்புக் கருணையில் நம்பிக்கைக் கொண்டுமுள்ள உமது ஊழியர்கள் ஆவர்.

பிரபுவே, பிரகாசமிகு பேரொளி எனும் உமது இராஜ்யத்தின்பால் அவர்களின் கண்கள் பதிந்துள்ளன; உயர்விலுள்ள உமது இராஜ்யத்தின்பால் அவர்களின் முகங்கள் திரும்பியுள்ளன; உமது பிரகாசமும் பேரொளியும் மிக்க அழகின் மீதான அன்பினால் அவர்களின் இதயங்கள் துடிக்கின்றன; உமது அன்பெனும் நெருப்பிற்கு அவர்களின் ஆன்மாக்கள் இரையாகிவிட்டன; இவ்வுலகு, மறுவுலகு ஆகியவற்றின் பிரபுவே, உம்மீதுள்ள ஏக்கம் எனும் ஆவலினால் அவர்களின் வாழ்க்கைகள் கொதிக்கின்றன; உமக்காகவே அவர்களின் கண்ணீர் வழிந்திடுகின்றன.

உமது காவல், பாதுகாப்பு எனும் வலுமிக்க அரணுள் அவர்களைக் காத்தருள்வீராக; உமது விழிப்புமிகு கவனத்தின் கீழ் அவர்களைக் கண்காணித்திடுவீராக; உமது வள்ளன்மை, இரக்கம் எனும் கண்களைக் கொண்டு அவர்களை கண்ணுற்றிடுவீராக; எல்லாப் பிரதேசங்களிலும் வெளிப்படையாகக் காணப்படும், உமது தெய்வீக ஒருமையின் அடையாளங்களாக அவர்களை ஆக்கிடுவீராக; உமது பிரம்மாண்ட மாளிகைகளின்மேல் பறந்திடுகின்ற உந்தன் வலிமையின் விருதுகொடிகளாக அவர்களை ஆக்கிடுவீராக; உமது வழிகாட்டல் எனும் வான் கோளங்களில் விவேகம் எனும் எண்ணெயைக் கொண்டு எரியும் பிரகாசமான விளக்குகளாக அவர்களை ஆக்கிடுவீராக; உமது அடைக்கலமளிக்கும் சுவர்க்கத்தின் அதி உச்சத்திலுள்ள, மரக்கிளைகளின் மீது பாடிடும் உமது அறிவெனும் தோட்டத்தின் பறவைகளாகவும், முடிவில்லா ஆழங்களில் உமது அதிவிழுமிய கருணையின் பேரில் பாய்ந்திடும் உமது வள்ளன்மை எனும் சமுத்திரத்தின் பெரும்-விலங்குகளாகவும் அவர்களை ஆக்கிடுவீராக.

பிரபுவே, எனதாண்டவரே! உமது ஊழியர்களான இவர்கள் தாழ்ந்தவர்கள், உயர்விலுள்ள உமது இராஜ்யத்தில் அவர்களை மேன்மைப்-படுத்திடுவீராக; இவர்கள் வலுவிழந்தவர்கள், உமது விழுமிய ஆற்றலினால் அவர்களை வலுப்படுத்திடுவீராக; இவர்கள் தாழ்த்தப்-பட்டவர்கள், அதி உயர்விலுள்ள உமது இராஜ்யத்தில் உமது பேரொளியை அவர்களுக்கு வழங்கிடுவீராக; இவர்கள் ஏழைகள், உமது மாபெரும் இராஜ்யத்தில் அவர்களைச் செல்வந்தர்களாக ஆக்கிடுவீராக. உயிரினங்கள் அனைத்தின் பிரபுவானவரே! ஆதலால், உமது உலகங்களில் நீர் விதித்துள்ள, கண்களுக்குப் புலனாகும், புலானாகா நன்மைகள் அனைத்தையும் அவர்களுக்கு வழங்கிடுவீராக; இம்மண்ணுலகில் அவர்களைச் செழுமையுறச் செய்திடுவீராக; உமது அகத்தூண்டலைக் கொண்டு அவர்களின் உள்ளங்களை மகிழ்வுறச் செய்திடுவீராக; உமது சர்வபேரொளிமிக்க ஸ்தானத்திலிருந்து பரவிடும், உமது நற்செய்தியினால் அவர்களின் உள்ளங்களை ஒளிபெறச் செய்திடுவீராக; உமது அதி பெரும் ஒப்பந்தத்தில் அவர்களை உறுதிப்படுத்தி, உமது வள்ளன்மையினாலும், வாக்களிக்கப்பட்ட அருளினாலும் உமது சாசனத்தில் அவர்களின் முயற்சிகளை வலுப்படுத்திடுவீராக; அருள்மிகு, இரக்கமிக்கவரே! நீரே அருளாளர், சர்வவள்ளன்மை மிக்கவர்.

#11258
- `Abdu'l-Bahá

 

வழங்குபவரே! மேற்கிலுள்ள அன்பர்களின் மீதான பரிசுத்த ஆவியின் இனிய நறுமணங்களை நீர் சுவாசித்துள்ளீர்; தெய்வீக வழிகாட்டல் எனும் ஒளியைக் கொண்டு, மேற்கின் வானத்தை நீர் ஒளிரச் செய்துள்ளீர். முன்பு தொலைவில் இருந்தவர்களை, நீர் உம்மை நெருங்கி அணுகிட செய்துள்ளீர்; அந்நியர்களை அன்பான நண்பர்களாக நீர் ஆக்கியுள்ளீர்; உறங்கியோரை நீர் விழிப்புறச் செய்துள்ளீர்; அலட்சியமானோரை நீர் அக்கறைகொள்ளச் செய்துள்ளீர்.

வழங்குபவரே! இந்த உன்னதமான அன்பர்களை உமது நல்விருப்பத்தை வென்றிட நீர் உதவிடுவீராக; அந்நியர், நண்பர் ஆகியவரின் நலனைச் சமமாகவே விரும்புவோராக அவர்களை ஆக்கிடுவீராக. என்றென்றும் நிலைத்திருக்கவல்ல உலகுக்குள் அவர்களைக் கொண்டுவருவீராக; விண்ணுலகக் கிருபையிலிருந்து ஒரு பகுதியை அவர்களுக்கு வழங்கிடுவீராக; இறைவன்பால் நேர்மை மிகுந்த உண்மையான பஹாய்களாக அவர்களை ஆக்கிடுவீராக; வெளித்தோற்ற சாயல்களிலிருந்து அவர்களைக் காப்பற்றி, உண்மையின் மீது அவர்களை உறுதியாக நிலைக்கச் செய்வீராக. இறை இராஜ்யத்தின் அடையாளங்களும், சின்னங்களுமாக அவர்களை ஆக்கிடுவீராக; இந்த நரக வாழ்வின் தொடுவானங்களின் மேலிருந்து அவர்களை ஒளிரும் விண்மீன்களாக ஆக்கிடுவீராக. அவர்களை மனுக்குலத்தின் சுகமாகவும், ஆறுதலாகவும் ஆக்கிடுவீராக; உலக அமைதிக்கான ஊழியர்களாகவும் ஆக்கிடுவீராக. உமது ஆலோசனை எனும் மதுரசத்தைக் கொண்டு அவர்களை மதிமயங்கச் செய்வீராக; மேலும், உமது கட்டளைகள் எனும் பாதையில் அவர்கள் அனைவரும் அடியெடுத்து வைப்பதற்கு அருள்வீராக.

வழங்கிடுபவரே! கிழக்கிலும் மேற்கிலுமுள்ள அன்பர்கள் நெருக்கமாகத் தழுவியிருப்பதைக் காண்பதும்; மனித சமுதாயத்தின் அங்கத்தினர்கள் அனைவரும், தனித்தனியான துளிகள் ஒரு பெருங்கடலில் ஒன்று சேர்வது போன்று, ஒரே மாபெரும் கூட்டத்தில் அன்பாகக் கூடியிருப்பதைக் கண்ணுறுவதும், ஒரே ரோஜா தோட்டத்திலுள்ள பறவைகளாக அவர்கள் அனைவரையும் கண்ணுறுவதும், ஒரே சமுத்திரத்தின் முத்துக்களாகவும், ஒரே மரத்தின் இலைகளாகவும், ஒரே கதிரவனின் ஒளிக்கதிர்களாகவும் கண்ணுறு-வதுமே, உமது தலைவாசலில் பணிபுரியும் இவ்வூழியனின் ஆழ்ந்த விருப்பமாகும்.

வல்லவரும், சக்திமிக்கவரும் நீரே ஆவீர்; வலிமைமிகு கடவுளும், சர்வ சக்திமிக்கவரும், சகலத்தையும் கண்ணுறுபவரும் நீரே ஆவீர்.

#11259
- `Abdu'l-Bahá

 

இரவு வேளை

என் கடவுளே, என் பிரபுவே, எனதாவலின் எல்லையே, இந்த உமது ஊழியன் உமது கருணையெனும் புகலிடத்தில் உறங்கி, உமது தயை என்னும் நிழலில் இளைப்பாற விரும்பி, உமது கண்காணிப்பையும் பாதுகாப்பையும் வேண்டுகின்றான்.

என் பிரபுவே, உம்மையன்றி வேறெதனையும் நான் கண்ணுறாதிருக்க, என்றும் அயரா உமது கண்களைக் கொண்டு என் விழிகளைப் பாதுகாக்குமாறு உம்மை மன்றாடிக் கேட்கின்றேன். உமது அடையாளங்களை உணர்ந்து கொள்ளவும் உமது வெளிப்பாட்டின் எல்லையைக் கண்ணுறவும் எனது பார்வைக்குச் சக்தியருள்வீராக. உமது சர்வ வல்லமையின் வெளிப்படுத்துதல்கள் முன்னால் சக்தியின் சிகரமே நடுங்கியது.

எல்லாம் வல்ல, அனைத்தையும் ஆட்கொண்டிடும், நிபந்தனைக்கு உட்படாத இறைவன் உம்மையன்றி வேறெவருமிலர்!

#11260
- Bahá'u'lláh

 

இறைவா, என் இறைவா, உம்மைப் பிரிந்ததன் காரணமாக உமக்காக ஏங்கிடுவோரின் கண்கள் விழித்திருக்கும் போது, எங்ஙனம் நான் மட்டும் துயில் கொள்ள இயலும்? உம் முன்னிலையிலிருந்து தூரத்தில் இருப்பதனால் உமது அன்பர்களின் ஆன்மாக்கள் அலைக்கழித்்து வருந்துகையில் நான் மட்டும் எங்ஙனம் படுத்து ஓய்வு எடுத்திட இயலும்?

என் பிரபுவே, என் ஆன்மாவையும் என்னையும் முழுமையாக உமது வலிமை, பாதுகாப்பு என்னும் வலக்கரத்தினில் ஒப்படைத்துள்ளேன். உமது சக்தியின் மூலமே நான் தலையணையின் மீது சிரம் சாய்த்துப் பின் உமது சித்தத்திற்கும், நல்விருப்பத்திற்கும் ஏற்ப அதனை நிமிர்த்தியுள்ளேன். உண்மையாகவே நீரே காப்பவர், பேணுபவர், சர்வ வல்லவர், அதி சக்தி வாய்ந்தவர்.

உமது வலிமை சாட்சியாக! தூங்கும் போதும் விழித்திருக்கும் போதும், நான், நீர் விரும்புவதைத் தவிர வேறெதனையும் கோருவதில்லை. நான் உமது ஊழியன், உமது கரங்களில் இருக்கின்றேன். உமது நல்விருப்பம் எனும் நறுமணத்தினைப் பரவச் செய்யக்கூடியதனைச் செய்திட அருள்கூர்ந்து எனக்கு உதவிடுவீராக. உண்மையாகவே, இதுவே எனது நம்பிக்கையும் உமதருகில் மகிழ்வுறும் பேறு பெற்றோரின் நம்பிக்கையும் ஆகும். உலகங்களுக்கெல்லாம் பிரபுவானவரே, நீர் புகழப்படுவீராக.

#11261
- Bahá'u'lláh

 

எனதாண்டவரே, என் பிரபுவே! நான் உமது ஊழியனும், உமது ஊழியனின் மைந்தனுமாவேன். உமது விருப்பம் என்னும் பகலூற்றிலிருந்து உமது ஒருமைத் தன்மையெனும் பகல் நட்சத்திரம் தோன்றி, உமது கட்டளை என்னும் திருநூலில் விதிக்கப்பட்டுள்ளவற்றிற்கு இணங்க சர்வலோகத்தின் மீதும் தனது பிரகாசத்தினைப் பாய்ச்சிடும் இவ்வதிகாலையில் நான் என் துயிலிடம் விட்டு எழுந்துள்ளேன்.

என் இறைவா, நாங்கள் உமது அறிவொளியின் பிரகாசங்களைக் கண்ணுற விழிப்புற்றமைக்காக நீர் போற்றப்படுவீராக. ஆகவே, என் பிரபுவே, உம் ஒருவரைத் தவிர மற்றெல்லாவற்றையும் தவிர்க்கவும், உம் ஒருவரைத் தவிர மற்றெல்லாப் பற்றுகளையும் துறப்பதற்கும் உதவுபவை எவையோ அவற்றை எங்கள்பால் அனுப்பி அருள்வீராக.

மேலும் எனக்கும் எனதன்புக்குப் பாத்திரமான-வர்களுக்கும், ஆண் பெண் அனைவரும் அடங்கிய எனது சுற்றத்தார்களுக்கும், இம்மையிலும் மறுமையிலும் நன்மை தரக்கூடியவற்றை எழுதி அருள்வீராக. படைப்பு முழுமையின் அன்புக்குப் பாத்திரமான இறைவா, பிரபஞ்சம் அனைத்தின் ஆவலே, உமது தவறாத பாதுகாப்பின் மூலமாக மனிதர்களின் மனதில் ஓசை எழுப்பும் தீய ஓசையாளனின் வெளிப்படுத்துதல்களாக நீர் ஆக்கியுள்-ளோரிடமிருந்து எங்களைப் பாதுகாப்பீராக. உமது விருப்பத்தினைச் சாதிக்க வல்லவர் நீரே. மெய்யாகவே, நீரே எல்லாம் வல்லவர், ஆபத்தில் உதவுபவர், சுயஜீவியானவர்.

பிரபுவே, எனது ஆண்டவரே, எவரை உமது அதி உயரிய பட்டங்களுக்கெல்லாம் மேலாக வைத்து, எவர் மூலமாகத் தெய்வீகத் தன்மையுடை-யோரையும் தீயோரையும் பிரித்து, நீர் அன்பு கொண்டு விரும்பியதனைச் செய்திடக் கருணை கூர்ந்து உதவியுள்ளீரோ அவரை ஆசீர்வதிப்பீராக. இறைவா, மேலும் உமது சொற்கள், உமது எழுத்துகள் ஆகியோரையும், உந்தன்பால் பார்வையைச் செலுத்தி, உமது வதனத்தின் பால் முகத்தைத் திருப்பி, உமது அறைகூவலைச் செவிமடுத்-தோரையும் ஆசீர்வதிப்பீராக.

உண்மையாகவே, நீரே எல்லா மனிதர்களுக்கும் பிரபுவும் அரசனும் ஆகி, அனைத்துப் பொருள்களின் மீது சக்தியும் கொண்டுள்ளவர்.

#11296
- Bahá'u'lláh

 

என் கடவுளே, நான் உமது பாதுகாப்பினில் கண்விழித்துள்ளேன்; அப் பாதுகாப்-பிடத்தினைத் தேடுபவன் உமது ஆதரவெனும் புகலிடத்திலும் உமது பாதுகாப்பெனும் கோட்டையிலும் வசிப்பது பொருத்தமே. என் பிரபுவே, என் புற உருவினைக் காலைக் கதிரவனின் கிரணங்களினால் ஒளிபெறச் செய்தது போல் எனது அக உருவினையும் உமது வெளிப்பாடெனும் பகலூற்றின் பிரகாசங்களினால் ஒளிரச் செய்வீராக.

#11297
- Bahá'u'lláh

 

இறந்தவர்களுக்கான சம்பிரதாயப் பிரார்த்தனை

(இறந்தவர்களுக்கான இந்தச் சம்பிரதாய கூட்டுப் பிரார்த்தனையானது பஹாய்களுக்குரிய ஒரே ஒரு கட்டாயமானக் கூட்டுப் பிரார்த்தனையாகும்; இதை ஒரு நம்பிக்கையாளர் ஒப்புவிக்கும்போது, வந்துள்ள மற்ற அனைவரும் எழுந்து நின்று அமைதிகாக்க வேண்டும். இப்பிரார்த்தனை தொடர்பாக, இறந்தவர் பதினைந்து வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும் என்றும், இறந்தவர் அடக்கம் செய்யப்படுவதற்கு முன்பாக இது வாசிக்கப்பட வேண்டுமென்றும், இது ஒப்புவிக்கப் படும்போது கிப்ளியை நோக்கி திரும்புவது அவசியமில்லை என்றும் பஹாவுல்லா தெளிவுப் படுத்தியுள்ளார். “அல்லா-உ-அப்ஹா” ஒரு முறை வாசிக்கப்பட்டும்; அதன் பின் தொடர்ந்து வரும் ஆறு வரிகளுள் முதலாம் வரி பத்தொன்பது முறை வாசிக்கப்பட வேண்டும். அதன் பின் “அல்லா-உ-அப்ஹா” மீண்டும் ஒரு முறை வாசிக்கப்பட்டு, இரண்டாம் வரி பத்தொன்பது முறை வாசிக்கப்படும். இவ்வாறாகவே ஆறு வரிகளும் வாசிக்கப் படவேண்டும்.)

என் இறைவா! இவர் உம்மிலும் உமது அடையாளங்களிலும் நம்பிக்கை வைத்து, உம் ஒருவரிடமல்லாது மற்ற அனைத்தின்பாலுள்ள பற்றுகள் யாவற்றையும் துறந்து, உம்மை நோக்கித் தனது வதனத்தைத் திருப்பியுள்ள உமது ஊழியனும், ஊழியனின் மைந்தனுமாவார். மெய்யாகவே, கருணை காட்டுவோரிடையே கருணை மிக்கவர் நீரே.

மனிதர்களின் பாவங்களை மன்னித்து அவர்களின் குறைகளை மறைப்பவரே, உமது வள்ளன்மையெனும் சுவர்க்கத்திற்கும், உமது அருள் என்னும் சமுத்திரத்திற்கும் பொருந்த அவரை நடத்துவீராக. மண்ணுலகையும் விண்ணுலகையும் படைப்பதற்கு முன்பாகவிருந்த உமது மேலான கருணையின் பிரகாசத்தினுள் அவரைப் பிரவேசிக்க அனுமதிப்பீராக. என்றென்றும் மன்னிப்பவரும் தாராளத் தன்மை மிக்கவருமான இறைவன் உம்மையன்றி வேறெவருமிலர்.

பிறகு “அல்லா-உ-அப்ஹா” எனும் வாழ்த்துரையினை அவர் 6 முறை மீண்டும் மீண்டும் கூறட்டும்; அதன் பின்னர் கீழ்வரும் வசனங்கள் ஒவ்வொன்றையும் 19 முறை மீண்டும் மீண்டும் கூறட்டும். [குறிப்பைப் பார்க்கவும்]

நாமெல்லாரும், மெய்யாகவே, இறைவனை வழிபடுகின்றோம்.

நாமெல்லாரும், மெய்யாகவே, இறைவன் முன் சிரந் தாழ்த்துகின்றோம்.

நாமெல்லாரும், மெய்யாகவே, இறைவனிடம் பக்தி கொள்கின்றோம்.

நாமெல்லாரும், மெய்யாகவே, இறைவனைப் புகழ்கின்றோம்.

நாமெல்லாரும், மெய்யாகவே, இறைவனுக்கு நன்றி செலுத்துகின்றோம்.

நாமெல்லாரும், மெய்யாகவே, இறைவனில் பொறுமையாய் இருக்கின்றோம்.

(இறந்தவர் பெண்ணாக இருந்தால் அவர் இவ்வாறு கூறுவாராக: இவள் உமது பணிப் பெண்ணும் உமது பணிப் பெண்ணின் மகளுமாவாள்...)

#11276
- Bahá'u'lláh

 

இறந்தவர்களுக்கான பிரார்த்தனைகள் - பெண்களுக்கு -

என் கடவுளே, குற்றங்களை மன்னித்துத் துன்பங்களைக் களைபவரே! பிழை பொறுப்பவரே, கருணைமிக்கவரே! கலங்கிய கண்களுடன் உமது தெய்வீக சாராம்சம் என்னும் அரசவையின்பால் எனது கெஞ்சுங் கரங்களை உயர்த்தி, உமது அருளினாலும் இரக்கக் குணத்தினாலும், உமது மெய்ம்மை என்னும் அரியாசனத்தின்பால் விண்ணேற்றம் அடைந்துள்ள உமது இப்பணிப்பெண்ணை மன்னிக்குமாறு உம்மை வேண்டிக் கொள்கின்றேன். பிரபுவே, உமது அருட்கொடை, தயை என்னும் மேகங்களைக் கொண்டு அவளுக்குப் பாதுகாப்பளிப்பீராக; உமது பிழைபொறுத்தல், மன்னிப்பு என்னும் சமுத்திரத்தில் அவளை மூழ்கச் செய்து, உமது தெய்வீக சுவர்க்கமான புனிதப்படுத்தப்பட்ட அவ்வுறைவிடத்தினுள் நுழைந்திட அவளுக்கு உதவிடுவீராக. நீர் மெய்யாகவே, வலிமை மிக்கவர், இரக்கமுடையவர், தாராளமானவர், கருணை மிக்கவர்.

#11273
- `Abdu'l-Bahá

 

பிரபுவே, எவரது கருணை சகலத்தையும் சூழ்ந்துள்ளதோ, எவரது குறைபொறுத்தல் எல்லாவற்றிற்கும் மேம்பட்டுள்ளதோ, எவரது வள்ளன்மை நேர்த்தி மிக்கதோ, எவரது மன்னிப்பும் தாராளத் தன்மையும் சகலத்தையும் உள்ளடக்கியுள்ளதோ, எவரது குறைபொறுத்தல் என்னும் தீப ஒளி உலகம் முழுவதையும் வியாபித்துள்ளதோ அவர் நீரே ஆவீர்! ஒளிக்கெல்லாம் பிரபுவே! பற்றார்வத்துடனும், கலங்கிய கண்களுடனும் உந்தன்பால் விண்ணெழுந்துள்ள உமது பணிப்பெண்ணின் மீது உமது கருணை என்னும் பார்வையினை விழச்செய்யுமாறு உம்மை வேண்டிக் கொள்கின்றேன். அவளுக்குத் தெய்வீக சுவர்க்கத்தின் ஆபரணங்களினால் பிரகாசித்திடும் உமது அருள் என்னும் மேலங்கியினை அணிவித்து, உமது ஒருமை என்னும் விருட்சத்தின் அடியில் அவளுக்குப் பாதுகாப்பளித்து, அவளது முகத்தை உமது கருணை, இரக்கம் என்னும் ஒளியினால் பிரகாசிக்கச் செய்வீராக. என் இறைவா, உமது பிழை பொறுத்தல் என்னும் ஆவியிலிருந்து பிறந்திடும் புனித நறுமணங்களை உமது தெய்வீகப் பணிப்பெண்ணுக்கு அருள்வீராக. அவளை உமது பேரானந்தமிகு உறைவிடத்தில் உய்திடச் செய்வீராக, உமது ஒன்றிணைதல் என்னும் பிணிதீர்க்கும் களிம்பினைக் கொண்டு அவளது துயரங்களைக் குணப்படுத்தி, உமது விருப்பத்திற்கிணங்க அவளை உமது புனித சுவர்க்கத்தினுள் நுழைய அனுமதிப்பீராக. உமது அன்பாதரவு என்னும் தேவகணங்ளை அவள் மீது தொடர்ச்சியாக இறங்கச் செய்து, உமது ஆசீர்வதிக்கப்பட்ட விருட்சத்தின் கீழ் அவளைப் பாதுகாப்பீராக. மெய்யாகவே, என்றும் மன்னிப்பவரும், அதி தாராளமானவரும், அதி வள்ளன்மையாளரும் நீரே ஆவீர்.

#11274
- `Abdu'l-Bahá

 

அன்புமிக்கப் பிரபுவே! நெஞ்சார நேசிக்கப்பட்ட இப்பணிப்பெண்ணானவள் உந்தன்பால் ஈர்க்கப்பட்டு, ஆழ்ந்த சிந்தனை, அறிவுக்கூர்மை ஆகியவற்றின் மூலமாக உமது முன்னிலையை அடைந்து உமது இராஜ்யத்தில் பிரவேசிக்க பேராவல் கொண்டுள்ளாள். கலங்கிய கண்களுடன் அவள் உமது மர்மங்கள் என்னும் இராஜ்யத்தின்மீது தனது பார்வையைப் பதித்திட்டாள். அவள் உம்முடன் ஆழ்ந்து உறவாடுவதில் பல இரவுகளைக் கழித்தாள், பல நாள்கள் அவள் உமது உள்ளர்ந்த நினைவிலே வாழ்ந்தாள். ஒவ்வொரு காலையும் உம்மிடமே கவனம் செலுத்தினாள், ஒவ்வொரு மாலையும் உந்தன் மீதே தனது சிந்தனையை மையப்படுத்தினாள். பாடிடும் ஓர் இராப்பாடியைப் போல் அவள் உமது புனித வாசகங்களை ஓதினாள், ஒரு கண்ணாடியைப் போன்று உமது ஒளியைப் பிரதிபலித்தாள்.

பாவங்களை மன்னிப்பவரே! விழிப்படைந்திட்ட இவ்வான்மா உமது இராஜ்யத்தில் நுழைவதற்கு வழி திறந்து, உமது கரத்தினால் பயிற்சியளிக்கப்பட்ட இப்பறவைதனை உமது நித்திய ரோஜாத் தோட்டத்தினில் உயரப் பறக்க உதவிடுவீராக. உமது அண்மையை அடையவேண்டும் என்ற ஆவலினால் ஆர்வக்கனல் கொண்டுள்ளாள்; உமது முன்னிலையை அடைவதற்கு அவளுக்கு உதவுவீராக. உம்மிடமிருந்து பிரிந்ததால் அவள் குழப்பமும் துயரமும் உற்றிருக்கின்றாள்; உமது தெய்வீக மாளிகையினுள் அவளை நுழைய அனுமதிப்பீராக.

பிரபுவே! நாங்கள் பாவிகள்; ஆனால், நீரோ மன்னிப்பவர். நாங்கள் குறைபாடுகள் என்னும் சமுத்திரத்தில் அமிழ்ந்துள்ளோம், ஆனால், நீரே மன்னிப்பவர், அன்புள்ளவர். எங்களின் பாவங்களை மன்னித்து உமது அபரிமிதமான அருளினைக் கொண்டு எங்களை ஆசீர்வதிப்பீராக. உமது வதனத்தைக் கண்ணுறும் சலுகையை வழங்கி, மகிழ்ச்சி, பேரானந்தம் என்னும் கிண்ணத்தினை எங்களுக்கு அருள்வீராக. நாங்களே எங்களின் சொந்த பழிச்செயலின் கைதிகள், நீரோ வள்ளன்மைமிகு சலுகைகளுக்கு அரசனானவர். நாங்கள் அநீதி என்னும் கடலினுள் அமிழ்ந்து கிடப்பவர்கள், நீரோ, எல்லையிலா கருணையின் பிரபு. நீரே வழங்குபவர், ஒளிமயமானவர், நித்தியமானவர், வள்ளன்மை மிக்கவர்; அருளாளரும், கருணைமயமானவரும், எல்லாம் வல்லவரும், வெகுமதிகள் வழங்குபவரும், பாவங்களை மன்னிப்பவரும் நீரே. மெய்யாகவே, எங்களின் குறைகளை மன்னிப்பவரும், பிரபுகளுக்கெல்லாம் பிரபுவானவரும் நீரே ஆவீர்.

#11275
- `Abdu'l-Bahá

 

இறந்தவர்களுக்கான பொது பிரார்த்தனைகள்

அவரே கடவுள், அன்பிரக்கத்திற்கும் வள்ளன்மைக்கும் பிரபுவான அவர் மேன்மைப்படுத்தப்படுவாராக!

சர்வ சக்தி வாய்ந்த என் இறைவா, ஒளி உமக்கே உரியதாகுக. உமது சர்வ சக்திக்கும் உமது வலிமைக்கும் உமது இறைமைக்கும் உமது அன்பிரக்கத்திற்கும் உமது அருளுக்கும் உமது ஆற்றலுக்கும் உமது திருவுருவின் ஒருமைத் தன்மைக்கும் உமது சாராம்சத்தின் ஏகத்துவத்திற்கும் இப்படைப்புலகிலும் அதிலுள்ள அனைத்திற்கும் மேலான உமது புனிதத் தன்மைக்கும் உயர்வுக்கும் நான் சாட்சியம் கூறுகின்றேன்.

என் இறைவா! நான் உம்மைத் தவிர மற்றெல்லா வற்றிலிருந்தும் பற்றறுத்து, உம்மை இறுகப் பற்றி, உமது அருள் என்னும் சமுத்திரத்தின்பாலும் உமது கடாட்சம் என்னும் வானத்தின்பாலும் திரும்பி நிற்பதை நீர் காண்கின்றீர்.

பிரபுவே! நீர் இவ்வூழியனில் நம்பிக்கை வைத்துள்ளீர் என்பதற்கும் அந்த ஆவியின் வழியேதான் நீர் உலகிற்கு உயிரளித்துள்ளீர் என்பதற்கும் நான் சாட்சியம் கூறுகின்றேன்.

உமது வெளிப்பாடு என்னும் கோளத்தின் சுடரொளியின் சாட்சியாக நான் உம்மிடம் கேட்கிறேன். உமது நாள்களில் அவர் சாதித்துள்ளவற்றினைக் கருணை கூர்ந்து ஏற்றுக் கொள்வீராக. அதன் காரணமாக உமது நல்விருப்பம் என்னும் ஒளி அவருக்கு வழங்கப்படவும், உமது ஏற்பினால் அவர் அலங்கரிக்கப்படவும் அருள்வீராக.

என் பிரபுவே! தானாக நானும், படைப்புப் பொருள்கள் அனைத்தும், உமது வலிமைக்குச் சாட்சியம் பகர்கின்றோம்; தவிரவும், மனிதர் அனைவருக்கும் பிரபுவானவரே! உந்தன்பாலும், விண்ணுலகிலுள்ள உமது ஸ்தலத்தின்பாலும் உமது உயர்வான சுவர்க்கத்தின்பாலும், உமது அருகாமை என்னும் புகலிடத்தின்பாலும் திரும்பியுள்ள இவ்வான்மாவினை ஏற்க மறுத்திடாதீர்.

எனவே, என் இறைவா! இவ்வெழுதுகோல் அறிவிக்க இயலாத, இந் நா விவரிக்கவும் இயலாத வானுலக ஸ்தலங்களிலுள்ள உமது தேர்ந்தெடுக்கப்பட்டோருடனும் புனிதர்களுடனும் உமது தூதர்களுடனும் உமது இவ்வூழியன் கலந்துறவாட அனுமதித்திப்பீராக.

என் பிரபுவே, இவ்வறியோன் உமது செல்வம் என்னும் இராஜ்யத்திற்கும், இவ்வந்நியன் உமது சூழிடங்களுக்குள் இருக்கும் தனது உறைவிடத்திற்கும், கடுந்தாகமுற்ற இவன் உமது வள்ளன்மை என்னும் விண்ணுலக நதியின்பாலும், மெய்யாகவே, விரைந்து வந்துள்ளான். பிரபுவே, உமது அருட்கொடை என்னும் பெருவிருந்தில் உமது வள்ளன்மை என்னும் சலுகையில் தனது பங்கைப் பெற விடாது அவனைத் தடுத்திடாதீர். உண்மையிலேயே, நீரே எல்லாம் வல்லவர், அருளாளர், அதிவள்ளன்மை மிக்கவர்.

என் இறைவா, உமது பொறுப்பு உம்மிடமே திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. புதிதாக வரவேற்கப்பட்டுள்ள இவர்பால் உமது அன்பளிப்புகளையும், உமது அருள் என்னும் விருட்சத்தின் கனிகளையும் வழங்கிட உத்தரவாதமளிப்பது மண்ணுலக விண்ணுலக இராஜ்யங்களை உள்ளடக்கியுள்ள உமது கிருபைக்கும் உமது வள்ளன்மைக்கும்

பொருத்தமானதாகும்! நீர் விரும்பியவாறு செய்யவல்ல ஆற்றல் மிக்கவர் நீரே; அருள்பாலிப்பவரும், அதி வள்ளன்மை மிக்கவரும், இரக்கக் குணமுடையவரும், வழங்குபவரும், மன்னிப்பாளரும், மதிப்புமிக்கவரும், எல்லாம் அறிந்தவரும் உம்மையன்றி வேறெவருமிலர்.

என் பிரபுவே, மனிதர்கள் தங்கள் விருந்தினரைக் கௌரவிக்க வேண்டுமென ஆணையிட்டுள்ளீர் என்பதற்கும், உந்தன்பால் விண்ணுயர்ந்துள்ளோர் மெய்யாகவே உம்மை அடைந்து உமது முன்னிலையை எய்திட்டோர் ஆவர் என்பதற்கும் நான் சாட்சியம் கூறுகின்றேன். ஆகவே, நீர் அவரை உமது அருளுக்கும் வள்ளன்மைக்கும் ஏற்ப நடத்துவீராக! உமது ஒளியின் சாட்சியாக, நீர் உமது ஊழியர்களுக்குக் கட்டளையிட்டுள்ளதனை நீரே செயல்படுத்தத் தவற மாட்டீர் என்றும், உமது வள்ளன்மை என்னும் கயிற்றினைப் பற்றிக் கொண்டு, உமது செல்வம் என்னும் பகலூற்றின்பால் உயர்ந்தெழுந்து வந்துள்ள அவரிடமிருந்து அதனைப் பறித்திடவும் மாட்டீர் என்றும் எனக்கு நிச்சயமாகத் தெரியும்.

அவ்வொருவரேயான, ஏகநாயகரான, சக்தி-மிக்கவரான, எல்லாம் அறிந்தவருமான இறைவன் உம்மையன்றி வேறெவருமிலர்.

#11269
- Bahá'u'lláh

 

என் கடவுளே! குற்றங்களை மன்னிப்பவரே! சன்மானங்கள் வழங்குபவரே! வேதனைகளைப் போக்குபவரே!

மெய்யாகவே, தூல உடலைத் துறந்து ஆன்மீக உலகினை வந்தடைந்தோரின் பாவங்களை மன்னிக்குமாறு நான் உம்மிடம் மன்றாடுகிறேன். என் பிரபுவே! அவர்களைக் குற்றங்களிலிருந்து தூய்மைப்படுத்துவீராக; அவர்களின் கவலைகளை அகற்றிடுவீராக; அவர்களது இருளை ஒளியாக மாற்றுவீராக. அவர்களைப் பேரின்பமெனும் பூங்காவில் பிரவேசிக்கச் செய்வீராக; அதி தூய நீரினால் அவர்களைச் சுத்தப்படுத்தி, அதி உயர்வான மலையின் மீதுள்ள உமது சுடரொளியினைக் கண்ணுற அனுமதிப்பீராக.

#11270
- `Abdu'l-Bahá

 

என் கடவுளே! என் கடவுளே! உமது தெய்வீக அதிகாரத்தின் மாட்சிமையின் முன் பணிவுடனும் தாழ்மையுடனும் உமது ஒருமைத் தன்மையின் கதவருகில் நிற்கும் உமது ஊழியர் மெய்யாகவே உம்மிலும் உமது வாசகங்களிலும் நம்பிக்கை வைத்து, உமது வார்த்தைகளுக்குச் சாட்சியமளித்து உமது அன்பெனும் தீச் சுடரினால் தூண்டப்பட்டு உமது அறிவெனும் சமுத்திரத்தின் ஆழத்தில் மூழ்கி உமது தென்றலினால் கவரப்பட்டு, உம் ஒருவரையே நம்பி, தனது முகத்தை உந்தன்பால் திருப்பி, தனது மன்றாடலை உந்தன்பால் சமர்ப்பித்து, உமது மன்னிப்பையும், பொறுத்தருள்-தலையும் உறுதியாய் நம்பி இருக்கின்றார். அழியக்கூடிய இவ் வாழ்க்கைதனைத் துறந்து உம்மைச் சந்திக்கும் ஆவலில் ஏங்கி, நித்திய இராஜ்யத்தினை நோக்கிச் சிறகடித்துப் பறந்துள்ளார்.

பிரபுவே, இவரது ஸ்தானத்தை மேன்மைப்-படுத்துவீராக; உமது ஒப்புயர்வற்ற கருணையின் திருக்கூடாரத்தில் இவருக்கு ஆதரவளிப்பீராக. உமது மேன்மைமிகு சுவர்க் கத்தினுள் இவரைப் பிரவேசிக்கச் செய்வீராக; உமது உயர்வுமிக்க ரோஜாத் தோட்டத்தில் இருக்கும் அழியா வாழ்வினைத் தந்தருள்வீராக; அதனால் அவர் மர்மங்கள் நிறைந்த உலகில் ஒளியெனும் கடலில் மூழ்கக்கூடும்.

மெய்யாகவே நீரே தாராளமானவர், சக்திமிக்கவர், மன்னிப்பவர், வழங்குபவர்.

#11271
- `Abdu'l-Bahá

 

மன்னித்தருளும் பிரபுவே! சில ஆன்மாக்கள் தங்களின் வாழ்நாளை அறியாமையில் கழித்தும், நட்புறவற்றும், அடங்காத்தனமுடை-யோராகவும் உள்ளனர். இருப்பினும் உமது மன்னிப்பு என்னும் சமுத்திரத்திலிருந்து வரும் ஒரே அலையின்மூலம் பாவத்தினால் சூழப்பட்டுள்ள அனைவரும் விடுவிக்கப்படுவர். நீர் எவரை விரும்புகின்றீரோ, அவரை நம்பகமானவராக்குவீர், எவர் உமது தேர்வுப் பொருளாகக் கொள்ளப்பட வில்லையோ அவர் ஆணை மீறுபவராகக் கணிக்கப்படுவார். நீர், எங்களை உமது நீதி கொண்டு நடத்துவீராயின், நாங்கள் அனைவரும் பாவிகளேயல்லாது வேறிலர், ஆகவே உம்மிடமிருந்து ஒதுக்கி வைக்கப்பட வேண்டியவர்கள் ஆகிடுவோம். ஆனால் நீர் இரக்கத்தினை மேற்கொள்வீராயின், ஒவ்வொரு பாவியும் தூயவனாகவும், ஒவ்வோர் அந்நியனும் நண்பனாகவும் ஆக்கப்படுவான். ஆதலின் உமது மன்னிப்பையும் பொறுத்தருள்தலையும் வழங்கி, அனைவருக்கும் உமது கருணையை நல்கிடுவீராக.

மன்னிப்பவரும் ஒளி வழங்குபவரும் எல்லாம் வல்லவரும் நீரே ஆவீர்.

#11272
- `Abdu'l-Bahá

 

இறைவனருகே இருத்தல்

பிரபுவே, எனதாண்டவரே, என் மனவேதனையில், என் சுவர்க்கமே! எனது துயரங்களில் என் கவசமும் அடைக்கலமும் ஆனவரே! தேவையான வேளையில் எனது தஞ்சமும் புகலிடமுமானவரே. எனது தனிமையில் என் துணைவரே! எனது வேதனைகளில் என் ஆறுதலே, எனது ஏகாந்தத்தில் என் அன்பான தோழரே! என் கவலைகளின் வேதனைகளை நீக்குபவரே, பாவங்களை மன்னிப்பவரே!

தெய்வீக ஒருமைப்பாடெனும் இக்கால வட்டத்தில், உமது கட்டளைக்கு மாறாக நடந்திடும் அனைத்திலிருந்தும் என்னைக் காத்தருளுமாறும், கறையற்ற, மாசுபடியா நிலையில் நான் உமது அருள் என்னும் விருட்சத்தின் நிழலினைத் தேடுவதிலிருந்து என்னைத் தடுத்திடும் எல்லா அசுத்தங்களிலிருந்தும், என்னைத் தூய்மைப்- படுத்துமாறும், நான், மிகு ஆர்வத்துடன், என் உள்ளத்தினாலும், மனத்தினாலும், நாவினாலும், உம்மைக் கெஞ்சியவண்ணம் உந்தன்பால் முழுமையாகத் திரும்புகின்றேன்.

பிரபுவே, பலவீனர்களின் மீது கருணை காட்டுவீராக, நோயுற்றோரைக் குணப்படுத்துவீராக, கடுந் தாகத்தினைத் தணிப்பீராக. உமது அன்பெனும் நெருப்புக் கனன்றிடும் நெஞ்சத்தினை மகிழ்வுறச் செய்து அதனை உமது தெய்வீக அன்பு, உந்துதல் என்னும் சுடரினால் ஒளிரச் செய்வீராக.

தெய்வீக ஒற்றுமை எனும் கோயில்களுக்குப் புனிதம் எனும் ஆடை அணிவித்து, என் சிரசுக்கு உமது தயை எனும் மகுடத்தைச் சூட்டுவீராக.

உமது வள்ளன்மையெனும் கோளத்தின் பிரகாசத் தினைக் கொண்டு என் முகத்தினைப் பிரகாசிக்கச் செய்து, உமது திருவாயிலில் ஊழியம் செய்திட எனக்குக் கிருபை கூர்ந்து உதவிடுவீராக.

என் இதயத்தை உமது உயிரினங்களின்பாலான அன்பினால் நிரம்பி வழிந்தோடச் செய்து, நான், உமது கிருபையின் சின்னமாகிடவும், உந்தன்பால் பக்திகொண்டிடவும், என்னையே மறந்த நிலையில், உம்மை நினைவு கூர்ந்து வழிபட்ட வண்ணம், ஆனாலும், உம்மைச் சார்ந்தவற்றின்பால் என்றும் விழிப்புணர்வுடனும் இருந்திட அருள்வீராக.

கடவுளே, என் கடவுளே! உமது மன்னிப்பு, கிருபை, என்னும் மென்காற்று என்னை வந்தடைவதைத் தடுத்திடாதீர், உமது உதவி, தயை என்னும் கிணற்றூற்றுகளை எனக்குக் கிட்டாது செய்திடாதீர்.

உமது பாதுகாத்திடும் சிறகுகள் நிழலின் கீழ் என்னை இணைந்திட விடுவீராக; சகலத்தையும் காத்திடும் உமது கண் பார்வையினை என் மீது விழச் செய்வீராக.

உமது மக்கள் மத்தியில் உமது திருநாமத்தினைப் போற்றிப் புகழ்ந்திட என் நாவினைத் தளர்த்திடுவீராக; அதனால், மாபெரும் சபைகளில் என் குரல் எழுப்பப்பட்டு, என் உதடுகளிலிருந்து உம் புகழ் வெள்ளம் வழிந்திடக்கூடுமாக.

உண்மையாகவே, கிருபைமிக்கவரும், மேன்மை-மிக்கவரும், வலிமைமிக்கவரும், சக்திமிக்கவரும் நீரே.

#11280
- `Abdu'l-Bahá

 

இரங்குபவரும், சர்வ வள்ளன்மையாளரும் அவரே யாவார்! கடவுளே, என் கடவுளே! என்னைப் பார்க்கின்றீர்; என்னைத் தெரிந்திருக்கின்றீர். எனது தஞ்சமும் புகலிடமும் நீரே. உம்மையன்றி வேறெவரையும் நான் நாடியதில்லை, நாடப்போவதுமில்லை; உமது அன்பு என்னும் பாதையைத் தவிர வேறெந்தப் பாதையிலும் நான் அடியெடுத்து வைத்ததில்லை; வைக்கப் போவதுமில்லை. நம்பிக்கை இழந்துள்ள இருள்மிகு இவ்விரவில் எதிர்பார்ப்புடனும், அதி நம்பிக்கையுடனும் எனது கண்கள் உமது எல்லையற்ற தயவெனும் அதிகாலையின்பால் திரும்புகின்றன; எனது சோர்வுற்ற ஆன்மா, இவ் வைகறையில், உமது அழகு, பூரணத்துவம் என்பனவற்றின் நினைவில் புத்துணர்வுப் பெற்று வலுவடைந்துள்ளன. உமது கருணை என்னும் அருள் எவருக்கு உதவுகின்றதோ, அவர், ஒரு துளியேயாயினும், எல்லையற்ற சமுத்திரமாகி விடுவார்; சாதாரண ஓர் அணுவிற்கு உமது அன்புப் பரிவெனும் அருட்பொழிவு உதவிடுமாயின், ஒரு மின்னிடும் விண்மீனைப் போல அது ஒளிர்ந்திடும்.

தூய்மை என்னும் ஆவியானவரே, அதி வள்ளன்மைமிகு வழங்குபவரே , கவரப்பட்டவனும் உற்சாகமடைந்தவனுமான இவ்வூழியனை உமது பாதுகாப்பு என்னும் அடைக்கலத்தில் காத்தருள்வீராக. இப்படைப்புலகினில் அவன் உமது அன்பில் உறுதியாகவும் நிலையாகவும் இருந்திட உதவுவதோடு இச்சிறகொடிந்த பறவை உமது விண்ணுலக விருட்சத்திலுள்ள தெய்வீகக் கூட்டில் புகலிடத்தையும், பாதுகாப்பையும் பெற்றிட அருள்வீராக.

#11281
- `Abdu'l-Bahá

 

இளைஞர்கள்

கருணைமிக்கப் பிரபுவே! பற்றின்மை எனும் தொடுவானத்திலிருந்து, ஒளிவீசும் நிலவைப்போன்று, இதயம், ஆன்மா ஆகிய இராஜ்யங்களில் கதிரொளியை வீசி, படைப்புலகின் பண்புகளிலிருந்து தங்களையே அகற்றிக்-கொண்டு, இறவாமை எனும் இராஜ்யத்திற்குள் விரைந்து சென்றிடும் ஆன்மாக்களை நீர் அவதரிக்கச் செய்துள்ளீர். அவர்கள் ஒப்புவமை இல்லாத மலர்ச்சியையும் அழகையும் பெறக்கூடிய அளவிற்கு, உமது அன்புக் கருணை எனும் சமுத்திரத்திலிருந்து ஒரு துளியைக் கொண்டு, அவர்களின் இதயங்கள் எனும் பூங்காவைப் பலமுறை ஈரமாக்கியுள்ளீர். உமது தெய்வீக ஒற்றுமையின் புனித நறுமணம் திசையெங்கும் பரவி, அதன் இனிய மணங்களை உலகமுழுவதன் மீதும் சிந்தச்செய்து, உலகின் பிரதேசங்களை வாசனையால் நிரப்பியுள்ளது.

ஆதலால், புனிதமெனும் உயிருருவே, சுதந்திரமாகவும் தூய்மையாகவும் ஆனபின்பு, ஜீவ உலகினை ஒரு புதிய ஆடையைக் கொண்டும், ஓர் அற்புத மேலங்கியைக் கொண்டும் அலங்கரித்து, உம்மைத் தவிர வேறெவரையும் நாடாதிருக்கும், உமது நல்விருப்பம் எனும் பாதையைத் தவிர வேறெந்தப் பாதையிலும் நடந்திடாதிருக்கும், உமது சமயத்தின் மர்மங்களையல்லாது வேறெதனையும் பேசிடாதிருக்கும், பரிசுத்தமான ஜீவியர்களைப் போன்ற ஆன்மாக்களைத் தோன்றிடச் செய்திடுவீராக.

கருணைமிக்கப் பிரபுவே! புனிதமானோரின் அதிவுயரிய ஆவலாக இருப்பதை இந்த இளைஞன் அடையக்கூடுமாறு விதித்தருள்வீராக. உமது பலம்பொருந்திய கிருபையின் சிறகுகளை—பற்றின்மை மற்றும் தெய்வீக உதவி எனும் சிறகுகளை — அவனுக்குத் தந்தருள்வீராக. அதனால் அவன் உமது மென்கருணை எனும் காற்று மண்டலத்தில் உயரப் பறக்கக்கூடும்; உமது விண்ணுலக அருட்கொடைகளையும் பருகிடக்-கூடும்; தெய்வீக வழிகாட்டல் எனும் ஓர் அடையாளமாகவும், விண்ணுலகப் படையின் ஒரு விருதுக்கொடியாகவும் ஆகிடக்கூடும். ஆற்றல்-மிக்கவரும், சக்திமிக்கவரும், காண்பவரும், செவிமடுப்பவரும் நீரேயாவீர்.

#11263
- `Abdu'l-Bahá

 

கருணையுள்ள பிரபுவே! இந்த இளம் பறவைகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு ஜோடி விண்ணுலக சிறகுகளைத் தந்தருளியும், அவைகளுக்கு ஆன்மீகச் சக்தியையும் வழங்கிடுவீராக; அதனால் அவை இந்த எல்லையில்லா வானில் சிறகடித்துத்திரியவும், அப்ஹா இராஜ்யத்தின் சிகரங்களுக்கு உயரப் பறந்திடவும் கூடும்.

பிரபுவே, இந்த வலுவற்ற விதைகளைப் பலப்படுதுவீராக; அதனால் அவை ஒவ்வொன்றும், பசுமையும், செழிப்பும் நிறைந்த கனிக்கொடுக்கின்ற ஒரு மரமாக ஆகிடக் கூடும். உமது விண்ணுலகச் சேனைகளின் சக்தியைக் கொண்டு, இந்த ஆன்மாக்களை வெற்றியாளராக்கிடுவீராக; அதனால் அவர்கள் பிழை, அறியாமை எனும் சக்திகளை வென்று, தோழமை, வழிகாட்டல் எனும் விருதுக்கொடியை மக்களிடையே உயர்த்திக் காட்டிடக் கூடும்; அதனால் அவர்கள், வசந்த காலத்தின் புத்துயிரூட்டும் சுவாசங்களைப் போல், மனித ஆன்மாக்கள் எனும் விருட்சங்களைப் புதுப்பித்துப் புத்துயிரூட்டவும் கூடும்; இளவேனிற் காலத்தின் பொழிவுகளைப் போல, அந்தப் பிரதேசங்களின் புல்வெளிகளைப் பசுமையாகவும் வளமாகவும் ஆக்கிடக் கூடும்.

வலிமையும் சக்தியும் மிக்கவர் நீரே; வழங்குபவரும் சர்வ அன்பானவரும் நீரே.

#11264
- `Abdu'l-Bahá

 

இரக்கமுள்ள பிரபுவே! இராஜ்யத்தின் மகளான இவளுக்கு விண்ணுலக உறுதிப்பாட்டை வழங்கிடுவீராக; கருணைகூர்ந்து அவளுக்கு உதவிடுவீராக. அதனால் அவள் உமது சமயத்தில் திடமாகவும் பற்றுறுதியாகவும் இருக்கக் கூடும். மேலும், மர்மங்கள் எனும் ரோஜா தோட்டத்தின் ஓர் இராப்பாடியைப் போல, அப்ஹா இராஜ்யத்தில் மிக அற்புதமான குரலோசைகளில் கீதங்களைப் பாடி, அதன்வழி அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தந்திடக்கூடும். இராஜ்யத்தின் புதல்விகள் மத்தியில் மேன்மைமிக்கவளாக அவளை ஆக்கிடவும், நிலையான வாழ்வை அடைந்திடவும் அவளை இயலச் செய்வீராக. வழங்குபவரும், அதி அன்பானவரும் நீரே ஆவீர்.

#11265
- `Abdu'l-Bahá

 

பிரபுவே! இவ்விளைஞனைப் பிரகாசமுறச் செய்து, இவ்வறிய ஜீவனுக்கு உமது வளத்தினை வழங்கிடுவீராக. அவனுக்கு அறிவை வழங்கி, ஒவ்வொரு காலைப் பொழுதிலும் அவனுக்குக் கூடுதலான பலமளித்து, அவனை உமது பாதுகாப்பு எனும் புகலிடத்தினுள் காத்திடுவீராக. அதனால் அவன் தவறிலிருந்து விடுவிக்கப்பட்டு, உமது சமயச் சேவையில் தன்னை அர்ப்பணித்து, வழி தவறியவர்களுக்கும் துரதிர்ஷ்டனுக்கும் வழிகாட்டிடக் கூடும்; கட்டுண்டிருப்பவர்களை விடுவிக்கக் கூடும்; கவனமற்றோரை விழிப்புறச் செய்யக் கூடும்; அதனால் யாவருக்கும் உமது நினைவும் போற்றுதலும் அருளப் பெறுமாக. வல்லவரும் சக்தி மிக்கவரும் நீரே ஆவீர்.

#11266
- `Abdu'l-Bahá

 

பிரபுவே என் கடவுளே, புகழும் மகிமையும் உமக்கே உரியதாகட்டும்! உமது அன்பெனும் புல்வெளியில் உம்மால் நடப்பட்டும், உந்தன் இறைமை எனும் விரல்களால் பேணி வளர்க்கப்பட்டும், தேர்ந்தெடுக்கப்பட்டதுமான ஓர் இளஞ்செடி இதுவாகும். நீர் உமது ஒருமை எனும் தோட்டங்களிலிருந்து வழிந்து வரும் நித்திய வாழ்வெனும் பகலுற்றிலிருந்து இச்செடிக்கு நீர் பாய்ச்சியுள்ளீர்; உமது மென்கருணை எனும் மேகங்களை, அதன் மீது உந்தன் தயைகளைப் பொழியவும் செய்துள்ளீர். இப்போது அது உமது தெய்வீகச் சாரம் எனும் பகலூற்றிலிருந்து அவதரித்த உந்தன் ஆசிகளின் நிழலின் கீழ் வளர்ந்தும் செழிப்படைந்தும் உள்ளது. அது இலைகளையும் மலர்களையும் மலரச் செய்து, உமது அற்புதப் பரிசுகள், அருட்கொடைகள் ஆகியவற்றின் அருளின் மூலமாக, கனிகளால் நிரப்பப்பட்டுள்ளது; மேலும் உமது அன்புக் கருணை எனும் திசையிலிருந்து மிதந்து வரும் நறுமணம் கமழ்ந்த இளந்தென்றலினால் தூண்டப்பட்டுள்ளது.

பிரபுவே! உமது நித்திய இராஜ்யத்தில் உள்ள புனிதமெனும் கூடாரங்களை அணிவித்தும், மீண்டும் இணைதல் எனும் அரங்கில் ஒற்றுமை எனும் சாராம்சங்களை அலங்கரித்துமுள்ள, உமது விசேஷ அருட்கொடை, தயை ஆகியவற்றின் பொழிவுகளால், இந்த இளஞ்செடியைச் செழிப்பாகவும், பசுமையாகவும், வளமாகவும் ஆகிடச் செய்வீராக.

பிரபுவே, உமது புலனாகா இராஜ்யத்திலிருந்து வெளிவரும் உந்தன் வலுவூட்டும் கிருபையைக் கொண்டு அவனுக்கு உதவிடுவீராக; உமது ஊழியர்களின் கண்களிலிருந்து மறைக்கப்-பட்டுள்ள சைனியங்களைக் கொண்டு அவனுக்கு உதவிடுவதோடு, உமது முன்னிலையில் அவன் ஓர் உறுதியான அடியெடுத்து வைப்பதற்கும் அருள்புரிவீராக. உம்மைப் பற்றி மொழிந்திட அவனது நாவினை அசையச் செய்தும், உந்தன் புகழைப் போற்றுவதற்கு அவனது இதயத்தை மகிழ்வுறவும் செய்வீராக. உந்தன் இராஜ்யத்தில் அவனது வதனம் ஒளிபெற்றிடவும், மேலுலகில் அவன் வளம்பெற்றிடவும், உமது சமயத்திற்குச் சேவையாற்றிடவும் கிருபைகூர்ந்து அவனை உறுதிப்படுத்துவீராக.

சர்வ சக்திமிக்கவரும், சர்வ ஒளிமயமானவரும், சர்வ வல்லவரும் நீரே ஆவீர்.

#11267
- `Abdu'l-Bahá

 

உதவி

இன்னல் தீர்ப்போன் இறைவனன்றி யாருளர்; சொல்: இறைவனே போற்றி, அவரே தெய்வம், யாவரும் அவர் ஊழியர், யாவரும் அவர் சொற்பணிபவர்.

#5083
- The Báb

 

இன்னல் தீர்ப்போன் இறைவனன்றி யாருளர்; சொல்: இறைவனே போற்றி, அவரே தெய்வம், யாவரும் அவர் ஊழியர், யாவரும் அவர் சொற்பணிபவர்.

#5085
- The Báb

 

தேவரே, நாங்கள் இரக்கத்துரியவர்கள், பரிவு காட்டுவீராக; நாங்கள் ஏழைகள், உமது செல்வக்கடலிலிருந்து ஒரு பகுதியை அளிப்பீராக; நாங்கள் வறியவர்கள், எங்களின் தேவையைப் பூர்த்தி செய்வீராக; நாங்கள் தாழ்ந்தவர்கள், தங்களின் மேன்மை அளிப்பீராக; வானத்தில் உலவும் பறவைகளும், பரந்த வெளியில் வாழும் பிராணிகளும் தங்களிடமிருந்து அன்றாட உணவைப் பெறுகின்றன. எல்லா உயிர்களும் தங்களின் பாதுகாப்பிலும், அன்புக் கருனையிலும் பங்கு பெறுகின்றன. இந்தப் பலவீனமானவன் தங்களின் திவ்விய அருளைப் பெறாமல் தடுத்துவிடாதீர். உமது சக்தியால் ஆதரவற்ற இந்த ஆத்மாவுக்கு அருள் புரிவீராக. என்றென்றும் எங்களுக்கு உணவளித்து, எங்களின் வாழ்க்கைத் தேவைகளை அதிகரிப்பீராக; அதனால் நாங்கள் தங்களைத் தவிர வேறெவரிடத்திலும் நம்பிக்கை வைக்காதிருப்போம்; தங்களிடமே முழுமையாகத் தொடர்பு கொள்வோம்; தங்களின் வழியில் நடந்து தங்களின் மறைபொருளை எடுத்தியம்புவோம். எல்லாம் வல்லவரும், மனித இனத்தின் தேவைகளை அளிப்பவரும் நீரே ஆவீர்.

#5084
- `Abdu'l-Bahá

 

உதவியும் ஆதரவும்

எவரது வதனம் என் ஆராதனையின் இலக்காக இருக்கின்றதோ, எவரது அழகு என் சரணாலயமாக இருக்கின்றதோ, எவரது வாசஸ்தலம் என் இலக்காக இருக்கின்றதோ, எவரது போற்றுதல் என் நம்பிக்கையாக இருக்கின்றதோ, எவரது பாதுகாப்பு என் தோழனாக இருக்கின்றதோ, எவரது அன்பு என் ஜீவனுக்கு உயிராக இருக்கின்றதோ, எவரைப் பற்றிப் பேசுவது எனக்கு ஆறுதலாக இருக்கின்றதோ, எவரது அண்மை என் ஆவலாக இருக்கின்றதோ, எவரது முன்னிலை எனது ஆழ்ந்த நேசமும், அதியுயரிய ஆவலுமாக இருக்கின்றதோ, அவ்வனைத்துக்கும் உரியவரே, உமது ஊழியர்களுள் தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கு நீர் விதித்தருளியவற்றைப் பெறுவதிலிருந்து என்னைத் தடுத்துவிடாதீர் என நான் உம்மிடம் மன்றாடுகிறேன். அதன்பின், எனக்கு இம்மையிலும் மறுமையிலும் உள்ள நன்மைகளைத் தந்தருள்வீராக.

உண்மையாகவே, நீரே, மனிதர்களுக்கெல்லாம் மன்னராவீர். என்றென்றும் மன்னித்தருளும், அதி தாராளமிகு இறைவன் உம்மையன்றி வேறிலர்.

#11282
- Bahá'u'lláh

 

என் கடவுளே, எனது பேரன்புமிகு நேசரே, எனது அரசரே, எனதாவலே, உந்தன்பால் என் நன்றியினை எந்த நா எடுத்தியம்ப இயலும்? நான் கவனமற்றிருந்தேன், நீர் என்னை விழிப்புறச் செய்தீர். நான் உம்மிடமிருந்து அப்பால் திரும்பி இருந்தேன், நீர் கிருபை கூர்ந்து என்னை உந்தன்பால் திரும்பிட உதவினீர். நான் இறந்தவன் போலிருந்தேன்; நீர் உமது ஜீவ நீரினால் என்னைப் பிழைத்தெழச் செய்தீர். நான் வாடி இருந்தேன், அதிபெரும் கருணைமிகும் எழுதுகோலிலிருந்து பெருக்கெடுத்து வந்துள்ள உமது தெய்வீகத் திருவாக்கினால், என்னைப் புத்துயிர்ப் பெறச் செய்தீர்.

அரும் பெருங்கடவுளே, படைப்பினம் யாவும் உமது அருட்பாலிப்பினாலேயே தோன்றின; உமது வள்ளன்மை என்னும் நீரிலிருந்தும் உமது கருணை எனும் சமுத்திரத்திலிருந்தும் அவற்றை விலக்கிடாதீர். எல்லாக் காலங்களிலும் எல்லாச் சூழ்நிலைகளிலும் உதவி, ஆதரிக்கும்படி உம்மைக் கெஞ்சிக் கேட்டு, அருள் என்னும் சுவர்க்கத்திலிருந்து உமது ஆதி தயவினைத் தேடுகின்றேன். உண்மையிலேயே, நீரே, அருட்கொடையின் பிரபுவும் நித்திய இராஜ்யத்தின் மன்னரும் ஆவீர்.

#11283
- Bahá'u'lláh

 

என் கடவுளே, என் ஆண்டவரே, எந்தன் பிரபுவே! நான் எனது சுற்றத்தாரிடமிருந்து பற்றறுத்துக்- கொண்டு, உம் மூலமாக உலகத்தில் வாழும் யாவற்றிலிருந்தும் சுதந்திரமடைந்து, உமது பார்வையில் பாராட்டத் தக்கதனைப் பெற்றிட என்றென்றும் ஆயத்தமாயிருக்கின்றேன். உம்மைத் தவிர வேறெதனிலும் இருந்து விடுதலை பெற உதவக் கூடிய அந்நன்மைகளை என்பால் வழங்கி, எனக்கு, உமது எல்லையில்லாத் தயையினைப் போதிய அளவு வழங்குவீராக. மெய்யாகவே, நிரம்பிய அருளைக் கொண்டுள்ள பிரபு நீரே ஆவீர்.

#11285
- The Báb

 

பிரபுவே! நாங்கள் பரிதாபத்துக்கு உரியவர்கள், பரிவு காட்டுவீராக; நாங்கள் ஏழைகள், உமது செல்வக் கடலிலிருந்து ஒரு பகுதியை அளிப்பீராக; நாங்கள் வறியவர்கள், எங்களின் தேவையைப் பூர்த்தி செய்வீராக. நாங்கள் தாழ்ந்தவர்கள், உமது மேன்மையை அளிப்பீராக. வானத்தில் உலவும் பறவைகளும் பரந்த வெளியில் வாழும் பிராணிகளும் உம்மிடமிருந்தே அன்றாட உணவைப் பெறுகின்றன. எல்லா உயிர்களும் உமது பாதுகாப்பிலும் அன்புக் கருணையிலும் பங்கு பெறுகின்றன.

இப்பலவீனமானவன் உமது திவ்விய அருளைப் பெறாது தடுத்திடாதீர். உமது சக்தியால் ஆதரவற்ற இவ்வான்மாவுக்கு அருள் புரிவீராக.

எங்களுக்கு அன்றாட உணவளித்து, வாழ்க்கையின் தேவைகளை அதிகரிப்பீராக; அதனால் நாங்கள் உம்மைத் தவிர வேறு எவரிடத்திலும் நம்பிக்கை வைக்காதிருப்போம். உம்மிடமே முழுமையாகத் தொடர்பு கொள்வோம். உமது வழியில் நடந்து, உமது மறைபொருளை எடுத்தியம்புவோம். எல்லாம் வல்லவரும் மனித இனத்தின் தேவைகளை அளிப்பவரும் நீரே.

#11286
- `Abdu'l-Bahá

 

கருணைமிக்கப் பிரபுவே! நாங்கள் உமது புனித கதவருகில் அடைக்கலம் பெற்றிருக்கும், உமது வாயிற்படியின் ஊழியர்கள் ஆவோம். இந்தப் பலமான தூணைத் தவிர வேறெந்த புகலிடத்தையும் நாடிடவில்லை; உமது பாதுகாப்பைத் தவிர, வேறெந்த உறைவிடத்தின்பாலும் நாங்கள் திரும்பிடவில்லை. எங்களைப் பாதுகாத்து, எங்களை ஆசீர்வதித்து, எங்களுக்கு ஆதரவளித்திடுவீராக. உமது நல்விருப்பத்தை மட்டுமே நேசித்திடவும், உமது புகழை மட்டுமே உச்சரித்திடவும், உண்மை எனும் பாதையை மட்டுமே பின்பற்றிடுபவர்களாகவும் எங்களை ஆக்கிடுவீராக. அதனால் நாங்கள் உம்மைத் தவிர மற்றனைத்தையும் கைவிடுமளவுக்குச் செழுமை பெறக் கூடும்; உமது வள்ளன்மை எனும் சமுத்திரத்திலிருந்து எங்கள் பரிசுகளைப் பெற்றிடச் செய்திடுவீராக. அதனால் நாங்கள் என்றென்றும் உமது சமயத்திற்குச் சேவைபுரிந்திட முயன்றிடவும், உமது இனிய நறுமணங்களை நாலாதிசையிலும் பரவச் செய்திடவுங்கூடும். நாங்கள் அதனால் எங்களை மறந்து, உம்முடன் மட்டுமே ஈடுபாடு கொண்டு, மற்றனைத்தையும் கைவிட்டு உம்முடன் மட்டுமே நேரத்தைச் செலவிடக் கூடும்.

வழங்குபவரே, மன்னித்தருள்பவரே! உமது கிருபையையும் அன்புக் கருணையையும், உமது பரிசுகளையும், உமது அருட்கொடைகளையும் எங்களுக்குத் தந்தருளி, எங்களை ஆதரிப்பீராக; நாங்கள் அதனால் எங்களின் இலக்கை அடையக்கூடும். நீரே சக்திமிக்கவர், திறன்- வாய்ந்தவர், அறிந்தவர், ஞானதிருஷ்டியுடையவர்; மெய்யாகவே, நீரே தாராளமானவர்; மெய்யாகவே, நீரே சகல கருணைமிக்கவர்; மெய்யாகவே நீரே என்றும் மன்னித்தருள்பவர்; மனந்திரும்புதலுக்கு உரியவரும், மிகக் கடுமையான பாவங்களை மன்னிப்பவரும் நீரே ஆவீர்.

#11287
- `Abdu'l-Bahá

 

பிரபுவே, உமது பெயரில் வழங்கப்பட்டிருக்கும் விருந்தினை அகற்றிவிடாதீர்; உமது தணியாத தீயினால் மூட்டப்பட்டுள்ள எரியும் ஒளிப்பிழம்பை அணைத்துவிடாதீர். உமது புகழ், உமது நினைவு ஆகியவற்றின் மெல்லிசையில் முணு முணுத்திடும் உமது உயிர் நீரை வழிந்தோடுவதிலிருந்து நிறுத்திவிடாதீர். உமது அன்பெனும் மணத்தைச் சுவாசித்திடும் உமது இனிய சுகந்தத்தின் நறுமணத்தை உமது ஊழியர்களுக்குத் தரமறுத்திடாதீர்.

பிரபுவே! மனுக்குலம் முழுவதன் விதியை உமது பிடியில் வைத்திருப்பவரே! உமது புனிதர்களின் வேதனைமிக்கக் கவலைகளை ஆறுதலாகவும், அவர்களின் கஷ்டங்களை சுகமாகவும், அவர்களின் தாழ்வைப் புகழாகவும், அவர்களின் சோகத்தைப் பேரின்ப மகிழ்ச்சியாகவும் மாற்றிடுவீராக.

மெய்யாகவே, ஏகமானவரும், தனியொருவரும், வல்லவரும், சர்வமும் அறிந்தவரும், சர்வ விவேகியும் நீரே ஆவீர்.

#11288
- `Abdu'l-Bahá

 

ஒப்பந்தத்தில் உறுதி

நித்தியத்தின் மன்னரே, நாடுகளை உருவாக்குபவரே, அழியக்கூடிய ஒவ்வோர் எலும்பின் வடிவமைப்பாளரே, நீர் புகழப்படுவீராக! மனுக்குலம் முழுவதையும் உமது மாட்சிமை மற்றும் பேரொளி எனும் தொடுவானத்திற்கு அழைத்து, உமது கிருபையும், தயையுமான அரசவையின்பால் உமது ஊழியர்களுக்கு வழிகாட்டிய உந்தன் திருநாமத்தினால், உம்மைத் தவிர மற்றனைத்திலிருந்தும் பற்றறுத்துக் கொண்டோருள் ஒருவனாகவும், உம்மை நோக்கித் திரும்பியுள்ளோரை, உம்மால் ஆணையிடப்பட்ட துரதிர்ஷ்டங்களின் காரணமாக, உமது பரிசுகளின் திசையை நோக்கித் திரும்புவதிலிருந்து பின்வாங்கிடாதவர்களுள் ஒருவனாக என்னைக் கணக்கிட்டமைக்காக நான் உம்மைப் பிரார்த்திக்கின்றேன்.

என் பிரபுவே, உமது அருட்கொடை எனும் பிடியைப் பிடித்துக்கொண்டுள்ள நான், உமது தயை எனும் மேலாடையின் விளிம்பினையும் இறுகப் பற்றிக்கொண்டுள்ளேன். அதனால், உம்மைத் தவிர மற்றனைத்து நினைவுகளிலிருந்தும் என்னைத் தூய்மைப்- படுத்தக்கூடிவற்றை உமது வள்ளன்மை எனும் மேகங்களிலிருந்து என் மீது பொழியச் செய்திடுவீராக; மேலும், உமது ஒப்பந்தத்தை மீறி, உம்மிலும் உமது அடையாளங்களிலும் நம்பிக்கையற்று, எவரை எதிர்த்து நிந்தனைச் செய்வோரின் சூழ்ச்சிகள் அணிவகுத்து நிற்கின்றனவோ, மனுக்குலம் முழுவதன் ஆராதனையின் இலக்காக விளங்கிடும் அவர்பால் என்னைத் திரும்பிடச் செய்வீராக.

என் பிரபுவே, உமது நாள்களில் உமது வஸ்திரத்தின் நறுமணங்களை எனக்களிக்க மறுத்திடாதீர்; மேலும் உமது வதனம் எனும் வெளிச்சத்தின் சுடரொளிகளின் தோற்றத்தால் வெளிவந்த உமது திருவெளிப்பாட்டின் சுவாசங்களை எனக்குத் தராமல் தடுத்திடாதீர். நீர் விரும்பியதைச் செய்வதில் நீரே சக்தி வாய்ந்தவர். உமது விருப்பத்தை எதிர்த்திடவோ, உமது சக்தியால் நீர் கொண்டுள்ள நோக்கத்தினைத் தடுத்திடவோ எவற்றாலும் முடியாது.

சர்வ வல்லவரும், சர்வ விவேகியுமான உம்மைத் தவிர வேறு கடவுள் இலர்.

#11289
- Bahá'u'lláh

 

வலிமை மிக்கவரும், மன்னிப்பவரும், கருணை மிக்கவரும் அவரே!

கடவுளே என் கடவுளே! நரகம், பிழை ஆகிய பாதாளத்தில் உமது ஊழியர்கள் இருப்பதை நீர் காண்கின்றீர்; உலகின் ஆவலானவரே, தெய்வீக வழிகாட்டல் எனும் உமது ஒளி எங்கே? உதவியற்ற, பலவீனமான அவர்களின் நிலையை நீர் அறிவீர்; விண்ணுலக, மண்ணுலகச் சக்திகளைத் தன் பிடிக்குள் வைத்திருப்பவரே, உமது சக்தி எங்கே?

பிரபுவே எனதாண்டவரே, உமது அன்புக் கருணை எனும் ஒளிகளின் பிரகாசத்தினாலும், உமது அறிவு, விவேகம் எனும் சமுத்திரத்தின் பொங்கியெழுகின்ற அலைகளின் பெயராலும், உமது இராஜ்யத்தின் மக்களைக் கவர்ந்திட்ட உமது புனித வார்த்தையினாலும், உமது திருநூலின் கட்டளைகளைப் பின்பற்றுபவர்களுள் ஒருவனாக நான் ஆவதை ஏற்குமாறு உம்மிடம் நான் கேட்டுக் கொள்கிறேன்.

உமது அருட்கொடை எனும் கோப்பையிலிருந்து தெய்வீக அகத்தூண்டல் எனும் மதுரசத்தினைப் பருகி, நீர் விரும்பியதைச் செய்திட விரைந்து, உமது திருவொப்பந்தத்தையும், சாசனத்தையும், கடைப்பிடித்தவர்களான உமது நம்பிக்கைக்குப் பாத்திரமானோருக்கு நீர் விதித்துள்ளவற்றை, எனக்கும் விதித்தருள்வீராக. நீர் விரும்பியதைச் செய்திட சக்தி படைத்தவர், நீரே ஆவீர். எல்லாம் அறிந்தவரும், சர்வ விவேகியுமானவரான உம்மைத் தவிர வேறு கடவுள் இலர்.

பிரபுவே, மனிதர்கள் யாவருக்கும் பிரபுவானவர் நீரே. உமது அருட்கொடையினால், இம்மையிலும் மறுமையிலும் என்னைச் செழிப்புறவும், உந்தன்பால் ஈர்த்திடவும் செய்பவற்றை எனக்கு விதித்தருள்வீராக. ஏகனானவரும், வலிமை-யானவரும், ஒளிமயமானவருமான உம்மைத் தவிர, கடவுள் வேறிலர்.

#11290
- Bahá'u'lláh

 

பிரபுவே, உமது வழியில் எங்கள் அடிச்சுவடுகளை உறுதிப்படுத்தி, உமக்குக் கீழ்ப்படிதலில் எங்களின் உள்ளங்களைப் பலப்படுத்துவீராக. உமது ஒருமைத் தன்மை என்னும் அழகின்பால் எங்கள் வதனங்களைத் திரும்பச் செய்து உமது தெய்வீக ஒற்றுமை என்னும் அடையாளங்களினால் எங்களின் உள்ளங்களைக் களிப்படையச் செய்வீராக. உமது கடாட்சம் என்னும் ஆடையினால் எங்களின் அங்கங்களை அழகுபடுத்தி எங்களின் கண்களை மறைத்திருக்கும் பாவத்திரையை விலக்கி எங்களுக்கு உமது அருள் என்னும் கிண்ணத்தை அளிப்பீராக; அதனால் படைப்புயிர் அனைத்தின் சாரமும் உமது பேரொளி தோற்றத்தின் முன்னால் உமது புகழைப் பாடிடுமாக. பிரபுவே, உமது கருணைமிக்கத் திருவாக்கினாலும், உமது தெய்வீக மெய்ம்மை என்னும் மறைபொருளாலும், நீர், உம்மை வெளிப்படுத்துவீராக; அதனால், எழுத்துகளுக்கும் சொற்களுக்கும் மேலாக எழுந்து, முணுமுணுப்பையும் அசைவுகளையும் கடந்த பிரார்த்தனையின் தெய்வீகப் பேரானந்தம் எங்களின் ஆன்மாக்களை நிரப்பிடக்கூடும்—அதனால், உமது பேரழகின் வெளிப்பாட்டின் முன் பொருள்கள் அனைத்துமே வெறுமையுடன் இரண்டறக் கலக்கக் கூடும்.

பிரபுவே! இவர்கள்தாம் உமது ஒப்பந்தத்திலும் இறுதிப் பத்திரத்திலும் நிலையாகவும் திடமாகவும் இருந்து, உமது மார்க்கத்தில் உறுதி என்னும் கயிற்றை இறுகப் பிடித்து, உமது பேரொளி என்னும் அங்கியின் நுனியைப் பற்றிக் கொண்டுள்ள ஊழியர்கள்.

பிரபுவே, உமது அருளினால் அவர்களுக்கு உதவி புரிந்து, உமது சக்தியால் அவர்களை உறுதிப்படுத்தி, உமக்குக் கீழ்ப்படிய அவர்களின் இடையினை வலுப்படுத்துவீராக.

மன்னிப்பவரும், அருள்பாலிப்பவரும் நீரே.

#11291
- `Abdu'l-Bahá

 

பரிவிரக்கமுள்ள இறைவா! என்னை விழிப்பூட்டி உணர்வு பெறச் செய்தமைக்காக நன்றி கூறுகின்றேன். எனக்குக் காணும் கண்ணை அளித்துக் கேட்கும் செவியையும் அருளியுள்ளீர்; உமது இராஜ்யத்தின்பால் வழிநடத்தி என்னை உமது பாதைக்கும் வழிகாட்டியுள்ளீர். எனக்கு நேர்வழி காட்டி என்னை விடுதலை என்னும் கலத்தில் புகச் செய்திருக்கின்றீர். இறைவா! என்னை நிலையாகவும் அசைக்கவியலாத நம்பிக்கை-யுடனும் இருக்கச் செய்வீராக. பெருஞ் சோதனைகளிலிருந்து என்னைக் காத்து, உமது ஒப்பந்தமும் இறுதிப் பத்திரமுமாகிய பலம் பொருந்திய கோட்டையில் என்னை வைத்துப் பாதுகாப்பீராக. நீரே செவிமடுப்பவர்.

இரக்கமுள்ள ஆண்டவனே! உமது அன்பெனும் ஒளியால் பிரகாசிக்கக் கூடிய கண்ணாடியைப் போன்ற உள்ளத்தை எனக்களித்து, உமது தெய்வீக அருளின் பொழிவினால் இவ்வுலகை ஒரு ரோஜாத் தோட்டமாக மாற்றவல்ல சிந்தனைகளை எனக்கு வழங்கிடுவீராக.

நீரே இரக்கமுடையவர்; கருணை மிக்கவர்; மஹா கொடையாளரான இறைவனும் நீரே.

#11292
- `Abdu'l-Bahá

 

என் பிரபுவே, என் நம்பிக்கையே! உமது அன்பர்களை உமது வலுமிகு ஒப்பந்தத்தில் உறுதியுடன் இருக்கவும், உமது தெளிவான சமயத்தின்பால் விசுவாசமுடன் இருக்கவும், பிரகாசங்கள் என்னும் திருநூலில் நீர் விதித்துள்ள கட்டளைகளை நிறைவேற்றவும், அவர்களுக்கு உதவிடுவீராக; அதனால் அவர்கள் வழிகாட்டுதல் என்னும் விருதுக்கொடிகளாகவும், விண்ணுலகத் திருக் கூட்டத்தினரின் விளக்குகளாகவும், உமது முடிவில்லா மெய்யறிவு என்னும் ஊற்றுகளாகவும், தெய்வீக வானிலிருந்து ஒளிர்ந்தவாறு நேர்வழி காட்டிடும் விண்மீன்களாகவும் ஆகக் கூடும்.

மெய்யாகவே, நீரே வெற்றி கொண்டிட இயலாதவர், எல்லாம் வல்லவர், சர்வ சக்தி வாய்ந்தவர்.

#11293
- `Abdu'l-Bahá

 

ஒற்றுமை

என் கடவுளே, என் கடவுளே, உமது ஊழியர்களின் உள்ளங்களை ஒன்றுபடுத்தி உமது மகத்தான நோக்கத்தினை அவர்களுக்கு வெளிப்படுத்துவீராக. அவர்கள் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து உமது விதிகளைப் பின்பற்றட்டும். கடவுளே, அவர்களின் முயற்சிகளுக்கு ஆதரவளித்து, உமக்கு ஊழியம் செய்யவும் பலமளிப்பீராக. கடவுளே, அவர்களைத் தனியே விட்டு விடாமல் உமதறிவின் ஒளியால் அவர்களின் கால்களுக்கு வழி காட்டுவீராக. உமதன்பினால் அவர்களின் உள்ளங்களைக் களிக்கச் செய்வீராக. மெய்யாகவே, நீரே அவர்களுக்கு உதவுபவரும், பிரபுவும் ஆவீர்.

#11294
- Bahá'u'lláh

 

என் கடவுளே! என் கடவுளே! உமது கருணைகள் அனைத்தும் இந்த ஆன்மாக்களின் மீது இறங்கட்டும் என நான் உம்மை வேண்டி உமது வாசலின் முன் மன்றாடுகிறேன். உமது தயையையும் உமது உண்மையையும் அவர்களுக்கெனச் சிறப்பாக வழங்கிடுவீராக.

பிரபுவே! இதயங்களை ஒன்றுபடுத்தி, இணைத்திடுவீராக; எல்லா ஆன்மாக்களையும் இசைவாக இணைத்திடுவீராக; மேலும் உமது புனிதம், ஒருமை ஆகிய அடையாளங்களைக் கொண்டு, ஆன்மாக்களை மகிழ்ச்சி பெறச் செய்திடுவீராக. பிரபுவே! உமது ஒருமைத்தன்மை எனும் ஒளியைக் கொண்டு அவர்களின் வதனங்களைப் பிரகாசிக்கச் செய்திடுவீராக. உமது இராஜ்யத்தின் சேவையில் உமது ஊழியர்களை முன்னேற்பாடுடன் இருக்கச் செய்திடுவீராக.

பிரபுவே, முடிவில்லாதா இரக்கத்திற்குரியவரே! மன்னிப்புக்கும் பிழை பொறுத்தலுக்குமான பிரபுவே! எங்களின் பாவங்களை மன்னித்து, எங்களின் குறைகளைப் பொறுத்தருள்வீராக; உமது கருணை எனும் இராஜ்யத்தை நோக்கி எங்களைத் திரும்பிடச் செய்திடுவீராக; உமது வலிமை, சக்தி எனும் இராஜ்யத்தை மன்றாடி, உமது நினைவாலயத்தின் முன் பணிவாகவும், உமது அடையாளங்கள் எனும் மகிமையின் முன் கீழ்ப்படிபவர்களாகவும் இருந்திடச் செய்திடுவீராக.

இறைவனான பிரபுவே! எங்களைக் கடலின் அலைகளைப் போலவும், தோட்டத்தின் மலர்களைப் போலவும், உமது அன்பெனும் அருட்கொடைகளின் வாயிலாக ஒன்றாகவும், இணக்கமாகவும் இருந்திடச் செய்திடுவீராக. பிரபுவே, உமது ஒருமை எனும் அடையாளங்களின் வாயிலாக நெஞ்சங்களைப் விரிவானதாக ஆக்கிடுவீராக; ஒரே உயரிய மகிமையிலிருந்து பிரகாசித்திடும் விண்மீன்கள் போன்றும், உமது வாழ்வெனும் விருட்சத்தின் மீது வளர்ந்திடும் பூரண கனிகள் போன்றும் மனுக்குலம் முழுவதையும் ஆக்கிடுவீராக.

மெய்யாகவே, வல்லவரும், சுய ஜீவியரும், வழங்குபவரும், மன்னிப்பவரும், பிழை- பொறுப்பவரும், எங்கும் வியாபித்துள்ளவரும், ஒரே படைப்பாளரும் நீரே ஆவீர்.

#11295
- `Abdu'l-Bahá

 

கணவனுக்குரிய பிரார்த்தனை

கடவுளே, என் கடவுளே! உமது இப்பணிப்- பெண்ணானவள், உம்மீது நம்பிக்கை வைத்து, தனது முகத்தை உந்தன் பால் திருப்பி, உமது விண்ணுலக அருட்கொடைகளைத் தன்மீது விழச் செய்யுமாறும், உமது ஆன்மீக மர்மங்களைத் தனக்கு வெளிப்படுத்திடுமாறும், உமது இறைமையின் ஒளிகளைத் தன் மீது வீசிடுமாறும் உம்மை வேண்டிக் கொள்கின்றாள்.

என் பிரபுவே! என் கணவரின் கண்களைப் பார்க்கச் செய்வீராக; உம்மைச் சார்ந்த அறிவின் ஒளியால் அவரது இதயத்தை மகிழ்விப்பீராக; உமது ஒளிரும் அழகின்பால் அவரது மனதை ஈர்த்திடுவீராக; உமது தெளிவாய்த் துலங்கிடும் சுடரொளியினை அவருக்கு வெளிப்படுத்துவதன் வழி அவரது ஆவியினைக் களிப்புறச் செய்வீராக.

என் பிரபுவே! அவரது பார்வையின் முன்னுள்ள திரையினை விலக்குவீராக. உமது அபரிமிதமான அருட்கொடைகளை அவர் மீது பொழிந்து, உம் மீதான அன்பெனும் திராட்சை ரசத்தினைக் கொண்டு அவரை மதிமயங்கச் செய்து, கால்கள் இம்மண்ணுலகின் மீது நடந்திடினும், தங்களின் ஆன்மாக்கள் உயர்ந்த வானத்தில் பறந்திடும் உமது தூத கணங்களுள் அவரையும் ஒருவராக ஆக்கிடுவீராக. உமது மக்களின் மத்தியில், அவரை, உமது விவேகத்தினைக் கொண்டு ஒளிர்ந்திடும் பிரகாசமிகு தீபமாக ஆக்கிடுவீராக.

மெய்யாகவே நீரே மதிப்பு மிக்கவர், என்றுமே வழங்குபவர், திறந்த கைகளை உடையவர்.

#11303
- `Abdu'l-Bahá

 

குடும்பம்

பிரபுவே எனதாண்டவரே உந்தன் நாமம் போற்றப்படுமாக! உண்மையில் கண்ணுக்குப் புலப்படாத பொருள்களை அறிந்தவர் நீரே. சகலத்தையும் தழுவிடும் உமதரிவால் அளவிடக்கூடிய நன்மைகளை எங்களுக்கு விதித்திடுவீராக. இறையாண்மைமிக்கப் பிரபுவும் சர்வ வல்லவரும், அதி நேசரும் நீரே.

பிரபுவே, புகழெல்லாம் உமக்கே உரியதாகுக! நியமிக்கப்பட்ட நாளில் நாங்கள் உமது கிருபையை நாடி, எங்கள் முழு நம்பிக்கையை, எங்கள் பிரபுவாகிய உம்மில் செழுத்திடுவோம். கடவுளே, நீர் போற்றப்படுவீராக! நன்மையானவற்றையும் தகுந்தவற்றையும் எங்களுக்குத் தந்தருள்வீராக; அதனால் நாங்கள் உம்மையல்லாது மற்றனைத்தையும் கைவிடக் கூடும். மெய்யாகவே, எல்லா உலகங்களின் பிரபு நீரே ஆவீர்.

கடவுளே! உமது நாள்களில் பொறுமையோடு சகித்துக் கொள்வோருக்குச் சன்மானம் வழங்கிடுவீராக; உண்மை எனும் பாதையிலிருந்து விலகிடாது நடப்பதற்கு அவர்களின் இதயங்களைப் பலப்படுத்துவீராக. ஆகவே, பிரபுவே, உமது பேரின்பச் சொர்க்கத்தில் நுழைந்திட இயலச் செய்யவல்ல அழகிய பரிசுகளை அவர்களுக்குத் தந்தருள்வீராக. பிரபுவான ஆண்டவரே, நீர் மிகைப்படுத்தப் படுவீராக. உம்மீது நம்பிக்கை கொண்டோரின் இல்லங்கள் மீது உமது விண்ணுலக ஆசிகள் இறங்கிடச் செய்வீராக.

மெய்யாகவே தெய்வீக ஆசிகளைக் கீழ் அனுப்புவதில் நீர் ஈடிணையற்றவர். இறைவா, உமது விசுவாசமிக்க ஊழியர்களை வெற்றிபெறச் செய்யவல்ல வான்படைகளை அனுப்பிடுவீராக. நீர் விரும்பியவாறு, உமது கட்டளையின் சக்தி வாயிலாகப் படைப்புப் பொருள்களை நீர் உருவாக்குகின்றீர். மெய்யாகவே, நீரே அரசரும், படைப்பாளரும், சர்வ விவேகியும் ஆவீர்.

கூறுவீராக: மெய்யாகவே, அனைத்துப் பொருள்களின் படைப்பாளர் கடவுளே ஆவார். தாம் விரும்புகிற எவரொருவருக்கும் அவர் தாராளமாக வாழ்வாதாரங்களை வழங்கிடுகிறார். படைப்பாளரும், உயிருருக்கள் அனைத்தின் தோற்றுவாயானவரும், வடிவமைப்பாளரும், வல்லவரும், உருவாக்குபவரும், சர்வ விவேகியும் அவரே ஆவார். விண்ணுலகங்கள் மற்றும் மண்ணுலகம் ஆகிய அனைத்திலும், அவற்றுக்கு இடையேயுள்ள யாவற்றிலும், அவரே மிகச் சிறந்த பட்டப் பெயர்களுக்கு உரியவர் ஆவார். அனைவரும் அவரது கட்டளைக்கு அடிபணிவர்; விண்ணிலும் மண்ணிலும் வசிப்போர் அனைவரும் அவரது புகழைப் போற்றிப் பாடுவர்; மற்றும் அவரிடமே அனைவரும் திரும்பிச் சென்றிடுவர்.

#11284
- The Báb

 

குணப்படுத்துதல்

உந்தம் நாமமே என்னைக் குணப்படுத்தும். உம்மை நினைத்தலே எனக்குச் சிகிச்சை; உமதருகாமையே எனது நம்பிக்கை, நின்றன்பால் அன்பே எனது தோழன். என்மீதுள்ள உமது இரக்கமே இம்மையிலும், மறுமையிலும் எனக்குச் சிகிச்சையும், உதவியுமாகும். மெய்யாகவே எல்லாம் அறிந்தவரும் சர்வஞானியும், கொடைவள்ளலும் நீரே ஆவீர்.

#5086
- Bahá'u'lláh

 

என் கடவுளே, ஒளி உமக்கே உரியதாகுக! உம்மிடமிருந்து பிரிந்ததனால் உமது தீவிர நேசர்கள் புலம்புவதையும், உம் முன்னிலையிலிருந்து வெகுதூரம் இருப்பதனால் உம்மை அறிந்தோர் கதறி அழுவதையும், நீர் செவிமடுக்கின்றீர். என் பிரபுவே, உமது கிருபை எனும் கதவுகளை அவர்களின் முகங்களுக்கு முன்னே வெளிப்படையாகத் திறந்திடுவீராக; அதனால் உமது உத்தரவுக்கிணங்கவும் உமது விருப்பத்திற்கு உட்பட்டும், அவர்கள் அவற்றுள் நுழைந்து, உமது மாட்சிமையின் சிம்மாசனத்தின் முன் நின்று, உமது குரலின் உச்சரிப்புகளைச் செவிமடுத்து, உமது வதனத்தின் ஒளியின் பிரகாசத்தால், அறிவொளி பெறக்கூடும்.

நீர் விரும்பியதைச் செய்வதற்கு, நீர் வல்லவராவீர். உமது வலிய இறையாண்மை சக்தியை எவராலும் எதிர்த்திட இயலாது. நித்திய காலமுதல், உமக்கு ஈடிணையாக எவரும் இல்லாமலே, நீர் தனியொருவராக இருந்துள்ளீர்; உம்மைப் பற்றிய எல்லாச் சிந்தனைக்கும் ஒவ்வொரு வர்ணனைக்கும் மேலாக, நித்தியகாலமும் வெகுதூரம் நிலைத்திருப்பீர். ஆதலால், உமது கிருபையினாலும் அருட்கொடையினாலும், உமது ஊழியர்களின் மீது கருணை காட்டிடுவீராக; உமது அண்மை எனும் சமுத்திரத்தின் கரைகளிலிருந்து அவர்களைப் பின்தங்கிடாதிருக்கச் செய்திடுவீராக. நீர் அவர்களைக் கைவிட்டு விட்டால், அவர்களிடம் நட்புப்பாராட்ட யாருளர்? அவர்களை உம்மிடமிருந்து நீரே வெகுதூரம் வைத்துவிட்டால், எவரால் அவர்களுக்கு ஆதரவளிக்கமுடியும்? உம்மைத் தவிர அவர்களுக்கு வேறு கடவுள் இலர்; வழங்குவதற்கென உம்மைத் தவிர வேறெவருமிலர். உமது அபரிமித கிருபையின் வாயிலாக அவர்களுக்குத் தாராளமாகத் தந்தருள்வீராக.

மெய்யாகவே, என்றும் மன்னித்தருள்பவரும், அதி கருணைமிக்கவரும் நீரே.

#11277
- Bahá'u'lláh

 

“குணப்படுத்துதல் கோரி வேண்டப்படுவதற்காக வெளிப்படுத்தப்பட்ட பிரார்த்தனைகள், உடல், ஆன்மா இரண்டையும் குணப்படுத்தவல்லவை. ஆதலின் ஆன்மாவையும் உடலையும் குணப்படுத்துவதற்கென இவற்றினைக் கூறிடுவீர்...”

— அப்துல்-பஹா

கடவுளே, என் கடவுளே, உமது குணப்படுத்துதல் என்னும் கடலினாலும், உமது அருள் என்னும் விடிவெள்ளியின் சுடரொளிகளாலும், நீர், உமது ஊழியர்களை ஆட்கொண்டிட்ட உமது நாமத்தினாலும், எங்கும் வியாபித்துள்ள உமது அதிமேன்மையான வார்த்தையின் சக்தியினாலும், உந்தன் மேன்மைமிகு எழுதுகோலின் ஆற்றலாலும், விண்ணுலகிலும் மண்ணுலகிலும் உள்ளோர் அனைவரின் படைப்பிற்கு முற்பட்ட உமது கருணையாலும், உமது வள்ளன்மை என்னும் நீரினாலும், என்னை ஒவ்வொரு துன்பத்திலிருந்தும் சீர்க்குலைவிலிருந்தும், எல்லா வலுக்குறைவில் இருந்தும் தளர்ச்சியிலிருந்தும் தூய்மைப்- படுத்துமாறு நான் உம்மிடம் வேண்டிக்-கொள்கின்றேன்.

என் பிரபுவே, உம்மிடம் தாழ்ந்து வேண்டுபவர் தனது நம்பிக்கையை உம்மீது வைத்து உமது தாராளத் தன்மை என்னும் கயிற்றினைப் பற்றியவாறு உமது வள்ளன்மை என்னும் நுழைவாயிலில் காத்து நிற்பதை நீர் பார்க்கின்றீர். உமது அருள் என்னும் சமுத்திரத்திலிருந்தும் உமது அருட்குணம் என்னும் விடிவெள்ளியினிடம் இருந்தும் அவர் தேடுவதனைக் கொடுக்க மறுத்து விடாதீர்.

உமக்கு விருப்பமானதைச் செய்திடும் ஆற்றல் படைத்தவர் நீரே. என்றென்றும் மன்னித்தருளும், அதி தாராள குணமுடைய கடவுள் உம்மையன்றி வேறெவருமிலர்.

#11304
- Bahá'u'lláh

 

என் கடவுளே, உந்தன் நாமமே என்னைக் குணப்படுத்தும், உந்தன் நினைவே எனது சிகிச்சை. உமதருகாமையே எனது நம்பிக்கை, நின்றன்பால் அன்பே எனது தோழன். என் மீதுள்ள உமது இரக்கமே இம்மையிலும் மறுமையிலும் எனக்குச் சிகிச்சையும் உதவியுமாகும். மெய்யாகவே, வள்ளன்மையே உருவானவரும், எல்லாம் அறிந்தவரும், சர்வ விவேகியும் நீரே ஆவீர்.

#11305
- Bahá'u'lláh

 

பிரபுவே, எனதாண்டவரே, ஒளி உமக்கே உரியதாகுக! எதன் மூலமாக உமது வழிகாட்டல் எனும் விருதுக்கொடியை உயர்த்தியும், உமது அன்புக்கருணை எனும் பிரகாசத்தினைப் பொழிந்தும், உமது ஆதிக்கத்தின் மாட்சிமையை வெளிப்படுத்தியுமுள்ளீரோ; எதன் மூலமாக உமது நாமங்கள் எனும் விளக்கு உமது பண்புகள் எனும் தனியிடத்தில் தோன்றியும், உமது ஒற்றுமையின் திருக்கூடாரமானவரும், உமது பற்றின்மையின் அவதாரமானவரும் ஒளிவீசியுள்ளாரோ; எதன் மூலமாக உமது வழிகாட்டல் எனும் வழிகள் தெரிவிக்கப் பட்டும், உமது நல்விருப்பம் எனும் பாதைகள் குறித்துக்காட்டப்பட்டனவோ; எதன் மூலமாகப் பிழை எனும் அடித்தளங்கள் நடுக்கமுறச் செய்யப்பட்டதோடு, கொடுமையின் அடையாளங்கள் அழிக்கப்பட்டனவோ; எதன் மூலமாக விவேகம் எனும் ஊற்றுகள் பீறிட்டுப் பாய்ந்தும், விண்ணுலக மேஜை கீழே அனுப்பப்பட்டதோ; எதன் மூலமாக நீர் உமது ஊழியர்களைப் பாதுகாத்தும், உமது குணப்படுத்தலைத் தந்தருளினீரோ; எதன் மூலமாக நீர் உமது மென்கருணையை உமது ஊழியர்களுக்கு வெளிப்படுத்தி, உமது மன்னிப்பை உமது உயிரினங்கள் மத்தியில் வெளிப்படுத்தியுள்ளீரோ — உமது அந்தத் திருநாமத்தின் பேயரால்.

பற்றுறுதியாக இருந்து உம்மிடமே திரும்பியவனைப் பாதுகாத்தும், உமது கருணையைப் பற்றிக் கொண்டும், உமது அன்பான வழங்குதலின் விளிம்பினைப் பிடித்துக்கொண்டும் உள்ளான். ஆதலால், உமது குணப்படுத்தலை அவனுக்குக் கீழே அனுப்பியும், அவனை ஆரோக்கியமானவனாக ஆக்கியும், உம்மால் தந்தருளப்பட்ட ஒரு சீரான தன்மையை வழங்கியும், உமது மேன்மைத்தன்மையால் அருளப்பட்ட சாந்தமான ஒரு தன்மையையும் வழங்கிடுவீராக.

மெய்யாகவே, நோய்த் தீர்ப்பவரும், பாதுகாப்பவரும், உதவுபவரும், வல்லவரும், சக்தி மிக்கவரும், சர்வ ஒளிமயமானவரும், சகலமும் அறிந்தவரும் நீரே ஆவீர்.

#11306
- Bahá'u'lláh

 

பிரபுவே எனதாண்டவரே, நீர் போற்றப்படுவீராக! நீர், உமது ஊழியர்களைத் தூண்டியும், உமது நகரங்களை எழுப்பியுமுள்ள உமது அதி பெரும் நாமத்தின் பேராலும், உமது மிகச் சிறந்த பட்டங்களாலும் பன்மடங்கான அருட்-கொடைகளை நோக்கித் உமது மக்களைத் திரும்பச் செய்திடவும், உமது விவேகம் எனும் திருக்கூடாரத்தை நோக்கி அவர்கள் தங்களின் வதனங்களைத் திருப்பிடச் செய்யுமாறு நான் உம்மிடம் மன்றாடுகிறேன். விண்ணிலும் மண்ணிலும் உள்ள அனைவருக்கும் மேலும் நாமங்களுக்கெல்லாம் அரசன் என நீர் விதித்திட்ட நாமமாகிய, உமது நிழல்தரும் நாமத்தின் பாதுகாப்பின் கீழ் உறைந்து கிடக்கும் சொர்க்கத்தின்பால் எல்லாத் திசைகளிலிருந்தும் தாக்கப்பட்டுள்ள ஆன்மாக்களின் பார்வையைத் திருப்பிடாது தடுத்திட்ட நோய்களைக் குணப்படுத்துவீராக. உமது விரும்பியதைச் செய்திடுவதற்குச் சக்தி படைத்தவர் நீரே ஆவீர். எல்லா நாமங்களின் சாம்ராஜ்யமும் உமது பிடிகளிலேயே உள்ளன. வலிமைமிக்கவரும், விவேகியுமான உம்மைத் தவிர வேறு கடவுள் இலர்.

என் பிரபுவே நான் ஓர் அற்ப உயிரினமாவேன்; நான் உமது செல்வங்களின் விளிம்பினைப் பற்றிக்கொண்டுள்ளேன். நான் கடும் நோய்க்கு ஆளாகியுள்ளேன்; உமது குணப்படுத்துதல் எனும் கயிற்றை இறுகப் பற்றிக்கொண்டுள்ளேன். என்னைச் சூழ்ந்துள்ள நோய்களிலிருந்து என்னை விடுவிப்பீராக; உமது கிருபை, கருணை ஆகியவற்றின் நீர்களைக் கொண்டு என்னை நன்றாகக் கழுவிடுவீராக; உமது மன்னிப்பு, அருட்கொடை ஆகியவற்றின் வாயிலாக, ஆரோக்கியம் எனும் வஸ்திரத்தைக் கொண்டு என்னை அணிவிப்பீராக. ஆதலால், என் கண்களை உம்மீது பதியச் செய்து, உம்மைத் தவிர மற்றெல்லாவற்றின் மீதுள்ள பற்றுகள் அனைத்தையும் என்னிடமிருந்து அகற்றிடுவீராக. நீர் ஆசைப்படுவதைச் செய்திடவும், நீர் விரும்பியதை நிறைவேற்றிடவும் எனக்கு உதவிடுவீராக.

மெய்யாகவே, இம்மை, மறுமை ஆகியவற்றின் வாழ்வுக்குப் பிரபு நீரே ஆவீர். மெய்யாகவே, என்றும் மன்னிப்பவரும், அதி கருணைமிக்கவரும் நீரே ஆவீர்.

#11307
- Bahá'u'lláh

 

என் கடவுளே, மெய்யாகவே நான் உமது ஊழியனும், உமது எளியோனும், உம்மை இறைஞ்சுபவனும், உமது இழிவான உயிரினமுமாவேன். உந்தன் பாதுகாப்பை நாடி நான் உம் வாசலை வந்தடைந்துள்ளேன். எல்லாப் படைப்புப் பொருள்களும் உமது விழுமிய சாராம்சத்திலிருந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளன என்பதையும், உமது உள்ளார்ந்த உயிருருவை அணுகுவதிலிருந்து மறுக்கப்பட்டுள்ளன என்பதையும் நான் உணர்ந்துள்ள போதிலும், உமதன்பில் அல்லாது வேறெதனிலும் நான் மனநிறைவைக் கண்டிலன்; உமது நினைவில் அல்லாது வேறெதனிலும் பெருமகிழ்ச்சியைக் கண்டிலன்; உம்மிடம் அடிபணிவதில் அல்லாது வேறெதனிலும் ஆர்வம் கொண்டிலன்; உமதருகில் அல்லாது வேறெதனிலும் களிப்படைந்திலன்; உம்முடன் மீண்டும் ஒன்றிணைவதில் அல்லாது வேறெதனிலும் சாந்தமடைந்திலன்.

நான் உம்மை அணுகிட முயலும் வேளையிலெல்லாம், உமது கிருபையின் அடையாளங்களைத் தவிர வேறெதனையும் நான் என்னில் உணர்ந்திலன்; உமது அன்புக் கருணையின் வெளிப்பாடுகளைத் தவிர, வேறெதனையும் என் உயிருருவில் நான் கண்ணுற்றதில்லை.

எப்படைப்புப் பொருளுமே உம்முடன் தொடர்பு கொண்டிருக்க இயலாது என்றாலும், எதுவுமே உம்மைப் புரிந்துகொள்ள இயலாது என்றபோதும், உமது உயிரினமாக இருக்கும் ஒருவன், எங்ஙனம் உம்முடன் ஒன்றிணைதலை நாடிடவோ, உமது முன்னிலையை அடைந்திடவோ இயலும்?

உமது இராஜ்யத்தின் வெளிப்பாடுகளையும், உமது அரசாட்சியின் அற்புத சான்றுகளையும், நீர் அவனுக்கென விதித்துள்ள போதிலும், எவ்வாறு உமது தாழ்வான ஊழியன் ஒருவன் உம்மை அறிந்திடவோ, உமது புகழைப் பாடிடவோ இயலும்?

இவ்வாறே, படைக்கப்பட்ட ஒவ்வொரு பொருளும், அதன் உள்ளார்ந்த மெய்ம்மையின் மீது விதிக்கப்பட்டுள்ள வரம்புகளின் காரணமாக, அது உமது முன்னிலை எனும் சரணாலயத்திலிருந்து தடுத்துவைக்கப் பட்டுள்ளது என்பதற்குச் சாட்சியம் பகர்கின்றது. உமது இறைமையின் புனித அரசவைக்கு ஏற்புடையவை, படைப்பு முழுவதும் அடையக்கூடிய அனைத்திற்கும் அப்பால் உள்ளவையாக இருந்தபோதிலும், உமது வசீகரத்தின் செல்வாக்கு நித்தியகாலமும் உமது கைவண்ணத்தின் மெய்ம்மைக்குள் இயல்பாகவே இருந்துள்ளன என்பது மறுக்கமுடியாததாகும்.

என் கடவுளே, உம்மை போற்றுவதற்குரிய எனது முழுமையான பலமற்ற நிலையையும், உமக்கு நன்றி செலுத்துவதற்கான எனது மிகுந்த ஆற்றலின்மையையும் இது சுட்டிக்காட்டுகிறது. அவ்வாறிருக்கையில், எங்ஙனம் நான், உமது தெய்வீக ஒற்றுமையை அறிந்துணரவோ, உமது போற்றுதல், உமது புனிதத்தன்மை, உமது பேரொளி ஆகியவற்றின் தெளிவான அடையாளங்களை அடைவதில் வெற்றிபெறவோ இயலும். அன்றியும், உமது வலிமையின் பேரால்; உமது சுய ஜீவனைத் தவிர வேறெதனையும் நான் நாடியதில்லை, உம்மைத் தவிர வேறெவரையும் நான் நாடிடப்போவதுமில்லை.

#11278
- The Báb

 

என் கடவுளே! எனதான்மாவின் வேதனையைத் தணியச் செய்திடுவதற்கு உம்மைத் தவிர வேறெவருமிலர்; என் கடவுளே, நீரே எனது அதியுயரிய ஆவலாவீர். உம்மோடும், உம்மை நேசிப்போரோடும் அல்லாது வேறெவருடனும் என் இதயம் பிணைக்கப் பட்டிருக்கவில்லை. எனது வாழ்வு, மரணம், ஆகிய இரண்டும் உமக்காகவே என நான் உண்மையாகச் சத்தியம் செய்கிறேன். மெய்யாகவே ஒப்பற்றவரும், பங்காளியாய் இல்லாதவரும் நீரே ஆவீர்.

என் பிரபுவே, உம்மிடமிருந்து என்னை நானே ஒதுக்கிக் கொண்டமைக்காக என்னை மன்னித்திடுமாறு நான் உம்மிடம் இறைஞ்சுகிறேன். உமது பேரொளி, மாட்சிமை ஆகியவற்றின் பேரில், நான் உம்மைப் பொருத்தமுற அறிந்திடவும், வழிபடவும் தவறியுள்ளேன்; ஆனால், நீரோ என்னை உம்மைப் பற்றி அறிந்திடச் செய்தும், உமது ஸ்தானத்திற்குத் தகுந்தவாறு என்னை நினைவு கூர்ந்துமுள்ளீர்.

என் பிரபுவே, எனது தவறுகள், தப்பிதங்கள் ஆகியவற்றுக்காக என்னை உமது கட்டுக்குள் வைப்பீரானால், கடுந்துயரம் என்னைச் சூழ்ந்து கொள்ளும். உம்மைத் தவிர உதவிபுரிபவர் வேறெவரையும் நான் அறிந்திலேன். நான் விரைந்தொடிட உம்மைத் தவிர வேறு புகலிடம் இல்லை. உமது அனுமதியின்றி, உமது உயிரினங்கள் எவற்றுக்கும் உம்மிடம் பரிந்துரை செய்வதற்குத் துணிவில்லை. உமது அரசவையின் முன், உமது அன்பினை நான் இறுகப் பற்றிக்கொண்டுள்ளேன்; மேலும், உமது கட்டளைப் படி, உமது மகிமைக்குப் பொருந்தியவாறு நான் உம்மிடம் மிகுந்த முனைப்போடு பிராத்திக்கின்றேன். நீர் எனக்கு வாக்களித்துள்ளது போல, என் அழைப்புக்குச் செவிசாய்த்திடுமாறு நான் உம்மிடம் மன்றாடுகிறேன். மெய்யாகவே நீரே கடவுள்; உம்மைத் தவிர வேறு கடவுள் இலர்.

நீர் அனைத்துப் படைப்புப் பொருள்களிடமிருந்து தன்னந்தனியாகவும், எவ்வித உதவியின்றியும் இருக்கின்றீர். உமது அன்புக்குரியவர்களின் பக்தி உமக்குப் பலன் தரப்போவதில்லை; அன்றியும், நம்பிக்கையற்றோரின் தீயச் செயல்களும் உமக்குத் தீங்கிழைக்கப் போவதில்லை. மெய்யாகவே உமது வாக்குறுதியிலிருந்து என்றுமே தவறிடாதவரான நீரே என் கடவுள் ஆவீர்.

என் கடவுளே! உமது தயையின் அடையாளங்கள் பேரில், உமது புனித முன்னிலை எனும் விழுமிய சிகரங்களை நெருங்கிட என்னை இயலச் செய்வீராக; உம்மைத் தவிர எளிதில் கண்டுணர முடியாத மற்றெல்லா மறைமுகமான குறிப்புகளை நோக்கி நான் சாயாதிருக்குமாறு என்னைப் பாதுகாத்திடுவீராக. என் கடவுளே, உமக்கு ஏற்புடையதும், உமக்கு மகிழ்வைத் தரக்கூடியது-மானதை நோக்கிச் செல்ல என் கால்களுக்கு வழிகாட்டிடுவீராக. உமது வலிமையைக் கொண்டு, உமது சினம், தண்டித்தல் ஆகியவற்றின் ஆவேசத்திலிருந்து என்னைப் பாதுகாத்து, நீர் விரும்பாத உறைவிடங்களுக்குள் நுழைவதிலிருந்து என்னைத் தடுத்திடுவீராக.

#11279
- The Báb

 

குழந்தைகள்

என் பிரபுவே, எனதாண்டவரே! உமது கட்டளையின் திருநூல்களுள் உமது மாற்றவியலாத ஆணையின் நிருபங்களில் தனிச்சிறந்த ஒரு ஸ்தானத்தை நீர் வழங்கியுள்ள உமது ஊழியர்களுள் ஒருவரின் இடைப்பகுதியிலிருந்து பிறந்திட்ட ஒரு குழந்தை இதுவே.

இந்தக் குழந்தை, உமது ஊழியர்கள் மத்தியில் மேலும் முதிர்ச்சி பெற்ற ஆன்மாவாக ஆகிட, அவர்கள் ஆவலின் இலக்கை அடைந்திட இயலச் செய்திட்ட அனைவரையும் உமது நாமத்தின் பேரில், நான் உம்மிடம் மன்றாடுகிறேன். உமது நாமத்தின் சக்தியால் அவனைப் பிரகாசிக்கச் செய்திடுவீராக; உமது புகழைப் பாடிடவும், அவன் முகத்தை உம்மை நோக்கிச் செலுத்திடவும், உம்மிடம் நெருங்கிச் சென்றிடவும் அவனை இயலச் செய்திடுவீராக. மெய்யாகவே, நித்திய காலமும் நீர் விரும்பியதைச் செய்திடுவதற்குச் சக்தி படைத்தவர் நீரே ஆவீர், நித்திய காலமும், நீர் விரும்பியவாறு செய்திடுவதற்கு ஆற்றல் படைத்தவராக இருந்திடுவீர். மேன்மையானவரும், மாண்புடைய-வரும், அடிபணியச் செய்பவரும், வல்லவரும், சர்வ வசீகரமானவரும் உம்மைத் தவிர வேறு கடவுள் இலர்.

#11310
- Bahá'u'lláh

 

அன்பான தேவரே! இவ்வழகிய குழந்தைகள் தங்களது வலிமையெனும் விரல்களின் கைவண்ணமும், தங்களது மகத்துவத்தின் அற்புத அடையாளங்களுமாகும். கடவுளே! இக்குழந்தைகளைப் பாதுகாத்து, அவர்கள் கல்வியளிக்கப்பட கிருபையுடன் உதவி, மானிட உலகிற்கு அவர்கள் சேவை செய்திட அருள்வீராக! கடவுளே! இக்குழந்தைகள் யாவும் முத்துக்கள். அவர்கள் தங்களது அன்புப் பரிவு எனும் கூட்டினுள் பேணி வளர்க்கப்படச் செய்வீராக. தாங்களே கொடைவள்ளலும், அதிபெரும் அன்பு செலுத்துபவரும் ஆவீர்.

#5087
- `Abdu'l-Bahá

 

இறைவா, என் ஆன்மாவைப் புத்துணர்வு பெறச் செய்து எனக்குக் களிப்பூட்டுவீராக. என் உள்ளத்தைத் தூய்மைப்படுத்துவீராக. என் சக்திகளை ஒளிபெறச் செய்வீராக. எல்லாக் காரியங்களையும் அடியேன் உமது கரங்களில் ஒப்படைக்கின்றேன். நீரே எனது வழிகாட்டியும் அடைக்கலமுமாய் இருக்ககன்றீர். இனிமேலும் நான் துக்கமும் துயரமும் கொண்டிடேன். நான் மகிழ்ச்சியும் பூரிப்பும் கொண்ட பிறவியாக இருப்பேன். இறைவா, இனிமேல் ஒருபோதும் நான் கலக்கம் மிகுந்த பிறவியாக இருந்திடேன். துன்பங்கள் என்னை கவலைக்குள்ளாக்கவும் அனுமதித்திடேன். வாழ்க்கையின் வெறுக்கத் தக்க காரியங்களில் எண்ணத்தை இலயிக்க விடேன். இறைவா, நான் என்னிடம் காட்டிடும் நட்பைவிட, நீர் என்னிடம் காட்டிடும் நட்பே அதிகம். என் பிரபுவே, உமக்கு என்னையே அர்ப்பணிக்கின்றேன்.

#5088
- `Abdu'l-Bahá

 

கடவுளே! இக்குழந்தைகளுக்குக் கல்வி-யளிப்பீராக. இக்குழந்தைகள் உமது பழத் தோட்டத்தின் செடிகள்; உமது புல் வெளியின் மலர்கள்; உமது தோட்டத்தின் ரோஜாக்கள். உமது மழை அவர்கள் மீது பொழிந்திடுமாக; மெய்ம்மைச் சூரியன் உமது அன்பினைக் கொண்டு அவர்கள் மீது பிரகாசித்திடுமாக; உமது தென்றல் அவர்களுக்குப் புத்துணர்ச்சி அளித்திடுமாக, அதனால் அவர்கள் பயிற்சி பெற்று, வளர்ந்து, முன்னேற்றமடைந்து, பூரண அழகுடன் தோற்றம் அளிக்கக் கூடும். வழங்குபவர் நீரே; இரக்கமுடையவர் நீரே.

#11311
- `Abdu'l-Bahá

 

அன்புமிக்கப் பிரபுவே! இவ்வழகிய குழந்தைகள் உமது வலிமை என்னும் விரல்களின் கைவண்ணமும், உமது மேன்மையின் அற்புத அடையாளங்களுமாவர். கடவுளே! இக்குழந்தைகளைப் பாதுகாத்து, அவர்கள் கல்வியளிக்கப்பட கிருபையுடன் உதவி, மானிட உலகிற்கு அவர்கள் சேவை ஆற்றிடச் சக்தி அளிப்பீராக. கடவுளே! இக்குழந்தைகள் முத்துக்கள்; அவர்களை உமது அன்புப் பரிவு எனும் சிப்பியினுள் பேணி வளர்த்திடுவீராக.

நீரே கொடைவள்ளல், அனைத்தின் மீதும் அன்புடையவர்.

#11312
- `Abdu'l-Bahá

 

பிரபுவே! இக்குழந்தைகளை அதி உயரிய செடிகளாக ஆக்கிடுவீராக. உமது ஒப்பந்தம் என்னும் தோட்டத்தினில் அவர்களை வளரச் செய்து, உமது அப்ஹா இராஜ்யம் என்னும் மேகங்களிலிருந்து பொழிந்திடும் அருட்பொழிவு-களின்வழி அவர்களுக்குப் பசுமையையும் அழகினையும் வழங்குவீராக.

அன்புமிக்கப் பிரபுவே! நான் ஒரு சிறு குழந்தை; இராஜ்யத்திற்குள் என்னைப் பிரவேசிக்கச் செய்வதன்வழி என்னை மேன்மையடையச் செய்வீராக. நான் உலகப் பற்றுடையவன்; என்னைத் தெய்வீகத் தன்மையுடையவனாக ஆக்குவீராக. நான் கீழுலகைச் சார்ந்தவன்; என்னை மேலிருக்கும் இராஜ்யத்தில் ஒருவனாக ஆக்குவீராக; நான் சோர்வடைந்துள்ளேன்; என்னைப் பிரகாசமடையச் செய்வீராக; நான் லௌகீக இயல்பினன்; என்னை ஆன்மீக இயல்பினனாக ஆக்குவீராக. நான் உமது முடிவிலா வள்ளன்மையினை வெளிப்படுத்திட அருள் புரிவீராக.

நீரே சக்திமிக்கவர், அன்பே உருவானவர்.

#11313
- `Abdu'l-Bahá

 

அவரே கடவுள்! கடவுளே என் கடவுளே! முத்தைப் போன்றதொரு தூய உள்ளத்தை எனக்குத் தந்தருள்வீராக.

#11314
- `Abdu'l-Bahá

 

கடவுளே, எனக்கு வழி காட்டி, என்னைப் பாதுகாத்து, என்னை ஓர் ஒளிமிக்க விளக்காகவும் சுடர்விடும் விண்மீனாகவும் ஆக்கிடுவீராக. வல்லவரும் சக்தி மிக்கவரும் நீரே ஆவீர்.

#11315
- `Abdu'l-Bahá

 

என் பிரபுவே! என் பிரபுவே! நான் இளம் பிராயத்திலுள்ள ஒரு குழந்தையாவேன். உமது கருணையெனும் மார்பிலிருந்து எனக்கு உணவூட்டுவீராக. உமது அன்பெனும் நெஞ்சத்தில் என்னைப் பயிற்றுவிப்பீராக. உமது வழிகாட்டல் என்னும் பள்ளியில் எனக்குக் கல்வியளித்து, உமது அருட்கொடை எனும் நிழலில் என்னை வளர்ப்பீராக. இருளிலிருந்து என்னை விடுவிப்பீராக; என்னை ஒரு பிரகாசமிக்க ஒளியாக ஆக்குவீராக; மகிழ்ச்சியின்மையிலிருந்து என்னை விடுவிப்பீராக; ரோஜாத் தோட்டத்தின் ஒரு மலராக என்னை ஆக்கிடுவீராக; என்னை, உமது வாயிலின் ஒரு சேவகனாக அனுமதித்து, எனக்கு நேர்மையுடையோரின் தன்மையையும் இயல்பையும் வழங்குவீராக; என்னை மானிட உலகிற்கு வள்ளன்மைக்கோர் எடுத்துக்காட்டாக்கி, என் சிரசிற்கு நித்திய வாழ்வெனும் மகுடத்தைச் சூட்டுவீராக.

மெய்யாகவே, நீரே, சக்திமிக்கவர், வலிமை-மிக்கவர், கண்ணுறுபவர், செவிமடுப்பவர்.

#11316
- `Abdu'l-Bahá

 

ஒப்பற்றப் பிரபுவே! இவ்வேழைக் குழந்தைக்கு நீர் புகலிடமாகவும் தவறிழைத்திடும் இம்மகிழ்ச்சியற்ற ஆன்மாவுக்கு நீர் இரக்கம் காட்டி மன்னித்திடும் பிரபுவாகவும் ஆவீராக. பிரபுவே! நாங்கள் பயனற்றச் செடிகளாயினும் நாங்கள் உமது ரோஜாத் தோட்டத்தினைச் சார்ந்தவர்களே! இலைகளும் மலர்களுமற்ற இளஞ்-செடிகளாயினும் நாங்கள் உமது பழத் தோட்டத்தினைச் சார்ந்தவர்களே! ஆதலின் உமது மென்கருணை என்னும் மேகங்களின் பொழிவுகளின்வழி இச்செடியினைப் பேணி வளர்த்து உமது ஆன்மீக வசந்தம் என்னும் உயிர்ப்பிக்கும் மூச்சினால் அதனைத் துரிதப்படுத்திப் புத்துணர்வுப் பெறச் செய்வீராக! கவனமுடையவனாகவும் உய்த்துணரும் ஆற்றல் உடையவனாகவும் மேன்மை மிக்கவனாகவும் அவனை ஆகச் செய்து, அதனால் அவன் நித்திய வாழ்வு பெற்று, என்றும் உமது இராஜ்யத்தில் வாழ்ந்திட அருள்புரிவீராக!

#11317
- `Abdu'l-Bahá

 

என் கடவுளே, என் கடவுளே! வாழ்வென்னும் விருட்சத்தின் சிறு கிளைகளும், இரட்சிப்பு எனும் புல்வெளியின் பறவைகளும், உமது அருள் எனும் சமுத்திரத்தின் முத்துக்களும், உமது வழிகாட்டல் எனும் பூங்காவின் ரோஜாக்களுமாக விளங்கும் இந்தக் குழந்தைகளை நீர் காண்கின்றீர்.

கடவுளே, எங்கள் பிரபுவே! நாங்கள் உமது புகழைப் பாடுகிறோம், உமது புனிதத்தன்மைக்குச் சாட்சியம் பகர்கின்றோம், எங்களை வழிகாட்டும் ஒளிகளாக ஆக்கிடவும், மனுக்குலத்தின் மத்தியில் நித்தியப் பேரொளி எனும் தொடுவானங்களின் மேல் ஒளிவீசும் விண்மீன்களாக ஆக்கிடவும், உம்மிடமிருந்து தோன்றிடும் அறிவை எங்களுக்குக் கற்பிக்கவும், உமது கருணை எனும் சுவர்க்கத்தை நோக்கிப் பேரார்வத்தோடு மன்றாடுகிறோம். யா பஹாவுல்-அப்ஹா.

#11318
- `Abdu'l-Bahá

 

பிரபுவே! நான் ஒரு குழந்தையாவேன்; உமது அன்புக் கருணை எனும் நிழலின் கீழ் என்னை வளரச் செய்திடுவீராக. நான் ஓர் இளஞ்செடியாவேன்; உமது வள்ளன்மை எனும் மேகங்களின் பொழிவுகள் வாயிலாக என்னை வளரச் செய்வீராக. அன்பெனும் பூங்காவில் நான் ஓர் இளந்தளிராவேன்; பயனுள்ள கனிகொடுக்கும் ஒரு மரமாக என்னை ஆக்கிடுவீராக.

வல்லவரும் சக்திமிக்கவரும் நீரே ஆவீர்; சர்வ அன்பானவரும், சர்வமும் அறிபவரும், சகலத்தையும் காண்பவரும் நீரே ஆவீர்.

#11319
- `Abdu'l-Bahá

 

அதி மகிமைமிக்கப் பிரபுவே! உமது இச்சிறு பணிப் பெண்ணை ஆசீர்வதிக்கவும் மகிழ்ச்சியடையவும் செய்வீராக; அவளை உமது ஒருமை என்னும் வாயிலில் சீராட்டி, உமது அன்பெனும் கிண்ணத்திலிருந்து ஆழப் பருகச் செய்வீராக; அதனால் அவள் பேரின்பத்தாலும் பேரானந்தத்தாலும் நிரப்பப்பட்டு இனிய நறுமணத்தினைப் பரப்பக்கூடும். நீர் வலிமையும் சக்தியும் மிக்கவர்; நீரே சகலமும் அறிந்தவர்; யாவற்றையும் கண்ணுறுபவர்.

#11320
- `Abdu'l-Bahá

 

குழந்தைகளுக்குரிய குணப்படுத்தல் பிரார்த்தனை

என் பிரபுவே, உமது நாமங்களின் மூலம் நோயுற்றோர் குணப்படுத்தப்- படுகின்றனர்; தாகமுற்றோர் நீர் வழங்கப் படுகின்றனர்; கடும் வேதனையுற்றோர் அமைதிப்படுத்தப் படுகின்றனர்; வழிதவறியோர் வழிகாட்டப்படுகின்றனர், தாழ்த்தப்பட்டோர் உயர்த்தப்படுகின்றனர்; ஏழைகள் செல்வம் வழங்கப்படுகின்றனர்; அறியாமையில் உள்ளோர் அறிவொளியளிக்கப் படுகின்றனர்; சோர்வுற்றோர் ஒளிர்விக்கப்படுகின்றனர், கவலையுற்றோர் மகிழ்ச்சியூட்டப் படுகின்றனர், குளிருற்றோர் வெப்பமூட்டப் படுகின்றனர்; நசுக்கப்பட்டோர் எழச் செய்யப்படுகின்றனர். என் இறைவா, உமது நாமத்தின் மூலமாகப் படைப்புப் பொருள்கள் யாவும் உயிர்பெற்றன; விண்ணுலகங்கள் பரப்பப்பட்டன; மண்ணுலகம் நிறுவப்பட்டது; மேகங்கள் திரட்டப்பட்டு பூமி மீது மழை பொழியச் செய்யப்பட்டது; மெய்யாகவே, உமது படைப்பினங்கள் யாவற்றுக்கும் இதுவே உமது அருளின் அடையாளமாகும்.

ஆகவே, நீர், உமது நாமத்தினால் எதன் மூலம் உமது இறைமையை வெளிப்படுத்தி, உமது சமயத்தினைப் படைப்பனைத்திற்கும் மேலாக உயர்த்தி, உமது அதிசிறந்த பட்டங்கள், அதி மகத்தான குணங்களினாலும், உமது தலைசிறந்ததும் உயர்ந்ததுமான திருவுரு புகழப்படும் எல்லாப் பண்புகளினாலும், இந்த இரவில், நீர், உமது கருணை என்னும் மேகங்களிலிருந்து, உமது ஒளிமயமான திருவுருவுடன் தொடர்புப்படுத்தியிருக்கும் உமது படைப்பெனும் இராஜ்யத்திலுள்ள, இப்பச்சிளங் குழந்தையின் மீது, உமது குணப்படுத்துதல் என்னும் மழையினைப் பொழியச் செய்திடுமாறு, உம்மிடம் நான் மன்றாடுகின்றேன்.

என் இறைவா, உமது கிருபையினால் நலம், ஆரோக்கியம் என்னும் அங்கியினை இக்குழந்தைக்கு அணிவித்திடுவீராக. என் அன்பரே, அவனை, ஒவ்வொரு நோயிலிருந்தும் சீர்க்குலைவிலிருந்தும், உமக்கு அருவருப்பான ஒவ்வொன்றிலிருந்தும் காத்தருள்வீராக. நீர், உண்மையாகவே, அதி சக்தி வாய்ந்தவர், சுயஜீவியானவர். மேலும், என் இறைவா, இவ்வுலகிற்கும் மறுவுலகிற்கும், கடந்தகால, வருங்கால, தலைமுறைகளுக்குமான நன்மை-களையும் அவன்பால் அனுப்பியருள்வீராக. உமது வலிமையும் விவேகமும், மெய்யாகவே, இதற்கு ஈடானதாகும்.

#11308
- Bahá'u'lláh

 

கூட்டங்கள்

பிரபுவே, என் இறைவா, நீர் போற்றப் படுவீராக! துரிதமாக முன்னேறிடும் உமது அருள் என்னும் காற்றின் மூலமாகவும், உமது நோக்கத்தின் பகலூற்றானவர்களின் மூலமாகவும் உமது அகத் தூண்டலின் உதயபீடங்களானோரின் மூலமாகவும் என் மீதும் உமது வதனத்தைத் தேடினோரின் மீதும் உமது தாராளத் தன்மைக்கும் வள்ளன்மைமிகு அருளுக்கும் பொருந்தவும், உமது வழங்குகைக்கும் தயைக்கும் தகுதியானவற்றை அனுப்பி-யருளுமாறு நான் உம்மைப் பரிந்து கேட்கின்றேன். நான் வறியவனாகவும் துணையற்றவனாகவும் இருக்கின்றேன். என் பிரபுவே, உமது செல்வம் என்னும் சமுத்திரத்தில் என்னை மூழ்கச் செய்வீராக; தாகமுற்றிருக்கிறேன், உமது அன்பாதரவு என்னும் ஜீவ நீரிலிருந்து என்னைப் பருகச் செய்வீராக.

உமது சொந்த மெய்நிலையின் மூலமும் உமது திருவுருவின் பிரதிநிதியாக நீர் நியமித்துள்ள அவதாரத்தின் மூலமும் விண்ணிலும் மண்ணிலுமுள்ளோர் அனைவருக்குமான உமது தனிச் சிறப்பார்ந்த திருவாக்கின் மூலமும் உமது அருள்மிகு கடாட்சம் என்னும் விருட்சத்தின் நிழலின்கீழ் உமது ஊழியர்களை ஒன்று திரட்டுமாறு நான் உம்மை வேண்டிக் கொள்கிறேன். ஆகவே, அதன் கனிகளை உட்கொள்ளவும் அதன் இலைகளின் சலசலப்பையும் அதன் கிளைகளின் மீதமர்ந்து கீதம் பாடிடும் அப் பறவையின் குரலின் இனிமையையும் செவிமடுத்திட அவர்களுக்கு உதவிடுவீராக. நீர், மெய்யாகவே, ஆபத்தில் உதவுபவர், அடைந்திடவியலாதவர், எல்லாம் வல்லவர், அதி வள்ளன்மை வாய்ந்தவர்.

#11324
- Bahá'u'lláh

 

கருணைமிக்க இறைவா! வலிமையும் சக்தியும் மிக்கவரே! அதியன்புமிக்கத் தந்தையே!

உமது மேன்மைமிக்க உறுதிப்பாட்டிலிருந்து உமது முடிவிலா அருட்கொடைகளை விரும்பி உமது வாயிலில் இறைஞ்சியவர்களாக, உந்தன்பால் திரும்பிய வண்ணம் உமது இவ்வூழியர்கள் ஒன்று கூடியுள்ளனர். உமது நல்விருப்பத்தைத் தவிர அவர்களுக்கு வேறெந்த நோக்கமும் கிடையாது. மனித இனத்திற்குச் சேவை புரிவதைத் தவிர அவர்களுக்கு வேறெந்த எண்ணமுமே இல்லை.

இறைவா! இக்கூட்டத்தினை ஒளிபெறச் செய்வீராக. உள்ளங்களைக் கருணை மிக்கதாய் ஆக்குவீராக. அவர்களுக்குப் பரிசுத்த ஆவியின் அருட் கொடைகளை வழங்கிடுவீராக. விண்ணுலகினின்று வந்திடும் சக்தியினை அவர்களுக்கு வழங்குவீராக. அவர்களுக்குத் தெய்வீக உள்ளங்களை வழங்கி ஆசீர்வதிப்பீராக. அவர்களின் மனத் தூய்மையை அதிகரிப்பீராக; அதனால், அவர்கள் பணிவுடனும் செய்த தவறுக்கு ஆழ்ந்த வருத்தத்துடனும் உமது இராஜ்யத்தின்பால் திரும்பி மானிட உலகிற்குச் சேவையில் ஈடுபடக்கூடும். ஒவ்வொருவரும் ஒரு பிரகாசமான மெழுகுவர்த்தியாகட்டும். ஒவ்வொருவரும் ஓர் ஒளிர்ந்திடும் நட்சத்திரமாகட்டும். ஒவ்வொருவரும் வண்ணத்தில் அழகாகவும் இறைவனின் இராஜ்யந்தனில் நறுமணம் மிக்கவராகவும் ஆகட்டும்.

அன்புள்ள தந்தையே! உமது ஆசியை நல்குவீராக. எங்களின் குறைகளைப் பொருட்படுத்தாதீர். எங்களை உமது பாதுகாப்பில் அரவணைப்பீராக. எங்களின் பாவங்களை நினைவு கூர்ந்திடாதீர். உமது கருணையின் வாயிலாக எங்களைக் குணப்படுத்துவீராக. நாங்கள் நோயுற்றவர்கள்; நீர் வலிமை வாய்ந்தவர். நாங்கள் ஏழைகள்; நீர் செல்வந்தர். நாங்கள் நோயாளிகள்; நீரே மருத்துவர். நாங்கள் தேவை நிறைந்தவர்கள்; நீர் அதி தாராளத் தன்மையுடையவர்.

இறைவா! எங்களுக்கு உமது கடாட்சத்தினை வழங்கிடுவீராக. சக்தி மிக்கவர் நீரே. வழங்குபவர் நீரே. நலமளிப்பவர் நீரே!

#11325
- `Abdu'l-Bahá

 

கருணைமிக்கப் பிரபுவே! இக்கூட்டத்தில் குழுமியிருக்கும் இவர்கள் உமது ஊழியர்கள், உமது இராஜ்யத்தின்பால் திரும்பியுள்ளனர், அவர்களுக்கு உமது அருள்பாலிப்பும், நல்லாசியும் தேவைப்படுகின்றது. இறைவா! வாழ்க்கையின் மெய்ப்பொருள்கள் அனைத்திலும் அடங்கிக் கிடக்கும் உமது ஒருமையின் அடையாளங்களை வெளிப்படுத்தித் தெளிவாக்குவீராக. நீர் மனிதர்களின் மெய்ப்பொருளில் மறைத்து வைத்துள்ள ஒழுக்கப் பண்புகளை வெளிப்படுத்தி மலர்ச்சியுறச் செய்வீராக.

கடவுளே, நாங்கள் செடிகளைப் போன்றவர்கள், உமது வள்ளன்மையோ மழையைப் போன்றது; உமது அருளினால் இச்செடிகளைச் செழிப்புற்று வளரச் செய்வீராக. நாங்கள் உமது ஊழியர்கள்; எங்களை லௌகீக வாழ்க்கை என்னும் சிறையிலிருந்து விடுவிப்பீராக. நாங்கள் அறிவற்றவர்கள்; எங்களை விவேகமடையச் செய்வீராக. நாங்கள் உயிரற்றவர்கள்; எங்களை உயிர்ப்பெறச் செய்வீராக. நாங்கள் உலகப் பற்றுடையவர்கள்; எங்களுக்கு ஆன்ம உணர்வை அளிப்பீராக. நாங்கள் இழந்தவர்கள்; உமது மர்மங்களில் எங்களைப் பங்குபெறச் செய்வீராக. நாங்கள் வறியவர்கள்; உமது எல்லையற்ற பொக்கிஷத்திலிருந்து எங்களை வளமுடை-யோராக்கி, ஆசீர்வதிப்பீராக. கடவுளே! எங்களைப் புத்துயிர் பெறச் செய்வீராக; எங்களுக்குக் கண் பார்வை அளிப்பீராக; எங்களுக்குக் கேட்குந்திறனை அளிப்பீராக; எங்களுக்கு வாழ்க்கையின் மர்மங்களை அறிவிப்பீராக; அதனால் இவ்வுலக வாழ்க்கையிலேயே இராஜ்யத்தின் இரகசியங்கள் எங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டு, நாங்கள் உமது ஒருமைத் தன்மையை ஒப்புக்கொள்ளக் கூடும். ஒவ்வொரு வழங்குகையும் உம்மிடமிருந்தே வெளிப்படுகின்றது; ஒவ்வோர் ஆசியும் உம்முடையதே.

நீரே வல்லவர், நீரே சக்தி மிக்கவர், நீரே அளிப்பவர், எக் காலத்தும் வள்ளன்மை மிக்கவரும் நீரே.

#11326
- `Abdu'l-Bahá

 

என் கடவுளே! என் கடவுளே! மெய்யாகவே, இவ்வூழியர்கள் உமது கருணை என்னும் இராஜ்யத்தினைப் பூஜித்தவர்களாக உந்தன்பால் திரும்பியுள்ளனர்.

மெய்யாகவே, உமது அற்புதமிகு இராஜ்யத்திலிருந்து உறுதிப்பாட்டினை நாடியும் உமது திவ்விய இராஜ்யத்தினை அடைந்திடும் நம்பிக்கைக் கொண்டும் அவர்கள் உமது புனிதத் தன்மையினால் ஈர்க்கப்பட்டு உமது அன்பு என்னும் தீயினால் சுடர்விட்டு ஒளிர்கின்றனர். மெய்யாகவே அவர்கள் மெய்ம்மைக் கதிரவனிடமிருந்து பிரகாசத்தினை விரும்பியவர்களாக உமது கடாட்சத்தின் பொழிவினை ஆவலோடு எதிர்ப்பார்க்கின்றனர். பிரபுவே! அவர்களைப் பிரகாசமிகு ஒளிவிளக்குகளாக, இரக்கமிகு அடையாளங்களாக, கனி கொடுக்கும் மரங்களாக, ஒளிமிக்க விண்மீன்களாக, ஆக்கிடுவீராக. உமது அன்பு என்னும் பிணைப்புகளாலும் பந்தத்தினாலும் இணைக்கப்பட்டு, உமது தயை என்னும் ஒளி விளக்குகளை ஆவலுடன் விரும்பியவர்களாக அவர்கள் உமது சேவைக்காக முன்னெழுவராக. பிரபுவே! அவர்களை வழிகாட்டலின் அடையாளங்களாக, உமது அழிவில்லா இராஜ்யத்தின் விருதுக்கொடிகளாக, உமது கருணை என்னும் கடலின் அலைகளாக, உமது மாட்சிமை என்னும் ஒளியின் கண்ணாடிகளாக, ஆக்கிடுவீராக.

மெய்யாகவே, தாராளத் தன்மையுடையவர் நீரே! மெய்யாகவே கருணைமிக்கவர் நீரே. மெய்யாகவே நீரே மதிப்புமிக்கவர், அன்புக்குரியவர்!

#11327
- `Abdu'l-Bahá

 

மன்னித்தருளும் கடவுளே! இவ்வூழியர்கள் உமது இராஜ்யத்தின்பால் திரும்பி, உமது கிருபையையும் அருட்கொடையையும் நாடிடுகின்றனர். கடவுளே! அவர்களின் இதயங்களை நன்மையானதாகவும், தூய்மை மிக்கதாகவும் ஆக்கிடுவீராக; அதனால், அவர்கள் உமது அன்புக்குத் தகுதியுடையவர்களாக ஆகிடக்கூடும். அவர்களின் ஆவிகளைத் தூய்மைப்படுத்திப் புனிதப்- படுத்துவீராக; அதனால், மெய்ம்மைச் சூரியனின் ஒளி அவர்கள் மீது பிரகாசிக்கக் கூடும். அவர்களின் கண்களைத் தூய்மைப்படுத்திப் புனிதப்- படுத்துவீராக, அதனால், அவர்கள் உமது ஒளியைக் கண்ணுறக்கூடும். அவர்களின் செவிகளைத் தூய்மைப்படுத்திப் புனிதப்படுத்துவீராக; அதனால், அவர்கள் உமது இராஜ்யத்தின் அழைப்புக் குரலைச் செவிமடுக்கக் கூடும்.

பிரபுவே, மெய்யாகவே, நாங்கள் வலுவற்றவர்கள், ஆனால், நீரோ வலிமைமிக்கவர். மெய்யாகவே, நாங்கள் ஏழைகள்; ஆனால் நீரோ செல்வந்தர். நாங்கள் தேடுபவர்கள்; ஆனால், நீரோ தேடப்படுபவர். பிரபுவே, எங்கள் மீது இரக்கங்காட்டி எங்களை மன்னிப்பீராக; எங்களுக்குத் திறனையும், உணரும் தன்மையையும் வழங்கிடுவீராக; அதனால், நாங்கள் உமது தயைகளுக்குத் தகுதியுடையவர்களாக ஆகிடவும், உமது இராஜ்யத்தின்பால் ஈர்க்கப்படவும் கூடும்; வாழ்வெனும் நீரை ஆழப் பருகிடவும் கூடும்; உமது அன்பெனும் தீயால் மூட்டப்படவுங் கூடும்; இந்த ஒளிமிக்க நூற்றாண்டில் பரிசுத்த ஆவியின் மூச்சுக்கள் வாயிலாக மீண்டும் உயிர்பெறவுங் கூடும்.

கடவுளே, என் கடவுளே! உமது அன்புக் கருணை எனும் பார்வைகளை இந்தக் கூட்டத்தின் மீது செலுத்துவீராக. ஒவ்வொருவரையும் உமது காவலிலும், உமது பாதுகாப்புக்குள்ளும் வைத்திடுவீராக. உமது விண்ணுலக ஆசிகளை இந்த ஆன்மாக்களுக்காகக் கீழே அனுப்பிடுவீராக. உமது கருணை எனும் சமுத்திரத்திற்குள் அவர்களை மூழ்கச் செய்து, பரிசுத்த ஆவியின் சுவாசங்கள் வாயிலாக அவர்களை உயிர்பெறச் செய்வீராக.

பிரபுவே! உமது கிருபைமிகு ஆதரவையும், உறுதிப்பாட்டையும் இந்த நேர்மையான அரசாங்கத்தின் மீது அருள்வீராக. இந்நாடு உமது பாதுகாப்பென்னும் தஞ்சத்தின் நிழலின் கீழ் உள்ளது; அதன் மக்கள் உமக்குச் சேவைபுரிகின்றனர். பிரபுவே! உமது விண்ணுலக அருட்கொடையை அவர்களுக்கு வழங்கி, உமது கிருபை, தயை ஆகியவற்றின் பொழிவுகளை வளமாகவும், அபரிமிதமாகவும் ஆக்கிடுவீராக. மதிப்பிற்குரிய இந்த நாடு கௌரவிக்கப்படவும், அதை உமது இராஜ்யத்திற்குள் நுழைந்திடவும் இயலச் செய்வீராக.

சக்திமிக்கவரும், வல்லமை மிக்கவரும், கருணைமிக்கவரும், தயாளமானவரும், நலன் பயப்பவரும், கிருபை நிறைந்த பிரபுவும் நீரே ஆவீர்.

#11328
- `Abdu'l-Bahá

 

தெய்வீக அருளாளரே! இந்தக் கூட்டம் உமது அழகின்பால் கவரப்பட்டு, உமது அன்பெனும் தீயினால் கொழுந்துவிட்டு எரிந்திடும் அன்பர்களின் கூட்டமாகும். இந்த ஆன்மாக்களை விண்ணுலகத் தேவகணங்களாக ஆக்கிடுவீராக; உமது பரிசுத்த ஆவியின் சுவாசங்கள் வாயிலாக அவர்களை உயிர்பெறச் செய்வீராக; அவர்களுக்குச் சொல்திறன்மிக்க நாவுகளையும், உறுதியான இதயங்களையும் வழங்கிடுவீராக; அவர்களுக்கு விண்ணுலகச் சக்தியையும், கருணைமிக்கத் திறன்களையும் தந்தருள்வீராக; மனுக்குலத்தின் ஒருமையைப் பிரகடனஞ் செய்வோராகவும், மனித உலகில் அன்பு, இணக்கம் ஆகியவற்றுக்குக் காரணமாக இருப்பவர்களாகவும் ஆக்கிடுவீராக; அதனால் அறியாமையினால் ஏற்படும் தப்பெண்ணம் எனும் அபாய இருள் உண்மைக் கதிரவனின் ஒளி வாயிலாக மறையக்கூடுமாக; இந்த இருண்ட உலகமும் ஒளிபெறக் கூடும்; இந்தப் பௌதீக உலகம் ஆவி உலகின் ஒளிக்கதிர்களைக் கிரகிக்கக் கூடும்; இந்த வெவ்வேறான நிறங்கள் ஒரே நிறமாக ஒன்றுபடக் கூடும், மற்றும், போற்றுதல் எனும் மெல்லிசை உமது புனிதம் எனும் இராஜ்யத்திற்கு உயர்ந்திடக் கூடும்.

மெய்யாகவே, நீரே சர்வ சக்திமிக்கவரும், சர்வ வல்லவரும் ஆவீர்.

#11329
- `Abdu'l-Bahá

 

சமயத்தின் வெற்றி

என் இறைவா, எவ்வாறு உமது அன்பர்கள் உமது உயிரினங்களிடையே உள்ள கிளர்ச்சிக்காரர்களாலும் உமது மக்களிடையே உள்ள கொடுமை இழைப்போராலும் சூழப்பட்டுள்ளனர் என்பதை நீர் பார்க்கின்றீர். உமது அன்பர்களின் புலம்பலும் உமது தேர்ந்தெடுக்கப்பட்டோரின் அழுகுரலும் எழுப்பப்படாத எஞ்சியுள்ள நாடு எதுவுமே கிடையாது. உமது ஆற்றல் என்னும் கரத்தினை உமது சக்தி என்னும் மார்பிலிருந்து வெளிக்கொணர்ந்து அதனைக் கொண்டு உம்மை நேசிப்போர் அனைவருக்கும் உதவிடுமாறு நான் உம்மை வேண்டிக் கொள்கின்றேன்.

என் இறைவா, அவர்களின் கண்கள் உந்தன்பால் திரும்பியுள்ளதையும், அவர்களின் பார்வை உமது பகலூற்று, அன்பு, கடாட்சம் ஆகியவற்றின் மீது பதிந்திருப்பதையும் நீர் பார்க்கின்றீர். என் பிரபுவே, அவர்களது இழிவை மகிமையாகவும், அவர்களின் ஏழ்மையை வளமாகவும், அவர்களின் பலமின்மையை உம்மிலிருந்து உதித்திடும் வலுவாகவும் மாற்றிடுவீராக.

நீர் விரும்பியதைச் செய்யும் சக்தியுடையவர் நீரே. எல்லாம் அறிந்தவரும் சகலமும் அறிவிக்கப்பட்டவரும் உம்மையன்றி வேறெவருமிலர்.

#11331
- Bahá'u'lláh

 

பிரபுவே, என் இறைவா, ஒளி உமக்கே உரியதாகட்டும்! உமது மாட்சிமைமிகு வலிமை என்னும் நதியினைப் புலனாக்குவீராக; அதனால் உமது ஒருமை என்னும் நீர், அனைத்துப் பொருள்களின் மெய்ம்மையிலிருந்து அந்தளவு சுரந்தொழுகிடுமாக; அதனால் உமது தவறா வழிகாட்டுதல் என்னும் கொடி உமது கட்டளை என்னும் இராஜ்யத்தில் உயர ஏற்றப்பட்டு, தெய்வீகச் சுடரொளி வீசிடும் விண்மீன்கள் உமது மாட்சிமை என்னும் சுவர்க்கத்தினில் பிரகாசித்திடுமாக. உமக்கு விருப்பமானதைச் செய்திடும் ஆற்றல் படைத்தவர் நீரே. மெய்யாகவே, ஆபத்தில் உதவுபவரும், சுயஜீவியரும் நீரே ஆவீர்.

#11332
- Bahá'u'lláh

 

என் இறைவா, உமது அருட்பொழிவுகள் என்னும் சுவர்க்கத்திலிருந்தும், உமது சலுகைகள் என்னும் பகல் நட்சத்திரத்திலிருந்தும் என்னைத் தடுத்திடாதீர். நீர் எதன் மூலம் அனைத்துப் புலனாகும் புலனாகா பொருள்களையும் ஆட்கொண்டுள்ளீரோ அத் திருமொழியின் மூலமாக என்னையும் உமது தேர்ந்தெடுக்கப்பட்டோரையும் உமது ஊழியர்கள் மத்தியிலும், உமது பிராந்தியங்கள் அனைத்திலும் உமது சமயத்தை மேன்மையுறச் செய்வதனைச் சாதித்திட உதவுமாறு உம்மை வேண்டிக் கொள்கின்றேன். எனவே, உமது திருநூலில் வழங்கியுள்ள ஒவ்வொரு நற்பொருளையும் எனக்கு விதித்திடுவீராக. மெய்யாகவே, நீரே எல்லாம் வல்லவர், என்றும் மன்னிப்பவர், உதார குணமுடையவர்.

#11333
- Bahá'u'lláh

 

உமது கட்டளையின் சக்தியின் வழியாக, எல்லாப் படைப்புப் பொருள்களையும் உயிர்பெறச் செய்துள்ளவரான பிரபுவே, ஒளி உமக்கே உரியதாகுக.

பிரபுவே! உம்மைத் தவிர மற்றனைத்தையும் துறந்திட்டோருக்குத் துணைபுரிவீராக; ஒரு மாபெரும் வெற்றியை அவர்களுக்கு வழங்கிடுவீராக. அவர்களை ஆதரித்து, பலப்படுத்திடவும், அவர்கள் வெற்றியைச் சாதித்திட இயலச் செய்திடவும், அவர்களுக்கு ஊக்கமளித்திடவும், அவர்களுக்குப் புகழைப் பெற்றுத்தந்திடவும், அவர்கள் மீது பெரும் புகழும் மதிப்பும் வந்தடைந்திடவும், அவர்களை வளமிக்கவராக்கிடவும், ஓர் அற்புதமான வெற்றியோடு அவர்களை வெற்றியாளராக்கிடவும், பிரபுவே, விண்ணிலும், மண்ணிலும், அவற்றுக்கிடையிலுமுள்ள அனைத்திற்கும் தேவகணங்களின் படையைக் கீழே அனுப்பி, உமது ஊழியர்களுக்கு உதவிடுவீராக.

விண்ணுலகங்களுக்கும் மண்ணுலகுக்கும் பிரபுவும், எல்லா உலகங்களுக்குமே பிரபுவான நீரே, அவர்களின் பிரபு ஆவீர். பிரபுவே, இவ்வூழியர்களின் சக்தியைக் கொண்டு, இந்தச் சமயத்தைப் பலப்படுத்துவீராக; உலக மக்கள் அனைவருக்கும் மேலாக அவர்களை உயர்வுபெறச் செய்வீராக; ஏனெனில், உண்மையாகவே, அவர்கள்தாம் உம்மைத் தவிர மற்றனைத்திலிருந்தும் பற்றறுத்திட்ட ஊழியர்கள் ஆவர். மெய்யாகவே, உண்மையான நம்பிக்கையாளர்களின் பாதுகாவலர் நீரே ஆவீர்.

பிரபுவே, உமது வென்றிடவியலாத இந்த சமயத்தின் மீதான விசுவாசம் வாயிலாக, அவர்களின் இதயங்கள், விண்ணுலகங்களிலும், மண்ணுலகிலும், அவற்றுக்கு இடையேயுமுள்ள எவையானாலும், அவற்றையும் விட அவர்களின் இதயங்கள், மேலும் வலுவானதாக வளர்ச்சியுற அருள்வீராக. பிரபுவே, உமது அற்புதச் சக்தியின் சின்னங்களைக் கொண்டு, அவர்களின் கரங்களைப் பலப்படுத்துவீராக; அதனால், மனுக்குலம் அனைத்தின் பார்வை முன்னே உமது சக்தியை அவர்கள் வெளிப்படுத்தக்கூடும்.

#11334
- The Báb

 

பிரபுவே! உமது தெய்வீக ஒற்றுமை எனும் விருட்சம் துரிதமாக வளர்வதற்கு வழிவகுப்பீராக; ஆதலின், பிரபுவே, உமது நல்விருப்பம் எனும் வழிந்தோடிடும் நீர்களைக் கொண்டு அதற்கு நீர் பாய்ச்சுவீராக; உமது தெய்வீக வாக்குறுதி எனும் வெளிப்பாடுகளின் முன், உந்தன் புகழுக்கும் மேன்மைக்கும் தகுந்த, நீர் விரும்பிய கனிகளை ஈன்றிடவும், உந்தன் போற்றுதலுக்கும், நன்றிசெலுத்தலுக்கும் பொருந்தக்கூடிய , உமது நாமத்தை மேன்மைப்படுத்திடவும், உமது சாரத்தின் ஒருமையைப் புகழ்ந்திடவும், உம்மை ஆராதனைச் செய்திடவும், இயலச் செய்வீராக; ஏனெனில், இவை அனைத்தும் மற்றெவரின் பிடிக்குள் அல்லாது உமது பிடிக்குள்ளேயே அடங்கியுள்ளன.

உமது உறுதிப்பாடெனும் விருட்சத்திற்கு நீரூட்டுவதற்காகவும், அதன் வழியாக உமது புனிதமான, மாற்றமுடியாத திருச்சொல்லை மேன்மைப்படுத்திடவும், நீர் தேர்ந்தெடுத்த குருதிக்கு உரியவர்கள் பெற்றிடும் ஆசிகள் மாபெரிதாகும்.

#11335
- The Báb

 

பிரபுவே! அவர்களுக்குத் தகுந்த வெற்றியை வழங்கி, உமது நாள்களில் உந்தன் பொறுமையான ஊழியர்களை வெற்றிப் பெற்றவர்களாக ஆக்கிடுவீராக; ஏனெனில் அவர்கள் உமது பாதையில் உயிர்த் தியாகத்தை நாடியுள்ளனர். அவர்களின் மனங்களுக்கு ஆறுதலையும், அவர்களின் உள்ளார்ந்த ஜீவனை மகிழ்வுறச் செய்யக் கூடியவற்றையும், அவர்களின் இதயங்களுக்கு நம்பிக்கையையும், அவர்களின் உடல்களுக்குச் சாந்தத்தை வழங்கக்- கூடியவற்றையும், அவர்களின் ஆன்மாக்களை, அதி மேலான, இறைவனின் முன்னிலைக்கு உயர்த்திடவும், அதி விழுமிய சொர்க்கத்தையும், உண்மை அறிவும், பண்பும்முடைய மனிதர்களுக்காக நீர் விதித்திட்டப் பேரொளி எனும் ஓய்வில்லங்களை அடைந்திட இயலச் செய்யக்கூடியவற்றை அவர்களுக்குத் தந்தருள்-வீராக. மெய்யாகவே, அனைத்தையும் நீர் அறிவீர், ஆனால் நாங்களோ உமது ஊழியர்களும், உமது அடிமைகளும், உமது கொத்தடிமைகளும், உமது வறியவர்களும் ஆவோம். கடவுளே, எங்கள் பிரபுவே, உம்மைத் தவிர வேறு இறைவனை நாங்கள் வேண்டியதில்லை; இம்மைக்கும் மறுமைக்குமான கருணைக் கடவுளானவரே, உம்மைத் தவிர வேறெவரிடமிருந்தும் நாங்கள் ஆசிகளுக்கோ, கிருபைகளுக்கோ மன்றாடியதில்லை. நாங்கள் வெறும் வறுமை, இல்லாமை, ஆதரவின்மை, நரகம் ஆகியவற்றின் உருவகங்கள் ஆவோம்; ஆனால் உமது முழு உருவே, செல்வம், சுதந்திரம், புகழ், மாட்சிமை, எல்லையற்ற கருணை ஆகியவற்றின் அடையாளமாகும்.

பிரபுவே, எங்களுக்குரிய வெகுமானத்தை, உமக்கு ஏற்றவாறு, இம்மைக்கும் மறுமைக்குமான நன்மையாகவும், மேலுலகிலிருந்து கீழேயுள்ள பூமி வரை நீடிக்கும் எண்ணற்ற அருட்கொடைகளாகவும் மாற்றிடுவீராக.

மெய்யாகவே, எங்கள் பிரபுவான நீரே, எல்லாப் பொருள்களின் பிரபுவும் ஆவீர். உம்மைச் சார்ந்த பொருள்களுக்காக ஏங்கியவாறு; உமது கரங்களுக்குள்ளேயே நாங்கள் சரணடைகிறோம்.

#11336
- The Báb

 

பிரபுவே! மண்ணுலக மக்கள் யாவரும் உமது சமயம் என்னும் சுவர்க்கத்தில் நுழைந்திட உதவி புரிவீராக, அதனால், உமது நல்விருப்பத்தின் வரம்புகளுக்கப்பால் எப் படைப்புப் பொருளுமே எஞ்சியிராது.

நினைவிற்கு அப்பாற்பட்ட காலத்திலிருந்தே நீர் ஆற்றல் படைத்தவராகவும், நீர் விரும்புவன- வற்றிற்கெல்லாம் மேலானவராகவும் இருந்து வந்திருக்கின்றீர்.

#11337
- The Báb

 

கடவுளே, என் கடவுளே! அதிவுயரிய மலை உச்சியின் மீதுள்ள, ‘கிழக்கையோ மேற்கையோ சார்ந்திராத’[1] திருவிருட்சமாகிய, புனித விருட்சத்தினுள் தெய்வீக அன்பெனும் தீயை மூட்டியமைக்காக நீர் போற்றப்படுவீராக. அந்தத் தீயானது, அதன் சுடர் மேலுலக வான்படையை நோக்கி உயரும் வரை எரிந்துள்ளது; அதிலிருந்து அந்த மெய்ம்மைகள் வழிகாட்டல் எனும் ஒளியைப் பெற்று, இவ்வாறு உரக்கக் கூவின: ‘மெய்யாகவே சைனாய் மலைச்சரிவின் மீது ஒரு தீயை நாங்கள் கண்ணுற்றோம்.’

கடவுளே, என் கடவுளே! அதன் அனல்வேகம் உலகின் மீதுள்ள அனைத்தையும் இயங்கச் செய்யும் வரை, நாளுக்கு நாள் இத்தீயை அதிகரிப்பீராக; என் பிரபுவானவரே! ஒவ்வோர் இதயத்திலும் உமது அன்பெனும் ஒளியை மூட்டுவீராக; உமது அறிவெனும் ஆற்றலை மனிதர்களின் இதயங்களுக்குள் ஊதியருள்வீராக; உமது ஒருமை எனும் வசனங்களைக் கொண்டு அவர்களின் நெஞ்சங்களை மகிழ்வுறச் செய்வீராக. அவர்களின் கல்லறைகளுள் வசிப்போரை உயிர்பெறச் செய்வீராக; அகந்தையுடையோரை எச்சரிப்பீராக; மகிழ்ச்சியை உலகளாவியதாக ஆக்கிடுவீராக; உமது தெளிவான நீர்களைப் பொழிந்திடுவீராக; வெளிப்படையான பேரொளிகளின் கூட்டத்தில், ‘கற்பூர நீரூற்றில் திடப்படுத்தப்பட்ட’ கோப்பையை அனைவரோடும் பகிர்ந்துகொள்வீராக.

ெய்யாகவே, அளிப்பவரும், மன்னிப்பவரும், என்றும் வாரிவழங்குபவரும் நீரே ஆவீர். மெய்யாகவே கருணைமிக்கவரும், இரக்க-முடையவரும் நீரே ஆவீர்.

#11338
- `Abdu'l-Bahá

 

அவரே கடவுள்!

பிரபுவே, எனதாண்டவரே, என் அதி அன்புக்குரியவரே! உமது குரலைக் கேட்டு, உமது திருவாக் கிற்குச் செவிசாய்த்து, உமது அழைப்புக்குக் கவனம் செலுத்திய உமது ஊழியர்கள் இவர்களே. அவர்கள் உம்மில் நம்பிக்கை வைத்துள்ளனர், உமது அற்புதங்களைக் கண்ணுற்றுள்ளனர், உமது நிரூபணத்தை உண்மையென ஏற்று உமது ஆதாரத்திற்குச் சாட்சியமளித்துள்ளனர். அவர்கள் உமது வழிகளில் நடந்துள்ளனர், உமது வழிகாட்டலைப் பின்பற்றியுள்ளனர், உமது மர்மங்களைக் கண்டு கொண்டுள்ளனர், உமது திருநூல், உமது சுருள்சுவடியின் வசனங்கள், உமது மடல்கள், உமது நிருபங்கள் ஆகியவற்றின் இரகசியங்களைப் புரிந்து கொண்டுள்ளனர். உமது ஆடையின் நுனியினைப் பற்றி, உமது அங்கி என்னும் ஒளியினையும் மாட்சிமையையும் இறுகப் பிடித்துக் கொண்டுள்ளனர். அவர்களின் காலடிகள் உமது ஒப்பந்தத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன, அவர்களின் இதயங்கள் உமது சாசனத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. பிரபுவே! அவர்களின் உள்ளங்களில் உமது தெய்வீக ஈர்ப்புயெனும் ஒளியை ஏற்றி, அன்பு, புரிந்துகொள்ளல் என்னும் பறவையை அவர்களின் நெஞ்சங்களில் பாடிடச் செய்வீராக. அவர்களைச் சக்திமிகு அடையாளங்களாகவும் ஒளிரும் விருதுக்- ்கொடிகளாகவும் உமது திருவாக்கைப் போன்று பரிபூரணமாகவும் ஆக்கிடுவீராக. அவர்கள் வாயிலாக உமது சமயத்தை உயர்வடையச் செய்து உமது கொடிகளை அவிழ்த்துப் பறக்கவிட்டு உமது அற்புதங்களை விரிவாகப் பிரகடனம் செய்வீராக. அவர்களைக் கொண்டு உமது திருவாக்கினை வெற்றிபெறச் செய்து உமது அன்பர்களின் இடைகளை உறுதிப்படுத்துவீராக. உமது நாமத்தினைப் புகழ்ந்திட அவர்களின் நாவுகளைத் தளர்த்தி, அவர்களுக்கு உமது புனித விருப்பம், மகிழ்ச்சி ஆகியவற்றினை நிறுவிட அருட்தூண்டல் அளித்திடுவீராக. உமது புனிதமெனும் இராஜ்யத்தில் அவர்களின் முகங்களை ஒளிரச் செய்து, அவர்களை உமது சமயத்தின் வெற்றிக்காக எழச் செய்வதன் வழி, அவர்களின் மகிழ்வினைப் பூரணமாக்குவீராக.

பிரபுவே, நாங்கள் வலுக்குறைவானவர்கள், உமது புனிதத்தின் நறுமணங்களைப் பரப்பிட எங்களைப் பலப்படுத்துவீராக; ஏழைகள், உமது தெய்வீக ஒருமை யெனும் பொக்கிஷங்களிலிருந்து எங்களைச் செல்வந்தராக்குவீராக; ஆடையற்று இருக்கிறோம், எங்களுக்கு உமது வள்ளன்மை என்னும் அங்கியினை அணிவிப்பீராக; நாங்கள் பாவம் நிறைந்தவர்கள், உமது அருள், உமது சலுகை, உமது மன்னிப்பு ஆகியவற்றினால் எங்களின் பிழைகளைப் பொறுத்தருள்வீராக. மெய்யாகவே, நீரே தோழர் , உதவுபவர், கிருபையாளர், அருளாளர், வல்லவர், சக்தி மிக்கவர்.

திடமும், பற்றுறுதியும் உள்ளோர் மீது ஒளியுளெல்லாம் ஒளி இலயித்திடுமாக.

#11339
- `Abdu'l-Bahá

 

சேவை

கடவுளே, நாமங்கள் அனைத்தின் இறைவனே, விண்ணுலகங்களை உருவாக்கியவரே! எந்த நாமத்தின் வாயிலாக, உந்தன் வலிமையின் பகலூற்றானவரும், உந்தன் சக்தியின் உதயபீடமானவருமான அவர் அவதரிக்கச் செய்யப்பட்டரோ, எதன் மூலமாக ஒவ்வொரு திடப் பொருளும் வழிந்தோடிட செய்யப்பட்டதோ, மற்றும் உயிரற்ற ஒவ்வொரு சடலமும் மீண்டும் உயிர்பெறச் செய்யப்பட்டதோ; மற்றும், ஒவ்வோர் அசையும் ஆவி உறுதிச் செய்யப்பட்டதோ, அவரைக் கெஞ்சிக் கேட்கின்றேன் — உம்மைத்தவிர வேறெவருடனான எல்லாப் பற்றுக்களையும் என்னிலிருந்து பற்றறுத்திடவும், உமது சமயத்திற்குச் சேவையாற்றிடவும், உந்தன் மாட்சிமையின் சக்தியின் வாயிலாக, நீர் விரும்பியவற்றையே விரும்பிடவும், உமது விருப்பத்தின் நல்மகிழ்வுக்கு உகந்தவற்றைச் செய்திடவும், என்னை இயலச் செய்யுமாறு நான் மன்றாடுகிறேன்.

என் கடவுளே, உம்மைத் தவிர வேறெவரையும் நாடாதிருக்கும் அளவிற்கு மேலும் என்னைச் செல்வந்தராக்கிடக் கூடியவற்றை எனக்கே விதித்தருள உம்மிடம் கெஞ்சிக் கேட்கிறேன். என் கடவுளே, உம்மை நோக்கி என் முகத்தைத் திருப்பிடவும், என் கரங்கள் உமது கிருபை எனும் கயிற்றினைப் பற்றிக் கொள்ளவும் செய்திட்ட என்னை நீர் பார்க்கின்றீர். உந்தன் கருணையை என் மீது அனுப்பிடுவீராக; உம்மால் தேர்ந்தெடுக்கப் பட்டோருக்கென நீர் எழுதியுள்ளவற்றை எனக்கும் எழுதிடுவீராக. உமக்கு விருப்பமானவற்றைச் செய்வதற்குச் சக்திப்படைத்தவர் நீரே. என்றென்றும் மன்னிப்பவரும், சர்வ வல்லமை வாய்ந்தவரான கடவுள், உம்மைத் தவிர வேறிலர்.

#11340
- Bahá'u'lláh

 

என் கடவுளே! உமது அன்புக் கருணையின் நறுமணம் என்னை மெய்ம்மறக்கச் செய்தமைக்காகவும், உமது கருணை எனும் மென்மையான தென்றல் உந்தன் தாராளத் தயைகள் எனும் திசையை நோக்கி என்னை ஈர்த்திடச் செய்தமைக்காகவும், நான் உம்மைப் போற்றுகிறேன். என் பிரபுவே, அதனைப் பருகிட்ட ஒவ்வொருவரையும், உம்மைத் தவிர மற்றனைத்தின் மீதுமுள்ள பற்றுகளை அறுத்திட்ட, உமது உயிரினங்கள் அனைத்திலிருந்தும் பற்றறுத்தல் எனும் மண்டலத்தில் உயரப் பறக்கச் செய்திட்ட, அவர்களின் பார்வையை உமது அன்புத் திருவருளின் மீதும், உமது எண்ணற்ற பரிசுகளின் மீதும் ஊன்றச் செய்திட்ட உயிர் நீரை, உமது தயாளம் எனும் விரல்களிலிருந்து என்னைப் பருகச் செய்வீராக.

என் பிரபுவே, எல்லாச் சூழ்நிலைகளிலும், உமக்குச் சேவையாற்றிடவும், உமது திருவெளிப்பாடு, உமது திருவழகு எனும் வழிபடுவதற்குரிய சரணாலயத்தை நோக்கிச் சென்றிட என்னை ஆயத்தமாக்கிடுவீராக. இது உமக்கு மகிழ்வளிக்குமேயானால், உமது கிருபை எனும் புல்வெளியில் என்னை ஓர் இளம் மூலிகைச் செடியாக வளரச் செய்வீராக; அதனால் உமது விருப்பம் எனும் மென்மையான காற்றுகள், என் அசைவும், என் அசையாமையும் முற்றிலும் உம்மால் இயக்கப்படுபவையாக ஆகிட, என்னை உமது விருப்பத்திற்கு ஏற்றவாறு அசையவும் வளையவும் செய்திடக்கூடும்.

எவரது நாமத்தினால், மறைந்திருந்த இரகசியம் புலப்படுத்தப் பட்டதோ, நன்கு பாதுகாக்கப்பட்ட திருநாமம் வெளிப்படுத்தப்பட்டதோ, மற்றும் முத்திரையிட்டு மூடப்பட்ட கோப்பையின் முத்திரைகள் திறக்கப்பட்டு, அதனால் அதன் நறுமணம், கடந்தகால, எதிர்கால படைப்பு முழுவதன் மீதும் சிந்தப்பட்டதோ, அவர் நீரே ஆவீர். என் பிரபுவே, தாகமுற்றோர், உமது கிருபையின் உயர் நீர்களை அடைந்திட விரைந்துள்ளனர்; அந்த இழிவான உயிர்ப்பிராணி, உமது செல்வங்கள் எனும் சமுத்திரத்தின் அடியில் தன்னையே மூழ்கடித்திட ஏக்கங்கொண்டுள்ளான்.

உலகின் நேசராகியப் பிரபுவே, உம்மை அறிந்தோர் அனைவரின் ஆவலே, உமது பேரொளியினால் நான் சத்தியம் செய்கிறேன்!

உமது முன்னிலை எனும் பகல் நட்சத்திரம், அதன் பிரகாசத்தை உமது மக்களின் மீது பொழிந்துள்ள நாள்களில், உம்மிடமிருந்து துயர்மிகு என் பிரிவினால் நான் கடுமையாகப் பாதிப்புக்காளானேன். ஆதலால், உமது வதனத்தைக் கண்ணுற்றும், உமது உத்தரவினால், உந்தன் அரியாசனத்தின் அரசவைக்குள் நுழைந்தும், உமது கட்டளைக்கிணங்கி, உம்மை நேருக்கு நேர் சந்தித்தோருக்கும் விதிக்கப்பட்ட பிரதிபலன்களை எனக்கும் எழுதி வைத்திடுவீராக.

என் பிரபுவே, பூமியையும் விண்ணு- லகங்களையும் சூழ்ந்துள்ள உமது திருநாமத்தின் பிரகாசங்களின் பெயரால், உமது நிருபங்களில் நீர் ஆணையிட்டுள்ளவற்றுக்காக என் விருப்பத்தைச் சரணடையச் செய்திடவும், அதனால் உமது மாட்சிமை எனும் சக்தியின் மூலமாக, நீர் விரும்பியதைத் தவிர வேறெதனையும் என்னுள் நான் கண்டறியாது இருந்திடவும், என்னை இயலச் செய்யுமாறு நான் உம்மை மன்றாடுகிறேன்.

என் கடவுளே, தங்களால் தேர்ந்தெடுக்கப்-பட்டோருக்கு, நீர் அமைத்துள்ள வழியைத் தவிர வேறெந்த வழியையும் கண்டறிவதற்கு சக்தியற்று இருக்கையில், வேறெங்கே நான் திரும்புவது? உலகிலுள்ள எல்லா அணுக்களும் நீர்தாம் கடவுள் எனப் பறைசாற்றி, உம்மைத் தவிர வேறு கடவுள் இலர் என்றும் சாட்சியம் பகர்கின்றன. நித்திய காலம் முதல் நீர் விரும்பியதைச் செய்வதற்கும், நீர் நேசித்ததை விதிப்பதற்கும் சக்திப்படைத்தவராக நீரே இருந்துள்ளீர்.

என் கடவுளே, எல்லா நேரங்களிலும் உம்மை நோக்கிச் சென்றிட என்னால் இயலச் செய்வனவற்றை எனக்காக விதித்தருள்வீராக; உமது கிருபை எனும் கயிற்றினை இடைவிடாது பற்றிக்கொள்ளவும் இயலச் செய்வீராக; உந்தன் எழுதுகோலிலிருந்து வழிந்தோடி வரும் எதனையும் தேடிட என்னை இயலச் செய்வீராக. என் பிரபுவே, நான் வறியவனும், தனித்தொதுக்கப்பட்டவனும் ஆவேன்; நீரே சகலமும் வைத்திருப்பவர், அதி உயர்வானவர். ஆகையால், உமது கருணை எனும் அற்புதங்களின் வாயிலாக, என் மீது கருணைக் காட்டிடுவீராக; எப்பொருள்களைக் கொண்டு, உந்தன் ஒற்றுமையைக் கண்டுணர்ந்த உமது எல்லா உயிரினங்களின் இதயங்களையும், உந்தன் மீது முழுமையாக பக்திக்கொண்ட மக்களின் இதயங்களையும், நீர் மறுவுருவாக்கம் செய்கின்றீரோ, அப்பொருள்களை என் வாழ்வின் ஒவ்வொரு கணமும், என் மீது பொழிந்திடுவீராக.

மெய்யாகவே, சர்வ வல்லவரும், அதி மேலானவரும், எல்லாம் அறிந்தவரும், சர்வ விவேகியும் நீரே ஆவீர்.

#11341
- Bahá'u'lláh

 

சோதனைகளும் இன்னல்களும்

எவரது சோதனைகள் உமது அருகிலுள்ளோர் போன்றவர்களுக்குக் குணப்படுத்தும் மருந்தாகுமோ, எவரது வாள் உந்தன்பால் அன்பு கொண்டோர் அனைவரின் ஆர்வமிகு ஆவலாகுமோ, எவரது ஏவுகணை உம்மை நினைத்து வாடும் உள்ளங்களின் அதி விருப்பமாகுமோ, எவரது கட்டளை உம்மை அறிந்து அங்கீகரித்துள்ளோரின் ஒரே நம்பிக்கையாகுமோ, அவரே நீர்தான்! உமது தெய்வீக இனிமையின் சாட்சியாகவும், உமது வதனத்தின் மகிமையின் புகழொளியின் சாட்சியாகவும், உயர்விலுள்ள உமது இருப்பிடங்களிலிருந்து உமது அண்மையை நெருங்கிட உதவிடக் கூடியவற்றை எங்கள் மீது அனுப்பியருளுமாறு உம்மை நான் வேண்டிக் கொள்கிறேன். ஆகவே, எங்களின் கால்களை உமதுசமயத்தில் உறுதிப்படுத்தவும், உமது அறிவின் ஒளிர்வினால் எங்களின் இதயங்களைத் தெளிவடையவும், உமது நாமங்களின் பொலிவினால் எங்களின் நெஞ்சங்களை ஒளி பெறவும் செய்வீராக.

#11342
- Bahá'u'lláh

 

என் இறைவா, ஒளி உமக்கே உரியதாகுக! உமது பாதையில் கொடுந்துன்பங்கள் விளையா- விடில் உமது உண்மை அன்பர்கள் எவ்வாறு கண்டுகொள்ளப்படுவர்; மற்றும், உமதன்பின் பொருட்டுத் தாங்கிக் கொள்ளப்படும் சோதனைகளின்றி உமக்காக ஏங்குவோர் போன்றவர்களின் ஸ்தானம் எவ்வாறு வெளிப்படுத்தப்படும்? உமது வலிமையே எனக்குச் சான்று பகர்கின்றது! உம்மைப் போற்றுவோர் அனைவருக்கும் தோழர்களாய் இருப்பது அவர்கள் சிந்திய கண்ணீரேயாகும்; உம்மைத் தேடுபவருக்கு ஆறுதல் அளிப்பது அவர்கள் வெளிப்படுத்திடும் புலம்பலேயாகும்; மற்றும், உம்மைச் சந்திக்க விரைபவர்களின் உணவு அவர்களது உடைந்த உள்ளங்களின் துண்டுகளேயாகும்.

நான் உமது பாதையில் அனுபவிக்க நேர்ந்த மரணத்தின் கசப்பு, எனது சுவையுணர்வுக்கு எவ்வளவு இனிமையானது; எனது கணிப்பில், நான் உமது திருவாக்கினை மேன்மையுறச் செய்ததற்காக, எதிரிகளின் கணைகளை எதிர் கொண்டது எத்துணை மதிப்புடையதாகும்! என் இறைவா, உமது சமயத்தில் நீர் விரும்பியவற்றை எல்லாம் நான் ஒரே மடக்கில் உட்கொண்டிட அருள்வீராக; நீர், உமது அன்பில், கட்டளையிட்ட அனைத்தையும் என்பால் அனுப்பிடுவீராக. உமது ஒளியின் சாட்சியாக! நீர் விரும்பியதை மட்டுமே நான் விரும்புகின்றேன், நீர் எதனை நெஞ்சார நேசிக்கின்றீரோ அதனையே நானும் நெஞ்சார நேசிக்கின்றேன். உம்மிலேயே நான், எல்லா வேளைகளிலும் என் முழு நம்பியிருத்தலையும், நம்பிக்கையையும் வைத்துள்ளேன்.

என் இறைவா, இவ் வெளிப்பாட்டிற்கு உதவியாளராக, உமது நாமத்திற்கும் உமது இறைமைக்கும் தகுதி வாய்ந்தவராய்க் கருதப்படுவோரை எழுந்திடச் செய்யுமாறு நான் உம்மைக் கெஞ்சிக் கேட்கின்றேன்; அதனால் அவர்கள், உமது உயிரினங்களிடையே என்னை நினைவு கூர்ந்தும், உமது நிலவுலகில் உமது வெற்றிச் சின்னங்களை ஏற்றிடவும் கூடும்.

உமக்கு விருப்பமானதைச் செய்திடும் ஆற்றல் படைத்தவர் நீரே. ஆபத்தில் உதவுபவரும், சுயஜீவியுமான இறைவன் உம்மையன்றி வேறிலர்.

#11343
- Bahá'u'lláh

 

பிரபுவே, என் இறைவா, நீர் போற்றப்படுவீராக! அக நோக்குடைய ஒவ்வொரு மனிதரும் உமது இறைமையையும், உமது மாட்சிமையையும் ஒப்புக் கொள்வார். உய்த்துணரக் கூடிய ஒவ்வொரு கண்ணும் உமது மாட்சிமையின் மகத்துவத்-தையும், உமது வலிமையின் வலிந்தீர்க்கவல்ல சக்தியினையும் கண்ணுறுகின்றது. சோதனைகள் என்னும் காற்று உமது விருப்பத்தின்பால் முழு விசுவாசம் கொண்டோர் போன்றவர்களை உமது அரசவையினை அணுகுவதிலிருந்து பின்னடையச் செய்வதிலும், தடுப்பதிலும் தோல்வி அடைந்தே ஆகவேண்டும்.

உமது அன்பெனும் தீபம் அவர்கள் இதயங்களில் எரிந்து கொண்டிருக்கின்றது என்றும், உமது மென்மையெனும் ஒளி அவர்கள் நெஞ்சங்களில் ஏற்றப்பட்டுள்ளது என்றும், நான் நினைக்கின்றேன். துரதிர்ஷ்டம் உமது சமயத்திலிருந்து அவர்களைத் திசை மாறச் செய்யும் திறமையற்றது; மேலும், மாறிடும் அதிர்ஷ்ட சூழல்கள் அவர்களை உமது நல்விருப்பத்திலிருந்து என்றுமே வழி தவறிப் போகச் செய்திடா.

என் கடவுளே, அவர்கள் சாட்சியாகவும், உம்மிடமிருந்து பிரிவுற்றதால் அவர்களின் நெஞ்சங்கள் விடும் பெருமூச்சின் சாட்சியாகவும், ஆன்மாக்களை, நீர் விதித்து அருளியவற்றினால் பேணி வளர்க்குமாறும், உமது எதிரிகளின் பொல்லாங்கிலிருந்து அவர்களைப் பாது-காக்குமாறும், அவர்களுக்கு எவ்விதப் பயமும் ஏற்படாமலும், அவர்களுக்கு எவ்விதத் துன்பமும் நிகழாமலும் பார்த்துக் கொள்ளுமாறு உம்மை நான் வேண்டிக் கொள்கிறேன்.

#11344
- Bahá'u'lláh

 

கடவுளே, என் கடவுளே, உமது வள்ளன்மை-யாலும் தாராள குணத்தாலும் எனது துக்கத்தைப் போக்கி, உமது இறைமையினாலும், வலிமையினாலும் எனது துயரத்தை அகற்றிடுவீராக. என் இறைவா, எல்லாத் திசைகளிலிருந்தும் துன்பங்கள் என்னைச் சூழ்ந்துள்ள இவ் வேளையில், உந்தன்பால் முகத்தினைத் திருப்பிய நிலையில், என்னைக் காண்கின்றீர். உயிரினங்கள் அனைத்திற்கும் அதிபதியாகிய பிரபுவே, கண்ணுக்குப் புலனாகும், புலனாகா அனைத்துப் பொருள்களுக்கும் நிழல் கொடுப்பவரே; மனிதர்களின் உள்ளங்களையும் ஆன்மாக்களையும் ஆட்கொண்டிட்ட உமது நாமத்தாலும், உமது கருணைக் கடலின் அலைகளினாலும், உமது வள்ளன்மை என்னும் விடிவெள்ளியின் சுடரொளியினாலும், தங்களின் முகங்களை உமது திசையில் திருப்புவதிலிருந்து எந்தச் சக்தியும் தடுத்திடாத அன்பர்கள் எண்ணிக்கையில் என்னையும் ஒருவனாகச் சேர்த்துக் கொள்ளுமாறு நாமங்களுக் கெல்லாம் அதிபதியாகிய, விண்ணுலகையெல்லாம் ஆக்கியவருமாகிய, உம்மைக் கெஞ்சிக் கேட்கின்றேன்!

என் பிரபுவே, இந் நாளில் எனக்கு நேரிட்டுள்ளவற்றைப் பார்க்கின்றீர். என்னை உந்தன்பால் எழுந்து சேவை செய்யவும் உமது பண்புகளைப் பாராட்டவும் உதவக் கூடியவை எவையோ அவற்றை எனக்கு விதித்திடுமாறு உமது நாமங்களுக்குப் பகலூற்றானவரின் பெயரினாலும் உமது இயல்புகளுக்கு தோற்றிடமானவரின் பெயரினாலும் மன்றாடிக் கேட்கின்றேன். மெய்யாகவே, நீரே எல்லாம் வல்லவர், அதி சக்தியுடையவர், மனிதர் அனைவரின் பிரார்த்தனைகளுக்கும் பதிலளிக்கும் பழக்கமுடையவர்!

மேலும், இறுதியாக, என் காரியங்களை ஆசீர்வதித்து, என் கடன்களைத் தீர்த்து, எனது தேவைகளையும் பூர்த்தி செய்யுமாறு உமது வதனத்தின் ஒளியின் பெயரால் உம்மிடம் யாசிக்கின்றேன்.

எவரது சக்திக்கும் எவரது ஆட்சிக்கும் ஒவ்வொரு நாவும் சாட்சியம் அளித்துள்ளதோ, எவரது மாட்சிமையையும் இறைமையையும் புரிந்துகொள்ளும் ஆற்றல் படைத்த ஒவ்வோர் உள்ளமும் ஒப்புக்கொண்டுள்ளதோ அவர்தான் நீர். செவிமடுத்து, பதிலளிக்கச் சித்தமாயுள்ள இறைவன் உம்மையன்றி வேறிலர்.

#11345
- Bahá'u'lláh

 

என் கடவுளே, நீர் போற்றிப் புகழப்படுவீராக! உந்தன் நேசர்களின் பெருமூச்சினிலும், உம்மைக் கண்ணுற ஏங்குவோர் சிந்தியக் கண்ணீரின் பெயராலும், உமது நாளில் உந்தன் மென்கருணையை எனக்குத் தரமறுத்திடாதீர் என்றும், அல்லது உந்தன் வதனத்திலிருந்து பிரகாசித்திடும் ஒளியின் முன் உமது ஒருமைத்தன்மையைப் புகழ்ந்து பாடிடும் புறாவின் கீதங்களை நான் பெறாதிருக்கச் செய்திடாதீர் என்றும் நான் உம்மிடம் மன்றாடுகிறேன். என் கடவுளே! நான் ஆழ்ந்த துயரில் உள்ளேன்! சகலத்தையும் கொண்டுள்ளவர் எனும் உந்தன் பெயரை நான் இறுகப் பற்றிக்கொண்டுள்ளதைப் பாருங்கள். நிச்சயமாக நான் அழியக் கூடியவனே. அழியவியலாதவர் எனும் உந்தன் நாமத்தை நான் பற்றிக்கொண்டிருப்பதைப் பாருங்கள். ஆகையால், மென்மையானவரான, அதிவுயரியவரான நீர், என்னை, எனது தான் எனும் சுபாவத்திற்கும், தீய ஆசைகளின் ஈர்ப்புகளுக்கும் கைவிட்டு விடாதீர் என நான் உம்மிடம் மன்றாடுகிறேன். உந்தன் சக்தி எனும் கரத்தால் என் கரத்தினைப் பிடித்துக்கொள்வீராக, மேலும் எனது பகட்டுகள், பயனற்ற கற்பனைகள் ஆகிய ஆழங்களிலிருந்து என்னை விடுவித்து, நீர் வெறுக்கக்கூடிய அனைத்-திலிருந்தும் என்னைத் தூய்மைப்படுத்துவீராக.

ஆதலால், என்னை, உம்மிடம் முழுமையாக திரும்பிடவும், உம்மிடமே என் முழு நம்பிக்கையை வைத்திடவும், உம்மை என் புகலிடமாக நாடிடவும், உமது வதனத்தின்பால் விரைந்திடவும் செய்வீராக. மெய்யாகவே, உந்தன் வல்லமையின் சக்தியின் வாயிலாக நீர் விரும்பியதைச் செய்யவல்லவரும், உந்தன் விருப்பம் எனும் ஆற்றலின் வழியாக நீர் தேர்வுச்செய்யும் எதனையும் ஆணையிடுபவரும், நீரே ஆவீர். உமது கட்டளையின் இயக்கத்தை எவரொருவராலும் எதிர்த்திடவியலாது; உந்தன் நியமனத்தின் மார்க்கத்தைத் திசை திருப்பிட எவராலும் இயலாது. உண்மையாகவே, சர்வ வல்லவரும், சர்வ மகிமைமிக்கவரும், அதி வளமிக்கவரும் நீரே ஆவீர்.

#11346
- Bahá'u'lláh

 

இன்னல் தீர்ப்போன் இறைவனன்றி யாருளர்? சொல்: இறைவனே போற்றி! அவரே கடவுள்! யாவரும் அவர் ஊழியர், யாவரும் அவர் சொற் பணிவர்!

— பாப் பெருமானார்

என் கடவுளே, எல்லாத் திசைகளிலிருந்தும் என் மீது துன்பங்கள் பொழிந்துள்ளதையும், அத்துடன், அவற்றை நீக்கவோ, மாற்றவோ உம்மைத் தவிர வேறு எவருக்கும் இயலாது என்பதையும் நீர் நன்கு அறிவீர். உமது மண்ணுலக வாழ்க்கையில் ஓர் ஆன்மாவின் ஸ்தானத்தை, வலிந்தீர்க்கவல்ல உமது சக்தியினைக் கொண்டு மேன்மைப் படுத்த வேண்டுமென்றும், இவ்வுலகின் வீண் பகட்டுகளின்பால் அவ்வான்மாவின் மனம் சென்றிடாதிருக்க வேண்டுமென்றும் நீர் விரும்பினாலன்றி, எந்த ஓர் ஆன்மாவுக்கும் நீர் கொடுந்துன்பங்கள் விளைவிக்க மாட்டீர் என்று, உம் மீதுள்ள எனதன்பின் காரணமாக, நிச்சயமாகத் எனக்குத் தெரியும். உண்மையாகவே, எல்லாச் சூழல்களிலும் விண்ணுலகங்களிலும் மண்ணு-லகிலுமுள்ள அனைத்தையும் நான் உடைமையாகக் கொள்வதை விட, உந்தன் நினைவையே மேலாக விரும்பிடுவேன் என்பதை, நீர், நன்கு அறிந்திருக்கின்றீர்.

என் கடவுளே, உமக்குக் கீழ்ப்படிதலிலும் உமதன்பிலும் என் இதயத்தைப் பலப்படுத்தி, உமது பகைவர்களின் கூட்டத்தினிடமிருந்து நான் முற்றாக விலகியிருக்கும் நிலையினை, எனக்கு வழங்கிடுவீராக. மெய்யாகவே, உமது ஒளியின் மீது ஆணை இடுகின்றேன்; உம்மைத் தவிர வேறெதனையும் நான் விரும்வில்லை; உமது கருணையைத் தவிர வேறெதனையும் நான் விழைவதில்லை; உமது நீதியைத் தவிர வேறெதன்பாலும் நான் அச்சம் கொள்வதில்லை; என்னையும் மற்றும் நீர் நேசிப்போரையும் உமது விருப்பத்திற்கேற்ப மன்னித்தருளுமாறு உம்மிடம் வேண்டிக் கொள்கிறேன். மெய்யாகவே, நீரே எல்லாம் வல்லவர், வள்ளன்மை மிக்கவர்.

விண்ணுலகங்கள், மண்ணுலகம் ஆகியவற்றின் அதிபதியே, எல்லா மனிதர்களின் புகழ்ச்சிக்கும் மேலாக வரம்பின்றி உயர்த்தப்பட்டிருப்பவர் நீரே, உமது உண்மை ஊழியர்களின் மீது அமைதி நிலவுமாக; எல்லா உலகங்களின் பிரபுவாகிய இறைவனுக்கே ஒளி உரியதாகுக.

#11347
- The Báb

 

என் இறைவா, உமது வலிமை சாட்சியாக உம்மை மனப்பூர்வமாக வேண்டிக் கொள்கின்றேன்! சோதனைக் காலங்களில் என்னைத் தீங்கெதுவும் தாக்காதிருக்கச் செய்வீராக; கவனக் குறைவான வேளைகளில் உமது அருட்தூண்டுதலின் வாயிலாக, எனது காலடிகளை நேர்வழியில் நடத்திடுவீராக. நீரே கடவுள், நீர் விரும்பியதைச் செய்யும் ஆற்றல் படைத்தவர் நீரே. எவருமே உமது விருப்பத்தை எதிர்க்கவோ, உமது நோக்கத்தைத் தடுத்து நிறுத்தவோ இயலாது.

#11348
- The Báb

 

பிரபுவே! எல்லாத் துன்பங்களையும் நீக்குபவரும், எல்லா வேதனைகளையும் களைபவரும் நீரே! ஒவ்வொரு துயரையும் அகற்றுபவரும், ஒவ்வோர் அடிமையை விடுவிப்பவரும், ஒவ்வோர் ஆன்மாவை மீட்பவரும் நீரே ஆவீர். பிரபுவே! உந்தன் கருணையின் வாயிலாக விடுதலை வழங்கி, இரட்சிப்பு பெற்ற உந்தன் ஊழியர்களுள் ஒருவனாக என்னைக் கருதிடுவீராக.

#11349
- The Báb

 

தாய்மைப் பேறு

என் பிரபுவே! என் பிரபுவே! உமது இத்தாழ்மையான பணிப்பெண்ணின்பால், உம்மை மன்றாடிப் பணிவாக வேண்டிடும் உமது இவ்வடிமையின்பால், நீர் அருள் பொழிந்தமைக்காக நான் உம்மைப் போற்றுகின்றேன், உமக்கு நன்றி கூறுகின்றேன்; ஏனெனில், நீர், மெய்யாகவே அவளை உமது தெளிவான இராஜ்யத்தின்பால் வழிநடத்திச் சென்று, இவ்வநித்திய உலகில் அவளை உமது மேன்மையான அழைப்பினைச் செவிமடுக்கச் செய்து, சகலத்திலும் உமது வெற்றியான அரசாட்சியின் தோற்றத்தை நிரூபித்திடும் உமது அடையாளங்களைக் கண்ணுறவும் செய்துள்ளீர்.

என் பிரபுவே, என் கருவிலிருக்கும் அதனை உமக்கே அர்ப்பணிக்கின்றேன். ஆகவே, அதனை, நீர், உமது இராஜ்யத்தில் ஒரு போற்றுதலுக்குரிய குழந்தையாகவும், அது, உமது தயை, தாராளத்தன்மை ஆகியவற்றினால் அதிர்ஷ்ட-சாலியாகி, உமது கல்வி என்னும் பொறுப்பின்கீழ் விருத்தியடைந்து வளர்ந்திடுமாக.

மெய்யாகவே, நீரே அருள் மிகுந்தவர்! மெய்யாகவே, நீரே பெரும் தயையின் பிரபுவானவர்.

#11400
- `Abdu'l-Bahá

 

திருமணம்

“பஹாய் திருமணம் என்பது இரு தரப்பினரிடையே உள்ள இணக்கமும் மனப்பூர்வமான பாசமும் ஆகும். இருப்பினும், அவர்கள் மிகுந்த கவனத்தை கையாண்டு ஒருவர் மற்றவரின் குணத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும். இந்த நித்திய பந்தமானது ஓர் உறுதியான ஒப்பந்தத்தினால் பாதுகாக்கப்பட வேண்டும்; இதன் நோக்கமானது, நல்லிணக்கம், தோழமை, ஒற்றுமை, மற்றும் நித்திய வாழ்வை அடைவதுமே ஆகும்.”

— அப்துல்-பஹா

கித்தாப்-இ-அக்டாஸில் குறிப்பிடப்பட்டுள்ள திருமண பிரமாணம் இதுவே:

“மெய்யாகவே, நாமெல்லாரும் ஆண்டவனின் விருப்பத்திற்கு அடிபணிந்திடுவோம்.”

இவ் வசனத்தை மணமகனும் மணமகளும் உள்ளூர் ஆன்மீகச்சபையின் ஏற்புடைய குறைந்தபட்சம் இரு சாட்சிகள் முன்னிலையில் தனித்தனியாகக் கூற வேண்டும்.

வழங்குபவரும் வள்ளன்மை மிக்கவரும் அவரே!

தொன்மையான, என்றும் நிலையான, மாறாத, நித்தியமான இறைவன் போற்றப்படுவாராக! ஏகனானவரும், தனியரானவரும், கட்டுப்படுத்தப்-படாதவரும், மேன்மையானவரும் தாமே என்பதற்கு அவரே தமது மெய்ம்மையில் சாட்சியம் கூறுகின்றார். அவரின் ஒருமைத் தன்மையை ஏற்று, அவரின் ஏகத்துவத்தை ஒப்புக்கொண்டு, அவரையன்றிக் கடவுள் வேறிலர் என்பதற்கு மெய்யாகவே நாங்கள் சாட்சியம் கூறுகின்றோம். தம்மைத் தவிர மற்றவரின் குறிப்பிடுதல்- களிலிருந்தும் தம்மைத் தவிர வேறு வருணனைகளிலிருந்தும் புனிதமாக்கப்பட்டு, அணுகவியலா உச்சங்களில், தமது உயர்வின் சிகரங்களில், என்றுமே அவர் வாழ்ந்து வந்துள்ளார்.

மனிதர்களுக்கு அருளையும் அன்புதவியையும் வழங்கிடவும் உலகினை ஒழுங்குபடுத்திடவும் அவர் ஆவலுற்றபோது அனுஷ்டானங்களை வெளிப்படுத்தி, சட்டங்களையும் உருவாக்கினார்; அவற்றுள் திருமணத்திற்கான சட்டத்தினையும் நிறுவினார், அதனை நல் வாழ்விற்கும் விமோசனத்திற்கும் ஓர் அரணாக்கி, அதனைப் புனிதம் என்னும் வானிலிருந்து நமக்காக அனுப்பப்பட்ட அவரது அதி புனித நூலில் விதித்துள்ளார். அவர் மொழிகின்றார்; அவரது புகழ் உயர்வானதாகும்: “மனிதர்களே, திருமணம் செய்து கொள்வீராக, அதனால் எமது ஊழியர்கள் மத்தியில் எந்தன் நாமத்தை நினைவு கூர்ந்திடும் ஒருவர் உங்களிடமிருந்து தோன்றிடக் கூடும்; இது உங்களுக்கான எமது கட்டளைகளில் ஒன்றாகும்; உங்களுக்கு உதவியாக அதற்குக் கீழ்ப்படியுங்கள்.”

#11350
- Bahá'u'lláh

 

அவரே கடவுள்! ஒப்பற்றப் பிரபுவே! உமது சர்வ ஞானத்தின் வாயிலாக மனிதர்கள் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என விதித்துள்ளீர். அதனால் இப்படைப்புலகில் மனித இனம் வழிவழி தோன்ற வேண்டுமென்றும், அதனால், உலகம் உள்ளவரை அவர்கள் உமது ஒருமைத் தன்மை என்னும் திருவாயிலில் தாழ்மையுடனும் வழிபாட்டுடனும், மரியாதை-யுடனும் வணக்கத்துடனும், பயபக்தியுடனும் போற்றுதலுடனும் உந்தன் சேவையில் ஈடுபடுவராக. “எம்மை வணங்குவதற்காக அல்லாது யாம் வேறெதற்காகவும் ஆவிகளையும் மனிதர்களையும் படைத்தோமில்லை.” ஆகவே உமது அன்பு என்னும் கூட்டினில் இவ்விரு அன்புப் பறவைகளையும் உமது கருணை என்னும் சுவர்க்கத்தில் ஒன்றிணைத்துத் தொடர்ச்சியாக உமது அருளினை ஈர்த்திட வழிவகுப்பீராக; அதனால் இவ்விரு அன்புக் கடல்களின் ஒன்றிணைப்பின் வழியாக இளகிய உணர்ச்சியலைகள் தோன்றி தூய்மையும் நன்மையும் மிகுந்த முத்துக்களை வாழ்க்கை என்னும் கரையில் சேர்த்திடுமாக. அவர்களுக்கிடையே கடந்து செல்லக்கூடாத தடை ஒன்று இருக்கின்றது. உனது பிரபுவின் அருட்கொடைகளில் எதை நீ மறுப்பாய்? ஒவ்வொன்றிலிருந்தும் அவர் உயர்வான முத்துக்களையும் உயர்வு குறைந்த முத்துக்களையும் தோற்றுவிக்கின்றார்.

அன்புள்ள பிரபுவே! இத்திருமணத்திலிருந்து பவளமும், முத்தும் தோன்றிடச் செய்வீராக. மெய்யாகவே, நீரே சர்வ சக்தி வாய்ந்தவர், அதி உயர்வானவர், என்றென்றும் மன்னித்தருள்பவர்!

#11351
- `Abdu'l-Bahá

 

என் இறைவா, ஒளி உமக்கே உரியதாகட்டும்! மெய்யாகவே, இந்த உமது ஊழியனும் உமது பணிப்பெண்ணும் உமது கருணை என்னும் நிழலின் கீழ் கூடி உமது தயை, தாராளத் தன்மை ஆகியவற்றினால் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளனர். பிரபுவே! உமது உலகிலும், உமது இராஜ்யத்திலும் அவர்களுக்கு உதவி புரிந்து உமது வள்ளன்மை, அருள் ஆகியவற்றினால் அவர்கள்பால் எல்லா நன்மைகளையும் அருள்வீராக. பிரபுவே! உந்தன் பணியில் அவர்களை உறுதிப்படுத்தி உமது ஊழியத்தில் அவர்களுக்கு உதவி புரிவீராக. உமது உலகில், உமது நாமங்களின் அடையாளங்களாக அவர்களை ஆகச் செய்து, உமது எல்லையற்ற அருளினாலும் வள்ளன்மையினாலும் அவர்களை இவ்வுலகிலும் வருவுலகிலும் பாதுகாப்பீராக. பிரபுவே! அவர்கள் உமது கருணை என்னும் இராஜ்யத்தின்பால் தாழ்வணங்கி உமது ஒருமை என்னும் இராஜ்யத்தின்பால் வணங்கி வேண்டுகின்றனர். மெய்யாகவே, இவர்கள் உமது கட்டளைக்கேற்ப திருமணம் செய்து-கொண்டுள்ளனர். இறுதிக்காலம் வரை அவர்களை, ஒற்றுமைக்கும் அமைதிக்கும் அடையாளமாகச் செய்வீராக.

மெய்யாகவே, நீரே சர்வசக்தி வாய்ந்தவர், எங்கும் வியாபித்துள்ளவர், எல்லாம் வல்லவர்!

#11352
- `Abdu'l-Bahá

 

என் பிரபுவே! என் பிரபுவே! இவ்விரு பிரகாசமிகு வட்டங்களும் உமதன்பில் திருமணம் புரிந்துள்ளனர்; உமது புனித நுழைவாயிலில் ஊழியம் செய்திட இணங்கியுள்ளனர், உமது சமயத்திற்குத் தொண்டு செய்திட ஒன்றிணைந்-துள்ளனர். என் பிரபுவே, கருணைமயமானவரே, இத்திருமணத்தை உமது அளப்பரிய அருள் இழைந்தோடும் ஒளிவிளக்குகளாகவும், உமது கொடைகளின் பிரகாசமிகுக் கதிர்களாகவும் ஆக்கிடுவீராக, அன்புதவி புரிபவரே, என்றும் வழங்குபவரே, அதன்வழி உம்மிடமிருந்து அருள் என்னும் மேகங்களாகப் பொழிந்திடும் அன்பளிப்புகளின் வழி இம்மேன்மையான விருட்சத்திலிருந்து பசுமையும் செழிப்பும் மிக்கக் கிளைகள் துளிர்த்திடக் கூடும்.

மெய்யாகவே தாராளத் தன்மையுடையவர் நீரே, மெய்யாகவே நீரே எல்லாம் வல்லவர், மெய்யாகவே இரங்குபவரும் கருணை மயமானவரும் நீரே ஆவீர்!

#11353
- `Abdu'l-Bahá

 

நீண்ட குணப்படுத்தல் பிரார்த்தனை

அவரே குணப்படுத்துபவர், போதுமானவர், உதவுபவர், சகலத்தையும் மன்னிப்பவர், கருணை மயமானவர்.

மேன்மையானவரே, நம்பிக்கைக்குரியவரே, மகிமை பொருந்தியவரே, உம்மை வேண்டிக் கொள்கின்றேன்! நிறைவளிப்பவரும் நீரே, குணப்படுத்துபவரும் நீரே, நிலைப்பவரும் நீரே, நிலையானவரும் நீரே.

மன்னரே, உயர்வடையச் செய்பவரே, தீர்ப்பளிப்பவரே, உம்மை வேண்டிக் கொள்கின்றேன்!

நிறைவளிப்பவரும் நீரே, குணப்படுத்துபவரும் நீரே, நிலைப்பவரும் நீரே, நிலையானவரும் நீரே.

ஒப்பற்றவரே, நித்தியமானவரே, ஏகநாயகரே, உம்மை வேண்டிக் கொள்கின்றேன்!

நிறைவளிப்பவரும் நீரே, குணப்படுத்துபவரும் நீரே, நிலைப்பவரும் நீரே, நிலையானவரும் நீரே.

அதி புகழப்படுபவரே, புனிதமானவரே, உதவுபவரே, உம்மை வேண்டிக் கொள்கின்றேன்!

நிறைவளிப்பவரும் நீரே, குணப்படுத்துபவரும் நீரே, நிலைப்பவரும் நீரே, நிலையானவரும் நீரே.

சர்வஞானியே, அதி விவேகமானவரே, அதி மகத்தானவரே, உம்மை வேண்டிக் கொள்கின்றேன்! நிறைவளிப்பவரும் நீரே, குணப்படுத்துபவரும் நீரே, நிலைப் பவரும் நீரே, நிலையானவரும் நீரே.

கருணை வள்ளலே, மாட்சிமை பொருந்தியவரே, அருள்பாலிப்பவரே, உம்மை வேண்டிக் கொள்கின்றேன்! நிறைவளிப்பவரும் நீரே, குணப்படுத்துபவரும் நீரே, நிலைப்பவரும் நீரே, நிலையானவரும் நீரே.

அன்பரே, சீராட்டப்படுபவரே, பேரானந்த-மானவரே, உம்மை வேண்டிக் கொள்கின்றேன்!

நிறைவளிப்பவரும் நீரே, குணப்படுத்துபவரும் நீரே, நிலைப்பவரும் நீரே, நிலையானவரும் நீரே.

அதி வல்லவரே, பராமரிப்பவரே, ஆற்றல் மிக்கவரே, உம்மை வேண்டிக் கொள்கின்றேன்!

நிறைவளிப்பவரும் நீரே, குணப்படுத்துபவரும் நீரே, நிலைப்பவரும் நீரே, நிலையானவரும் நீரே.

ஆள்பவரே, சுயஜீவியானவரே, எல்லாம் அறிந்தவரே, உம்மை வேண்டிக் கொள்கின்றேன்!

நிறைவளிப்பவரும் நீரே, குணப்படுத்துபவரும் நீரே, நிலைப்பவரும் நீரே, நிலையானவரும் நீரே.

ஆவியானவரே, ஒளிமயமானவரே, அதி வெளிப்படை யானவரே, உம்மை வேண்டிக் கொள்கின்றேன்! நிறைவளிப்பவரும் நீரே, குணப்படுத்துபவரும் நீரே, நிலைப்பவரும் நீரே, நிலையானவரும் நீரே.

அனைவராலும் விஜயம் செய்யப்படுபவரே, யாவருக்கும் தெரிந்தவரே, எல்லாருக்கும் மறைவாய் உள்ளவரே, உம்மை வேண்டிக் கொள்கின்றேன்!

நிறைவளிப்பவரும் நீரே, குணப்படுத்துபவரும் நீரே, நிலைப்பவரும் நீரே, நிலையானவரும் நீரே.

மறைக்கப்பட்டுள்ளவரே, வெற்றியாளரே, அருள்பவரே, உம்மை வேண்டிக் கொள்கின்றேன்!

நிறைவளிப்பவரும் நீரே, குணப்படுத்துபவரும் நீரே, நிலைப்பவரும் நீரே, நிலையானவரும் நீரே.

எல்லாம் வல்லவரே, உதவியளிப்பவரே, மறைப்பவரே, உம்மை வேண்டிக் கொள்கின்றேன்!

நிறைவளிப்பவரும் நீரே, குணப்படுத்துபவரும் நீரே, நிலைப்பவரும் நீரே, நிலையானவரும் நீரே.

அமைப்பவரே, நிறைவளிப்பவரே, வேரறுப்பவரே, உம்மை வேண்டிக் கொள்கின்றேன்!

நிறைவளிப்பவரும் நீரே, குணப்படுத்துபவரும் நீரே, நிலைப்பவரும் நீரே, நிலையானவரும் நீரே.

உதிப்பவரே,ஒன்றுசேர்ப்பவரே,மேன்மைப்படுத்துபவரே, உம்மை வேண்டிக் கொள்கின்றேன்! நிறைவளிப்பவரும் நீரே, குணப்படுத்துபவரும் நீரே, நிலைப்பவரும் நீரே, நிலையானவரும் நீரே.

பூரணமாக்குபவரே, தளைகளற்றவரே, வள்ளன்மை மிக்கவரே, உம்மை வேண்டிக் கொள்கின்றேன்! நிறைவளிப்பவரும் நீரே, குணப்படுத்துபவரும் நீரே, நிலைப் பவரும் நீரே, நிலையானவரும் நீரே.

தயாளரே, மறுப்பவரே, படைப்பவரே, உம்மை வேண்டிக் கொள்கின்றேன்!

நிறைவளிப்பவரும் நீரே, குணப்படுத்துபவரும் நீரே, நிலைப்பவரும் நீரே, நிலையானவரும் நீரே.

அதி விழுமியவரே, அழகரே, வள்ளன்மை மிக்கவரே, உம்மை வேண்டிக் கொள்கின்றேன்!

நிறைவளிப்பவரும் நீரே, குணப்படுத்துபவரும் நீரே, நிலைப்பவரும் நீரே, நிலையானவரும் நீரே.

நியாயசீலரே, கிருபையாளரே, தாராளமானவரே, உம்மை வேண்டிக் கொள்கின்றேன்!

நிறைவளிப்பவரும் நீரே, குணப்படுத்துபவரும் நீரே, நிலைப்பவரும் நீரே, நிலையானவரும் நீரே.

நிர்ப்பந்திக்கவல்லவரே, என்றும் நிலையானவரே, சர்வமும் அறிந்தவரே, உம்மை வேண்டிக் கொள்கின்றேன்! நிறைவளிப்பவரும் நீரே, குணப்படுத்துபவரும் நீரே, நிலைப்பவரும் நீரே, நிலையானவரும் நீரே.

அற்புதமானவரே, நாள்களில் புராதனமானவரே, பெருமிதமானவரே, உம்மை வேண்டிக் கொள்கின்றேன்! நிறைவளிப்பவரும் நீரே, குணப்படுத்துபவரும் நீரே, நிலைப்பவரும் நீரே, நிலையானவரும் நீரே.

பாதுகாப்பு மிக்கவரே, ஆனந்தத்தின் அதிபதியே, விரும்பப்படுபவரே, உம்மை வேண்டிக் கொள்கின்றேன்! நிறைவளிப்பவரும் நீரே, குணப்படுத்துபவரும் நீரே, நிலைப்பவரும் நீரே, நிலையானவரும் நீரே.

அனைவரிடத்திலும் கருணை கொள்பவரே, எல்லாரிடத்திலும் இரக்கம் காட்டுபவரே, உதாரகுணம் படைத்தவரே, உம்மை வேண்டிக் கொள்கின்றேன்!

நிறைவளிப்பவரும் நீரே, குணப்படுத்துபவரும் நீரே, நிலைப்பவரும் நீரே, நிலையானவரும் நீரே.

அனைவருக்கும் சுவர்க்கமே, யாவருக்கும் அடைக்கலமே , யாவற்றையும் இரட்சிப்பவரே, உம்மை வேண்டிக் கொள்கின்றேன்!

நிறைவளிப்பவரும் நீரே, குணப்படுத்துபவரும் நீரே, நிலைப்பவரும் நீரே, நிலையானவரும் நீரே.

எல்லாரையும் பரிபாலிப்பவரே, யாவராலும் வேண்டப்படுபவரே, உயிர்ப்பிப்பவரே, உம்மை வேண்டிக் கொள்கின்றேன்!

நிறைவளிப்பவரும் நீரே, குணப்படுத்துபவரும் நீரே, நிலைப்பவரும் நீரே, நிலையானவரும் நீரே.

திறப்பவரே, அழிப்பவரே, அதி கிருபையாளரே, உம்மை வேண்டிக் கொள்கின்றேன்!

நிறைவளிப்பவரும் நீரே, குணப்படுத்துபவரும் நீரே, நிலைப்பவரும் நீரே, நிலையானவரும் நீரே.

எனதான்மாவே, எனதன்பரே, எந்தன் நம்பிக்கையே, உம்மை வேண்டிக் கொள்கின்றேன்!

நிறைவளிப்பவரும் நீரே, குணப்படுத்துபவரும் நீரே, நிலைப்பவரும் நீரே, நிலையானவரும் நீரே.

தாகந் தணிப்பவரே, அதிவுயர் பிரபுவே, அதி மதிப்பார்ந்தவரே, உம்மை வேண்டிக் கொள்கின்றேன்! நிறைவளிப்பவரும் நீரே, குணப்படுத்துபவரும் நீரே, நிலைப்பவரும் நீரே, நிலையானவரும் நீரே.

மாபெரும் நினைவே, அதி உன்னத நாமமே, அதி புராதன வழியே, உம்மை வேண்டிக் கொள்கின்றேன்! நிறைவளிப்பவரும் நீரே, குணப்படுத்துபவரும் நீரே, நிலைப்பவரும் நீரே, நிலையானவரும் நீரே.

அதி புகழ்ச்சிக்குரியவரே, அதி புனிதரே, அதி தூயவரே, உம்மை வேண்டிக் கொள்கின்றேன்!

நிறைவளிப்பவரும் நீரே, குணப்படுத்துபவரும் நீரே, நிலைப்பவரும் நீரே, நிலையானவரும் நீரே.

விடுவிப்பவரே, உபதேசிப்பவரே, மீட்பவரே, உம்மை வேண்டிக் கொள்கின்றேன்!

நிறைவளிப்பவரும் நீரே, குணப்படுத்துபவரும் நீரே, நிலைப்பவரும் நீரே, நிலையானவரும் நீரே.

நேசரே, மருத்துவரே, வசப்படுத்துபவரே, உம்மை வேண்டிக் கொள்கின்றேன்!

நிறைவளிப்பவரும் நீரே, குணப்படுத்துபவரும் நீரே, நிலைப்பவரும் நீரே, நிலையானவரும் நீரே.

ஜோதியே, அழகே, கொடை வள்ளலே, உம்மை வேண்டிக் கொள்கின்றேன்!

நிறைவளிப்பவரும் நீரே, குணப்படுத்துபவரும் நீரே, நிலைப்பவரும் நீரே, நிலையானவரும் நீரே.

முழு நம்பிக்கைக்குரியவரே, அதி அன்புக்குரியவரே, உதயத்தின் பிரபுவே, உம்மை வேண்டிக் கொள்கின்றேன்! நிறைவளிப்பவரும் நீரே, குணப்படுத்துபவரும் நீரே, நிலைப்பவரும் நீரே, நிலையானவரும் நீரே.

தூண்டுபவரே, ஒளிர வைப்பவரே, மகிழ்வூட்டுபவரே, உம்மை வேண்டிக் கொள்கின்றேன்!

நிறைவளிப்பவரும் நீரே, குணப்படுத்துபவரும் நீரே, நிலைப்பவரும் நீரே, நிலையானவரும் நீரே.

கொடைகளுக்கு அதிபதியே, பேரிரக்க-முடையவரே, அதிபெரும் கருணையாளரே, உம்மை வேண்டிக் கொள்கின்றேன்!

நிறைவளிப்பவரும் நீரே, குணப்படுத்துபவரும் நீரே, நிலைப்பவரும் நீரே, நிலையானவரும் நீரே.

நிலையானவரே, உயிரூட்டுபவரே, உயிரினத்திற் கெல்லாம் பிறப்பிடமே, உம்மை வேண்டிக் கொள்கின்றேன்! நிறைவளிப்பவரும் நீரே, குணப்படுத்துபவரும் நீரே, நிலைப்பவரும் நீரே, நிலையானவரும் நீரே.

அனைத்துப் பொருளையும் ஊடுருபவரே, சகலத்தையும் கண்ணுறும் கடவுளே, திருவாக்கின் பிரபுவே, உம்மை வேண்டிக் கொள்கின்றேன்!

நிறைவளிப்பவரும் நீரே, குணப்படுத்துபவரும் நீரே, நிலைப்பவரும் நீரே, நிலையானவரும் நீரே.

தெளிவாய்த் தோன்றினும் மறைபொருளாய் இருப்பவரே, கண்களுக்குப் புலப்படாதிருப்பினும் பிரசித்தமானவரே, யாவராலும் தேடப்படும் பார்வையாளரே, உம்மை வேண்டிக் கொள்கின்றேன்!

நிறைவளிப்பவரும் நீரே, குணப்படுத்துபவரும் நீரே, நிலைப்பவரும் நீரே, நிலையானவரும் நீரே.

அன்பர்களைக் கொல்பவரே, கொடியவர்களுக்கருளும் ஆண்டவனே, உம்மை வேண்டிக் கொள்கின்றேன்!

நிறைவளிப்பவரே, உம்மை வேண்டிக் கொள்கின்றேன்! நிறைவளிப்பவரே!

குணப்படுத்துபவரே, உம்மை வேண்டிக் கொள்கின்றேன்! குணப்படுத்துபவரே!

நிலைப்பவரே, உம்மை வேண்டிக் கொள்கின்றேன்! நிலைப்பவரே!

என்றும் நிலைப்பவரும் நீரே, நிலையானவரும் நீரே!

எதன் மூலம் உமது வள்ளன்மை, கிருபை என்னும் வாசல்கள் அகலத் திறக்கப்பட்டனவோ, எதன் மூலம் நித்தியமெனும் அரியணையின்மீது உமது புனிதமெனும் திருக்கோவில் நிறுவப்பட்டதோ, அத் தாராளத்தன்மையின் சாட்சியாகவும்; எதன் மூலம், நீர், படைப்புப் பொருள்கள் அனைத்தையும் உமது அருட்கொடைகள், அருள்பாலிப்புகள் என்னும் பீடத்தின்பால் அழைத்தீரோ, அந்த உமது கருணையின் சாட்சியாகவும்; எதன் மூலம் உமது மாட்சிமையும், பேரழகும் வெளிப்படுத்தப்-பட்டிருந்தனவோ, உமது அரசின் வலுவும் தெளிவாக்கப்பட்டிருந்ததோ, அவ்வதிகாலை வேளையில், நீர், உமது “ஆம்!” என்னும் வார்த்தையைக் கொண்டு, விண்ணுலகிலும் மண்ணுலகிலும் உள்ளோர் அனைவரின் சார்பாகவும் பதிலளித்தீரோ, அதன் சாட்சியாக, நான் உம்மைக் கெஞ்சுகின்றேன். மீண்டும், இவ்வதியழகான நாமங்களின் சாட்சியாகவும், இவ்வதி மேன்மையான, அதி விழுமிய பண்புகள் சாட்சியாகவும், உமது அதி உயர்வான நினைவின் சாட்சியாகவும், உமது தூய, கறையற்ற அழகின் சாட்சியாகவும், உமது அதி மறைவான மண்டபத்திலுள்ள மறைந்திருக்கும் ஒளியின் சாட்சியாகவும், ஒவ்வொரு காலையிலும், மாலையிலும் பெருந் துன்பம் என்னும் ஆடையினால் போர்த்தப்பட்டிருந்த உமது நாமத்தின் சாட்சியாகவும், இவ்வாசீர்வதிக்கப்பட்ட நிருபத்தினை வைத்திருப்போரையும், அதனை ஓதுவோரையும், அதனைக் கண்ணுற நேர்ந்-தோரையும், அது வைக்கப்பட்டுள்ள இல்லத்தைத் தாண்டிச் செல்வோரையும், பாதுகாக்குமாறு உம்மைக் கெஞ்சிக் கேட்கிறேன். ஆகவே, அதன் மூலம், நீர், ஒவ்வொரு நோயாளியையும் பிணியுற்றோனையும், வறியோனையும், எல்லாச் சோதனைகளிலிருந்தும், வேதனையிலிருந்தும், ஒவ்வொரு வெறுக்கத்தக்கப் பிணியிலிருந்தும், துயரிலிருந்தும், குணப்படுத்தி, அதன்வழி, உமது வழிகாட்டுதல் என்னும் பாதைகளிலும், உமது மன்னிப்பு, அருள் என்னும் வழிகளிலும் பிரவேசிக்க விரும்புகின்றவர்களுக்கு வழிகாட்டுவீராக.

நீர், மெய்யாகவே, ஆற்றல் மிக்கவர், சகலத்திலும் சுயஜீவியானவர், குணப்படுத்துபவர், பாதுகாப்பவர், அளிப்பவர், இரக்கமுள்ளவர், அதி தயாள குணமுடையவர், அதி கருணையாளர்.

#11309
- Bahá'u'lláh

 

நள்ளிரவு

உண்மையைத் தேடுபவரே! கடவுள் உமது கண்ணைத் திறந்திட நீர் விரும்பினால், பின்வருமாறு கூறி, கடவுளிடம் இறைஞ்சி, நள்ளிரவில் அவருடன் தொடர்பு கொள்ள வேண்டும்.

பிரபுவே, நான் உமது ஒருமைத் தன்மை என்னும் இராஜ்யத்தின்பால் எனது முகத்தினைத் திருப்பி, உமது கருணைக் கடலில் மூழ்கியுள்ளேன். பிரபுவே, இருள் மிகுந்த இவ்விரவில் உமது தீபங்களைக் காண்பதன் வழி எனது பார்வையை ஒளிரச் செய்வீராக. அற்புதமிக்க இக்காலத்தில், உமது அன்பெனும் பழரசத்தால் என்னை மகிழ்வுறச் செய்வீராக. பிரபுவே, என்னை உமது அழைப்பினைச் செவிமடுக்கச் செய்வீராக. உமது சுவர்க்கத்தின் கதவுகளை எனது கண்முன் திறப்பீராக; அதனால் நான் உமது ஒளியைக் கண்ணுற்று உமது பேரழகின்பால் ஈர்க்கப்படக் கூடும்.

மெய்யாகவே,நீரே வழங்குபவர், தயாளமானவர்், கருணைமிக்கவர், மன்னித்தருள்பவர்.

#11262
- `Abdu'l-Bahá

 

நிதி வழங்குதல்

குறிப்பு: இறைவனின் அன்பர்கள் யாவரும்... அவர்களது அன்பளிப்பு எத்துணை எளிமையானதாய் இருப்பினும், (அவர்கள்) முடிந்தளவு நிதி அளிக்க வேண்டும். கடவுள், எந்த ஓர் ஆன்மாவின் மீதும் அதன் தாங்கிடும் சக்திக்கு மேலாக பளுவைச் சுமத்தமாட்டார். இந் நன்கொடைகள் எல்லா நிலையங்- களிலிருந்தும், எல்லா நம்பிக்கையாளர்களிடம் இருந்தும் வர வேண்டும்.. .. .. இறைவனின் நேசர்களே! இந் நன்கொடைகளுக்கு ஈடாக உங்களின் விவசாயம், உங்களின் தொழில், உங்கள் வியாபாரம் ஆகிய யாவும் பன்மடங்கு நன் பரிசுகளாலும் அருள்பாலிப்புகளாலும் அதிகரிப்புகளினாலும் ஆசீர்வதிக்கப்-படும் என்பதை நீங்கள் உறுதியாக நம்புவீராக; எவரொருவர், ஒரு நற்செயல் புரிய முன்வருகின்றாரோ அவர் பத்து மடங்காகச் சன்மானம் பெறுவார். அவரது பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவழிப்பவர்களை ஜீவனுள்ள பிரபுவானவர் மிகுதியாக உறுதிப்படுத்துவார் என்பதில் ஐயமில்லை.

கடவுளே, என் கடவுளே! உமது உண்மை அன்பர்களின் நெற்றிகளை ஒளிரச் செய்வீராக; நிச்சயமான வெற்றி என்னும் வான்படைகளைக் கொண்டு அவர்களுக்கு ஆதரவளிப்பீராக. உமது நேர்வழியில் அவர்களின் கால்களை உறுதிப்படுத்துவீராக. உமது ஆதி அருட் கொடையிலிருந்து அவர்கள் முன் உமது ஆசி என்னும் வாயிலைத் திறப்பீராக; ஏனெனில் நீர் அவர்களுக்கு வழங்கியவற்றை அவர்கள் உமது பாதையிலேயே, உமது சமயத்தைப் பாதுகாப்பதிலும், உமது நினைவில் தங்களின் நம்பிக்கையை வைப்பதிலும், உம் மீதான அன்புக்காக அவர்களின் இதயங்களை அர்ப்பணிப்பதிலும், உமது அழகின்பாலுள்ள பக்திப் பரவசத்தால் அவர்களுக்கென்று எதையுமே வைத்துக் கொள்ளாமல் உம்மை மகிழ்விக்கும் வழி வகைகளைத் தேடுவதிலுமே செலவழிக்கின்றனர்.

என் பிரபுவே! ஒரு தாராளமான பங்கினையும், விதிக்கப்பட்ட பிரதிபலன்களையும், நிச்சயமான சன்மானங்களையும் அவர்களுக்கென நியமிப்பீராக.

மெய்யாகவே, பராமரிப்பவரும், உதவுபவரும், தாராளமானவரும், வள்ளன்மை மிக்கவரும், என்றென்றும் வழங்குபவரும் நீரே.

#11354
- `Abdu'l-Bahá

 

பச்சிளங் குழந்தை

பிரபுவே, எனதாண்டவரே, நீர் போற்றப்படுவீராக! இச்சிறுவன் உமது மென்கருணை, அன்புமிகு அருள் எனும் மார்பிலிருந்து உணவளிக்கப்-படுமாறும் அவன் உமது விண்ணுலக விருட்சங்களின் கனிகளைக் கொண்டு ஊட்டம் அளிக்கப்படுமாறும் தயை கூர்ந்து அருள்வீராக. நீரே, உமது மாட்சிமைமிகு நல்விருப்பம், சக்தி ஆகியவற்றின் ஆற்றல்வழி அவனைப் படைத்துத் தோற்றுவித்துள்ளீர் என்ற காரணத்தினால் அவனை உமது பராமரிப்பிலல்லாது வேறெவரது பராமரிப்பிலும் இருக்க விடாதீர். சர்வ வல்லவரும், சர்வஞானியுமான அவரைத் தவிர, இறைவன் வேறெவருமிலர்.

என் அதிபெரும் நேசரே, நீர் போற்றப்படுவீராக. உமது உயரிய அருள்பாலிப்பெனும் இனிய மணங்களையும் உமது புனித அருட்கொடைகள் எனும் நறுமணங்களையும் அவன்பால் வீசிட அருள்வீராக. நாமங்கள், பண்புகள் எனும் இராஜ்யத்தினை உமது பிடியில் வைத்திருப்பவரே, உமது அதிமேன்மைமிகு நாமத்தின் நிழலின்கீழ் பாதுகாப்பினைத் தேடிட அவனுக்குச் சக்தியளிப்பீராக. மெய்யாகவே, விரும்பியதைச் செய்திடும் ஆற்றல் படைத்தவர் நீரே; உண்மையிலேயே நீர் வலிமை மிக்கவர், மேன்மைப்படுத்தப்பட்டவர், என்றும் மன்னிப்பவர், கிருபையாளர், உதாரகுணம் மிகுந்தவர், கருணை மிக்கவர்.

#11321
- Bahá'u'lláh

 

ஒப்பற்ற இறைவா! இப்பச்சிளங் குழந்தை உமது அன்புப் பரிவு என்னும் மார்பினில் பேணி வளர்க்கப்படுமாக. அது உமது பாதுகாப்பு, ஆதரவு எனும் தொட்டிலில் காப்பாற்றப்படவும் உமது மென்மைமிகு பாசமெனும் கரங்களில் வளர்க்கப்படவும் அருள்வீராக.

#11322
- `Abdu'l-Bahá

 

இறைவா, இச்சிசுவினை உமது அன்பெனும் நெஞ்சினில் வளர்த்து, உமது அருள்பாலிப்பு என்னும் மார்பிலிருந்து அதற்குப் பாலூட்டுவீராக. உமது அன்பு என்னும் ரோஜாத் தோட்டத்தில் இப்புதிய செடியினைப் பேணி வளர்த்து, உமது அருட்கொடை என்னும் மழைப் பொழிவின் வழி அது வளர்ந்திட உதவுவீராக. உமது இராஜ்யத்தின் ஒரு குழந்தையாக அதனை ஆகச் செய்து, உமது விண்ணுலக ஆட்சியின்பால் அதனை வழிநடத்திச் செல்வீராக. சக்தி வாய்ந்தவரும் அன்பானவரும் நீரே. வழங்குபவரும் தாராளத் தன்மையுடையவரும் நீரே. ஒப்பற்ற வள்ளன்மைமிகு பிரபுவும் நீரே.

#11323
- `Abdu'l-Bahá

 

பத்தொன்பது நாள் விருந்து

(விருந்து, அது வெறும் தண்ணீருடன் ஆனபோதிலும் மாதத்திற்கு ஒரு முறை (நடத்தப்பட) உங்களுக்குக் கடமையாக்கப்பட்டுள்ளது: மனிதர்களின் இதயங்களை ஒன்றிணைக்க கடவுள் உண்மையாகவே, நோக்கங் கொண்டுள்ளார்—அதற்கு விண்ணுலக, மண்ணுலக சாதனங்கள் ஒவ்வொன்றும் தேவைப்பட்டப் போதிலுங்கூட).

—பஹாவுல்லா, கித்தாப்-இ-அக்டாஸ்

கடவுளே! பிணக்குகளுக்குக் காரணமாயிருந்த எல்லாக் கூறுகளையும் அகற்றி, ஒற்றுமைக்கும் இணக்கத்திற்கும் காரணமா-யிருக்கும் அனைத்தையும் எங்களுக்கு ஏற்பாடு செய்வீராக. கடவுளே! தெய்வீக நறுமணத்தினை எங்கள்பால் பொழியச் செய்து இக்கூட்டத்தை ஒரு தேவலோகக் கூட்டமாக ஆக்கிடுவீராக. சகல உணவுகளையும் நன்மைகளையும் எங்களுக்குத் தந்தருள்வீராக. அன்பெனும் அமுதத்தை எங்களுக்குத் தயாரித்து அருள்வீராக. அறிவெனும் அமுதத்தை எங்களுக்குத் தந்தருள்வீராக. தெய்வீக ஞானமெனும் அமுதத்தை எங்கள்பால் அருள்வீராக.

#11330
- `Abdu'l-Bahá

 

பயணம்

என் கடவுளே, உமது கிருபையினால் இக்காலையில் எழுந்து, உம்மில் முழு நம்பிக்கை வைத்து, என்னை உமது பொறுப்பில் ஒப்புவித்து என் இல்லம் நீங்கியுள்ளேன். உமது கருணை என்னும் சுவர்க்கத்திலிருந்து உமது ஆசீர்வாதத்தினை என்மீது பொழிந்து, எனது எண்ணங்களை உம் மீது உறுதியாக நிலைக்கச் செய்து, உமது பாதுகாப்பின் கீழ் வெளியே செல்ல நீர் எனக்கு உதவியது போல், நான் பாதுகாப்பாக இல்லந் திரும்பவும் உதவிடுவீராக.

ஒரே, ஒப்பற்ற, எல்லாமறிந்த, சர்வ விவேகியான இறைவன், உம்மையன்றி வேறெவருமிலர்.

#11298
- Bahá'u'lláh

 

என் இறைவா, என்னை உறக்கத்திலிருந்து எழச் செய்து, என் மறைவுக்குப்பின் என்னை வெளிக்கொணர்ந்து, அயர்ந்த நித்திரையிலிருந்து என்னை எழச் செய்தமைக்காக உம்மைப் போற்று-கின்றேன். எந்த வெளிப்பாட்டின் பகலூற்று மூலம் உமது சக்தி என்னும் விண்ணுலகங்களும் உமது மாட்சிமையும் ஒளிரவைக்கப்பட்டனவோ அவ்வெளிப்பாடு என்னும் பகலூற்றின் பிரகாசங்களின்பால் நான் எனது முகத்தைத் திருப்பியவனாகவும் உமது அடையாளங்களை ஏற்றவனாகவும் உமது திருநூலில் நம்பிக்கைக் கொண்டவனாகவும் உமது கயிற்றினை இறுகப் பற்றியவனாகவும் இக்காலைப் பொழுதினில் கண் விழித்துள்ளேன்.

உமது விருப்பம் என்னும் சக்தியின் வழியாகவும் உமது வலிந்தீர்க்கவல்ல நோக்கத்தின் ஆற்றலாலும் எனது உறக்கத்தில் நீர் எனக்கு வெளிப்படுத்தியவற்றினை உமது நேசிக்கப்-பட்டோரின் இதயங்களில் உள்ள அன்பு மாளிகைகளுக்கு உறுதியான அடித்தளமாகவும் உமது அருள், அன்புப் பரிவு என்னும் அடையாளங்களின் வெளிப்பாட்டிற்குச் சிறந்த கருவியாகவும் ஆக்கிடுமாறு உம்மை வேண்டிக் கேட்கிறேன்.

என் பிரபுவே, அதி மேன்மை மிக்க எழுது கோலின் வழியாக இம்மையிலும் மறுமையிலும் நன்மை பயக்கக்கூடியவற்றினை எனக்கு விதித்தருள்வீராக. அனைத்தின் ஆதிக்கமும் உமது பிடியில்தான் அடங்கியுள்ளது என்பதற்கு நான் சாட்சியம் கூறுகின்றேன்.

நீர் விரும்பியவாறு அவற்றை மாற்றிடுவீர். வலிமையும் நம்பிக்கையும் உடைய இறைவன் உம்மையன்றி வேறிலர். உமது ஆணையின்வழி இழிவைப் புகழாகவும் பலவீனத்தை வலிமையாகவும் சக்தியின்மையை வலுவாகவும் அச்சத்தினை அமைதியாகவும் சந்தேகத்தை உறுதிப்பாடாகவும் மாற்றவல்லவர் நீரே. வல்லமை மிக்கவரும் தயாளம் மிக்கவருமான இறைவன் உம்மையன்றி வேறிலர்.

உம்மை நாடுபவர் எவரையுமே நீர் ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியதில்லை, அன்றியும் நீர் உம்மை விரும்பியவர் எவரையுமே பின்தங்கச் செய்ததில்லை. உமது தயாளம் என்னும் சுவர்க்கத்தையும் உமது அருள்பாலிப்பு என்னும் பெருங்கடலையும் எனக்கு அருள்வீராக.

மெய்யாகவே, நீரே, சர்வ வல்லவரும் அதி சக்தி வாய்ந்தவரும் ஆவீர்!

#11299
- Bahá'u'lláh

 

பற்றின்மை

என் கடவுளே, உமது அருகே நெருங்கிடவும், உந்தன் அரியாசனத்தின் அருகில் வசித்திடவும் என்னை அனுமதிப்பீராக; ஏனெனில், உம்மிடமிருந்து வெகுதூரம் இருப்பதென்பது என்னைக் கிட்டத்தட்ட நிர்மூலமாக்கிவிட்டது. உமது கிருபை எனும் சிறகுகளின் நிழலின் கீழ் என்னை இளைப்பாறச் செய்வீராக; ஏனெனில், உம்மை விட்டுப் பிரிந்திருத்தல் எனும் தீச்சுடரானது, என்னுள் என் இதயத்தை உருக்கிவிட்டது. மெய்யாகவே வாழ்வெனும் நதியின் அண்மைக்கு என்னை ஈர்த்திடுவீராக, ஏனெனில், உம்மைத் தேடுவதெனும் அதன் முடிவில்லா முயற்சியில் எனதான்மா தாகத்தினால் எரிகின்றது. என் கடவுளே, என் வேதனையின் கசப்பினை எனது பெருமூச்சு பறைசாற்றுகின்றது; மேலும், நான் சிந்தும் கண்ணீரோ உம் மீதான எனதன்புக்குச் சாட்சியம் பகர்கின்றது.

உந்தன் நாள்களில் உம்மை அறிந்து, உமது இறையாண்மையை ஒப்புக்கொண்டோருள் ஒருவராக நாங்கள் கணக்கிடப்பட அருளுமாறு, நீரே உம்மைப் போற்றிடும் போற்றுதலினாலும், உமது சொந்த சாராம்சத்தை நீரே புகழ்ந்திடும் புகழின் பெயராலும், நான் உம்மிடம் மன்றாடுகிறேன். என் கடவுளே, உந்தன் அன்புக் கருணை எனும் உயிர் நீரைக், கருணை எனும் விரல்களிலிருந்து பருகிட, எங்களுக்கு உதவுவீராக; அதனால் நாங்கள் உம்மைத் தவிர மற்றெல்லாவற்றையும் முற்றிலும் மறந்திடவும்; உம்மோடு மட்டுமே ஈடுபட்டிருக்கவும் இயலுமாக. நீர் விரும்பியதைச் செய்வதற்குரிய சக்தி படைத்தவர் நீரே. வல்லவரும், ஆபத்தில் உதவுபவரும், சுய ஜீவியருமான உம்மைத் தவிர வேறு கடவுள் இலர்.

மன்னருக்கெல்லாம் மன்னரானவரே, உந்தன் நாமம் போற்றப்படுமாக!

#11355
- Bahá'u'lláh

 

என் கடவுளே, நீர் போற்றப்படுவீராக! உந்தன் அரியாசனத்தின் பகலூற்றானவரையும், உமது கிருபையின் உதயபீடமானவரையும், உந்தன் சமயத்தின் களஞ்சியமானவரையும் அடியேன் அறிந்திடும்படி செய்தமைக்காக நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன். உமது அருகில் உள்ளோரின் வதனங்களை வெண்ணிறமாக மாற்றியும், உம் மீது பக்திகொண்டோரின் இதயங்கள் உம்மை நோக்கிச் சிறகடித்துச் சென்றிடவும் செய்திட்ட, உமது திருநாமத்தின் வாயிலாக நான் உம்மிடம் மன்றாடுகிறேன்; அதனால் நான், எல்லா நேரங்களிலும், எல்லா நிலைகளிலும், உந்தன் கயிற்றை இறுகப் பற்றிக்கொண்டு, உம்மைத் தவிர, எவரொருவரிடமும் உள்ள பற்றுகள் எல்லா-வற்றையும் துறந்து, உந்தன் திருவெளிப்பாட்டின் தொடுவானத்தை நோக்கி, எனது கண்களைச் செலுத்தி, உமது நிருபங்களில் நீர் எனக்கு ஆணையிட்டுள்ளவற்றை நிறைவேற்றிடக் கூடும்.

என் பிரபுவே, எனது அக, புற உயிருரு இரண்டையும் உந்தன் தயை மற்றும் உந்தன் அன்புக் கருணை எனும் வஸ்திரத்தைக் கொண்டு அணிவிப்பீராக. பின்னர், உமக்கு அருவருக்கத்தக்க எதனிலிருந்தும் என்னைப் பாதுகாப்பாக வைப்பீராக; மேலும், என்னையும் எனது உடன்பிறப்புக்களையும் உமக்குக் கீழ்ப்படியவும், என்னுள் தீய அல்லது இழிவான ஆசைகளைத் தூண்டிடும் எதனையும், வெறுத்தொதுக்கக் கருணைகூர்ந்து உதவிடுவீராக.

மெய்யாகவே, மனுக்குலம் அனைத்திற்கும் பிரபுவானவரும், இம்மை, மறுமை ஆகியவற்றின் உடைமையாளரும் நீரே ஆவீர். எல்லாம் அறிந்தவரும், சர்வ விவேகியுமான உம்மைத் தவிர இறைவன் வேறிலர்.

#11356
- Bahá'u'lláh

 

என் கடவுளே, உந்தன் நாமம் போற்றப்படுமாக! உமது ஆணைக்கிணங்கியும், உமது ஆசைக்கு ஏற்றவாறும் படைப்பு முழுவதன் மீதும் பரவியுள்ள உமது கிருபை எனும் வஸ்திரத்தின் நறுமணங்களினாலும், உந்தன் வலிமை, உந்தன் இறையாண்மை ஆகிய சக்தியின் வாயிலாகவும், உந்தன் கருணை எனும் தொடுவானத்தின் மேல் பிரகாசமாக ஒளிவீசிய உமது விருப்பம் எனும் பகல் நட்சத்திரத்தினாலும், என் இதயத்திலிருந்து பயனற்ற எல்லா ஆசைகளையும் வீண் கற்பனைகளையும் நீக்கியருளுமாறு நான் உம்மிடம் மன்றாடுகிறேன். மனுக்குலம் அனைத்தின் பிரபுவே, அதனால், எனது அனைத்துப் பாசத்தோடும் நான் உந்தன்பால் திரும்பிடக்கூடும்.

என் கடவுளே, நான் உமது ஊழியனும், உமது ஊழியனின் மைந்தனுமாவேன். நான் உந்தன் கிருபை எனும் கைப்பிடியைப் பிடித்துக் கொண்டும், உந்தன் மென்கருணை எனும் கயிற்றினை இறுகப்பற்றி கொண்டுமுள்ளேன். உம்மிடம் இருக்கும் நல்லனவற்றை எனக்கு விதித்தருள்வீராக; உந்தன் அருட்கொடை எனும் மேகங்களிலிருந்தும், உந்தன் தயை எனும் சொர்க்கத்திலிருந்தும் நீர் கீழே அனுப்பியுள்ள மேஜையிலிருந்து எனக்கு ஊட்டமளிப்பீராக.

உண்மையில், உலகங்களுக்கெல்லாம் பிரபுவும், சொர்க்கத்தில் உள்ள அனைத்திற்கும், பூமியின் மீதுள்ள அனைத்திற்கும் கடவுள் நீரே ஆவீர்.

#11357
- Bahá'u'lláh

 

என் கடவுளே, எண்ணற்ற உணர்வில்லா இதயங்கள், உந்தன் சமயம் எனும் தீயினால் தீமூட்டப்பட்டுள்ளன; எண்ணற்ற உறங்குவோர் உமது குரலின் இனிமையால் உறக்கத்திலிருந்து எழுப்பப்பட்டுள்ளனர். உந்தன் ஒருமை எனும் விருட்சத்தின் நிழலின் கீழ் பாதுகாப்பை நாடிய அந்நியர்கள்தாம் எத்துணை; உமது நாள்களில் உந்தன் உயிர் நீரின் ஊற்றைத் தேடி தாகத்தோடு விரைந்திட்ட தாகமுற்றோரின் எண்ணிக்கைதாம் எத்துணையோ.

உம்மை நோக்கிச் செல்ல தன்னை ஆயத்தமாக்கிக்கொண்டு, உந்தன் வதனம் எனும் ஒளியின் பகலூற்றை அடைந்திட விரைந்திட்டவன் ஆசி பெறுவானாக.

உந்தன் திருவெளிப்பாடெனும் உதய பீடத்தின்பாலும், உந்தன் உத்வேகம் எனும் நீரூற்றின்பாலும், தனது பற்றார்வம் அனைத்தையும் கொண்டு திரும்பியவன் ஆசி பெறுவானாக.

உந்தன் வள்ளன்மை, கிருபை ஆகியவற்றின் வாயிலாக நீர் அருளியவற்றை உமது பாதையில் செலவு செய்தவன் ஆசி பெறுவானாக.

உந்தன் மீதான அவனது ஆழ்ந்த ஏக்கத்தின் காரணமாக, உம்மைத் தவிர மற்றனைத்தையும் வீசியெறிந்தவன் ஆசி பெறுவானாக.

உமது நெருக்கமான தொடர்புறவில் மகிழ்ந்து, உம்மைத் தவிர மற்றவரின் மீதான எல்லாப் பற்றுக்களையும் தன்னிடமிருந்தே அகற்றியவன் ஆசி பெறுவானாக.

உந்தன் திருநாமமாக இருப்பவரினால்; உமது இறையாண்மை, வல்லமை ஆகிய சக்தியின் வாயிலாகத், தமது சிறை எனும் தொடுவானத்தின் மேல் தோன்றியுள்ளவரினால், நீர் விரும்பிய- வற்றையும், உந்தன் மேன்மைக்கு உகந்தவற்றையும் அனைவருக்கும் விதித்தருளுமாறு, நான் உம்மிடம் மன்றாடுகின்றேன்.

மெய்யாகவே, உந்தன் வல்லமை யாவற்றுக்கும் சமமானதாகும்.

#11358
- Bahá'u'lláh

 

என் கடவுளே, உந்தன் நாட்டில் நீர் மூட்டியுள்ள தீ யாதென்று நான் அறியேன். அதன் பேரொளியை என்றுமே பூமியால் மறைத்திடவே இயலாது; அதன் தீச்சுடரை நீரினாலும் அணைத்திட இயலாது. உலக மக்கள் அனைவரும் அதன் ஆற்றலை எதிர்த்திட சக்தியற்று உள்ளனர். அதன் அருகில் நெருங்கி, அதன் கர்ஜனையைச் செவிமடுத்தோனின் புனிதத்தன்மை மகத்தானதாகும்.

என் கடவுளே, உந்தன் பலப்படுத்தும் கிருபையின் வாயிலாகச், சிலரை, அதனை நெருங்கிச் செல்ல நீர் இயலச் செய்துள்ளீர்; அதே வேளையில், உமது நாள்களில் அவர்களது கரங்கள் ஆற்றிய காரியங்களின் காரணமாக மற்றவர்களை அதனை நெருங்குவதிலிருந்து நீர் தடுத்து வைத்துள்ளீர். எவரொருவர் அதனை நோக்கி விரைந்து சென்று, அதனை அடைந்துள்ளாரோ, அவர் உமது அழகினைக் கண்ணுற வேண்டும் எனும் ஆவலின் காரணமாக, உந்தன் பாதையில் தன் உயிரை அர்ப்பணித்தும், உம்மைத் தவிர மற்றனைத்திலிருந்தும் பற்றறுத்து, உம்மிடமே விண்ணுயர்ந்துள்ளார்.

என் பிரபுவே, படைப்புலகில் சுடர்வீசி சீறிடும் இந்தத் தீயின் பெயரால், உந்தன் மாட்சிமை எனும் அரியாசனத்தின் முன் தோன்றுவதிலிருந்து என்னைத் தடுத்தும், உமது வாசலின் கதவருகில் நிற்பதிலிருந்து என்னைத் தடுத்திடும் திரைகளைக் கிழித்தெறிந்திடும்படி நான் உம்மை மன்றாடுகின்றேன்.

என் பிரபுவே, உமது திருநூலில் நீர் கீழே அனுப்பியுள்ள ஒவ்வொரு நல்ல விஷயத்தையும் எனக்காக விதித்தருள்வீராக; மேலும் உமது கருணை எனும் பாதுகாப்பிலிருந்து, என்னை வெகுதூரம் விலகி நிற்காதிருக்கச் செய்வீராக.

நீர் விரும்பியவாறு செய்வதற்குச் சக்திமிக்கவர் நீரே ஆவீர். மெய்யாகவே, நீரே சர்வ சக்திமிக்கவர், அதி தாராளமானவர்.

#11359
- Bahá'u'lláh

 

என் கடவுளே, நீர் போற்றப்படுவீராக. நான் உந்தன் மீதும் உமது அடையாளங்களின் மீதும் நம்பிக்கைக் கொண்ட ஊழியர்களுள் ஒருவனாவேன். எவ்வாறு உந்தன் கருணை எனும் கதவை நோக்கி நான் புறப்பட்டுள்ளதையும், மற்றும் உந்தன் அன்புக் கருணை எனும் திசையை நோக்கி என் முகத்தைத் திருப்பியுள்ளதையும் நீர் பார்க்கின்றீர். உமது மிகச் சிறந்த பட்டங்களினாலும், உமது அதிவுயரிய பண்புகளினாலும், உமது அருட்கொடைகள் எனும் வாயில்களை எனது வதனத்தின் முன் திறந்திடுமாறு நான் உம்மிடம் கெஞ்சுகின்றேன். ஆகவே, எல்லா நாமங்களையும் பண்புகளையும் கொண்டுள்ளவரே, எது நன்மையோ அதைச் செய்திட எனக்கு உதவிடுவீராக!

என் பிரபுவே, வறியவன் நான், நீரோ செல்வந்தர். என் முகத்தை நான் உந்தன்பால் திருப்பி, உம்மைத் தவிர மற்றனைத்திலிருந்தும் என்னைப் பற்றறுத்துக் கொண்டுவிட்டேன். உந்தன் மென்கருணை எனும் தென்றல்கள் என்னை வந்தடைவதைத் தடுத்திடாதீர்; மற்றும் உமது ஊழியர்களுள் தேர்ந்தெடுக்கப் பட்டோருக்கென நீர் விதித்தருளியவற்றை எனக்குத் தரமறுத்திடாதீர் எனவும் மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்.

என் பிரபுவே, எனது கண்களிலிருந்து திரையை அகற்றிடுவீராக; அதனால் உமது உயிரினங்களுக்கென நீர் விரும்பியவற்றை நான் கண்டுகொள்ளக் கூடும்; உந்தன் கைவினையான அவதாரங்கள் அனைவரிலும், உந்தன் சர்வ வலிமைமிக்கச் சக்தியின் வெளிப்பாடுகளை நான் கண்டறிந்திடக் கூடும். என் பிரபுவே, உமது அதி வலிமைமிக்க அடையாளங்களைக் கொண்டு என் ஆன்மாவை ஆனந்தப் பரவசமடையச் செய்வீராக; மேலும், என் இழிவான, தீய ஆசைகளின் ஆழங்களிலிருந்து என்னை மீட்டருள்வீராக. பின்னர், நீர் விரும்பியவற்றைச் செய்வதற்குச் சக்தி படைத்தவர் நீரே ஆவீர். மனிதர் அனைவரும் நாடிடும் உதவியை வழங்கிடுபவர் உம்மைத் தவிர, சர்வ ஒளிமயமான கடவுள் வேறிலர்.

என் பிரபுவே, என் உறக்கத்திலிருந்து என்னை எழுப்பி, என்னை உற்சாகம் பெறச் செய்து, உமது ஊழியர்களுள் பெருவாரியானோர் புரிந்து- கொள்ளத் தவறியவற்றை உணர்ந்திட, என்னுள் ஆவலை உருவாக்கியமைக்காக, நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன். ஆதலால், என் பிரபுவே, உந்தன் மீதுள்ள அன்புக்காகவும், உமது மகிழ்ச்சிக்காகவும், நீர் ஆவல் கொண்டுள்ள எதனையும் என்னால் கண்ணுற இயலச் செய்திடுவீராக. எவரது வலிமை, இறையாண்மை ஆகியவற்றின் சக்திக்கு எல்லாப் பொருள்களும் சாட்சியம் அளிக்கின்றனவோ, அவர் நீரே ஆவீர்.

வல்லவரும் நலன் பயப்பவருமான உம்மைத் தவிர கடவுள் வேறிலர் .

#11360
- Bahá'u'lláh

 

படைப்பாளரும், அரசரும், சர்வ நிறை- வளிப்பவரும், அதிவுயர்வானவரும், மனிதர் எல்லாரும் உதவிக்காக இறைஞ்சுகின்ற உமது பிரபுவான அவரது திருநாமத்தினால்.

கூறுவீராக: என் கடவுளே! விண்ணுலகங்- களையும், மண்ணுலகையும் படைத்தவரே, இராஜ்யத்தின் பிரபுவே! என் இதயத்தின் இராஜ்யங்களை நீர் நன்கறிவீர்; இருப்பினும், உந்தன் உயிருரு உம்மைத் தவிர மற்றனைத்தின் அறிவுக்கெட்டாததாகும். என்னைச் சார்ந்த எதனையும் நீர் காண்கின்றீர்; இருந்தாலும் இதை உம்மைத் தவிர வேறெவராலும் செய்திட இயலாது. உந்தன் கிருபையின் வாயிலாக, உம்மைத் தவிர மற்றனைத்தையும் தவிர்த்திட என்னால் இயலச் செய்வனவற்றை எனக்குத் தந்தருள்வீராக. மேலும், உம்மைத் தவிர மற்றனைவரிடம் இருந்தும் என்னைத் தனித்து நிற்க இயலச் செய்யக்கூடியவற்றை எனக்கு விதித்திடுவீராக. எனது வாழ்வின் பலனை இவ்வுலகிலும் மறுவுலகிலும் நான் அடைவதற்கு எனக்கு அருள் பாலிப்பீராக. உந்தன் கிருபையின் வாயில்களை என் எதிரே திறந்து, உமது மென்கருணை, அருட்கொடைகள் ஆகியவற்றை அருள்கூர்ந்து எனக்கு வழங்கிடுவீராக.

நிறைந்த கிருபைக்குரிய பிரபுவானவரே! உந்தனின் விண்ணுலக ஆதரவு உம்மை நேசிப்போரைச் சூழட்டுமாக; நீர் கொண்டுள்ள பரிசுகளையும் கொடைகளையும் எங்களுக்கு வழங்கிடுவீராக. எல்லாப் பொருள்களையும் கடந்து நீர் எங்களுக்குப் போதுமானவராக இருந்திடுவீராக; எங்களின் பாவங்களை மன்னித்து, எங்கள் மீது கருணை காட்டுவீராக. எங்கள் பிரபுவும், படைப்புப் பொருள்கள் அனைத்தின் பிரபுவும் நீரே ஆவீர். உம்மைத் தவிர வேறெவரிடமும் நாங்கள் உதவி கோருவதில்லை; உந்தன் அன்பாதரவைத் தவிர வேறொன்றையும் நாங்கள் வேண்டுவதில்லை. அருட்கொடைக்கும் கிருபைக்குமுரிய பிரபுவும், வென்றிடவியலாத சக்திமிக்கவரும், உமது வடிவமைப்புகளில் அதி திறன்வாய்ந்தவரும் நீரே ஆவீர். சகலத்தையும் கொண்டுள்ளவரும், அதிவுயர்வானவருமான உம்மைத் தவிர, கடவுள் வேறிலர் .

என் பிரபுவே, தூதர்கள், புனிதர்கள், நேர்மையாளர்கள் ஆகியோர் மீதும் உந்தன் ஆசிகளை வழங்கிடுவீராக. மெய்யாகவே, ஒப்பற்றவரும், சர்வ வசீகரமானவருமான கடவுள், நீரே ஆவீர்.

#11361
- The Báb

 

பிரபுவே! நான் உம்மிடமே அடைக்கலம் கோரி வருகின்றேன், உமது எல்லா அடையாளங்களின் மீதும் நான் என் மனதைப் பதிய வைத்துள்ளேன்.

பிரபுவே! பயணம் செய்யும் பொழுதோ, வீட்டில் இருக்கையிலோ, தொழில் துறையிலோ, வேலை நேரங்களிலோ நான் உம்மிடத்திலேயே எனது முழு நம்பிக்கையையும் வைக்கின்றேன்.

கருணை காட்டுவதில் விஞ்சிட இயலாதவரே! என்னை யாவற்றிலிருந்தும் விடுவிக்கும் பொருட்டு உமது நிறைவளிக்கும் உதவியை என்மீது பொழிந்திடுவீராக.

பிரபுவே! உமது விருப்பத்திற்கேற்ப என் பங்கினை எனக்களித்து, நீர் எனக்காக விதித்துள்ளதன்பால் என்னை மனநிறைவு கொள்ளச் செய்வீராக.

ஆணையிடுவதற்கான முழு அதிகாரமும் உம்முடையதே.

#11362
- The Báb

 

கூறுவீராக: அனைத்திற்கும் மேலாக அனைத்திற்கும் நிறைவளிப்பவர் கடவுளேயாவார். கடவுளைத் தவிர நிறைவளிப்பவர் விண்ணிலுமில்லை, மண்ணிலுமில்லை. மெய்யாகவே, அறிந்தவரும், ஆதரிப்பவரும், சர்வ வல்லமை பொருந்தியவரும் அவரேயாவார்.

#11363
- The Báb

 

கடவுளே, என் கடவுளே! எனது நம்பிக்கையும் எனது நேசரும், எனது அதி உயரிய இலட்சியமும் ஆவலும் நீரே ஆவீர்! உமது தேசத்தினில் என்னை உமது அன்பின் ஒரு கோபுரமாகவும், உமது உயிரினங்களின் மத்தியில் உமது அறிவின் ஒளிவிளக்காகவும், உமது இராஜ்யத்தில் தெய்வீக அருட்கொடையின் விருதுக்கொடியாகவும் ஆக்குமாறு மிக்கத் தாழ்மையுடனும் பூரண பக்தியுடனும் உம்மைப் பிரார்த்திக்கின்றேன்.

உம்மைத் தவிர மற்றெல்லாவற்றிலிருந்தும் தங்களைப் பற்றறுத்துக் கொண்டும், இவ்வுலகின் நிலையற்ற பொருள்களிலிருந்து தங்களைப் பரிசுத்தப்படுத்திக் கொண்டும், பயனற்ற எண்ணங்களை எழுப்புவோரின் தூண்டுதல்- களிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டு-முள்ள அன்பர்களுள் ஒருவனாக என்னைச் சேர்த்துக் கொள்வீராக.

உமது இராஜ்யத்தினின்று தோன்றிடும் ஆவி என்னும் உறுதிப்பாட்டின் வழி என் இதயத்தை மகிழ்ச்சியினால் பரவசமடையச் செய்வீராக, உமது சர்வ வல்லமைமிகு ஒளி என்னும் இராஜ்யத்திலிருந்து தெய்வீக உதவியெனும் சேனைகள் என்பால் தொடர்ச்சியாக இறங்கிடுவதைக் கண்ணுறுவதன் மூலமாக என் கண்களை ஒளிரச் செய்வீராக.

நீர், உண்மையாகவே, எல்லாம் வல்லவர், ஒளிமய மானவர், சர்வ சக்தி வாய்ந்தவர்.

#11364
- `Abdu'l-Bahá

 

கடவுளே என் கடவுளே! எல்லாவற்றிலிருந்தும் பற்றறுத்தல் எனும் கிண்ணத்தை எனக்காக நிரப்பிடுவீராக; மற்றும் உமது பேரொளிகள், அருட்கொடைகள் எனும் சபையில், உம்மை நேசித்தலெனும் மதுரசத்தைக் கொண்டு, என்னை மகிழ்வுறச் செய்வீராக. கட்டுக்கடங்கா உணர்ச்சி, ஆசை, ஆகியவற்றின் தாக்குதல்களிலிருந்து என்னை விடுவிப்பீராக; என்னிடமிருந்து இந்த நரக உலகின் விலங்குகளை, உடைத்திடுவீராக; உந்தன் வானுலக இராஜ்யத்திற்குப் பரவசத்தால் என்னை ஈர்த்திடுவீராக; மேலும் பணிப்பெண்களின் மத்தியில், உமது புனிதமெனும் சுவாசங்களைக் கொண்டு எனக்குப் புத்துயிரூட்டுவீராக.

பிரபுவே, உந்தன் அருட்கொடைகளின் ஒளிகளைக் கொண்டு என் வதனத்தைப் பிரகாசிக்கச் செய்வீராக; யாவற்றையும் அடிப்பணியச் செய்திடும் உந்தன் வலிமையின் அடையாளங்களைக் கண்ணுறும், என் கண்களை ஒளிபெறச் செய்வீராக; பொருள்கள் அனைத்தையும் சூழ்ந்துள்ள உமது அறிவின் பேரொளியால், என் இதயத்தை மகிழ்வுறச் செய்வீராக; ஆன்மாவைப் புத்துணர்வுப் பெறச் செய்திடும் உந்தனின் பெரும் களிப்பூட்டும் நற்செய்தியால் என் ஆன்மாவை இன்புறச் செய்வீராக; அதனால், இம்மைக்கும், மறுமை இராஜ்யத்திற்குமான அரசரே, அரசாட்சிக்கும் வலிமைக்கும் உரிய பிரபுவே, நான் உமது அடையாளங்களையும், சான்றுகளையும் எங்கும் பரவச் செய்தும், உந்தன் சமயத்தைப் பிரகடனம் செய்தும், உமது போதனைகளை மேம்படுத்தி, உமது சட்டத்திற்குச் சேவை புரிந்தும், உந்தன் திருமொழியை உயர்த்திடவும் கூடுமாக.

மெய்யாகவே சக்திமிக்கவரும், என்றும் வழங்குபவரும், பேராற்றல்மிக்கவரும், சர்வ வல்லமைப் பொருந்தியவரும் நீரே ஆவீர்.

#11365
- `Abdu'l-Bahá

 

பற்றுறுதி

என் இறைவா, என்னை உமது நேர்வழியை நன்கு உணர்ந்துகொள்ள உதவியமைக்-காகவும், உயர்வுமிக்கப் பிரகடனத்தை எனது பார்வைக்குமுன் வெளிப்படுத்தி, உமது வெளிப்பாடு என்னும் பகலூற்றின்பாலும் உமது சமயமெனும் நீரூற்றின்பாலும் எனது முகத்தைத் திருப்பிட உதவியமைக்காகவும், எனதாவலே, உமது நாமத்தினை மிகைப்படுத்தி உமக்கு நன்றி நவில்கின்றேன்; அதே வேளையில், உமது ஊழியர்களும் உமது மக்களும் உம்மிடமிருந்து அப்பால் திரும்பியுள்ளனர். நித்தியம் என்னும் இராச்சியத்திற்குப் பிரபுவானவரே, உமது பேரொளி என்னும் எழுதுகோல் ஆனவரின் கிரீச்சுக் குரலினாலும், பசுமையான விருட்சத்தினின்று கூவியழைக்கும் எரியும் நெருப்பினாலும், பஹாவின் மக்களுக்குப் பிரத்தியேகமாகத் தேர்ந்தெடுத்துள்ள மரக்கலத்தினாலும், நான், உந்தன்பால் எனது அன்பில் உறுதியாய் இருக்க அனுமதித்ததற்காகவும், உமது திருநூலில், நீர், எனக்காக நிர்ணயித்துள்ளவைக்காகவும் மகிழ்ச்சி-யுறவும், உமது சேவையில் உறுதியாக நிலைத்திருக்கவும் அனுமதிக்குமாறு உம்மிடம் இறைஞ்சுகின்றேன். மேலும், என் இறைவா, உமது ஊழியர்கள் சமயத்தை மேன்மையுறச் செய்திடுவதற்கான சேவையை ஆற்றிடவும், நீர் உமது திருநூலில் வெளிப்படுத்தியுள்ளவற்றைக் கடைப்பிடிக்கவும் கருணை கூர்ந்து உதவிடுவீராக.

மெய்யாகவே, வலிமைமிக்கப் பிரபுவானவர் நீரே; நீர் எதனை விரும்புகின்றீரோ அதனை விதிக்கவல்ல சக்தியைக் கொண்டிருக்கின்றீர்; மேலும், படைப்புப் பொருள்கள் அனைத்தின் மீதும் அதிகாரத்தை உமது கையில் வைத்திருக்கின்றீர். ஆற்றல் அனைத்தையும் கொண்டுள்ள, சகலமும் அறிந்த, சர்வமும் அறிந்த இறைவன் உம்மையன்றி வேறெவருமிலர்.

#11366
- Bahá'u'lláh

 

பிரபுவே எனதாண்டவரே, உந்தன் நாமம் புகழப்படுவதாக! எல்லாப் படைப்புப் பொருள்களையும் சூழ்ந்துள்ள உமது சக்தியினாலும், படைப்பு முழுவதையும் விஞ்சியுள்ள உமது அரசாட்சியினாலும், உமது விவேகத்தினுள் மறைந்திருந்த எதனைக் கொண்டு, உமது விண்ணையும் மண்ணையும் படைத்தீரோ, அந்த உமது திருவாக்கினாலும், உந்தன் மீதான அன்பிலும், உமது விருப்பத்திற்கு அடிப்பணிவதிலும் எங்களைப் பற்றுறுதியுடன் இருந்திடவும், உந்தன் வதனத்தின்பால் எங்கள் பார்வையைப் பதித்திடவும், உந்தன் புகழைப்பாடிடவும், எங்களை இயலச் செய்யுமாறு நான் உம்மிடம் மன்றாடுகிறேன். ஆதலால், என் கடவுளே, உமது உயிரினங்களின் மத்தியில் உந்தன் அடையாளங்களை எங்கும் பரவச் செய்திடவும், உந்தன் இராஜ்யத்தில் உமது சமயத்தைப் பாதுகாப்பதற்கும் எங்களுக்குச் சக்தியளிப்பீராக. உந்தன் உயிரினங்கள் உம்மைப் பற்றிக் கூறுவதிலிருந்து நீர் என்றென்றும் சுதந்திரமாக இருந்து வந்துள்ளீர்; என்றென்றும் அவ்வாறே தொடர்ந்து இருந்தும் வருவீர்.

நான் எனது முழு நம்பிக்கையை உந்தன் மீதே வைத்துள்ளேன்; உந்தன்பால் எனது முகத்தைத் திருப்பியுள்ளேன்; உமது அன்பு ஆதரவெனும் கயிற்றினை இறுகப் பற்றிக் கொண்டுள்ளேன், மற்றும் உமது கருணை எனும் நிழலை நோக்கி, நான் விரைந்துள்ளேன். என் கடவுளே, ஏமாற்றம் அடைந்தவனாக உமது வாசலிலிருந்து என்னைத் துரத்தி விடாதீர்; மற்றும் உந்தன் கிருபையை எனக்குத் தரமறுத்திடாதீர்; ஏனெனில், உம்மை மட்டுமே நான் நாடுகிறேன். என்றும் மன்னிப்பவரும், அதிவள்ளன்மையாளரும் உம்மைத் தவிர வேறு கடவுள் இலர்.

உம்மை அறிந்தோருக்கு இறையன்பரானவரே, புகழ் உமக்கே உரியதாகுக!

#11367
- Bahá'u'lláh

 

எவரது அண்மை என் விருப்பமாகுமோ, எவரது முன்னிலை என் நம்பிக்கையாகுமோ, எவரது நினைவு என் ஆவலாகுமோ, எவரது ஒளி எனும் அரசவை என் இலக்காகுமோ, எவரது உறைவிடம் என் நோக்கமாககுமோ, எவரது நாமம் எனக்கு சிகிச்சையாகுமோ, எவரது அன்பு என் இதயத்தின் பிரகாசமாகுமோ, எவரது சேவை எனது அதிவுயரிய ஆர்வமாகுமோ, அவற்றுக்கெல்லாம் உரியவரே! உம்மை அறிந்தோரை, உம்மைப் பற்றிய அறிவெனும் அதிவிழுமிய சிகரங்களுக்கு உயரப் பறந்திடவும்; உம்மைப் பக்தியோடு பூஜிப்பவர்களை, உமது புனிதத் தயைகள் எனும் அரசவையின் சூழிடங்களுக்கு உயர்ந்திடவும் நீர் சக்தி அளித்துள்ள திருநாமத்தினால், உந்தன் முகத்தின்பால் என் முகத்தைத் திருப்பிடவும், எனது கண்களை உம்மீது பதித்திடவும், உந்தன் புகழை உரைத்திடவும், எனக்கு உதவிடுமாறு நான் உம்மிடம் மன்றாடுகிறேன்.

என் பிரபுவே, உம்மைத் தவிர மற்றனைத்தையும் மறந்தவனும், உமது கிருபை எனும் பகலூற்றை நோக்கித் திரும்பியவனும், உந்தன் அரசவையை நெருங்கிச் செல்லவேண்டும் எனும் ஆவலில், உம்மைத் தவிர மற்றனைத்தையும் கைவிட்டவனும், நானே. ஆகையால், உமது திருவதனத்தின் ஒளியின் பிரகாசங்களோடு ஒளிரும் அந்த இருக்கையின்பால் எனது கண்கள் உயர்த்தப்பட்டிருப்பதைக் கண்ணுறுவீராக.

ஆகவே, என் இறையன்பரே, உந்தன் சமயத்தில் என்னைப் பற்றுறுதியாக இருந்திட இயலச் செய்யக்கூடியவற்றை என் மீது அனுப்பிடுவீராக; அதனால் நாஸ்திகர்களின் சந்தேகங்கள் என்னை உந்தன்பால் திரும்புவதிலிருந்து தடுத்திடாதிருக்கக் கூடுமாக.

மெய்யாகவே, சக்தியின் கடவுளும், ஆபத்தில் உதவுபவரும், சர்வ ஒளிமயமானவரும், சர்வவல்லவரும் நீரே ஆவீர்.

#11368
- Bahá'u'lláh

 

கடவுளே, என் கடவுளே! குற்றங்களை உணர்ந்து நான் உந்தன்பால் திரும்பியுள்ளேன்; மெய்யாகவே நீரே மன்னிப்பவரும், இரக்க-முடையவரும் ஆவீர்.

கடவுளே, என் கடவுளே! உம்மிடமே நான் திரும்பி வந்துள்ளேன்; மெய்யாகவே, நீரே என்றும் மன்னிப்பவரும், கிருபையாளரும் ஆவீர்.

கடவுளே, என் கடவுளே! உந்தன் அருட்கொடை எனும் கயிற்றை நான் இறுகப் பற்றிக்-கொண்டுள்ளேன்; விண்ணிலும் மண்ணிலும் உள்ள அனைத்தின் கருவூலமே உம்மிடம் உள்ளது.

கடவுளே, என் கடவுளே! உம்மை நோக்கி நான் விரைந்துள்ளேன்; மெய்யாகவே நீரே, மன்னிப்பவரும், பொங்கிவழியும் கிருபையின் பிரபுவும் ஆவீர்.

கடவுளே, என் கடவுளே! உந்தன் கிருபை எனும் விண்ணுலக மதுரசத்திற்காக நான் தாகமுற்றுள்ளேன்; மெய்யாகவே நீரே வழங்கு-பவரும், வள்ளன்்மையாளரும், கிருபையாளரும், சர்வசக்திமிக்கவரும் ஆவீர்.

கடவுளே, என் கடவுளே! உமது சமயத்தை நீர் வெளிப்படுத்தியுள்ளீர், உமது வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளீர், மற்றும் உந்தன் ஆதரவைப் பெற்றவர்களின் இதயங்களை உந்தன்பால் ஈர்த்திடக்கூடியவற்றை உமது கிருபை எனும் சொர்க்கத்திலிருந்து கீழே அனுப்பியுள்ளீர் என்பதற்கு நான் சாட்சியமளிக்கின்றேன். உமது உறுதியான கயிற்றினை இறுகப் பற்றிக்கொண்டும், உந்தன் பிரகாசமிகு ஆடையின் நுனியைப் பற்றிக்கொண்டுமுள்ளவன் நலம் பெறுவானாக!

பிரார்த்தனையைச் செவிமடுக்கும், பிரார்த்தனைக்குப் பதிலளிக்கும் கடவுளே, உமது திருவதனத்தின் ஒளியை நோக்கித் திரும்புவதைப், பாவம் புரிந்தோரின் பத்திரச் சுருளில் தடுத்திடாதவர்களாகிய, உம்மீது பக்திக் கொண்டோரின் பட்டியலில், உமது ஒளிபொருந்திய எழுதுகோல், என் பெயரையும் பதிவுச் செய்திடுமாறு, உயிருருக்கள் அனைத்திற்கும் பிரபுவானவரும், புலனாகுவது, புலனாகாதது ஆகியவற்றின் மன்னரும், உந்தன் சக்தி, உந்தன் மாட்சிமை, மற்றும் உந்தன் மேன்மை ஆகியவற்றினால், நான் உம்மிடம் கேட்டுக் கொள்கிறேன்.

#11369
- Bahá'u'lláh

 

பிரபுவே எனதாண்டவரே, நீர் மகிமைப்படுத்தப்படுவீராக! யாவும் உமது அழகிலிருந்து திரும்பிச் சென்றுவிட்ட இவ்வேளையில், உமது சமயத்தை வெளிப்படுத்தியவரான அவரிடமிருந்து அலட்சியமாகத் திரும்பிச் சென்றுள்ள இந்நாள்களில், நான் உம்மை நினைவுக்கூர்ந்து, உமது புகழைப் பாடிடவும் எனக்கு அருள் கூர்ந்திடுவீர் என்றும், உந்தன் உண்மையை மறுத்திட்ட உமது உயிரினங்களால் கடுமையாகத் தாக்கப்பட்டும், எந்த நாவும் வருணிக்கவியலாத துயரங்களால் சூழப்பட்டுமுள்ள, உம்மை உந்தன் அதி உயரிய நாமமானவரை நான் மன்றாடிக் கேட்கின்றேன்.

உமதன்பையும், உமது நினைவையும் உறுதியாகப் பற்றிக்கொள்வதற்கு என்னை இயலச் செய்வீராக என நான் உம்மிடம் மன்றாடுகிறேன். மெய்யாகவே, இது என் சக்திக்குட்பட்டதாகும்்; என்னுள் இருப்பவை அனைத்தையும் அறிந்தவரும் நீர் ஒருவரே ஆவீர். உண்மையாகவே, நீரே யாவற்றையும் மதிப்பிட்டு, அறிந்தவர். என் பிரபுவே, உலக முழுமையும் ஒளிரச் செய்துள்ள, உந்தன் வதன ஒளியின் பிரகாசங்களை என்னை இழந்திடும்படிச் செய்திடாதீர். அதி சக்திவாய்ந்தவரும், சர்வ ஒளிமயமானவரும், என்றும் மன்னிப்பவருமான இறைவன், உம்மைத் தவிர வேறிலர்.

#11370
- Bahá'u'lláh

 

பிரபுவே, என் அதி மிகு நேசரே, நீர் போற்றப்படுவீராக! உந்தன் சமயத்தில் என்னை உறுதியாக ஆக்கிடுவீராக; நான் உமது ஒப்பந்தத்தை மீறாதவர்களுள் ஒருவனாகவும், அவர்களின் சொந்த வீண் கற்பனைகள் எனும் தெய்வங்களைப் பின்பற்றாதவருள் ஒருவனாகவும் கருதப்பட அருள்வீராக. ஆகையால், உமது முன்னிலையில் உண்மை எனும் ஓர் இருக்கையைப் பெற்றிட இயலச் செய்தும், உமது கருணை எனும் ஒரு சின்னத்தையும் எனக்குத் தந்தருள்வீராக; மேலும் அச்சமற்றோரும், துயருக்கு ஆளாகிடாதோருமாகிய உமது ஊழியர்களோடு என்னை ஒன்றிணையச் செய்வீராக.

என் பிரபுவே, என்னை என்னிடமே கைவிட்டு விடாதீர்; அன்றியும், உமது சொந்தத் தன்மையின் அவதாரமானவரை அறிவதிலிருந்து என்னை இழக்கச் செய்திடாதீர்; அல்லது உமது புனித முன்னிலையிலிருந்து விலகிச் சென்றோருள் ஒருவனாக என்னைக் கணக்கிட்டு விடாதீர். என் கடவுளே, உந்தன் அழகின்பால் அவர்களது பார்வையைப் பதித்திடும் சலுகையைப் பெற்றவர்களுள் ஒருவனாகவும்; அதனில் அவர்கள் எத்துணை இன்பத்தைப் பெறுபவர்களாக இருக்கின்றார்கள் என்றால், விண்ணுலகு, மண்ணுலகு ஆகிய இராஜ்யங்களின் அரசாட்சிக்காகவோ, படைப்பெனும் இராஜ்யம் அனைத்திற்காகவோ, ஒரு கணநேரத்தைக்கூட பரிமாற்றம் செய்யாதிருப்போர்களாக இருக்கின்ற அவர்களுள் ஒருவனாக என்னைக் கணக்கிட்டுக் கொள்வீராக. என் பிரபுவே, உமது உலகின் மக்கள் கொடூரமாகத் தவறிழைத்துள்ள இந்நாள்களில் என் மீது கருணைக் காட்டுவீராக; எனவே, என் கடவுளே, உந்தன் மதிப்பீட்டில் நன்மையானதையும், தகுந்ததையும் எனக்கு வழங்கிடுவீராக. மெய்யாகவே, சர்வ சக்திமிக்கவரும், கிருபையாளரும், கொடைவள்ளலும், என்றும் மன்னிப்பவரும் நீரே ஆவீர்.

என் கடவுளே, செவிகள் கேளாமலும், கண்கள் குருடாகவும், நாவுகள் பேசவியலாமலும், இதயங்கள் புரிந்துகொள்ள இயலாமலும் உள்ளவர்களுள் ஒருவனாக நான் கருதப்-படாதிருக்க எனக்கு அருள்வீராக. பிரபுவே, அறியாமை, சுயநல ஆசை ஆகிய தீயிலிருந்து என்னை மீட்பீராக; உமது தலையாயக் கருணையின் சூழிடங்களுக்குள் என்னை நுழைந்திடச் செய்தும், உம்மால் தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கு நீர் விதித்தருளியவற்றை என் மீதும் பொழிந்திடுவீராக. நீர் விரும்பியதைச் செய்திடச் சக்தி படைத்தவர் நீரே. மெய்யாகவே, ஆபத்தில் உதவுபவரும், சுய ஜீவியானவரும் நீரே ஆவீர்.

#11371
- The Báb

 

கடவுளே, நீர் போற்றிப் புகழப்படுவீராக! உமது புனித முன்னிலையை அடையும் நாள் விரைந்து நெருங்கிட அருள்வீராக. உந்தனின், நல்விருப்பம் ஆகிய ஆற்றல்களின் வாயிலாக, எங்கள் இதயங்களை மகிழ்ச்சி பெறச் செய்வீராக; மேலும் உமது விருப்பத்திற்கும் உமது கட்டளைக்கும் நாங்கள் மனப்பூர்வமாக அடிப்பணிவதற்கு எங்களுக்குப் பற்றுறுதியை வழங்கிடுவீராக. மெய்யாகவே, உம்மால் படைக்கப்பட்டுள்ள, படைக்கப்படவிருக்கும் பொருள்கள் அனைத்தையும் உந்தனின் அறிவு தழுவியுள்ளது; உம்மால் உருபெற்றுள்ள, உருப்பெறவிருக்கின்ற எதிலும் உந்தனின் விண்ணுலக வலிமை உயர்ந்தோங்கி நிற்கின்றது. உம்மைத் தவிர, வழிபடுவதற்கென வேறெவரும் இலர். உம்மைத் தவிர, ஆவல்கொள்வதற்கு வேறெவரும் இலர், உம்மைத் தவிர, வணங்குவதற்கென வேறெவரும் இலர். உமது நல்விருப்பத்தையன்றி, நேசிப்பதற்கு வேறெதுவுமில்லை.

மெய்யாகவே, அதியுயரிய ஆட்சியாளரும், இறையாண்மைமிக்க உண்மையானவரும், ஆபத்தில் உதவுபவரும், சுய ஜீவியானவரும் நீரே ஆவீர்.

#11372
- The Báb

 

பிரபுவே, எனதாண்டவரே!

உமது அன்பர்களை உமது சமயத்தில் உறுதியாய் இருக்கவும் உம் வழியில் நடக்கவும் உமது சமயத்தில் பற்றுறுதியுடன் இருக்கவும் துணை புரிவீராக. அகங்காரம், உணர்ச்சி ஆகியவற்றின் தாக்குதல்களைத் தாங்கிடவும், தெய்வீக வழிகாட்டுதல் என்னும் ஒளியினைப் பின்பற்றவும் அவர்களுக்கு அருள் புரிவீராக. சக்திமிக்கவரும் அருளாளரும், சுயஜீவியரும், அளிப்பவரும் இரங்குபவரும் எல்லாம் வல்லவரும் சர்வ வள்ளன்மை மிக்கவரும் நீரே ஆவீர்.

#11373
- `Abdu'l-Bahá

 

என் கடவுளே, நேர்வழிக்குக் கொண்டுசெல்லும் பாதையைத் தேடுவோரை வழிநடத்துபவரே; நரகத்தின் கழிவுகளிலிருந்து வழிதவறிய, பார்வையிழந்த ஆன்மாக்களை விடுவிப்பவரே; நேர்மையானோருக்குப் பெரும் கொடைகளையும் தயைகளையும் வழங்கிடுபவரே; உந்தன் வெல்லவியலாத புகலிடத்தில் அச்சங்-கொள்வோரைப் பாதுகாப்பவரே; உந்தன் அதிவுயரிய தொடுவானத்தின் மீதிருந்து உம்மை நோக்கிக் குரல் எழுப்புவோரின் அழைப்புக்குப் பதிலளிப்பவரும் நீரே.

என் பிரபுவே, நீர் போற்றப்படுவீராக! கவனந்தவறியோரை நம்பிக்கையின்மை எனும் மரணத்திலிருந்து நீர் வழிகாட்டியும், உம்மை நெருங்கி வந்தோரைப் பயண இலக்கிற்குக் கொண்டுவந்தும் உள்ளீர்; உமது ஊழியர்களுள் உறுதியானோரை, அவர்களின் விருப்பமிகு ஆசைகளை நிறைவேற்றியதன் வழி, அவர்களை மகிழச் செய்துள்ளீர்; உமது அழகென்னும் இராஜ்யத்திலிருந்து, உமக்காக ஏங்குவோரின் முகங்களின் முன்னே, மீண்டும் ஒன்று சேர்த்தல் வாயிற்கதவுகளைத் திறந்து, அவர்களை பறிகொடுத்தல், இழத்தல், ஆகிய தீயிலிருந்து காப்பாற்றியுள்ளீர் – அதனால் அவர்கள், உந்தன்பால் விரைந்து சென்று, உமது முன்னிலையை அடைந்து, உமது வரவேற்கும் வாசலுக்கு வந்து, ஒரு தாராளப் பங்கெனும் பரிசுகளைப் பெற்றுள்ளனர்.

என் பிரபுவே, அவர்கள் தாகமுற்றிருந்தனர்; அவர்களின் வறண்ட உதடுகளுக்கு மீண்டும் ஒன்றுசேர்தல் எனும் நீரை வழங்கியுள்ளீர். மென்மையானவரே, வழங்கியருள்பவரே, உந்தன் அருட்கொடை, கிருபை ஆகிய களிம்பினைக் கொண்டு, நீர் அவர்களின் வேதனையைத் தணியச் செய்துள்ளீர்; உமது இரக்கமெனும் தலையாய மருந்தினைக் கொண்டு அவர்களின் நோய்களைத் தீர்த்துள்ளீர். பிரபுவே, உமது நேர்வழியில் அவர்கள் பாதங்களைத் திடமாக்கிடுவீராக; அவர்களுக்காக ஊசிமுனையின் காதினை அகலமாக்கிடுவீராக; அரசு ஆடைகளால் அணிவிக்கப்பட்டு, அவர்கள் பெற்றுள்ள புகழில் என்றென்றும் நடந்திடச் செய்வீராக.

மெய்யாகவே, தாராளமானவரும், என்றும் வழங்குபவரும், மதிப்புமிக்கவரும், அதி கொடையாளியும் நீரே ஆவீர். வல்லவரும், சக்திமிக்கவரும், உயர்வானவரும், வெற்றியாளருமான கடவுள் உம்மைத் தவிர வேறிலர்.

#11374
- `Abdu'l-Bahá

 

பாதுகாப்பு

பிரபுவே, என் இறைவா! நீர் போற்றப்படுவீராக. உமது அருள்பாலிப்புகளின் திசையிலல்லாது வேறெங்கும் திரும்பாதிருக்குமாறும் உமது தீர்க்கமான கட்டளைக்கும் மாற்றவியலா நோக்கத்திற்கும் ஏற்ப அனுப்பி வைக்கப்பட்டுள்ள உமது தெளிவான நூலில் நீர் கட்டளையிட்டுள்ளதையன்றி வேறெதனையும் கடைப் பிடிக்காதிருக்குமாறே நான் உமது ஊழியர்களை அழைத்தேன் என்பதனை நீர் பார்க்கின்றீர்; அறிகின்றீர்.

என் இறைவா, உம்மால் அனுமதிக்கப்பட்டாலன்றி நான் எதனையும் கூறவியலாது; உமது ஒப்புதலைப் பெறும்வரை நான் எத் திசையிலும் நகரவியலாது. என்னை உருவாக்கி, உமது வலிமையின் சக்தியினால் உமது சமயத்தை வெளிப்படுத்திட எனக்கு அருளினைப் பொழிந்த எந்தன் இறைவன் நீரே ஆவீர். நான் ஆளாக்கப்பட்ட இன்னல்கள் அத்தகையதானதன் காரணத்தினால் உம்மைப் புகழ்வதிலிருந்தும் உமது ஒளியின் மகிமையை மிகைப்படுத்துவதிலிருந்தும் எனது நா தடுக்கப்பட்டுள்ளது.

என் இறைவா, உமது கட்டளையின் வழியாகவும் உமது இறைமையின் ஆற்றல் வழியாகவும் நீர் எனக்கு நியமித்தவைக்காகப் புகழெல்லாம் உமக்கே உரியதாகட்டும். என்னையும் என்னை நேசிப்போரையும் உந்தன்பால் எங்களது அன்பில் வலுவுடையோராக்கி, உமது சமயத்தில் எங்களைத் திடப்பற்று உடையவர்களாக இருக்கச் செய்வீராக. என் இறைவா! உமது வலிமையின் மீது ஆணை! உமது ஊழியனின் அவமானம் அவனை உம்மிடமிருந்து திரையிட்டு மறைத்ததுபோல் ஆகிவிடும்; உம்மை அறிந்து கொள்வதே அவனுக்குப் புகழாகும். உந்தன் திருநாமத்தின் சக்தி என் கவசமாகும் போது யாதொரு தீங்கும் என்னைத் தாகவியலாது. உமதன்பு என்னுள்ளத்தில் குடி கொள்ளும்போது, இவ்வுலகின் அணைத்து இன்னல்களும் என்னை ஒரு போதும் கலக்கமடியச் செய்யாது.

ஆகவே, என் பிரபுவே, எது என்னையும் எனது அன்புக்குரியவர்களையும் உமது உண்மையினை மறுத்துள்ளோர், உமது அடையாளங்களை நம்பிட மறுத்தோர் ஆகியோரின் விஷமத்திலிருந்து காத்தருளுமோ அதனை அனுப்பிடுவீராக.

மெய்யாகவே, நீரே ஒளிமயமானவர், அதி வள்ளன்மை மிகுந்தவர்!

#11375
- Bahá'u'lláh

 

பிரபுவே, எனதான்டவரே, நீர் போற்றப்படுவீராக! உந்தன் மென்கருணை எனும் மதுரசத்தை, உமது கிருபை எனும் கரங்களிலிருந்து பருகியும், உமது நாள்களில் உந்தன் அன்பெனும் நறுமணத்தைச் சுவைத்திட்ட இவன், உமது ஊழியனாவான். எந்தத் துயரமும், உமதன்பில் மகிழ்வதிலிருந்தோ, உந்தன் வதனத்தைக் கண்ணுறுவதிலிருந்தோ; மற்றும் கவனமின்மை எனும் சைனியங்கள் அனைத்தும் உமது நல்விருப்பம் எனும் பாதையிலிருந்து அவர்களை விலகச் செய்திட சக்தியற்று இருக்கின்றனவோ, அந்த உந்தன் நாமங்களின் திருவுருவான- வர்களினால், உம்மிடமுள்ள நற்பொருள்களை அவனுக்கு வழங்கியும், இவ்வுலகினை அவன் ஒரு கண்சிமிட்டலை விட விரைவாக மறைந்திடும் ஒரு நிழலாகக் கருதிடும் வகையில், அவனை அத்தகையச் சிகரங்களுக்கு உயர்த்திடுமாறு நான் உம்மிடம் மன்றாடுகிறேன்.

என் கடவுளே, உமது அளவிடமுடியாத மாட்சிமையின் சக்தியைக் கொண்டு, நீர் வெறுத்திடும் அனைத்திலிருந்தும் அவனைப் பாதுகாப்பாக வைத்திடுவீராக. மெய்யாகவே, நீரே அவனது பிரபுவும், எல்லா உலகங்களின் பிரபுவும் ஆவீர்.

#11376
- Bahá'u'lláh

 

பிரபுவே, எனதாண்டவரே, உந்தன் நாமம் போற்றப்டுவமாக! எதன் மூலமாக அந்நேரம் வந்ததோ, மீண்டும் உயிர்த்தெழுதல் நிகழ்ந்ததோ, விண்ணிலும் மண்ணிலுமுள்ளோர் யாவரையும் பயமும் நடுக்கமும் பற்றிக் கொண்டதோ, அந்த உமது திருநாமத்தின் பெயரால், உம்பால் திரும்பியும், உமது சமயத்திற்கு உதவிட்ட உமது

ஊழியர்களின் இதயங்களைப் பரவசமடையக்-கூடியவை எவையோ அவற்றை, உமது இரக்கம் எனும் சுவர்க்கத்திலிருந்தும், உமது மென் கருணையெனும் மேகங்களிளிருந்தும், பொழிந்தருளுமாறு உம்மைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்.

என் பிரபுவே, உமது ஊழியர்களையும், உமது பணிப்பெண்களையும் பயனற்ற எண்ணங்கள், வீண் கற்பனைகள் என்னும் ஏவு கணைகளிலிருந்து பாதுகாத்து, உமது அருள் என்னும் கரங்களிலிருந்து மென்மையாக வழிந்திடும் உமது அறிவெனும் நீரினைப் பருகச் செய்வீராக.

நீர், உண்மையாகவே, எல்லாம் வல்லவர், அதி மேன்மைப்படுத்தப்பட்டவர், என்றும் மன்னித்-தருள்பவர், அதி கருணையாளர்.

#11377
- Bahá'u'lláh

 

கடவுளே, என் கடவுளே! நான் உமது அன்பெனும் கயிற்றினை இறுகப் பற்றி, என்னை உமது பொறுப்பிலும் பாதுகாப்பிலும் முழுமையாக ஒப்படைத்து, என் இல்லம் நீங்கி வெளியில் செல்கிறேன். சொற்கேளாத, கட்டுமீறித்தனமாய் நடந்திடும் முரண்பாடுடைய கொடியோனிட-மிருந்தும், உம்மிலிருந்து வெகுதூரம் விலகித் திசை தவறிப் போன தீங்கிழைப்போரிடமிருந்தும் உமது நேசர்களை, உமது வள்ளன்மையினாலும் கிருபையினாலும் பாதுகாக்குமாறு பரிந்து கேட்கின்றேன். பிறகு என் இல்லம் திரும்பவும் உமது ஆற்றலாலும் வலிமையாலும் எனக்குச் சக்தியளிப்பீராக. உண்மையாகவே, நீரே, எல்லாம் வல்லவர், ஆபத்தில் உதவுபவர், சுயஜீவியானவர்.

#11378
- Bahá'u'lláh

 

மேன்மையான, அதி உயரிய, அதி விழுமிய அவரது திருநாமத்தின் பேரால்!

பிரபுவே, எனதாண்டவரே நீர் போற்றப்படுவீராக! எனது கடவுளும், எனது பிரபுவும், எனது ஆண்டவரும், எனது ஆதரவும், எனது நம்பிக்கையும், எனது புகலிடமும், எனது ஒளியும் ஆனவரே. மறைவாயுள்ள, மதிப்பிற்குரிய உம் ஒருவரை அல்லாது வேறெவருமே அறிந்திராத உமது திருநாமத்தின் பேரால், இந் நிருபத்தினை ஏந்தி வருபவரை ஒவ்வொரு பேரிடரிலிருந்தும் கொள்ளை நோயிலிருந்தும், கொடிய ஆண், பெண் ஒவ்வொருவரிடமிருந்தும், தீமையிழைப் போனின் தீங்கிலிருந்தும், சமய நம்பிக்கை அற்றோரின் சூழ்ச்சியிலிருந்தும் பாதுகாக்குமாறு உம்மிடம் கேட்டுக் கொள்கின்றேன். மேலும், அனைத்துப் பொருள்களின் மீதுமான அதிகாரத்தினை உமது கையில் வைத்துள்ள என் இறைவா, ஒவ்வொரு நோவிலிருந்தும் மன வேதனையிலிருந்தும், அவரைப் பாதுகாப்பீராக. உண்மையிலேயே, நீரே, பொருள்கள் அனைத்தின் மீதும் சக்தி கொண்டுள்ளவர். நீர் திருவுளங் கொண்டதற்கேற்ப ஆணையிடுகின்றீர்; விரும்பியவாறு விதித்திடுகின்றீர்.

மன்னருக்கெல்லாம் மன்னரே! அன்புள்ள பிரபுவே! புராதன அழகிற்கும் அருளுக்கும், தயாளத்திற்கும் ஈகைக்கும், ஊற்றாகியவரே! நோய்களைக் குணப்படுத்துபவரே! தேவை-களுக்குப் போதுமானவரே! ஒளிக்கெல்லாம் ஒளியானவரே! ஒளிக்கெல்லாம் மேலான ஒளியானவரே! ஒவ்வோர் அவதாரத்தையும் வெளிப்படுத்துபவரே! இரக்கக் குணமுடையவரே! கருணை மிக்கவரே!

அருளாளரே, வள்ளன்மை மிக்கவரே, உமது அதிமிகு கருணை, அபரிமிதமான அருள் ஆகியவற்றின் மூலமாக இந் நிருபத்தினை ஏந்தி வருபவரிடம் கருணை காட்டுவீராக! மேலும், உமது பாதுகாப்பின் வாயிலாக, அவரது உள்ளமும் மனமும் அருவருப்புக் கொண்டிடும் யாவற்றிலிருந்தும் அவரைக் காத்தருள்வீராக. சக்தி அளிக்கப்பட்டோரிடையே, நீர், மெய்யாகவே, அதி சக்தி வாய்ந்தவர்.

உதித்திடும் கதிரவனே, இறைவனின் ஒளி உம் மீது இலயித்திடுமாக! தம்மைத் தவிர கடவுள் வேறெவருமிலர் என எல்லாம் வல்ல, அதி அன்பான, ஆண்டவனே தம்மைக் குறித்து அளித்திட்ட அத்தாட்சிக்கு, நீர் சாட்சியம் அளிப்பீராக.

#11379
- Bahá'u'lláh

 

துன்பத்திலிருந்து விடுபட விரும்புவீராயின், சர்வ கருணைமிக்கவரின் எழுதுகோலினால் வெளிப்படுத்தப்-பட்டுள்ள இப்பிரார்த்தனையைக் கூறுவீராக:

கடவுளே, என் கடவுளே! உமது ஒற்றுமைக்கும் உமது ஒருமைக்கும் நான் சாட்சியமளிக்கின்றேன். நாமங்களின் உடைமையாளரும் விண்ணுலகங்- களின் அமைப்பாளருமானவரே, உமது மேன்மைமிகு திருவாக்கினுடைய ஊடுருவும் செல்வாக்கு, மற்றும் உமது அதிவிழுமிய எழுதுகோல் சக்தியின் மூலமாக, உமது சக்தி மற்றும் வலிமை எனும் அடையாளங்களைக் கொண்டு எனக்கு உதவி புரியுமாறும், உமது ஒப்பந்தம், உமது சாசனம் ஆகியவற்றை மீறியுள்ள உந்தன் எதிரிகளின் விஷமங்களிலிருந்து என்னைப் பாதுகாப்பீராக. மெய்யாகவே, சர்வவல்லவரும், அதி சக்திமிக்கவரும் நீரே ஆவீர்.

இப்பிரார்த்தனை, தகர்க்கவியலா வலிமைமிகு அரணும், வென்றிடவியலா படையுமாகும். அது பாதுகாப்பை வழங்கி விடுதலையை உறுதி செய்கின்றது.

#11386
- Bahá'u'lláh

 

என் பிரபுவே, தாய்நூலில் வரையப்பட்டுள்ள, உமது மதிப்பின்படி எங்களுக்கு மிகச் சிறந்ததெனக் கருதப்படுவதை, எனக்கும், உம்மீது நம்பிக்கைக் கொண்டோருக்கும் விதித்திடுவீராக; ஏனெனில், அனைத்துப் பொருள்களின் முன்னரே விதிக்கப்பட்ட அளவுகளை உந்தன் கரத்தின் பிடிக்குள் நீர் வைத்துள்ளீர்.

உமது அன்பை நெஞ்சார வைத்திருப்போரின் மீது உமது நேர்த்தியான பரிசுகள் இடைவிடாது பொழியப்படுகின்றன; உமது தெய்வீக ஒற்றுமையை உணர்ந்தோரின் மீது, உந்தன் விண்ணுலக அருட்கொடைகளின் அற்புதச் சின்னங்கள் தாராளமாக வழங்கப்படுகின்றன. எங்களுக்கென நீர் விதித்துள்ள அனைத்தையும் நாங்கள் உந்தன் பாதுகாப்பில் வைக்கின்றோம்; உமது அறிவு தழுவிடும் எல்லா நன்மைகளையும் எங்களுக்குத் தந்தருளுமாறு உம்மிடம் மன்றாடுகிறோம்.

என் பிரபுவே, சகலத்தையும் அறிந்திடும் உமது சக்தி உணரக்கூடிய எல்லாத் தீமைகளிலிருந்தும் எங்களைப் பாதுகாப்பீராக; ஏனெனில், உம்முள் உள்ளவற்றை அன்றி வேறெந்த சக்தியோ பலமோ இல்லை; உமது முன்னிலையிலிருந்து வரும் வெற்றி அல்லாது வேறெதுவும் வரப்போவதில்லை; மேலும் ஆணையிடுவதற்கான அதிகாரம் உம் ஒருவருக்கே உரியது. இறைவன் விரும்பிய அனைத்தும் நிகழ்ந்துள்ளன, அவர் விரும்பாத எதுவும் நிகழப்போவதில்லை.

அதி உயர்வான, அதி வல்லமைமிக்கவரான கடவுளில் அன்றி வேறு சக்தியோ பலமோ இல்லை.

#11380
- The Báb

 

கடவுளே, ஒளி உமக்கே உரியதாகட்டும்! பொருள்கள் அனைத்திற்கும் முன்பாக இருந்துள்ளவரும், பொருள்கள் அனைத்திற்குப் பிறகும், பொருள்கள் அனைத்திற்கு அப்பாலும் நிலைத்திருக்கக் கூடிய கடவுள் நீரே ஆவீர். எல்லாப் பொருள்களையும் அறிந்து, எல்லாப் பொருள்களுக்கும் உச்சவுயர்வாக இருக்கும் கடவுள் நீரே ஆவீர். எல்லாப் பொருள்களையும் இரக்கத்தோடு கையாள்பவரும், எல்லாப் பொருள்களுக்கிடையே தீர்ப்பளிப்பவரும், எல்லாப் பொருள்களையும் உந்தன் அகக் காட்சியால் தழுவிடும் கடவுள் நீரே ஆவீர். என் பிரபு, நீரே கடவுள்; என் நிலையை நீர் அறிவீர்; எனது அக, புற ஜீவனை நீர் காண்கின்றீர்.

உந்தன் அழைப்புக் குரலுக்குப் பதிலளித்திட்ட எனக்கும், நம்பிக்கையாளர்களுக்கும் உமது மன்னிப்பை அருள்வீராக. என் மீது துக்கம் விளைவிக்க விரும்பும், அல்லது எனக்குக் கெடுதல் நேரட்டும் என ஆவலுறும் எவரொருவரின் தீங்கினையும் எதிர்த்திடும் எனது நிறைவான உதவியாளராக நீர் ஆகிடுவீராக. மெய்யாகவே, எல்லாப் படைப்புப் பொருள்களுக்கும் பிரபு நீரே ஆவீர். அனைவருக்கும் நீரே நிறைவளிக்கின்றீர், ஆனால் எவருமே உம்மையன்றி தன்னிறைவாக இருந்திடவியலாது.

#11381
- The Báb

 

விஞ்சிடும் மாட்சிமைக்கான பிரபுவும், சகல கவர்ச்சிமிக்கவருமான கடவுளின் பெயரால். ஆட்சியதிகாரத்தின் மூலத்தைத் தனது கைக்குள் வைத்திருக்கும் பிரபு, புனிதப்படுத்தப்படுவாராக. “ஆகு” என்றதும் யாவும் உருவாகிடுகின்ற, தமது கட்டளையிடும் வார்த்தையைக் கொண்டு தாம் விரும்பிய அனைத்தையும் அவர் படைக்கின்றார். இதுவரை அதிகாரத்தின் சக்தி அவருடையதாகவே இருந்துவந்துள்ளது, இதற்குப் பிறகும் அது அவருடையதாகவே இருந்துவரும். தமது கட்டளையின் சக்தி வாயிலாக, தாம் விரும்பிய எவரையும் அவர் வெற்றிப்பெறச் செய்வார், உண்மையாகவே, அவரே சக்திமிக்கவரும், சர்வ வல்லவரும் ஆவார்.

திருவெளிப்பாடு, படைப்பு மற்றும் அவற்றுக்கு இடையேயுள்ள இராஜ்யங்களின் எல்லா மேன்மையும் மாட்சிமையும் அவருக்கே உரியதாகும். மெய்யாகவே, அவரே ஆற்றல்மிக்கவர், சர்வ ஒளிமயமானவர். நித்திய காலம் முதல் வெல்லமுடியாத பலத்திற்கு அவரே தோற்றுவாயாக இருந்துள்ளார், என்றென்றும் இருந்தும் வருவார். உண்மையில், அவரே வலிமைக்கும் சக்திக்குமான பிரபு. விண்ணும், மண்ணும், அவற்றுக்கு இடையேயுள்ள அனைத்து இராஜ்யங்களும் கடவுளுக்கே உரியவையாகும்; அவரது சக்தி, அனைத்திலும் உயர்வானதாகும். பூமி, சொர்க்கம், மற்றும் அவற்றுக்கு இடையேயுள்ள அனைத்துச் செல்வங்களும் அவருடையவையே; அவரது பாதுகாப்பு அனைத்துப் பொருள்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

விண்ணுலகங்களும் மண்ணுலகும், அவற்றுக்கு இடையேயுமுள்ள அனைத்திற்கும் படைப்பாளர் அவரே; உண்மையாகவே, அவரே அனைத்துப் பொருள்களுக்கும் ஒரு சாட்சியாவார். விண்ணுலகங்களிலும் மண்ணுலகிலும், அவற்றுக்கு இடையேயுமுள்ள அனைத்திலும் வசிக்கும் யாவற்றுக்கும் தீர்ப்பளிக்கும் பிரபு அவரே ஆவார்; உண்மையாகவே, தீர்ப்பளிப்பதில் இறைவன் துரிதமானவர். விண்ணுலகங்களிலும் மண்ணுலகிலும், அவற்றுக்கு இடையேயுமுள்ள அனைத்திற்கும் பங்கிடும் அளவினை அவர் அமைத்திடுவார். மெய்யாகவே, அவரே அதிவுயரிய பாதுகாபாளர். விண்ணுக்கும் மண்ணுக்கும், அவற்றுக்கு இடையேயுமுள்ள அனைத்திற்குமான திறவுகோல்களை அவர் தமது பிடிக்குள் வைத்துள்ளார். தமது கட்டளை எனும் சக்தியின் வாயிலாகத், தாம் விரும்பியதற்கு ஏற்றவாறு அவர் பரிசுகளை வழங்கிடுவார். உண்மையில், அவரது கிருபை அனைத்தையும் சூழ்ந்துள்ளது; அவரே சகலமும் அறிந்தவர்.

கூறுவீராக: எனக்கு நிறைவளிப்பவர் கடவுளே ஆவார்; பொருள்கள் அனைத்தின் இராஜ்யங்களையும் தமது பிடிக்குள் வைத்திருப்பவர் அவரேயாவார். விண்ணிலும் மண்ணிலும், அவற்றுக்கு இடையேயுமுள்ள அவரது சேனைகளின் சக்தி வாயிலாக, தமது ஊழியர்களுள் தாம் விரும்பிய எவரையும் அவர் உண்மையாகவே பாதுகாத்திடுவார். உண்மை-யாகவே, பொருள்கள் அனைத்தையும் கண்காணிப்பவர் கடவுளேயாவார்.

பிரபுவே, அளவிடற்கரிய உயர்நிலையில் நீர் இருக்கின்றீர்! எங்களுக்கு முன்னேயும், பின்னேயும், எங்கள் தலைகளுக்கு மேலேயும், எங்கள் வலப்புறத்திலும், இடப்புறத்திலும், எங்கள் பாதங்களுக்குக் கீழேயும், மற்றும் நாங்கள் எதிர்கொள்ளும் எல்லாப்பக்கங்களிலும் இருப்பவற்றிலிருந்தும் எங்களைப் பாதுகாப்பீராக. மெய்யாகவே, எல்லாப் பொருள்களின் மீதும் நீர் வழங்கிடும் பாதுகாப்பு தவறாததாகும்.*

பாதுகாப்புக்கான இந்தப் பிரார்த்தனையின் அசல், பாப் பெருமானாரின் சொந்த கையெழுத்தில், ஐந்து முனைக் கொண்ட நட்சத்திர வடிவில் எழுதப்பட்டுள்ளது.

#11382
- The Báb

 

கடவுளே, என் கடவுளே! உமது நம்பிக்கைக்குப் பாத்திரமான ஊழியர்களைத் தானெனுந் தன்மை, மனவெழுச்சி ஆகிய தீமைகளிலிருந்து பாதுகாப்பீராக; உமது அன்புக் கருணையெனும் கவனமிக்கக் கண்களைக் கொண்டு குரோதம், வெறுப்பு, பொறாமை ஆகியவற்றிலிருந்து அவர்களைப் பாதுகாத்து, உமது கண்காணிப்பு எனும் தகர்க்கவியலாத கோட்டையினுள் அவர்களுக்குப் புகலிடமளிப்பீராக; ஐயமெனும் அம்புகளிலிருந்து அவர்களைக் காத்து உமது ஒளிமிக்க அடையாளங்களின் வெளிப்பாடுகளாக ஆக்குவீராக; உமது தெய்வீக ஒற்றுமை என்னும் பகலூற்றிலிருந்து பாய்ந்திடும் பிரகாசமிக்க கதிர்களைக் கொண்டு அவர்களின் வதனங்களை ஒளிபெறச் செய்வீராக; உமது இராஜ்யத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்ட பாசுரங்களைக் கொண்டு அவர்களின் உள்ளங்களைக் களிக்கச் செய்வீராக; உமது ஒளி என்னும் அரசிலிருந்து வந்திடும் அனைத்தையும் ஆட்சிபுரிந்திடும் உமது சக்தியினைக் கொண்டு அவர்களின் இடைகளை வலுப்பெறச் செய்வீராக. சர்வ வல்லமை உடையவரும், பாதுகாப்பவரும், எல்லாம் வல்லவரும், கிருபையாளரும் நீரே ஆவீர்.

#11383
- `Abdu'l-Bahá

 

என் பிரபுவே! மனிதர்கள் வேதனைகளாலும் பேரிடர்களாலும் சுற்றி வளைக்கப்பட்டிருப்-பதையும் இன்னல்களாலும் துன்பங்களாலும் சூழப்பட்டிருப்பதையும் நீர் அறிவீர்.

ஒவ்வொரு சோதனையும் மனிதனைத் தாக்குகின்றது, ஒவ்வொரு துரதிர்ஷ்டமும் அவனை ஓர் அரவத்தின் தாக்குதலைப் போல் சாடுகின்றது. உமது பாதுகாப்பு, பராமரிப்பு, காவல், கவனிப்பு என்னும் இறக்கையின் கீழல்லாது அவனுக்குத் தஞ்சமோ புகலிடமோ கிடையாது.

கருணை மிக்கவரே! என் பிரபுவே! உமது பாதுகாப்பை என் கவசமாகவும், உமது பராமரிப்பை என் கேடயமாகவும், உமது ஒருமை என்னும் வாயிலில் பணிவை என் காவலாகவும், உமது கவனிப்பையும் ஆதரவையும் என் அரணாகவும் உறைவிடமாகவும் ஆக்குவீராக. எனது தான் எனுந் தன்மை, ஆசை ஆகியவற்றின் தூண்டுதல்- களிலிருந்து என்னைப் பாதுகாத்து, என்னை ஒவ்வொரு நோயிலிருந்தும், சோதனையி-லிருந்தும், இடர்ப்பாடிலிருந்தும், கடும் பரீட்சையிலிருந்தும் காத்திடுவீராக.

மெய்யாகவே, காப்பவரும், பாதுகாவலரும், பராமரிப்பவரும், நிறைவளிப்பவரும் நீரே; மெய்யாகவே, நீரே கருணையாளரிலேயே அதிகருணையாளர்.

#11384
- `Abdu'l-Bahá

 

இரக்கமும் அன்பும் நிறைந்த ஆண்டவனே! கடலின் முடிவில்லா அலைகளைப்போல கிழக்கு அசைவுற்றுள்ளது, மேற்கு அலை பாய்கின்றது. புனிதமெனும் மெல்லிய இளங்காற்று பரவியுள்ளது, காணவியலா இராஜ்யத்தினின்று, உண்மைச் சூரியனின் கதிர்கள் பிரகாசமாக ஒளிவீசுகின்றன. தெய்வீக ஒற்றுமையின் கீர்த்தனைகள் பாடப்படுகின்றன, விண்ணுலக வலிமையின் பதாகைகள் காற்றில் அசைகின்றன. தேவைதைப்போன்ற குரல் எழுப்பப்பட்டு, அது, பெருங்கடல் விலங்கின் கர்ஜனையைப்போன்று, சுயநலமின்மை, நிலையற்றத் தன்மை ஆகியவற்றுக்கான அழைப்பொலியை எழுப்பியுள்ளது. யா பஹாவுல்-அப்ஹா எனும் வெற்றிக்குரல் எல்லாத் திசைகளிலிருந்தும் எதிரொலிக்கின்றன; யா அளியுள்-அலா எனும் அழைப்புக் குரல் எல்லாப் பிரதேசங்களிலும் ஒலிக்கின்றது. இதயங்களை கவருகின்ற ஒருவரின் பேரொளியைத் தவிர இவ்வுலகில் வேறெந்த பரபரப்பும் இல்லை; நிகரற்றவரும், நல்லன்பருமாகிய அவருக்காப்க பொங்கி எழுகின்ற அன்பைத் தவிர வேறெந்த கழகமும் இல்லை.

ஆண்டவனின் அன்புக்குரியவர்கள், தங்கள் கஸ்தூரி மணம் கமழும் சுவாசத்தோடும், எல்லா வெப்ப சூழல்களிலும், பிரகாசமான மெழுகுவத்திகளைப் போல எரிகின்றனர்; சகல இரக்கமுடையவரின் அன்பர்கள், இதழ் விரியும் மலர்களைப் போல, எல்லாத் தேசங்களிலும் காணப்படுகின்றனர். ஒரு கணநேரமும் அவர்கள் ஓய்வெடுத்ததில்லை; உம்மை நினைப்பதில் அல்லாது அவர்கள் சுவாசிப்பதில்லை; உமது சமயத்திற்குச் சேவையாற்றுவதைத் தவிர அவர்கள் வேறெதற்கும் யாசித்ததில்லை.

உண்மை எனும் புல்வெளியில் அவர்கள் இனிய கீதம் பாடிடும் இராப்பாடிகள் ஆவர்; வழிகாட்டல் எனும் பூங்காவில் அவர்கள் பிரகாசமான வர்ணங்கள் கொண்ட மலர்களைப்போல் ஆவர். மெய்ம்மை எனும் இறைப்பூங்காவின் நடைப்-பாதைகளை அவர்கள் மர்ம மலர்களைக் கொண்டு அலங்கரித்துள்ளனர்; அசையும் ஊசி இலை மரங்களைப்போல் அவர்கள் தெய்வீக விருப்பம் எனும் நதிக்கரைகளில் வரிசையாக நிற்கின்றனர். உயிருரு எனும் தொடுவானத்தின் மேல் அவர்கள் பிரகாசமான நட்சத்திரங்களாக ஒளிவீசுகின்றனர்; உலகின் வானத்தின் மீது அவர்கள் ஜொலிக்கும் மண்டலங்களாக ஒளிர்கின்றனர். அவர்கள் விண்ணுலகக் கிருபையின் அவதாரங்கள் ஆவர்; தெய்வீக உதவி எனும் ஒளியின் பகலூற்றுகள் ஆவர்.

அன்பான பிரபுவே, அனைவரும் திடமாகவும் உறுதியாகவும் இருப்பதற்கும், நித்திய பேரொளியால் பிரகாசிக்கவும் அவர்களுக்கு அருள்புரிவீராக. அதனால், ஒவ்வொரு சுவாசித்தலிலும், உமது அன்புக் கருணை எனும் உறைவிடத்திலிருந்து மென்மையான இளங்-காற்றுகள் வீசிடக் கூடுமாக; அதனால் உமது கிருபை எனும் சமுத்திரத்திலிருந்து ஒரு மூடுபனி தோன்றிடக்கூடுமாக; உமது அன்பென்னும் கனிவான சாரல்கள் பசுமையை வழங்கக் கூடுமாக; தெய்வீக ஒற்றுமை எனும் ரோஜா தோட்டத்-திலிருந்து மென் காற்று அதன் நறுமணத்தை மிதந்துச் செல்லச் செய்யட்டுமாக.

உலகின் அதி நேசரே, உந்தன் பேரொளியிளிருந்து ஒளிக்கதிர் ஒன்றைத் தந்தருல்வீராக. மனுக்குலத்தின் நன்நேேசரே, உமது திரு- வதனத்தின் ஒளியை எங்கள் மீது பொழிந்திடுவீராக.

சர்வ வல்லமை பொருந்திய இறைவனே, எங்களைப் பாதுகாத்து எங்களின் புகலிடமாக ஆகிடுவீராக; உமது வலிமையையும் அரசாட்சியையும் வெளிப்படுத்திடுவீராக.

அன்பான பிரபுவே, தேச துரோகம் இழைத்திடுவோர் சில மாநிலங்களில் இயங்கியும் செயல்பட்டும் வருகின்றனர்; அல்லும் பகலும் அவர்கள் கொடியதோர் தவறை விளைவிக்கின்றனர்.

ஓநாய்களைப் போல, தாக்குவதற்காகக் கொடுங்கோலர்கள் பதுங்கி நிற்கின்றனர்; தவறிழைக்கப்பட்ட, குற்றமற்ற மந்தைகளுக்கு ஆதரவோ, அடைக்கலாமோ இல்லை. தெய்வீக ஒற்றுமை எனும் புல்வெளிகளில் உள்ள மான்களை வேட்டை நாய்கள் பின்தொடர்கின்றன; விண்ணுலக வழிகாட்டல் எனும் மலைகளின் மீதுள்ள வண்ணக் கோழிகளைப் பொறாமை எனும் காகங்கள் துரத்துகின்றன.

தெய்வீக பாதுகாப்பளிப்பவரே, எங்களைப் பேணிகாத்து பாதுகாப்பீராக! எங்கள் கேடயமானவரே, எங்களை காப்பாற்றி, எங்களைத் தற்காப்பீராக! உமது உறைவிடத்தின் கீழ் எங்களை வைப்பீராக; உமது உதவியைக் கொண்டு எல்லா நோய்களிலிருந்தும் எங்களைக் காப்பீராக. மெய்யாகவே, உண்மையானப் காப்பாளரும், கண்ணுக்குப் புலப்படா பாதுகாவலரும், விண்ணுலக காத்தருள்பவரும், அன்பான விண்ணுலகப் பிரபுவும் நீரே ஆவீர்.

#11385
- `Abdu'l-Bahá

 

புகழ்ச்சியும் நன்றியும்

எல்லா மகிமைக்கும் மாட்சிமைக்கும் மேன்மைக்கும் மதிப்புக்கும் இறைமைக்கும் ஆட்சிக்கும் உயர்வுக்கும் அருளுக்கும் பேரச்சத்திற்கும் சக்திக்கும் மூலமாக விளங்கிடும் இறைவா, புகழனைத்தும் உமக்கே உரியதாகுக. நீர் விரும்பியவரை உமது அதிபெருங் கடலினை நெருங்கிடச் செய்வீர்; நீர் எவரை விரும்புகின்றீரோ அவருக்கு உமது அதி தொன்மையான நாமத்தினை அறிந்து ஏற்றுக் கொள்ளும் கௌரவத்தை அளிக்கின்றீர். விண்ணிலும் மண்ணிலுமுள்ள எவருமே உமது அரசாணையின் செயல்பாட்டினை எதிர்த்திட இயலாது. நித்திய காலத்திற்கும் படைப்பினம் முழுவதையுமே நீர் ஆண்டு வந்துள்ளீர்; இனி என்றும் எல்லாப் படைப்புப் பொருள்களின் மீதும் உமது ஆட்சியைத் தொடர்ந்து செலுத்தி வருவீர். சர்வ வல்லவரும் அதி மேன்மைமிக்கவரும் சர்வ சக்தி வாய்ந்தவரும் சர்வ விவேகியுமான இறைவன் உம்மையன்றி வேறிலர்.

பிரபுவே, உமது ஊழியர்களின் வதனங்களை ஒளிபெறச் செய்வீராக; அதனால் அவர்கள் உம்மைக் கண்ணுற இயலும்; அவர்களின் இதயங்களைத் தூய்மைப்படுத்துவீராக; அதனால் அவர்கள் உமது விண்ணுலகக் கடாட்சங்களின் அவையின்பால் திரும்பி உமது சொந்த மெய் நிலையின் அவதாரமும் உமது சாராம்சத்தின் பகலூற்றுமான அவரை ஏற்றுக் கொள்ளக் கூடும். மெய்யாகவே எல்லா உலகங்களின் பிரபுவும் நீரே; கட்டுப்படுத்தப்படாதவரும் சகலத்தையும் அடக்கவல்லவருமான இறைவன் உம்மையன்றி வேறிலர்.

#11387
- Bahá'u'lláh

 

அதி மேலான, கடவுளின் பெயரால்! பிரபுவே, சர்வ சக்திமிக்கக் கடவுளே, நீர் போற்றிப் புகழப்படுவீராக; எவரது விவேகத்தின் முன், விவேகிகள் தம் திறனையிழந்தும், தவறியும் விடுகின்றனரோ; எவரது அறிவின் முன் கற்றோர் அவர்களின் அறியாமையை ஒப்புக்-கொள்கின்றனரோ; எவரது வலிமையின் முன் பலம்படைத்தோர் வலுவற்று நிற்கின்றனரோ; எவரது செல்வத்தின் முன் செல்வந்தர் அவர்களின் வறிய நிலையை ஒப்புக்கொள்கின்றனரோ; எவரது ஒளியின் முன், ஞானம் பெற்றோர் இருளில் காணாமல் போயுள்ளனரோ, இழந்துள்ளனரோ; எவரது அறிவென்னும் புனிதாஸ்தலத்தை நோக்கி எல்லாப் புரிந்துணர்வின் சாரமும் திரும்பி- யுள்ளனவோ; மற்றும் எவரது முன்னிலையின் சரணாலயத்தைச் சுற்றி மனுக்குலத்தின் எல்லா ஆன்மாக்களும் வலம் வந்துள்ளனவோ, அவர் நீரே ஆவீர்.

விவேகிகளின் விவேகமும், கற்றோரின் கற்றலும் புரிந்துகொள்ள தவறிய உமது சாராம்சத்தைப் பற்றி நான் எவ்வாறு பாடவோ, விவரிக்கவோ இயலும்; ஏனெனில், எந்த மனிதனும் தான் புரிந்துகொள்ளாத ஒன்றைப் பாடவும் இயலாது, அன்றியும் தான் அடைந்திட இயலாத ஒன்றைப் பற்றி விவரிக்கவும் இயலாது. ஆனால், நீரோ நித்திய காலம் முதல், அணுகமுடியாதவராகவும், தேடிட முடியாதவராகவும் இருந்துள்ளீர். உமது ஒளி எனும் சுவர்க்கங்களுக்கு நான் உயர்ந்திடவும், உமது அறிவெனும் இராஜ்யங்களில் நான் உயரப் பறந்திடவும் சக்தியற்று இருந்தபோதிலும், நான் உமது அடையாளங்களைக் குறித்தும், உமது ஒளிமிக்கக் கைவண்ணங்களைக் குறித்தும் விவரித்திட இயலும்.

உந்தன் பேரொளியினால்! எல்லா இதயங்களின் பேரன்பரே, உமக்காக ஏங்கிடும் வேதனையைத் தணியச் செய்யக்கூடிய தன்னந்தனியானவரே! எதன் மூலமும், எதனைக் கொண்டும் நீர் உம்மை வெளிப்படுத்தியுள்ளீரோ, அந்த அடையாளங்களுள் மிக அற்பமானவற்றைப் புகழ்வதற்கு விண்ணிலும் மண்ணிலும் வசிப்போர் அனைவரும் ஒன்றுசேர்ந்த போதிலும், அவ்வாறு செய்வதில் அவர்கள் தவறிடுவர்; உமது சின்னங்கள் அனைத்தின் படைப்பாளரான உமது புனிதச் சொல்லினை அவர்கள் எங்ஙனம் போற்றிட இயலும்.

நீர் ஒருவரே என்றும், உம்மைத் தவிர வேறு கடவுள் இலர் என்றும், நித்தியக் காலம் முதல் எல்லா சரியிணையானோருக்கும், ஒப்பானோருக்கும் மேலாக உயர்ந்தும், நித்திய காலமும் அவ்வாறே நிலைத்திருக்க விரும்புபவர் என எல்லாப் பொருள்களும் சாட்சியம் பகர்ந்துள்ள உமக்கே எல்லாப் புகழும், பெருமையும் சேரட்டுமாக. மன்னர்கள் எல்லாரும் உமது ஊழியர்கள் ஆவர்; உருவமும், அருவமுமான அனைத்து ஜீவிகளும் உம்முன் ஒன்றுமில்லாமையாகும். கிருபை- யாளரும், சக்திமிக்கவரும், அதிவுயர்வான-வரான உம்மைத் தவிர, வேறு கடவுள் இலர்.

#11388
- Bahá'u'lláh

 

பிரபுவே, எனதாண்டவரே, உமது நாமம் மேன்மைப்படுத்தப்படுமாக. சகல பொருள்-களாலும் பூஜிக்கப்படுபவரும் எந்த ஒருவரையும் வணங்காதவரும் நீரே! Êசகல பொருள்களின் பிரபுவும் அவரே: எவருக்குமே அடிமையாகாதவரும் அவரே; சகலத்தையும் அறிந்தவரும் எதனாலும் அறியப்படாதவரும் நீரே! மனிதர்பால் உம்மைத் தெரிவித்துக் கொள்ள நீர் விரும்பினீர்; ஆதலின், நீர் உமது திருவாயின் ஒரே சொல்லின் மூலமாகப் படைப்பினத்தைத் தோற்றுவித்துப் பிரபஞ்சத்- தினையும் உருவாக்கினீர். உருவாக்குபவரும், படைப்பவரும், எல்லாம் வல்லவரும், அதி சக்தி வாய்ந்தவருமான இறைவன் உம்மையன்றி வேறிலர்.

உமது விருப்பம் என்னும் தொடுவானத்திற்கு மேல் ஒளிர்ந்துள்ள இதே சொல்லின் வழி உமது தேர்ந்தெடுக்கப்பட்டோரின் இதயங்களை உயிரூட்டி, உம்மை நேசிப்போரின் ஆன்மாக்களைத் துடிப்புறச் செய்த ஜீவ நீரினைப் பருகிடுவதற்கு எனக்கு உதவுமாறு உம்மை வேண்டிக் கேட்கின்றேன். அதனால், எல்லாக் காலங்களிலும் எல்லாச் சூழ்நிலைகளிலும் என் முகத்தினை உந்தன்பால் திருப்பிடக் கூடும்.

சக்தியும் மகிமையும் வள்ளன்மையும் மிக்க இறைவன் நீரே. அதி உயரிய ஆட்சியாளரும் சர்வ மகிமை வாய்ந்தவரும் எல்லாமறிந்தவருமான இறைவன் உம்மையன்றி வேறிலர்.

#11389
- Bahá'u'lláh

 

என் பிரபுவே, என் கடவுளே! நீர் மேன்மைப் படுத்தப்படுவீராக. உமது அவதாரமானவரை ஏற்றுக் கொள்ள எனக்கு உதவியமைக்காகவும் உமது பகைவர்களிடமிருந்து என்னை வேறாக்கியதற்காகவும் உமது நாள்களில் அவர்களின் தவறுகளையும் தீயச் செயல்களையும் எனது கண்களுக்கு முன்னால் காட்டியமைக்காகவும் அவர்களிடமிருந்து எல்லா தொடர்புகளையும் நீக்கியதற் காகவும் உமது கிருபை உமது வள்ளன்மைமிகு அருள்பாலிப்புகள் ஆகியவற்றின் மீது என்னை முழுமையாகத் திரும்பச் செய்தமைக்காகவும் உமக்கு நன்றி கூறுகின்றேன். மேலும் உமது விருப்பம் என்னும் மேகங்களிலிருந்து என்மீது நீர் அனுப்பியருளியவற்றின் பயனாகச் சமய நம்பிக்கையற்றோரின் கூற்றுகளிலிருந்தும் தவறான நம்பிக்கைக் கொண்டோரின் மறைகுறிப்புகளிலிருந்தும் நான் புனிதப்படுத்தப்- பட்டிருந்ததன் காரணமாக உந்தன் மீது என் இதயத்தை உறுதியாகப் பதிக்கவும் உமது வதனத்தின் ஒளியினை மறுத்தவர்களிடமிருந்து என்னால் விலகி ஓட முடிந்தமைக்காகவும் நான் உமக்கு நன்றி கூறுகின்றேன். உமது அன்பில் நான் உறுதியாக இருந்திட எனக்குச் சக்தியளித்-தமைக்காகவும் உமது புகழை எடுத்துரைக்கவும் உமது பண்புகளைப் புகழ்ந்திடவும் கண்ணுக்குப் புலனாகும் புலனாகா அனைத்துப் பொருள்களையும் விஞ்சிடும் உமது கருணை என்னும் கோப்பையிலிருந்து என்னைப் பருகிடச் செய்தமைக்காகவும் மீண்டும் நான் உமக்கு நன்றி கூறுகின்றேன்.

எல்லாம் வல்லவரும், அதி மேன்மை மிக்கவரும், ஒளிமயமானவரும், அன்பே உருவானவரும் நீரே!

#11390
- Bahá'u'lláh

 

எந்தன் இறைவா, எல்லா மாட்சிமையும் மகிமையும், எல்லா இராஜ்யமும், ஒளியும் கம்பீரமும் புகழொளியும் உமக்கே உரியதாகுக. நீர் தேர்ந்தெடுத்தவருக்கு இறைமையை வழங்கு-கின்றீர், நீர் விரும்பியவருக்கு அதனைக் கொடுக்க மறுக்கின்றீர். அனைத்தையும் உடைய, அதிவுயர் இறைவன், உம்மையன்றி வேறிலர். பிரபஞ்சத்தையும் அதில் வாழும் அனைத்தையும் வெறுமையிலிருந்து படைப்பவர் நீரே. உமது மதிப்புக்கு உகந்தது உம்மை அல்லாது வேறெதுவும் இல்லை; அதே வேளையில் உமது திருமுன்னிலையில் உம்மைத் தவிர மற்றனைத்தும் விலக்கப்பட்டன போன்றவையும், உமது சொந்த உருவின் மகிமையுடன் ஒப்பிடும்போது வெறுமையானவை போன்றவையாகும்.

“காட்சி எதுவுமே அவரை உள்ளடக்குவதில்லை; ஆனால், அவர், காட்சி அனைத்தையுமே உள்ளடக்குகின்றார்; நுட்பமானவரும் சகலத்தையும் கண்டுணர்பவரும் அவரே ஆவார்” என நீர் உமது முக்கிய நூலில் கூறுவதுபோல், உம்மையே நீர் புகழ்ந்துரைத்தாலல்லாது, யான் உமது பண்புகளைப் பாராட்டுதல் என்பது என் சக்திக்கு மிகவும் அப்பாற்பட்டதாகும். என் இறைவா, ஒளி உமக்கே உரியதாகுக; உண்மையில் எந்த ஒரு மனமோ, காட்சியோ, அது எத்துணை கூரியதாகவோ வேறுபாடு காணக் கூடியதாகவோ இருந்திடினும், உமது அடையாளங்களில் அதி அற்பமான ஒன்றின் தன்மையைக்கூட புரிந்துகொள்ளவியலாது. மெய்யாகவே, நீரே கடவுள், உம்மையன்றி இறைவன் வேறிலர். நீர் தனியராகவே உமது இயல்புகளின் வெளிப்படுத்துதலாவீர்; அதனால் உம்மைத் தவிர வேறெவரின் புகழ்ச்சியுமே உமது புனித அவைக்கு உயரவோ, உம்மைத் தவிர, வேறெவராலும் உமது இயல்புகளை ஆழங் கண்டிடவோ இயலாது என்பதற்கு, நான் சாட்சியம் கூறுகின்றேன்.

ஒளி உமக்கே உரியதாகட்டும். உம் ஒருவரின் வருணனையைத் தவிர வேறெவரின் வருணனைக்கும் மேலாக நீர் உயர்ந்திருக்கின்றீர் என்பதனால் உமது பண்புகளைப் பொருத்தமுற மிகைப்படுத்துவதோ, உமது அதி உள்ளார்ந்த மெய்ம்மையின் சாராம்சத்தினைப் புரிந்து கொள்வதோ மானிட கருத்துக்கு மிகவும் அப்பாற்பட்டதாகும். என் இறைவா, நீர் உம்மை என்னிடம் வெளிப்படுத்திக் கொண்டதன் காரணத்தினால்தான் நான் உம்மை அறிந்து கொண்டுள்ளேன்; நீர் உம்மை எனக்கு வெளிப்படுத்தியிருக்காவிடில், நான் உம்மை அறிந்திருக்கவே இயலாது. நீர் என்னை உந்தன்பால் அழைத்ததன் காரணமாகவே, நான் உம்மை வழிபடுகிறேன். உமது அழைப்பு இல்லாதிருந்திருப்பின் நான் உம்மை வழிபட்டிருக்கவே மாட்டேன்.

#11391
- The Báb

 

பெண்கள்

உமக்காக ஏங்குவோர் அனைவரின் ஆராதனையின் இலக்காக இருக்கும் வதனத்திற்கு உரியவரே, உமது திருவிருப்பத்- தின்பால் முழுமையான பக்திகொண்டோரின் நம்பிக்கையாக விளங்கும் முன்னிலைக்கு உரியவரே; உமது அரசவையை நெருங்கிய அனைவரின் ஆவலாக இருக்கும் அண்மைக்கு உரியவரே; உமது உண்மையை அறிந்தோரின் தோழனாக இருக்கும் திருவதனத்திற்கு உரியவரே; உமது திருமுகத்தைக் கண்ணுற ஏங்கிடும் ஆன்மாக்களை இயக்கிடும் நாமத்திற்கு உரியவரே; உம்மை நேசிப்போரின் உண்மை வாழ்வாக இருக்கும் குரலுக்கு உரியவரே; விண்ணிலும் மண்ணிலும் உள்ள அனைவருக்கும் உயிர் நீராக இருக்கின்ற வார்த்தைகளை மொழிந்திடும் வாயுக்கு உரியவரே!

நீர் அநுபவித்த தவற்றினாலும், தீமை இழைத்திடும் சைனியங்கள் உம் மீது சுமத்திய கொடுமைகளினாலும், உம்மை அல்லாது வேறெதனையும் சார்ந்துள்ளவற்றிலிருந்து என்னைப் புனிதப்படுத்தக் கூடியவற்றை, உமது கருணை எனும் மேகங்களிலிருந்து என் மீது பொழிந்திடுமாறு நான் உம்மிடம் வேண்டுகிறேன்; அதனால் நான், உம்மைப் போற்றுவதற்குத் தகுதியுடையவனாகவும், உம்மை நேசிப்பதற்குப் பொருத்தமானவனாகவும் ஆகிடக் கூடும்.

என் பிரபுவே, உம்மைச் சுற்றி வலம் வந்திடும் பணிப்பெண்களுக்கென, உமது அழகெனும் சூரியனின் பேரொளிகளும், உமது வதனத்தின் பிரகாச ஒளிபிம்பங்களும் இடைவிடாது பொழியப்படுகின்றனவே, அவர்களுக்காக நீர் விதித்தருளியவற்றை எனக்கும் தரமறுத்திடாதீர். உம்மை நாடிய எவரொருவருக்கும் நித்திய காலமும் உதவியவரும், உம்மிடம் கேட்போருக்குத் தாராளமாக ஆதரவளித்தவரும் நீரே ஆவீர்.

வலியவரும், என்றும் நிலைத்திருப்பவரும், சர்வ கொடையாளரும், அதி தாராளமானவருமான கடவுள் உம்மைத் தவிர வேறிலர்.

#11392
- Bahá'u'lláh

 

என் கடவுளே, ஒளி உமக்கே உரியதாகுக! உந்தன் வதனத்தை நோக்கியே என் வதனம் செலுத்தப்பட்டுள்ளது; மெய்யாகவே, உந்தன் வதனமே எனது வதனமாகும், உந்தன் அழைப்பே எனது அழைப்பாகும், உந்தன் திருவெளிப்பாடே எனது திருவெளிப்பாடாகும், உந்தன் உள்ளமையே, எனது உள்ளமையாகும்; உந்தன் சமயமே எனது சமயமாகும், உந்தன் கட்டளையே எனது கட்டளையாகும், உந்தன் உயிருருவே எனது உயிருருவாகும், உந்தன் மாட்சிமையே, எனது மாட்சிமையாகும், உந்தன் புகழொளியே எனது புகழொளியாகும், உந்தன் சக்தியே, எனது சக்தியாகும்.

உந்தன் கற்புடைமை எனும் கூடாரத்தினுள் உமது பணிப்பெண்களைப் பாதுகாத்து, உந்தன் நாள்களுக்குத் தகுதியற்றவையான அவர்களின் செயல்களை இரத்து செய்யுமாறு, நாடுகளின் அமைப்பாளரும், நித்தியத்தின் மன்னருமாகிய உம்மிடம் நான் மன்றாடுகிறேன். எனவே, என் கடவுளே, அவர்களிடமிருந்து எல்லா சந்தேகங்-களையும், வீண் கற்பனைகளையும் அகற்றி; நாமங்களின் பிரபுவும், வாய்ச்சொல்லின் மூலமுமானவரே, உம்முடனான அவர்களின் உறவுக்குப் பொருந்தாத அனைத்திலிருந்தும் அவர்களைப் புனிதப்படுத்துவீராக. படைப்பு முழுவதன் அதிகாரத்தை உந்தன் கைப்பிடிக்குள் வைத்திருப்பவர் நீரே ஆவீர்.

சர்வ வல்லவரும், அதி மேலானவரும், சர்வ ஒளிமயமானவரும், சுய ஜீவியருமான கடவுள் உம்மைத் தவிர வேறிலர்.

#11393
- Bahá'u'lláh

 

பிரபுவே எனதாண்டவரே, நீர் போற்றப்படுவீராக!

உமது ஒற்றுமையை அறிந்தோரின் இதயங்களைச் சுடர்விட்டு எரியச் செய்திட்ட அன்பெனும் அக்கினிக்கு உரியவரும், உமது திருவதனத்தின் பேரொளிகள், உமது அரசவையை நெருங்கிச் சென்றோரின் வதனங்களைப் பிரகாசிக்கச் செய்திட்டவரும் நீரே ஆவீர். என் கடவுளே, உமது அறிவெனும் ஓடை எத்துணை வளமானது! எனதன்பரே, உம்மீதுள்ள என் அன்பிற்காகவும், உம்பாலான நல்விருப்பம் காரணமாகவும், தீமை இழைப்போர் அம்புகளிலிருந்து நான் அனுபவிக்கும் வேதனை எத்துணை இனிமையானது! உமது பாதையிலும், உமது சமயத்தைப் பிரகடனம் செய்வதிலும் இறை நம்பிக்கையற்றோரின் வாள்களிலிருந்து நான் தாங்கிக்கொண்ட காயங்கள் எத்துணை இன்பமானவை!

அமைதியின்மையைச் சாந்தமாகவும், அச்சத்தை மனவுறுதியாகவும், வலுவின்மையை்ப் பலமாகவும், அவமானத்தைப் புகழாகவும், மாற்றியுள்ள உமது நாமத்தினால், வரம்புமீறியோர்களின் தாக்குதல்-களோ, நம்பிக்கையற்றோரின் கடுங்கோபமோ எங்களை அசைத்திடாத விதத்தில், உமது கிருபையைக் கொண்டு, நீர் என்னையும் உமது ஊழியர்களையும், உமது நாமத்தை மேன்மைப்படுத்திடவும், உமது செய்தியை வழங்கிடவும், உமது சமயத்தைப் பறைசாற்றிடவும் உதவிடுமாறு, என் அதிநேசரான உம்மிடம் நான் மன்றாடுகிறேன்.

என் பிரபுவே, உமது அழைப்புக்குச் செவிசாய்த்திட்ட, உம்மை நோக்கி விரைந்திட்ட, தன்னிடமிருந்தே தப்பிச் சென்ற, தனது இதயத்தை உம்மீது இளைப்பாறச் செய்திட்ட உமது பணிப்பெண் நானாவேன். என் பிரபுவே, உலகின் எல்லாச் செல்வங்களையும் வெளிக்கொணரச் செய்திட்ட உமது நாமத்தினால், உம்மீது நம்பிக்கை வைக்காது, உமது உண்மையை மறுத்திட்டோரின் சைகைகளிலிருந்து என்னைப் பாதுகாக்குமாறு நான் உம்மிடம் மன்றாடுகிறேன்.

நீர் விரும்பியதைச் செய்வதற்கு சக்திப்-படைத்தவர் நீரே. மெய்யாகவே, அனைத்தையும் அறிந்தவரும், சர்வ விவேகியும் நீரே ஆவீர்.

#11394
- Bahá'u'lláh

 

பிரபுவே, எனதாண்டவரே, உந்தன் நாமம் மேன்மைப்படுத்தப்படுமாக!

உமது கருணையின் அற்புதங்களைப் பார்த்திட என் கண்கள் எதிர்பார்த்திருப்பதையும், உமது இனிய கீதங்களைச் செவிமடுக்க என் செவிகள் ஏங்கிக் கொண்டிருப்பதையும், உமது அறிவெனும் உயிர் நீர்களுக்காக என் இதயம் ஆவல்கொண்டிருப்பதையும் காண்பீராக. என் கடவுளே, உமது பணிப்பெண், உந்தன் கருணை எனும் வாசஸ்தலத்தின் முன் நின்று- கொண்டிருப்பதையும், மற்றெல்லா நாமங்களுக்கும் மேலானதாகத் தேர்ந்தெடுத்து, நீர் விண்ணிலும் மண்ணிலும் உள்ள அனைத்திற்கும் மேலாக அமைத்துள்ள, உந்தன் நாமத்தைக் கொண்டு உம்மை அழைப்பதையும், நீர் காண்கின்றீர். உமது கருணை எனும் சுவாசங்களை அவள் மீது பொழிந்திடுவீராக; அதனால் அவள், பரவசத்தால் தன்னிடமிருந்தே முழுமையாக விலகிச் சென்றும், உமது வதனத்தின் ஒளியால் பிரகாசித்தும், உந்தன் அரசாட்சியின் கதிரொளியைத் திசையெங்கும் பொழிந்தும், உந்தன் அரியாசனத்தின் மீது ஸ்தாபித்துமுள்ள, அந்த இருக்கையை நோக்கி முழுமையாக ஈர்க்கப்படக்கூடும்.

என் பிரபுவே, உம்மை நாடிவந்தோரை வெளியேற்றி விடாதீர் எனவும், உம்மை நோக்கி அவர்களின் காலடிகளை எடுத்துவைத்தோரைத் துரத்தி விடாதீர் எனவும், உம்மை நேசிப்போர் அனைவரையும் உமது கிருபையை இழக்கச் செய்திடாதீர் எனவும், நான் உம்மிடம் கெஞ்சிக் கேட்கிறேன். என் பிரபுவே, அதி பரிவுடையவரான, கருணைக் கடவுள் என உம்மையே அழைத்துக்கொண்டவர் நீரே ஆவீர். ஆதலால், உமது புகலிடத்தை நாடி வந்துள்ள, உம்மை நோக்கித் தனது முகத்தைத் திருப்பியுமுள்ள உமது பணிப்பெண்ணின் மீது இரக்கங் காட்டுவீராக.

மெய்யாகவே, என்றென்றும் மன்னிப்பவரும், அதி கருணையாளரும் நீரே ஆவீர்.

#11395
- Bahá'u'lláh

 

எவரது அச்சுறுத்தும் மாட்சிமை முன் யாவும் நடுங்கி நிற்கின்றனவோ, எவரது பிடிக்குள் மனிதர்கள் அனைவரின் காரியங்களும் அடங்கியுள்ளனவோ, எவரது கிருபை, கருணை ஆகியவற்றின்பால், உயிரினங்கள் அனைத்தின் வதனங்களும் நோக்கியவாறு உள்ளனவோ, இவையனைத்துக்கும் உரியவர் நீரே! நாமங்கள் எனும் இராஜ்யத்தினுள் உள்ள அனைத்து நாமங்களின் ஆற்றலாகிட நீர் விதித்திட்ட உமது திருநாமத்தினால், உமது நாமங்கள் எனும் இராஜ்யத்தை நடுங்கச் செய்திட்ட இந்த திருவெளிப்பாட்டில், உம்மிடமிருந்து திரும்பியோடியோரிடமிருந்து, உமது அதி மாண்புமிக்க, அதி உயர்வுமிக்க தான் எனும் தன்மையின் உண்மையை மறுத்திட்டோரின் முணுமுணுப்புக்களிலிருந்தும் எங்களைப் பாதுகாக்கும்படி நான் உம்மிடம் மன்றாடுகிறேன்.

என் பிரபுவே, நான் உமது பணிப்பெண்களுள் ஒருத்தியாவேன்! உமது கருணைமிக்க அருட்கொடையின் சரணாலயத்தை நோக்கியும், உமது ஒளியினால் போற்றப்படும் திருக்கூடாரத்தை நோக்கியும் நான் என் முகத்தைத் திருப்பியுள்ளேன். உம்மைச் சார்ந்திராத அனைத்திலிருந்தும் என்னை தூய்மைப்படுத்துவீராக; உம்மை நேசிக்கவும், உமது விருப்பத்தை நிறைவேற்றவும் என்னைப் பலப்படுத்துவீராக; அதனால் உமது அழகினை நினைப்பதிலேயே நான் என்னை மகிழ்வுபெறச் செய்தும், உமது உயிரினங்கள் அனைத்தின் மீதுள்ள எல்லாப் பற்றுகளையும் துறந்திடக் கூடுமாக; மேலும், ஒவ்வொரு கணமும் “உலகங்களுக்கெல்லாம் பிரபுவான இறைவன், மேன்மைப்படுத்தப்படுவாராக!” என, ஒவ்வொரு கணமும், பிரகடனம் செய்திடக் கூடுமாக.

என் பிரபுவே, உமது அழகு எனது உணவாகிடவும், உமது முன்னிலையின் ஒளி எனது பானமாகிடவும், உமது இன்பம் எனது நம்பிக்கையாகிடவும், உம்மைப் போற்றுவதே எனது வேலையாகிடவும், உமது நினைவே எனது தோழனாகவும், உமது இறையாண்மையே எனது உதவியாகவும், உமது வாசஸ்தலமே எனது இருப்பிடமாகவும், உம்மிடமிருந்து ஒரு திரையைப்போன்று மறைக்கப்பட்டோரின் வரம்புகளுக்கு மேலாகத் நீர் உயர்த்தியுள்ள இருக்கையையே எனது இல்லமாக ஆக்கிடுவீராக.

உண்மையாகவே, நீரே சக்தி, வலிமை, பேரொளி ஆகிய இறைவனாவீர்.

#11396
- Bahá'u'lláh

 

என் கடவுளே, ஒளி உமக்கே உரியதாகுக! உம் மீதும் உமது அடையாளங்களின் மீதும் நம்பிக்கைக் கொண்டுள்ள உமது பணிப்பெண்களுள் ஒருத்தி, உமது ஒருமைத்தன்மை எனும் விருட்சத்தின் நிழலின் கீழ் நுழைந்துள்ளாள். என் கடவுளே, தெளிவானதும் மறைவானதுமான உமது நாமத்தின் பேரில், அவளைத் உமது தேர்வுச் செய்யப்பட்ட நனிசிறந்த மதுரசத்தினைப் பருகச் செய்வீராக. அதனால் அது அவள் தன்னையே மறக்கச் செய்தும், உமது நினைவிலேயே அவள் தன்னை முழுமையாகப் பக்திகொள்ளவும், உம்மைத் தவிர வேறெவரிடமிருந்தும் முற்றிலும் பற்றற்-றிருக்கவும் கூடும்.

என் பிரபுவே, உம்மைப் பற்றிய அறிவை இப்போது நீர் அவளிடம் வெளிப்படுத்தியுள்ளதால், உமது அருட்கொடையினால், உமது கிருபையை அவளுக்குத் தரமறுத்திடாதீர்; இப்போது அவளை உம்மிடமே நீர் அழைத்துள்ளதால், உமது தயையின் வாயிலாக, உம்மிடமிருந்து அவளைத் துரத்தி விடாதீர். ஆதலால், உமது உலகினில் காணப்படும் அனைத்தையும் விடச் சிறந்தவற்றை அவளுக்குத் தந்தருள்வீராக. மெய்யாகவே, அதி வள்ளன்மை-யாளரும், மகத்தான கிருபையாளரும் நீரே ஆவீர்.

மண்ணுலகு விண்ணுலகு ஆகிய இராஜ்யங்களுக்குச் சமமானவற்றைத் உந்தன் உயிரினங்கள் ஒன்றுக்கு நீர் தந்தருளியபோதும், அது உந்தன் அரசாட்சியின் பிரம்மாண்டமான அளவிலிருந்து ஓர் அணுவைக் கூடக் குறைத்திடவியலாது. மாபெரும் திருவுரு என மனிதர்கள் உம்மை அழைத்திட விரும்பும் ஒருவரை விடத் நீர் மிக மிக மகத்தானவர். ஏனெனில், அத்தகைய பட்டப் பெயர் என்பதோ, உந்தன் திருவிருப்பத்தின் சாதாரண குறிப்பினால் உருவாக்கப்பட்ட உமது அனைத்து நாமங்களுள் ஒன்றாகும்.

சக்திமிக்கக் கடவுளும், ஒளிமிக்கக் கடவுளும், அறிவும் விவேகமுமிக்கக் கடவுளுமாகிய உம்மைத் தவிர வேறு கடவுள் இலர்.

#11397
- Bahá'u'lláh

 

என் கடவுளே, உம்மை மறுத்து விலகிய உமது உயிரினங்கள் இழைத்திட்ட தவறுகள், எவருள் உமது தெய்வத்தன்மை அவதரித்துள்ளதோ அவருக்கும், உமது ஊழியர்களுக்கும் இடையே எவ்வாறு தடையை ஏற்படுத்தியுள்ளது என்பதை நீர் காண்கின்றீர். என் பிரபுவே, ஒருவர் மற்றவரின் நலன்களில் மும்முரமாக ஈடுப்பட செய்திடக்-கூடியவற்றை அவர்களிடம் அனுப்பிடுவீராக. அதனால், அவர்களின் வன்செயல் அவர்களின் எல்லைக்குட்பட்டதாக இருந்திடவும், அவர்கள் வாழும் நாடு அமைதியை காணவும் செய்திடுவீராக.

என் பிரபுவே, உமது பணிப்பெண்களுள் ஒருத்தி, உமது வதனத்தை நாடி, உமது மகிழ்ச்சி எனும் பரவெளியில் உயரப்பறந்துள்ளாள். என் பிரபுவே, உமது பணிப்பெண்லாகத் தேர்ந்தெடுக்கப்-பட்டோருக்கு நீர் விதித்தருளியவற்றை அவளுக்குத் தரமறுத்திடாதீர். ஆகையால், உமது வார்த்ததைகளின்பால் ஈர்த்திட அவளை இயலச் செய்திடுவீராக, அதனால் அவள் அவர்கள் மத்தியில் உமது புகழைப் பாடக்கூடும்.

நீர் விரும்பியதைச் செய்வதற்குச் சக்தி-யுடையவர் நீரே. சர்வ வல்லவரும், மனிதர் அனைவராலும் உதவிக்கு நாடப்படுபவருமான, உம்மைத் தவிர வேறு கடவுள் இலர்

#11398
- Bahá'u'lláh

 

என் பிரபுவே, என் நேசரே, எனதாவலே! என் தனிமையில் என்னை நேசிப்பீராக; என் நாடுகடத்தலில் என்னுடனிருப்பீராக. எனது துயரத்தைப் போக்குவீராக. உமது அழகின்பால் என்னைப் பக்தி கொள்ளச் செய்வீராக. உம்மைத் தவிர மற்றெல்லாவற்றிலும் இருந்தும் என்னைப் பின்வாங்கச் செய்வீராக. உமது புனிதம் என்னும் நறுமணங்களின் மூலம் என்னை ஈர்த்திடுவீராக. உமது இராஜ்யத்தில் வாழும் உம்மைத் தவிர மற்றனைத்திலிருந்தும் தொடர்பறுத்-திட்டோருடனும், உமது புனித வாயிலுக்குச் சேவையாற்ற ஏங்குவோருடனும், உமது சமயத்தில் பணியாற்றிட விரும்புவோருடனும் என்னைத் தொடர்பு கொள்ளச் செய்வீராக. உமது நல்விருப்பத்தினை அடைந்திட்டப் பணிப்-பெண்களுள் ஒருத்தியாக என்னை ஆக்கிடுவீராக. மெய்யாகவே, அருளாளரும், ஈகைக் குணமுடையவரும் நீரே.

#11399
- `Abdu'l-Bahá

 

பெண்களுக்குரிய குணப்படுத்தல் பிரார்த்தனை

பிரபுவே எனதாண்டவரே, ஒளி உமக்கே உரியதாகுக! என்றும் நிலையான உமது அரசாட்சியின் சக்தி வாயிலாக, நீர் உயர்வுபெறச் செய்துள்ளவரைத் தாழ்வுறச் செய்திடாதீர்; உமது நித்தியம் எனும் கூடாரத்திற்குள் நுழைந்திடச் செய்தவரை உம்மிடமிருந்து நீர் வெகுதூரம் விலகிடச் செய்திடாதீர். என் கடவுளே, உமது ஆதிக்கத்தைக் கொண்டு மேலுயர்ந்து நிற்கச் செய்திட்டவரை, நீர் துரத்திவிடப் போகின்றீரா? என் ஆவலானவரே, நீரே ஒரு புகலிடமாக இருந்திட்ட ஒருவரை, உம்மிடமிருந்து புறக்கணிக்கப் போகின்றீரா? நீர் மேன்மையுறச் செய்தவரை, நீரே தரமிழக்கச் செய்திட இயலுமா, அல்லது உம்மை நினைவுகூர்ந்திட நீர் இயலச் செய்தவரை உம்மால் மறந்திட இயலுமா?

மகிமை பொருந்தியவர், அளவற்ற மகிமை பொருந்தியவர் நீரே! நித்திய காலமும் படைப்பு முழுவதன் அரசரும், அதன் முதன்மை இயக்குபவருமானவர் நீரே ஆவீர்; நித்திய காலமும் எல்லாப் படைப்புப் பொருள்களின் பிரபுவாகவும், அவற்றின் ஆணையாளராகவும் நீரே நிலைத்திருப்பீர். என் கடவுளே, மகிமை பொருந்தியவர் நீரே ஆவீர்! உமது ஊழியர்களிடம் கருணைக் காட்டுவதை நீர் நிறுத்திக்கொண்டால், அவர்களிடம் கருணைக் காட்டுபவர்தான் யார்; உமது அன்புக்குரியவர்களை நீர் ஆதரிக்க மறுத்துவிட்டால், அவர்களுக்கு ஆதரவளிக்கக் கூடியவர்தான் யார்?

மகிமை பொருந்தியவர், அளவற்ற மகிமைப் பொருந்தியவர் நீரே! உமது உண்மைநிலையில் நீர் ஆராதனைக்குரியவர்; மெய்யாகவே, உம்மைத்தான் நாங்கள் அனைவரும் வழிபடுகிறோம்; உமது நீதியில் வெளிப்படையானவர் நீரே ஆவீர், உம்மிடமே, மெய்யாகவே, நாங்கள் அனைவரும் சாட்சியம் பகர்கின்றோம். மெய்யாகவே, உமது அருள்பாலிப்பில் அன்புக்குரியவர் நீரே ஆவீர். ஆபத்தில் உதவுபவரும், சுய ஜீவியானவரும் உம்மையன்றி வேறு கடவுள் இலர்.

#11268
- Bahá'u'lláh

 

பெற்றோர்

கடவுளுடன் தொடர்பு கொள்ளும்போது, தனது பெற்றோரை நினைவு கொள்பவர் ஆசீர்வதிக்கப் படுவர்.

#11300
- The Báb

 

என் கடவுளே, உமது ஊழியர்கள் உம்மை நோக்கிச் சென்றிட நீர் விரும்பிய விதத்திற்காக, நான் உமது மன்னிப்பையும், பிழை பொறுத்தலையும் மன்றாடிக் கேட்கின்றேன். உமது இறைமைக்குப் பொருந்தியவாறு, எங்கள் பாவங்களைக் கழுவிட வேண்டும் என்றும், என்னையும், என் பெற்றோரையும், உமது மதிப்பின்படி, உமது எல்லைத்தாண்டிய இறையாண்மையின் மதிப்பிற்குரிய விதத்திலும், உமது விண்ணுலகச் சக்தியின் பேரொளிக்கு ஏற்றவாறும், உமது அன்பென்னும் உறைவிடத்திற்குள் நுழைந்திட்டோரின் பாவங்களையும் மன்னிக்குமாறு நான் உம்மைக் கெஞ்சிக் கேட்கின்றேன்.

என் கடவுளே! உம்மிடம் மன்றாடுவதற்கென நீர் என் ஆன்மாவுக்கு உத்வேகம் அளித்துள்ளீர்; மற்றும் நீர் இல்லையெனில், நான் உம்மை அழைத்திருக்க மாட்டேன். நீர் புகழ்ந்து போற்றப்படுவீராக; நீர் என்னிடம் உம்மை வெளிப்படுத்தியமைக்காக நான் உம்மைப் போற்றுகின்றேன்; உம்மை அறிந்திடவேண்டும் எனும் என் கடமையில் நான் தவறியதற்காகவும், உமது அன்பென்னும் பாதையில் நடக்கத் தவறியதற்காகவும் என்னை மன்னிக்குமாறு உம்மை நான் கெஞ்சிக் கேட்கிறேன்.

#11301
- The Báb

 

பிரபுவே! இவ்வதி உயர்வான அருளாட்சிக் காலத்தில் பிள்ளைகள் பெற்றோர்களின் சார்பில் பரிந்து வேண்டுவதை நீர் ஏற்றுக் கொள்கின்றீர். இது, இவ்வருளாட்சியின் விசேஷமான, அளவற்றக் கடாட்சங்களில் ஒன்றாகும். ஆகவே, கருணைமிக்கப் பிரபுவே! உமது தனித் தன்மை என்னும் வாயிலில், உமது இவ்வூழியனின் வேண்டுகோளை ஏற்று, அவனது தந்தையை உமது கிருபை எனும் சமுத்திரத்தில் மூழ்குவிப்பீராக; ஏனெனில் இம்மைந்தன் உமக்குச் சேவை செய்ய எழுந்து, உமது அன்பெனும் பாதையில் எல்லா வேளைகளிலும் கடும் முயற்சி செய்கின்றான். மெய்யாகவே, நீரே வழங்குபவர், மன்னிப்பவர், அன்பாதரவுடையவர்.

#11302
- `Abdu'l-Bahá

 

போதனை

என் இறைவா, நாள்களுக்கெல்லாம் அரசனான அந் நாளினை, உமது தேர்ந்தெடுக்கப்-பட்டோருக்கும் உமது அவதாரங்களுக்கும் நீர், உமது அதி சிறந்த நிருபங்களில் அறிவித்த நாளான, அந் நாளினை, உமது படைப்புப் பொருள்கள் அனைத்தின் மீதும் உமது அனைத்து நாமங்கள் ஒளியின் பிரகாசத்தினைப் பொழிந்த நாளான, அந் நாளினை, நீர் வெளிப்படுத்தியமைக்காக உமது நாமம் போற்றப்படுமாக. எவரொருவர் உந்தன்பால் திரும்பி, உமது முன்னிலையை அடைந்து, உமது குரலின் தொனிகளைக் கண்டு கொள்கின்றாரோ, அவரது ஆசீர்வாதம் மிகுதியானதாகும்.

உமது திருவாக்கினை உமது ஊழியர்களிடையே மேன்மைப்படுத்திடவும், உமது படைப்பினங்களின் மத்தியில் உமது புகழினைப் பறைசாற்றிடவும் நீர் உமக்கு விருப்பமானவர்களை அருள்கூர்ந்து உதவிடுமாறு, உமது நாமங்கள் என்னும் இராஜ்யத்தினைப் பக்தியுடன் வலம் வருகின்ற அவரது நாமத்தின் பேரில் உம்மை வேண்டிக் கொள்கின்றேன்; அதனால், உமது மண்ணில் வாழும் அனைவரின் ஆன்மாக்களையும் உமது வெளிப்பாட்டின் பேருவகை நிரப்பக் கூடும்.

என் பிரபுவே, உமது அருள் என்னும் ஜீவ நீரினால் அவர்களை நீர் வழிநடத்திச் சென்றுள்ளதால் உம்மிடமிருந்து அவர்கள் ஒதுக்கப்படாமலிருக்க உமது வள்ளன்மையின் வழியாக அவர்களுக்கு அருள்புரிவீராக; உமது அரியாசனத்தின் இருப்பிடத்தின்பால் நீர் அவர்களை அழைத்-திருப்பதனால், உமது அன்புக் கருணையினால் அவர்களை உமது முன்னிலையிலிருந்து துரத்திடாதீர். உம்மைத் தவிர மற்றெல்லாவற்றில் இருந்தும் முற்றாகப் பற்றறுக்கச் செய்திடும் அதனை அவர்கள்பால் அனுப்பி அவர்களை உமது அண்மை என்னும் மண்டலத்தில் சிறகடித்துப் பறந்திடச் செய்வீராக. அதனால் கொடுமை-யாளனின் ஏற்றமோ, அதி மாட்சிமையுடையவரும் அதி வலிமை வாய்ந்தவருமான உம்மை நம்பாதார்களின் தூண்டுதல்களோ அவர்களை உம்மிடமிருந்து தடுக்காதிருக்குமாக.

#11401
- Bahá'u'lláh

 

உலகின் பிரபுவும் நாடுகளின் ஆவலும் ஆகியவரே, ஒளி உமக்கே உரியதாகட்டும், அதி உயரிய நாமத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளவரே, அதன்வழி உமது அறிவு, தீர்க்கதரிசனம் என்னும் பெருங் கடலிலுள்ள சிப்பியிலிருந்து விவேகம், வெளியிடுகை எனும் முத்துக்கள் தோன்றியுள்ளதோடு, தெய்வீக வெளிப்பாடு என்னும் வானம், உமது வதனம் என்னும் சூரிய தோற்றத்தின் ஒளியினால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

எச் சொல்லின் மூலம் உமது நிரூபணம் உமது படைப்பினங்களிடையே நிறைவுபடுத்தப்பட்டு, உமது ஊழியர்களிடையே உமது அத்தாட்சி நிறைவேற்றப் பட்டதோ, அதன் பெயரால் உமது மக்களை உறுதிப்படுத்துமாறு உம்மை நான் வேண்டுகின்றேன், அதன்வழி உமது சமயத்தின் வதனம் உமது இராஜ்யத்தினில் ஒளிக்கதிர்களை வீசிடும், உமது சக்தியின் கொடிகள் உமது ஊழியர்களிடையே நாட்டப்படும்; உமது இராஜ்யங்கள் முழுவதிலும் உமது வழிகாட்டல் என்னும் கொடிகள் ஏற்றப்படும்.

என் பிரபுவே! அவர்கள் உமது அருள் என்னும் கயிற்றினைப் பிடித்துக் கொண்டிருப்பதையும் உமது அன்புதவி என்னும் மேலங்கியின் விளிம்பினை இறுகப் பற்றிக் கொண்டிருப்பதையும் நீர் காண்கின்றீர். மேலும் உமதருகே ஈர்க்கக் கூடியதனை அவர்களுக்கு அருளி, உம்மைத் தவிர மற்ற எல்லாவற்றிலிருந்தும் அவர்களைத் தடுத்திடுவீராக.

இருப்பனவற்றிற்கெல்லாம் மன்னரே, கண்களுக்குப் புலனாகும் புலனாகாதவற்றுக்கு எல்லாம் பாதுகாவலரே, உமது விருப்பத்திற்கேற்ப அசைந்திடும் கடலைப் போன்று, உமது சமயத்திற்குச் சேவை செய்ய எழுந்திடுபவரை உமது விருப்பம் என்னும் விண்ணுலகின் தொடுவானத்திலிருந்து பிரகாசித்திடும் புனித விருட்சத்தின் நெருப்பினால் பற்றி எரிகின்ற ஒருவராக ஆக்கிடுமாறு, நான் உம்மை வேண்டிக் கொள்கின்றேன். மெய்யாகவே, இவ்வுலகனைத்தின் சக்தியோ நாடுகளின் வலிமையோ வலுவிழக்கச் செய்ய இயலாத வல்லவர் நீரே. ஒருவரேயான, ஒப்புயர்வற்றவரான, சுயஜீவியரான உம்மைத் தவிர இறைவன் வேறிலர்.

#11402
- Bahá'u'lláh

 

அவதாரங்கள் அனைவரையும் படைத்த-வராகிய, மூலங்களுக்கெல்லாம் மூலமாகிய, வெளிப்பாடுகள் அனைத்திற்கும் பிறப்பிடமாகிய, ஒளிகளுக்கெல்லாம் ஊற்றாகிய இறைவா! உமது நாமத்தின் பேரில் புரிந்துகொள்ளல் எனும் விண்ணுலகம், அழகுபடுத் தப்பட்டுள்ளது என்பதற்கும், வெளியிடுகை எனும் சமுத்திரம் பொங்கியெழுந்தது என்பதற்கும் உமது அருளின் பரிமாறல் எல்லாச்சமயங்களைப் பின்பற்று- வோருக்கும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என்பதற்கும் நான் சாட்சியம் கூறுகின்றேன்.

உம்மையன்றி மற்றெல்லாரையும் துறந்திடும் அளவிற்கு என்னை வளம்பெறச் செய்யுமாறும் உம்மைத் தவிர மற்றனைத்திலிருந்தும் என்னைச் சுதந்திரமடையச் செய்யுமாறும், உம்மை வேண்டிக்கொள்கின்றேன். ஆகவே, உமது வள்ளன்மை என்னும் மேகங்களிலிருந்து, உமது உலகங்கள் ஒவ்வொன்றிலும் எனக்கு நன்மை அளிக்கக் கூடியதனை என்மீது பொழியச் செய்வீராக. அதனால் உமது சக்தியளித்திடும் அருள் மூலம் உமது ஊழியர்களின் மத்தியில் உமது சமயத்திற்குச் சேவை செய்ய எனக்கு உதவுவீராக; அதனால், உமது சொந்த இராஜ்யம் நீடிக்கும் வரையிலும், உமது அரசு நிலைத்திருக்கும் வரையிலும் வானுலகின்பால் முழுமையாகத் திரும்பியுள்ளவன்தான் இந்த உமது ஊழியன். உமது மாட்சிமை, உமது புகழ், உமது வள்ளன்மை, உமது அருள் ஆகியவற்றிற்கேற்ப என்னை நடத்திடுவீராக.

உண்மையாகவே, நீரே, வலிமையும் சக்தியும் வாய்ந்த இறைவன், உம்மை வழிபடுவோருக்குப் பதிலளிக்கும் தகுதியுடையவர் நீரே. எல்லாம் அறிந்தவரும் சர்வ விவேகியுமான இறைவன் உம்மையன்றி வேறிலர்.

#11403
- Bahá'u'lláh

 

கூறுவீராக, பிரபுவே எனதாண்டவரே உந்தன் நாமம் மிகைப்படுத்தப்படுமாக! மனுக்குலத்தின் மத்தியில், தெய்வீகத் திருமொழியின் சொர்க்கங்கள் இயங்கச்செய்திட்ட வேளையில், விவேகம் எனும் ஒளியின் ஜோதி பிரகாசமாக ஒளிவீசிடச் செய்த, அந்த உமது நாமம் மூலமாக, உந்தன் விண்ணுலக உறுதிப்பாடுகளைக் கொண்டு எனக்கு அருள்கூர்ந்து உதவிடவும், உமது ஊழியர்கள் மத்தியில் உந்தன் திருநாமத்தைப் புகழ்ந்திடவும், என்னை இயலச் செய்யுமாறு நான் உம்மை இறைஞ்சுகிறேன்.

பிரபுவே! உம்மைத் தவிர மற்றனைத்திலிருந்தும் பற்றறுத்தும், உமது எண்ணற்ற ஆசிகள் எனும் அங்கியின் நுனியை இறுகப் பற்றிக்கொண்டும், உந்தன்பால் எனது முகத்தை நான் திருப்பியுள்ளேன். ஆதலால், மனிதர்களின் மனங்களைக் கவரக்கூடியவற்றையும், அவர்களின் ஆன்மாக்-களையும் ஆவிகளையும் மகிழ்வுறச் செய்யக்-கூடியவற்றையும் பிரகடனம் செய்திட, எனது நாவினை அசையச் செய்வீராக.

உமது உயிரினங்கள் மத்தியில், கொடுமைக்-காரர்களின் மேலாதிக்கத்தினால் நான் தடை-செய்யப்படாதிருக்கும் விதத்திலும், உமது இராஜ்யத்தில் வசிப்போரின் மத்தியிலுள்ள நம்பிக்கையற்றோரின் தாக்குதல்களினால் தடுக்கப்படாதிருக்கும் விதத்திலும், உமது சமயத்தில் என்னைப் பலப்படுத்துவீராக; உமது நாடுகள்தோறும் என்னை ஓர் ஒளிவீசும் விளக்காக ஆக்கிடுவீராக; அதனால், எவர்களது இதயங்களுள் உந்தன் அறிவொளி ஒளிர்கின்றதோ; உமது அன்புக்கான ஏக்கம் வாசம் செய்கின்றதோ, அவர்களெல்லாரும் அதன் பிரகாசத்தினால் வழிகாட்டப்படக்கூடுமாக.

மெய்யாகவே, நீர் விரும்பியவாறு செய்வதற்குச் சக்திப்படைத்தவர் நீரே; படைப்பெனும் இராஜ்யத்தை நீர் உமது பிடிக்குள் வைத்துள்ளீர். அதி வல்லவரும், சர்வ விவேகியுமான கடவுள், உம்மைத் தவிர வேறிலர்.

#11404
- Bahá'u'lláh

 

என் கடவுளே, உமது திருச்சொல்லை மேம்படுத்திடவும், வீணானதையும், தவறானதையும் மறுதலித்திடவும், உண்மையை நிலைநிறுத்திடவும், புனித வசனங்களை வெளிநாடுகளில் பரப்பிடவும், பேரொளிகளை வெளிப்படுத்திடவும், நேர்மையாளரின் இதயங்களுள் விடியல் ஒளியை உதித்திடச் செய்வதற்கும், உந்தன் ஊழியனுக்கு உதவி புரிவீராக.

மெய்யாகவே, தாராளமானவரும், மன்னிப்பவரும் நீரே.

#11405
- `Abdu'l-Bahá

 

என் கடவுளே, நான் பணிவாகச் சிரந்தாழ்த்தியும், உமது கட்டளைகள் முன் என்னைத் தாழ்த்திக்கொண்டும், உமது மாட்சிமைக்கு அடிபணிந்தும், உமது அரசாட்சி வலிமையின்பால் நடுக்கமுற்றும், உமது கடுங்கோபத்திலிருந்து விரைந்தோடியும், உமது கிருபைக்காக மன்றாடியும், உமது மன்னிப்பைச் சார்ந்தும், உமது சீற்றத்தின் முன் பயபக்தியால் நடுங்கியும் இருக்கின்ற என்னை நீர் காண்கின்றீர்.

உந்தன் அன்பர்களை உமது இராஜ்யங்கள் தோறும் ஒளிக்கதிர்களாக ஆக்கியும்; உம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊழியர்கள், உமது திருவார்த்தையை மேன்மையுறச் செய்திட உதவிட வேண்டும் என, துடித்திடும் இதயத்தோடும், வழிந்திடும் கண்ணீரோடும், ஏங்கும் ஓர் ஆன்மாவோடும், மற்றும் எல்லாப் பொருள்களிலிருந்தும் முற்றிலும் பற்றறுத்தும், உம்மை நான் இறைஞ்சுகிறேன். அதனால், அவர்களின் முகங்கள் அழகாகவும், பேரொளியால் பிரகாசம் அடைவதோடு, அவர்களின் இதயங்கள் மர்மங்களால் நிரப்பப்பட்டு, ஒவ்வோர் ஆன்மாவும் அதன் பாவச் சுமையை இறக்கிவிடவும் கூடுமாக. ஆதலால், வெட்கக்கேடான, இழிவான தீயச் செயல்களைப் புரிபவனுமாகிய, ஆக்கிரமிப்-பாளனிடமிருந்து அவர்களைப் பாதுகாப்பீராக.

என் பிரபுவே, மெய்யாகவே உமது நேசர்கள் தாகமுற்றிருக்கின்றனர்; அவர்களை அருட்கொடை, கிருபை எனும் நல்லூற்றுக்கு வழிநடத்திச் செல்வீராக. மெய்யாகவே, அவர்கள் பசித்துள்ளனர்; உமது விண்ணுலக விருந்தை அவர்களுக்காக கீழே அனுப்பிடுவீராக. மெய்யாகவே அவர்கள் நிர்வாணமாக இருக்கின்றனர்; அவர்களைக் கற்றல், அறிவு எனும் ஆடைகளைக் கொண்டு அணிவிப்பீராக.

என் பிரபுவே, அவர்கள் வீரர்கள் ஆவர்; அவர்களைப் போர்க்களத்திற்கு வழிநடத்திச் செல்வீராக. அவர்கள் வழிகாட்டுபவர்கள் ஆவர்; அவர்களை வாதங்களோடும் ஆதாரங்களோடும் பேசிடச் செய்வீராக. அவர்கள் பணிபுரியும் ஊழியர்கள் ஆவர்; மெய்யுறுதி எனும் மதுரசத்தால் நிரம்பி வழிந்திடும் கோப்பையைப் பகிர்ந்து கொள்ள அவர்களை இயலச் செய்வீராக. என் கடவுளே, வளமான பூங்காக்களில் உல்லாசமாகப் பாடித்திரியும் பறவைகளாக அவர்களை ஆக்கிடுவீராக; காடுகளுள் பதுங்கியிருக்கும் சிங்கங்களாகவும், பரந்த ஆழ்கடலினுள் மூழ்கிடும் திமிங்கிலங்களாகவும் அவர்களை ஆக்கிடுவீராக.

மெய்யாகவே பொங்கிவழியும் கிருபையுடையவர் நீரே ஆவீர். வல்லவரும், சக்திமிக்கவரும், என்றும் வாரி வழங்குபவருமான இறைவன், உம்மைத் தவிர வேறெவருமிலர்.

#11406
- `Abdu'l-Bahá

 

இறைவா, உமது நல்விருப்பத்தினை அடைவதையும், உந்தன்பால் சேவகம் புரிவதில் உறுதிப்படுத்தப்படுவதையும், உமது பணியில் என்னை அர்ப்பணித்துக் கொள்வதையும், உமது உயரிய திராட்சைத் தோட்டத்தில் உழைத்திடுவதையும், சகலத்தையும் உமது பாதையில் தியாகம் செய்வதையும் தவிர வேறெந்த ஆவலையும் என் உள்ளத்தில் நான் கொண்டிருக்கவில்லை என்பதனை நீர் அறிந்துமிருக்கின்றீர்; எனது சாட்சியுமாய் இருக்கின்றீர். சர்வ ஞானியும் சகலத்தையும் கண்ணுறுபவரும் நீரே. உந்தன்பால் எனது அன்பினால், மலைகளையும், பாலை-வனங்களையும் நோக்கி என் அடிச்சுவடுகளைத் திருப்புவதையும், உமது இராஜ்யத்தின் வருகையினை உரக்கப் பிரகடனப்படுத்துவதையும், எல்லா மனிதர்களின் மத்தியிலும் உமது அழைப்பினை எழுப்பிடுவதையுமன்றி வேறெந்த விருப்பமும் எனக்கில்லை. இறைவா! இந்த ஆதரவற்றோனுக்கு வழியினைத் திறந்திடுவீராக; இப்பிணியுற்றோனுக்குப் பரிகாரமளிப்பீராக; இத்துன்புற்றோனுக்கு உமது குணப்படுத்துதலை வழங்கிடுவீராக. தகிக்கும் உள்ளத்துடனும் கலங்கிய கண்களுடனும் உமது திருவாயிலில் நான் உம்மைக் கெஞ் சிக் கேட்கிறேன்.

இறைவா! உமது பாதையில் எவ்விதக் கடும் பரீட்சையையும் சகித்துக்கொள்ள நான் சித்தமாய் இருக்கின்றேன்; துன்பம் எதனையும் மனமாரவும் ஆத்மார்த்தமாகவும் எதிர்கொண்டிட நான் அவாவுருகின்றேன்.

இறைவா! சோதனைகளிலிருந்து என்னைக் காத்திடுவீராக. நான் யாவற்றிலிருந்தும் அப்பால் திரும்பியிருப்பதையும், எல்லாச் சிந்தனை- களிலுமிருந்தும் என்னை நான் விடுவித்துக் கொண்டுள்ளதையும் நீர் நன்கு அறிவீர். உமது நாமத்தைக் கூறுவதைத் தவிர எனக்கு வேறெந்தப் பணியும் இல்லை; உமக்கு ஊழியம் செய்வதைத் தவிர எனக்கு வேறெந்த இலட்சியமும் இல்லை.

#11407
- `Abdu'l-Bahá

 

மன்னிப்பு

என் பிரபுவே, உந்தன்பால் தன் வதனத்தைத் திருப்பியுள்ளவனும், உந்தன் கிருபை எனும் அற்புதங்கள் மீதும், உந்தன் அருட்கொடை எனும் வெளிப்பாடுகள் மீதும், தனது நம்பிக்கையை வைத்துள்ளவனும் நானே. உந்தன் கருணை எனும் கதவின் முன்னிருந்து என்னை ஏமாற்றத்தோடு திரும்பிவிடச் செய்திடாதீர் என்றும், உந்தன் சமயத்தை மறுத்திட்ட உந்தன் உயிரினங்களிடம் என்னைக் கைவிட்டு விடாதீர் என்றும் நான் உம்மிடம் பிரார்த்திக்கின்றேன்.

என் கடவுளே, நான் உந்தன் ஊழியனும், உந்தன் ஊழியனின் மைந்தனுமாவேன். உந்தன் நாள்களில் நான் உந்தன் உண்மையை ஒப்புக்கொண்டும், உந்தன் ஒருமை எனும் கரைகளை நோக்கி என் அடிச்சுவடுகளைத் திருப்பியுள்ளேன். உந்தன் தனித்தன்மையை ஒப்புக்கொண்டு, உந்தன் ஒற்றுமையை ஏற்றுக்கொண்டு, உந்தன் மன்னிப்பையும் பொறுத்தருள்தலையும் நம்பி இருக்கின்றேன். நீர் விரும்பியவாறு செய்வதற்குச் சக்தி படைத்தவராவீர். சர்வ ஒளிமயமானவரும், என்றும் மன்னித்தருள்பவருமான கடவுள் உம்மைத் தவிர வேறிலர்.

#11423
- Bahá'u'lláh

 

என் பிரபுவே, உம்மைத் தவிர மற்றனைத்திலிருந்தும் பற்றறுத்து, உமது அருட்கொடை எனும் சொர்க்கத்தையும், உமது தயை எனும் சமுத்திரத்தையும் நோக்கி, என் வதனத்தைத் திருப்பியுள்ளதை நீர் காண்கின்றீர். சைனாயின் மீது உமது திருவெளிப்பாடெனும் பகலவனின் பேரொளிகளினாலும், என்றும் மன்னிப்பவர் எனும் உமது திருநாமம் எனும் தொடுவானத்தின் மீதிருந்து ஒளிவீசிடும் உமது கிருபை எனும் ஒளிக்கோலத்தின் சுடரொளிகளின் பெயராலும்், என்னை மன்னித்தருளி, என் மீது இரக்கம் காட்டிடவேண்டும் என, நான் உம்மைக் கேட்டுக்கொள்கிறேன். எனவே, ஒளி எனும் உமது எழுதுகோலைக் கொண்டு, உமது திருநாமத்தின் வாயிலாகப் படைப்புலகில் என்னை மேன்மைப்படுத்தக் கூடியவற்றை எனக்காக எழுதிடுவீராக. என் பிரபுவே, உந்தன்பால் என்னைத் திரும்பிடவும், உமது அன்புக்குரியவர்களின் குரலை நான் செவிமடுத்திடவும் செய்வீராக. உலகின் சக்திகள் அவர்களைப் பலமிழக்கச் செய்வதில் தோல்வியுறவும், நாடுகளின் அரசாட்சி அவர்களை உம்மிடமிருந்து தடுப்பதில் சக்தியற்றும் போகச்செய்து எனக்கு உதவிடுவீராக; மேலும், உம்மை நோக்கி முன்னேறிச் சென்ற அவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர்: “விண்ணிலுள்ள அனைத்திற்கும், மண்ணிலுள்ள அனைத்திற்கும் பிரபுவாகிய, எங்கள் பிரபுவே இறைவன் ஆவார்.”

#11424
- Bahá'u'lláh

 

எனது கடவுளும், பொருள்கள் அனைத்தின் கடவுளுமானவரே, எனது புகழொளியும் பொருள்கள் அனைத்தின் புகழொளியுமானவரே; எனது ஆவலும் எல்லாப் பொருள்களின் ஆவலுமானவரே, எனது பலமும் எல்லாப் பொருள்களின் பலமுமானவரே, எனது மன்னரும் எல்லாப் பொருள்களின் மன்னருமானவரே, எனது உடைமையாளரும் எல்லாப் பொருள்களின் உடைமையாளருமானரே, எனது நோக்கமும் எல்லாப் பொருள்களின் நோக்கமுமானவரே, என்னை அசைப்பவரும், எல்லாப் பொருள்களின் அசைப்பாளருமானவரே, உந்தன் நாமம் போற்றப்படுமாக. உமது மென்கருணை எனும் சமுத்திரத்திலிருந்து விலகியும், உமது அண்மை எனும் கரைகளிலிருந்து வெகுதூரம் ஒதுங்கியும் நான் இருந்திடாதிருக்கச் செய்வீரென, உம்மிடம் மன்றாடுகிறேன்.

என் பிரபுவே, உம்மைத் தவிர வேறெதுவும் எனக்குப் பயனளிக்காது; உம்மைத் தவிர வேறெவருடனான அண்மையும் எனக்கு நன்மையளிக்கப் போவதில்லை. உம்மைத் தவிர மற்றனைத்தையும் நீர் தவிர்த்திடச் செய்துள்ள உமது செல்வங்களின் மிகுதியினால், உம்பால் தங்கள் வதனங்களைத் திருப்பியும், உமக்குச் சேவை செய்வதற்காக முன்னெழுந்துள்ளவர்களுள் ஒருவனாக என்னையும் சேர்த்துக் கொள்வீர்களாக.

ஆதலால், என் பிரபுவே, உமது ஊழியர்களையும், உமது பணிப்பெண்களையும் மன்னித்தருள்வீராக. உண்மையாகவே, நீரே என்றும் மன்னிப்பவர், அதி இரக்கமுடையவர்.

#11425
- Bahá'u'lláh

 

கடவுளே எங்கள் பிரபுவே! உமக்கு ஒவ்வாததாயிருக்கின்ற எதனிலிருந்தும், உமது கிருபையைக் கொண்டு எங்களைப் பாதுகாப்பீராக; நீர் நன்கு ஏற்கின்றவற்றை எங்களுக்குத் தந்தருள்வீராக. உமது அருட்கொடைகளிலிருந்து எங்களுக்கு அதிகமாக வழங்கி, எங்களை ஆசீர்வதிப்பீராக. நாங்கள் செய்துள்ள காரியங்களுக்காக எங்களை மன்னிப்பீராக, எங்கள் பாவங்களைக் கழுவிடுவீராக, உமது கருணைமிகு மன்னிக்கும் தன்மையைக் கொண்டு எங்களை மன்னிப்பீராக.

உமது அன்புமிகு திருவருளானது, விண்ணிலும் மண்ணிலும் உள்ள படைப்புப் பொருள்கள் அனைத்தையும் சூழ்ந்துள்ளது; மேலும் உமது மன்னிக்கும் தன்மை, படைப்பு முழுவதையும் விஞ்சியுள்ளது. இறையாண்மை உமக்கே உரியது; படைப்பு, திருவெளிப்பாடு ஆகிய இராஜ்யங்கள், உமது அதிகாரத்திற்கு உட்பட்டவை; உம்மால் படைக்கப்பட்ட அனைத்துப் பொருள்களையும் நீர் வலக் கரத்தில் பிடித்துக்கொண்டுள்ளீர்; நிர்ணயிக்கப்பட்ட அளவுகளின் படி மன்னிப்பானது உமது பிடிக்குள் அடங்கியுள்ளது. நீர் விரும்பியவாறு உமது ஊழியர்களுள் எவர் ஒருவரையும் நீர் மன்னித்தருள்வீர். மெய்யாகவே, என்றும் மன்னிப்பவரும், சர்வ அன்பானவரும் நீரே ஆவீர். உமது அறிவிலிருந்து எதுவும் தப்பிவிடுவதில்லை; மேலும் உம்மிடமிருந்து மறைந்துள்ளவை எதுவுமே இல்லை.

கடவுளே எங்கள் பிரபுவே! உமது வல்லமையின் சக்தியைக் கொண்டு எங்களைப் பாதுகாப்பீராக; அற்புதமாகப், பொங்கி எழும் உமது சமுத்திரத்திற்குள், எங்களை நுழைந்திடும்படி செய்து, உமக்குப் பொருத்தமானவற்றை எங்களுக்குத் தந்தருள்வீராக.

இறைமைமிக்க ஆட்சியாளரும், வலியதைச் செய்பவரும், மென்மையானவரும், அதி அன்பானவரும் நீரே ஆவீர்.

#11426
- The Báb

 

பிரபுவே, நீர் போற்றப்படுவீராக; எங்களின் பாவங்களை மன்னிப்பீராக; எங்கள் மீது கருணை காட்டி, எங்களை உந்தன்பால் திரும்பிட உதவுவீராக. எங்களை உம்மையன்றி வேறெதன்மீதும் நம்பிக்கை வைக்க விட்டுவிடாதீர்; உமது வள்ளன்மையின் மூலம் நீர் நேசிப்பனவற்றையும் விழைவனவற்றையும், உமக்குப் பொருத்தமானவற்றையும், எங்களுக்கு தந்தருள்வீராக. உண்மையாக நம்புவோரின் ஸ்தானத்தை மேன்மைப்படுத்தி, உமது அருள்மிகு மன்னிப்பினைக் கொண்டு அவர்களை மன்னித்திடுவீராக. மெய்யாகவே, ஆபத்தில் உதவுபவரும், சுயஜீவியரும் நீரே ஆவீர்.

#11427
- The Báb

 

என் பிரபுவே, உம்மைக் குறிப்பதை விடுத்து, மற்றனைத்தையும் குறிப்பிட்டமைக்காகவும், உம்மைப் போற்றுவதை விடுத்து மற்றனைத்தையும் போற்றியமைக்காகவும், உமதருகில் இருப்பதிலே மகிழ்வுறுவதில் அல்லாது மற்றெல்லா மகிழ்ச்சிக்காகவும், உமது தொடர்புறவிலே இன்பம் பெறுவதில் அல்லாது, மற்றெல்லா இன்பத்திற்காகவும், உமது அன்பு, உமது நல்விருப்பம் ஆகிய களிப்பில் அல்லாது, மற்றெல்லா களிப்பிற்காகவும், உம்மை எவ்வகையிலும் சார்ந்திராத, ஆனால் என்னைச் சார்ந்த அனைத்து விஷயங்களுக்காகவும், என்னை மன்னிக்குமாறு நான் உம்மைக் கெஞ்சி கேட்கின்றேன்; பிரபுகளுக்கெல்லாம் பிரபுவானவரே, வழிவகைகளை வழங்குபவரே, கதவுகளின் தாழ்திறப்பவரே.

#11428
- The Báb

 

கடவுளே, ஒளி உமக்கே உரியதாகுக. மனுக்குலம் அனைத்தின் போற்றுதலுக்கப்பால் நீர் பரிசுத்தமாக உயர்ந்திருக்கும்போது, உம்மைப்் பற்றி நான் எவ்வாறு குறிப்பிட இயலும். கடவுளே, உமது நாமம் போற்றப்படுமாக; நீரே அரசரும், நித்திய உண்மையும் ஆவீர்; விண்ணுலகங்களிலும் மண்ணிலும் உள்ளவை யாவை என்பதை நீர் அறிவீர்; உம்மிடமே யாவும் திரும்பிடுவது கட்டாயம். தெய்வீகமாக விதித்தருளப்பட்ட உமது திருவெளிப்பாட்டை ஒரு தெளிவான அளவுக்-கேற்றவாறு நீர் கீழே அனுப்பியுள்ளீர். பிரபுவே, நீர் போற்றப்படுவீராக. விண்ணிலும் மண்ணிலும், அவற்றுக்கு இடையேயும் உள்ள வான்படைகளைக் கொண்டு, நீர் விரும்பிய எவர் ஒருவரையும் நீர் வெற்றிப்பெறச் செய்கின்றீர். நீரே இறையாண்மையுடையவர், நித்திய உண்மை-யானவர், வென்றிடவியலா வல்லமையின் பிரபு.

பிரபுவே, நீர் போற்றப்படுவீராக. உமது மன்னிப்புக்காக மன்றாடிடும் உமது ஊழியர்களின் பாவங்களை, நீர் எந்நேரமும் மன்னித்தருள்கின்றீர். என் பாவங்களையும் வைகறையில் உமது மன்னிப்பை நாடுவோரின் பாவங்களையும் கழுவுவதோடு, பகல் வேளைகளிலும், இரவு காலங்களிலும் உம்மைப் பிரார்த்திப்போரின் பாவங்களையும், வேறெவரையும் அல்லாது கடவுளை மட்டுமே ஆவல்கொள்வோரின் பாவங்களையும், இறைவன் அவர்களுக்கென வழங்கியுள்ள எதுவானாலும் அதனை அர்ப்பணித்தோரின் பாவங்களையும், காலையும் மாலை வேளையும் உமது புகழைப் பாடிடுவோரின் பாவங்களையும், தங்களுக்கான கடமைகளில் தவறாதோரின் பாவங்களையும் மன்னித்தருள்வீராக.

#11429
- The Báb

 

பிரபுவே, உமது முன்னிலையில் அத்துமீறிய என் செயல்கள் என் முகத்தை வெட்கத்தால் மூடி மறைத்துள்ளன என்பதையும், உம் முன்னே எனக்குச் சுமையாகவும் ஆகியுள்ளன என்பதையும், எனக்கும் உமது அழகிய வதனத்திற்கும் இடையே குறுக்கிட்டுள்ளன என்பதையும், எல்லாத் திசைகளிலிருந்தும் என்னைச் சூழ்ந்துள்ளன என்பதையும், உமது விண்ணுலகச் சக்தியின் வெளிப்பாடுகளை அடைவதிலிருந்து எல்லாத் திசைகளிலிருந்தும் என்னைத் தடுத்துள்ளன என்பதையும் நான் உணர்கின்றேன்.

பிரபுவே! நீர் என்னை மன்னிக்காவிடில், மன்னிப்பு வழங்குவதற்கு வேறு எவருளர்; என் மீது நீர் கருணை காட்டாவிடில், இரக்கப்படுவதற்கு வேறு யாரால் இயலும்? புகழ் உமக்கே உரியதாகுக; இல்லா நிலையில் நான் இருந்தபோதும் நீர் என்னைப் படைத்துள்ளீர்; எனக்கு எவ்வித புரிந்துணர்வும் இல்லாத நிலையிலும் நீர் என்னைப் பேணியுள்ளீர். அருட்கொடைக்கான ஒவ்வோர் ஆதாரமும் உம்மிடமிருந்தே தோன்றுகின்றது என்பதற்காகவும்; கிருபை எனும் ஒவ்வொரு சின்னமும் உமது கட்டளை எனும் கருவூலங்களிலிருந்து வெளிப்படுகின்றது என்பதற்காகவும், உமக்கே புகழெல்லாம் சேரட்டுமாக.

#11430
- The Báb

 

மன்னித்தருளும் பிரபுவே! உமது இவ்வூழியர்களாகிய அனைவருக்கும் அடைக்கலமானவர் நீரே. நீர் இரகசியங்களை அறிவீர், யாவற்றையும் தெரிந்திருக்கின்றீர். நாங்கள் அனைவரும் ஆதரவற்றவர்கள், நீரே சக்தி மிக்கவர், எல்லாம் வல்லவர். நாங்களனைவரும் பாவிகள், நீரே பாவங்களை மன்னிப்பவர், கருணையாளர், இரக்கமுடையவர். பிரபுவே! எங்களின் குறைகளைக் கண்ணுறாதீர். உமது அருளுக்கும் வள்ளன்மைக்கும் ஏற்ப எங்களை நடத்துவீராக. எங்களின் குறைகளோ அதிகம், ஆனால், உமது மன்னிப்பெனும் சமுத்திரமோ எல்லையற்றது. எங்களின் பலவீனமோ கடுமையானது, ஆனால் உமது உதவி, சகாயம் ஆகியவற்றின் ஆதாரங்களோ தெளிவானவை. ஆகவே, எங்களை உறுதியும் பலமும் அடையச் செய்வீராக. உமது புனித நுழைவாயிலில் தகுதியானவற்றைச் செய்திட எங்களுக்கு உதவியளிப்பீராக. எங்களின் உள்ளங்களை ஒளி பெறச் செய்வீராக, எங்களுக்கு ஊடுருவிக் காணும் கண்களையும், கவனமுறும் செவிகளையும் அளிப்பீராக. மாண்டவர்களை உயிர்பெறச் செய்து, நோயுற்றோரைக் குணப்படுத்துவீராக. ஏழைகளுக்குச் செல்வம் வழங்கி, அஞ்சி நடுங்குவோருக்கு அமைதியும் பாதுகாப்பும் அளிப்பீராக. எங்களை உமது இராஜ்யத்தில் ஏற்றுக்கொண்டு, எங்களை வழிகாட்டுதல் என்னும் ஒளியினால் பிரகாசிக்கச் செய்வீராக. நீரே தாராளமானவர்; நீரே கருணையாளர்; நீரே அன்புடையவர்.

#11431
- `Abdu'l-Bahá

 

மனிதகுலம்

என் கடவுளே, நான் வணங்கி நேசிப்பவரே! உமது ஒற்றுமைக்கும், உமது ஒருமைக்கும் நான் சாட்சியம் அளித்து, கடந்த காலத்திலும், நிகழ் காலத்திலும் நீர் வழங்கிய பரிசுகளுக்காக நன்றி நவில்கின்றேன். நீரே சர்வ வள்ளன்மைமிக்கவர்; நிரம்பி வழிந்திடும் உமது கருணை மழை, உயர்ந்தோர், தாழ்ந்தோர் ஆகியோரின் மீது சரிசமமாகவே பொழிந்துள்ளது; உமது கிருபையின் பிரகாசங்கள், கீழ்ப்படிந்திடுவோர், கீழ்ப்படிந்திடாதோர் ஆகிய இருதரப்பினர் மீதும் பொழியப்பட்டுள்ளன.

கருணைக் கடவுளே, எவரது கதவின் முன் கருணையின் சாராம்சம் சிரந்தாழ்த்தியுள்ளதோ, எவரது சமயத்தின் சரணாலயத்தைச் சுற்றி, அன்புக் கருணையானது, அதன் உள்ளார்ந்த ஆற்றலில், வலம் வந்துள்ளதோ, அதன் பேரில், உமது தொன்மை கிருபையை இறைஞ்சி, உமது நிகழ்கால தயவை நாடி, நாங்கள் உம்மிடம் மன்றாடுகின்றோம்; ஆதலால், உயிர்ப்்பொருள் உலகின் அவதாரங்க-ளானவர் அனைவரின் மீதும் கருணைக்காட்டி, உமது நாள்களில் உமது கிருபையின் பொழிவுகளை அவர்களுக்குத் தந்திட மறுத்திடாதீர்.

அனைவரும் ஏழைகளாகவும் வறியோராகவும் இருக்கின்றோம்; மெய்யாகவே, நீரே சகலமும் கொண்டுள்ளவர், சகலத்தையும் அடிபணியச் செய்பவர், சர்வ சக்திமிக்கவர்.

#11418
- Bahá'u'lláh

 

இரக்கமுள்ள பிரபுவே, தாராளமும் செயல்திறனும் கொண்டவரே! உமது ஆதரவின் கீழ் பாதுகாப்பைப் பெற்றிருக்கின்ற உமது ஊழியர்கள் நாங்களே. எங்கள் மீது உமது தயை எனும் பார்வையைச் செலுத்திடுவீராக. எங்கள் கண்களுக்கு ஒளியையும், எங்கள் காதுகளுக்குச் செவிமடுத்திடும் சக்தியையும், எங்கள் இதயங்களுக்குப் புரிந்துகொள்ளலையும், அன்பையும் வழங்கிடுவீராக. உமது நற்செய்திகளின் வாயிலாக எங்கள் ஆன்மாக்கள் களிப்படையவும், மகிழ்ச்சி பெற்றிடவும் செய்திடுவீராக. பிரபுவே! உமது இராஜ்யத்தை நோக்கிச் செல்லும் பாதையை எங்களுக்குக் காட்டிடுவீராக; பரிசுத்த ஆவியின் சுவாசங்களைக் கொண்டு எங்கள் அனைவரையும் மீண்டும் உயிர்பெறச் செய்திடுவீராக. எங்களுக்கு நித்திய வாழ்வை வழங்கி, எங்கள் மீது என்றும் முடிவில்லாப் புகழைத் தந்தருள்வீராக. மனுக்குலத்தை ஒன்றுசேர்த்து, மனித உலகை ஒளிபெறச் செய்திடுவீராக. நாங்கள் அனைவரும் உமது பாதையைப் பின்பற்றி, உமது நல்விருப்பத்திற்காக ஏங்கி, உமது இராஜ்யத்தின் மர்மங்களை நாடிடவும் கூடும். கடவுளே! எங்களை ஒன்றுபடுத்தி, உமது பிரிக்கமுடியாத பந்தத்தைக் கொண்டு, எங்கள் இதயங்களை இணைத்திடுவீராக. மெய்யாகவே, நீரே வழங்குபவர், நீரே இரக்கமுடையவர், நீரே வல்லவர்.

#11419
- `Abdu'l-Bahá

 

அன்பான பிரபுவே! தாராளமும், இரக்கமுமுள்ள ஆண்டவரே! உமது வாசலில் பணிபுரியும் ஊழியர்கள் நாங்கள்; தெய்வீக ஒற்றுமை எனும் பாதுகாத்திடும் உமது நிழலின் கீழ் கூடியுள்ளோம். உமது கருணை சூரியன் அனைவரின் மீதும் பிரகாசிக்கின்றது; உமது அருட்கொடை மேகங்கள் அனைவரின் மீதும் பொழிகின்றன. உமது பரிசுகள் அனைவரையும் சூழ்ந்துள்ளன; உமது அன்பாதரவு அனைவருக்கும் ஆதரவை வழங்குகின்றது; உமது பாதுகாப்பு யாவற்றையும் அரவணைத்துள்ளது; உமது தயை எனும் பார்வை அனைவரின் மீதும் செலுத்தப்பட்டுள்ளது. பிரபுவே! உமது அளவில்லா அருட்கொடைகளை வழங்கிடுவீராக; உமது வழிகாட்டல் எனும் ஒளி பிரகாசித்திடச் செய்திடுவீராக. கண்கள் ஒளிர்ந்திடவும், நிலையான பேரின்பத்தால் இதயங்கள் மகிழ்ந்திடவும் செய்திடுவீராக. மக்கள் அனைவருக்கும் ஒரு புதிய ஆற்றலை வழங்கி, அவர்களுக்கு நித்திய வாழ்வைத் தந்தருள்வீராக. உண்மை புரிந்துணர்வு எனும் வாயில்களைத் திறந்து, நம்பிக்கை ஒளி பிரகாசித்திடச் செய்திடுவீராக. உமது அருட்கொடை எனும் நிழலின் கீழ் மக்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டி, அவர்களை இணக்கமாக ஒன்றிணைத்திடுவீராக; அதனால், அவர்கள் ஒரே சூரியனின் ஒளிக்கதிர்களாகவும், ஒரே சமுத்திரத்தின் அலைகளாகவும், ஒரே மரத்தின் கனிகளாகவும் ஆகிடக்கூடும். அவர்கள் ஒரே ஊற்றிலிருந்து பருகிடக்கூடும்; ஒரே இளந்தென்றலினால் அவர்கள் புத்துயிரூட்டப்- படக்கூடும். ஒரே ஒளியின் தோற்றுவாயிலிருந்து அவர்கள் ஞானத்தைப் பெறக்கூடும். வழங்குபவரும், கருணைமிக்கவரும், சர்வ வல்லவரும் நீரே ஆவீர்.

#11420
- `Abdu'l-Bahá

 

அன்பான பிரபுவே, நீர் மனிதர்கள் யாவரையும் ஒரே இனத்திலிருந்து ஆக்கியுள்ளீர். அவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தினராக வாழ விதித்துள்ளீர். உமது தெய்வீக முன்னிலையில் அவர்களெல்லாரும் உமது ஊழியர்களே. மனித இனம் முழுவதும் உமது கூடாரத்தின் கீழ் பாதுகாக்கப்படுகின்றது; உமது வள்ளன்மை என்னும் அருட்பீடத்தின் அருகில் அவர்கள் அனைவரும் ஒன்றுகூடியுள்ளனர்; அனைவருமே உமது அருட்கொடை என்னும் தீபத்தின் ஒளியினால் பிரகாசிக்கின்றனர்.

இறைவா! நீர் எல்லாரிடத்திலும் அன்பாயிருக்கின்றீர்; எல்லாரின் தேவையையும் பூர்த்தி செய்துள்ளீர்; யாவரையும் பாதுகாக்கின்றீர்; எல்லாருக்கும் வாழ்வளிக்கின்றீர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் திறமைகளையும் சக்திகளையும் வழங்கியுள்ளீர், அனைவரும் உமது கருணைக் கடலில் மூழ்கி இருக்கின்றனர்.

கருணைமிக்கப் பிரபுவே! யாவரையும் ஒன்று படுத்துவீராக. உமது சமயங்களிடையே இணக்கத்தை ஏற்படுத்தி, தேசங்களை ஒன்றாக்குவீராக; அதனால் அவை ஒவ்வொன்றும் மற்றொன்றை ஒரே குடும்பமாகவும், மண்ணுலகம் அனைத்தையுமே ஒரே இல்லமாகவும் காணக் கூடும். அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பூரண இணக்கத்துடன் வாழ்ந்திடுவராக.

கடவுளே, மனித இன ஒருமையெனும் விருதுக் கொடியை நாட்டுவீராக; கடவுளே! அதி உயரிய சமாதானத்தை நிலை நாட்டுவீராக; கடவுளே! உள்ளங்களை ஒன்றிணைத்திடுவீராக; அன்புமிக்கத் தந்தையே! உமது அன்பு என்னும் நறுமணத்தினால் எங்கள் உள்ளங்களை மகிழ்வுறச் செய்வீராக. உமது வழிகாட்டுதல் என்னும் ஒளியால் எங்களின் கண்களைப் பிரகாசிக்கச் செய்வீராக.

உமது வசனங்களின் கீதத்தினால் எங்களின் செவிகளை இன்புறச் செய்து, உமது அருள் என்னும் கோட்டையினுள் எங்களைப் பாதுகாப்பீராக.

நீரே வல்லவரும் சக்திமிக்கவரும் ஆவீர்; பாவங்களை மன்னிப்பவரும் நீரே; மனித இனம் அனைத்தின் குறை பாடுகளைப் பொருட்-படுத்தாதவரும் நீரே.

#11421
- `Abdu'l-Bahá

 

கடவுளே, மனிதர்களின் பிரகாசமிகு மெய்ம்மைகளின் மீது உமது பேரொளியினைப் பாய்ச்சி, அறிவு, வழிகாட்டுதல் என்னும் பிரகாசமான ஒளிகளை அவர்கள் மீது பொழியச் செய்து, அவர்களைப் படைப்புப் பொருள்கள் அனைத்திலிருந்தும் இவ் விழுமிய கிருபைக்காகத் தேர்ந்தெடுத்து, அனைத்துப் பொருள்களையும் அவர்களை ஆட்கொள்ளச் செய்து, அவற்றின் உள்ளார்ந்த சாராம்சத்தினைப் புரிந்து கொள்ளவும், அவற்றின் மர்மங்களை வெளிப்படுத்திடவும், அவற்றை இருளிலிருந்து கண்களுக்குப் புலனாகும் உலகிற்கு வெளிக்கொணரவும் செய்திட்டவரே! அவர், மெய்யாகவே, யாரை விரும்புகின்றாரோ அவருக்குத் தமது விசேஷ கருணையைக் காட்டுகின்றார்.

பிரபுவே, உமது நேசர்களை அறிவு, அறிவியல்கள், கலைகள் ஆகியவற்றினைப் பெற்றிடவும் அவர்கள் படைப்பினங்கள் அனைத்தின் உள்ளார்ந்த மெய்ம்மையினில் பொக்கிஷமாக்கப்பட்டுள்ள இரகசியங்களைப் புரிந்து கொள்ளவும் உதவி புரிவீராக. இருப்பனவற்றின் உள்ளார்ந்த பகுதியில் எழுதிப் பதிக்கப்பட்டுள்ள மறைவான உண்மைகளைச் செவிமடுக்கவும், செய்வீராக. படைப்பினங்கள் அனைத்தின் மத்தியில் அவர்களை வழிகாட்டுதலின் சின்னங்களாகவும், இந்த “முதல் வாழ்வில்” ஒளியினைப் பொழிந்திடும், மனதின் ஊடுருவும் கதிர்களாகவும், அவர்களை ஆக்கிடுவீராக. அவர்களை உந்தன்பால் வழி நடத்துபவர்களாகவும், உமது பாதையில் உமது இராஜ்யத்தின்பால் மனிதர்களை விரைந்திட ஊக்குவித்திடும் தூதுவர்களாகவும் ஆக்கிடுவீராக.

மெய்யாகவே, நீரே, சக்தி மிக்கவர், பாதுகாப்பவர், ஆற்றல் மிக்கவர். ஆதரிப்பவர், வலிமை மிக்கவர், தாராள குணம் மிகுந்தவர்.

#11422
- `Abdu'l-Bahá

 

ஹுக்குக்குல்லா

ஹுக்குக்குல்லா, உண்மையாகவே, ஒரு முக்கியமான சட்டமாகும். இவ்வர்ப்பணிப்பைச் செய்வது எல்லாருக்கும் கடமையாகின்றது, ஏனெனில், அதுவே அருள்பாலிப்புக்கும் செல்வத்திற்கும் எல்லா நன்மைக்கும் ஊற்றாகும். அதுவே சகலத்தையும் கொண்டுள்ள, வள்ளன்மையே உருவான இறைவனின் உலகங்கள் ஒவ்வொன்றிலும், ஒவ்வோர் ஆன்மாவினிடமும் நிலைத்திருக்கக் கூடிய வள்ளன்மையாகும்.

— பஹாவுல்லா

எந்தன் கருணைமிக்க பிரபுவே, நீர் மகிமைப்படுத்தப் படுவீராக! உமது புனித திருவாய்மொழி எனும் சமுத்திரத்தின் கொந்தளிப்புப் பேராலும், உமது தலையாய அரசாண்மையின் எண்ணற்ற அடையாளங்கள் பேராலும், உமது தெய்வீகத் தன்மையின் அழுத்தமான அடையாளங்கள் பேராலும், உமது அறிவினுள் புதைந்து கிடக்கும், மறைக்கப்பட்ட மர்மங்களின் பேராலும், உமக்கும் உம்மால் தேர்ந்தெடுக்கப் பட்டோருக்கும் சேவைபுரிவதற்காக உமது கிருபையை எனக்குத் தந்தருள்வீராக; மற்றும் உமது திருநூலில் நீர் விதித்துள்ள உமது ஹுக்குக்கைக் கடமையுணர்வோடு வழங்கிட, என்னை இயலச் செய்திடுவீராக.

என் பிரபுவே, உமது ஒளி எனும் இராஜ்யம் மீது, இந்தப் பற்றாசைகளை வைத்தும், உமது தாராளம் எனும் அங்கியின் நுனியை இறுகப் பற்றிக்கொண்டவனும், அடியேன் ஆவேன். எல்லா ஜீவிகளுக்கும் பிரபுவானவரே; நாமங்கள் இராஜ்யத்தின் ஆட்சியாளரே, உம்மிடமுள்ள பொருள்களை எனக்குத் தரமறுத்திடாமலும், உம்மால் தேர்ந்தெடுக்கப் பட்டோர்களுக்கென நீர் விதித்தருளியவற்றை எனக்குத் தந்திட மறுத்திடாதீர் எனவும் நான் உம்மை வேண்டிக்கொள்கிறேன்.

நாமங்கள் அனைத்தின் பிரபுவும், விண்ணுலகங்களின் படைப்பாளருமானவரே, உமது சமயத்தில் நான் பற்றுறுதியாக இருந்திட, உந்தன் பலப்படுத்தும் கிருபையைக் கொண்டு, எனக்கு உதவிடுமாறு நான் உம்மிடம் மன்றாடுகிறேன்.

அதனால், உலகின் மாயத் தோற்றங்கள் என்னை ஒரு திரையைப் போன்று மறைத்திடாமல் இருப்பதோடன்றி, உமது நாள்களில் உமது மக்களைத் தவறான வழிக்கு வழிநடத்திச் செல்ல முன்னெழுந்திட்ட துஷ்டர்களின் வன்முறை கிளர்ச்சிகளினால் என்னைத் தடுத்து நிறுத்திடாமல் இருக்கக் கூடும். ஆகையால், என் இதயத்தின் ஆவலே, இவ்வுலகிலும் வருவுலகிலும் உள்ள நன்மைகளை எனக்கு விதித்திடுவீராக. மெய்யாகவே, நீர் விரும்பியதைச் செய்வதற்குச் சக்திமிக்கவர் நீரே ஆவீர். என்றும் மன்னிப்பவரும், அதி தாராளக் கடவுளும், உம்மையன்றி வேறெவருமிலர்.

#11447
- Bahá'u'lláh

 

Occasional

உண்ணா நோன்பு

கித்தாப்-இ-அகடாசில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது: “பருவ முதிர்ச்சியின்(15 வயதில்) ஆரம்பத்திலிருந்து நீ பிரார்த்தனையிலும் உண்ணா நோன்பிலும் ஈடுபட வேண்டுமாய் யாம் கட்டளையிட்டுள்ளோம்; இது உனது தேவரும், உனது முன்னோர்களின் தேவருமாகிய உனது கடவுளால் விதிக்கப்பட்டுள்ளது . . . . பயணி, நோயுற்றோர், கர்ப்பிணி அல்லது குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டுபவள் ஆகியோர் நோன்பு நோற்றலால் கட்டுப்படுத்தபடார் . . . . சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை உணவு உட்கொள்வதையும் நீர் பருகுவதையும் தவிர்த்திடுங்கள்; கவனமாய் இருங்கள், இல்லையெனில் ஆவல், அதி புனித நூலில் நிர்ணயிக்கப்பட்டுள்ள இக்கிருபையினை உங்களிடமிருந்து பறித்திடப்போகிறது.”

என் இறைவா, நீர் உமது அன்புக்குரியவர்களை உண்ணா நோன்பைக் கடைப்பிடிக்குமாறு கட்டளையிட்டுள்ள நாள்களின் முதல் நாள் இதுவே ஆகும். தனக்காகவும், தன் ஆசைக்காகவும் அல்லாது உமது வெஞ்சினத்தின் பயம் காரணமாகவும் அல்லாது, உமது தன்னகத்தின் சாட்சியாகவும் உந்தன் மீதுள்ள அன்பிற்காகவும், உமது நல்விருப்பத்திற்காகவும் நோன்பிருந்து, உமது அதி சிறப்புமிகு நாமங்கள், மாண்புறும் பண்புகள் மீது ஆணையாகவும், உம்மைத் தவிர மற்றெல்லாவற்றின் மீதும் உள்ள அன்பிலிருந்து அவர்களைத் தூய்மைப்படுத்திடுமாறும், உமது வதனமெனும் ஒளிகளின் உதயஸ்தல அண்மை, உமது ஒருமைத்தன்மை எனும் அரியணையின் ஆசனம் ஆகியவற்றுக்கு அவர்களை ஈர்த்திடுமாறும் உம்மைக் கேட்கின்றேன். என் இறைவா, உமது அறிவெனும் ஒளியைக் கொண்டு, அவர்கள் உள்ளங்களை ஒளிபெறச் செய்தும், உமது விருப்பம் எனும் தொடுவானத்திலிருந்து பிரகாசிக்கும் பகல் நட்சத்திரத்தின் கதிர்களால் அவர்களின் முகங்களைப் பொலிவடையவும் செய்திடுவீராக. உமக்கு விருப்பம் தரவல்லவற்றைச் செய்திட நீர் வலிமையுடையவராக இருக்கின்றீர். மனிதர் அனைவரும் உதவி கோரி அழைக்கும், சர்வ மகிமைமிக்கக் கடவுள் உம்மையன்றி வேறிலர்.

என் கடவுளே, உம்மை வெற்றி பெறச் செய்யவும், உமது திருவாக்கினை மேன்மையுறச் செய்யவும் அவர்களுக்கு உதவிடுவீராக. உமது நினைவுகள் மற்றும் புகழ்ச்சி, உமது நிரூபணங்கள், உமது அடையாளங்கள் ஆகிவற்றினால் உலகம் முழுவதையும் அந்தளவுக்கு நிறைந்திடச் செய்வீராக. அதனால் உமது ஊழியர்களிடையே உமது சமயத்தின் கரங்கள் போன்றும் மனுக்குலத்தினிடையே உமது சமயத்தையும், உமது அடையாளங்களையும் வெளிப்படுத்து-பவர்களாக அவர்கள் ஆகிடக்கூடும். மெய்யாகவே, நீரே சர்வ தாராள குணமுடையவரும், அதி மேன்மையானவரும் , ஆற்றல் மிக்கவரும், வலிமை வாய்ந்தவரும், தயாள குணமுடையவரும் ஆவீர்.

#11437
- Bahá'u'lláh

 

அனைத்தும் அறிந்தவரும் எல்லாம் தெரிந்தவருமான கடவுளின் திருநூல்களில் வாக்களிக்கப்பட்டவருமான அவரது திருநாமத்தின் பேரில்! உமது அரியாசனத்தைச் சுற்றி வலம் வந்து, உமது முன்னிலையை அடைந்த ஊழியர்கள், உண்ணா நோன்பிருந்த அவ்வுண்ணா நோன்பு நாள்கள் வந்துவிட்டன. கூறுங்கள்: நாமங்களின் இறைவனே, விண்ணுலகையும் மண்ணுலகையும் படைத்தவரே! உமதன்பின் காரணமாகவும், உமது நல்விருப்பம் காரணமாகவும் உண்ணா நோன்பிருந்தும், உமது நூல்கள், நிருபங்கள் ஆகியவற்றில் நீர் கட்டளையிட்டுள்ளனவற்றைக் கடைப்பிடித்துமுள்ளோரின் நோன்பை ஏற்றுக்கொள்ளுமாறு சர்வ மகிமையாளர் எனும் உமது நாமத்தின் பேரால் நான் உம்மை வேண்டிக்கொள்கின்றேன். உமது சமயத்தை உயர்த்துவதற்கும், உமதன்பில் நான் நிலையாக இருப்பதற்கும், அவர்களின் பெயரால் உம்மை வேண்டுகிறேன்; அதனால் உமது படைப்பினங்களின் ஆர்ப்பரிப்பு என் காலடிகளைச் சறுக்கச் செய்திடாதிருக்குமாக. மெய்யாகவே, நீர் விரும்பிடும் எவற்றின் மீதும் அதிகாரம் செலுத்திடவல்லவர் நீரே. உயிர்ப்பூட்டுபவரும், சர்வ சக்திவாய்ந்தவரும், அதி கொடையாளரும், நாள்களுக்கெல்லாம் ஆதியானவருமான உம்மையன்றி கடவுள் வேறிலர்.

#11438
- Bahá'u'lláh

 

என் கடவுளே, உமது வல்லமைமிக்க அடையாளம் மூலமாகவும், மனிதர்கள் மத்தியில் உமது அருளின் வெளிப்பாடு மூலமாகவும், உமது முன்னிலை எனும் நகரின் வாசலிலிருந்து என்னைத் துரத்திவிடாதீர் என்றும், உமது உயிரினங்கள் மத்தியில் உமது அருளின் வெளிப்பாடுகள் மீது நான் வைத்துள்ள நம்பிக்கைகளைக் குலைத்துவிடாதீர் என்றும், நான் உம்மிடம் மன்றாடுகிறேன்.

என் கடவுளே, அதி புனிதமும், அதி பிரகாசமும், அதி வலிமையும், அதிவுயர்வும், அதி மேன்மையும், அதி பேரொளியுமிக்க உந்தன் திருநாமத்தை நான் உறுதியாகப் பிடித்துக் கொண்டிருப்பதையும்; இவ்வுலகிலும், வருவுலகிலும் உள்ள அனைத்தையும் சார்ந்துள்ள அங்கியின் விளிம்பினைப் பற்றிக் கொண்டிருப்பதையும் நீர் காண்கின்றீர்.

என் கடவுளே, உமது கதவின் வாயிற்படியின் அண்மைக்கு மேன்மேலும் நெருக்கமாக என்னை ஈர்த்திடவும், உமது கருணை எனும் நிழலிலிருந்தும், உமது அருட்கொடை எனும் விதானத்திலிருந்தும், என்னை வெகுதூரம் விலக்கிடாதிருக்கவும் உமது இனிய குரல் மூலமாகவும், உமது மேன்மைமிகு திருவாக்கு மூலமாகவும், நான் உம்மிடம் மன்றாடுகிறேன்.

என் கடவுளே, அதி புனிதமும், அதி பிரகாசமும், அதி வலிமையும், அதிவுயர்வும், அதி மேன்மையும், அதி பேரொளியுமிக்க உந்தன் திருநாமத்தை நான் உறுதியாகப் பிடித்துக் கொண்டிருப்பதையும்; இவ்வுலகிலும், வருவுலகிலும் உள்ள அனைத்தையும் சார்ந்துள்ள அங்கியின் விளிம்பினைப் பற்றிக் கொண்டிருப்பதையும் நீர் காண்கின்றீர்.

என் கடவுளே, உமது சுடரொளி வீசும் நெற்றியின் பிரகாசம் மூலமாகவும், அதி உயரிய தொடுவானத்தின் மீதிருந்து ஒளி வீசும் உமது திருவதன ஒளியின் பிரகாசம் மூலமாகவும், உமது ஆடையின் நறுமணத்தைக் கொண்டு என்னை ஈர்த்திடுமாறும், உமது திருவாய்மொழி எனும் நனிசிறந்த மதுரசத்தை என்னைப் பருகிடவும் செய்திடுவீராக.

என் கடவுளே, அதி புனிதமும், அதி பிரகாசமும், அதி வலிமையும், அதிவுயர்வும், அதி மேன்மையும், அதி பேரொளியுமிக்க உந்தன் திருநாமத்தை நான் உறுதியாகப் பிடித்துக் கொண்டிருப்பதையும்; இவ்வுலகிலும், வருவுலகிலும் உள்ள னைத்தையும் சார்ந்துள்ள அங்கியின் விளிம்பினைப் பற்றிக் கொண்டிருப்பதையும் நீர் காண்கின்றீர்.

உமது படைப்பெனும் இராஜ்யத்தின் மீது மறைவான அர்த்தங்கள் எனும் கஸ்தூரி மணத்தைப் பொழிந்து, உமது நிருபங்களின் பக்கங்கள் மீது நகர்ந்திடும் உமது அதி மேலான எழுதுகோலைப் போன்று, உமது வதனத்தின் மீது நகர்ந்திடும் உமது கேசம் மூலமாக, உமது சமயத்திற்காகச் சேவையாற்றி, அதனால் நான் பின்தங்கி விடாமலும், உமது அடையாளங்கள் மீது ஆட்சேபம் செய்திட்ட, உமது வதனத்திலிருந்து விலகிச் சென்றோரின் கருத்துகளினால் தடுத்திடா-திருக்குமாறும் என்னை உயர்த்திடுமாறு நான் உம்மிடம் மன்றாடுகிறேன்.

என் கடவுளே, அதி புனிதமும், அதி பிரகாசமும், அதி வலிமையும், அதிவுயர்வும், அதி மேன்மையும், அதி பேரொளியுமிக்க உந்தன் திருநாமத்தை நான் உறுதியாகப் பிடித்துக் கொண்டிருப்பதையும்; இவ்வுலகிலும், வருவுலகிலும் உள்ள அனைத்தையும் சார்ந்துள்ள அங்கியின் விளிம்பினைப் பற்றிக் கொண்டிருப்பதையும் நீர் காண்கின்றீர்.

என் கடவுளே, நாமங்களுக்கெல்லாம் அரசனாக நீர் ஆக்கியுள்ள எந்தத் திருநாமத்தினால், விண்ணிலும் மண்ணிலும் உள்ள அனைவரும் பரவசம் அடைந்துள்ளனரோ; அத்திருநாமத்தினால் உமது திருவழகு எனும் பகல் நட்சத்திரத்தைக் கண்ணுற என்னை இயலச் செய்தும், உமது திருவாய்மொழி எனும் மதுரசத்தை எனக்கு வழங்கிடவும், நான் உம்மிடம் மன்றாடுகிறேன்.

என் கடவுளே, அதி புனிதமும், அதி பிரகாசமும், அதி வலிமையும், அதிவுயர்வும், அதி மேன்மையும், அதி பேரொளியுமிக்க உந்தன் திருநாமத்தை நான் உறுதியாகப் பிடித்துக் கொண்டிருப்பதையும்; இவ்வுலகிலும், வருவுலகிலும் உள்ள அனைத்தையும் சார்ந்துள்ள அங்கியின் விளிம்பினைப் பற்றிக் கொண்டிருப்பதையும் நீர் காண்கின்றீர்.

என் கடவுளே, அதிவுயரிய சிகரங்கள் மீதுள்ள உமது மாட்சிமை என்னும் திருக்கூடாரம் மூலமாகவும், அதிவுயரிய மலைகள் மீதுள்ள உமது திருவெளிப்பாடெனும் விதானத்தின் மூலமாகவும், உமது திருவிருப்பம் விரும்பியுள்ளதையும், உமது நோக்கம் வெளிப்படுத்தியுள்ளதையும் செயல்-படுத்துவதற்கு, எனக்கு அருள்கூர்ந்து உதவிடுமாறு நான் உம்மிடம் மன்றாடுகின்றேன்.

என் கடவுளே, அதி புனிதமும், அதி பிரகாசமும், அதி வலிமையும், அதிவுயர்வும், அதி மேன்மையும், அதி பேரொளியுமிக்க உந்தன் திருநாமத்தை நான் உறுதியாகப் பிடித்துக் கொண்டிருப்பதையும்; இவ்வுலகிலும், வருவுலகிலும் உள்ள அனைத்தையும் சார்ந்துள்ள அங்கியின் விளிம்பினைப் பற்றிக் கொண்டிருப்பதையும் நீர் காண்கின்றீர்.

என் கடவுளே, தன்னை வெளிப்படுத்திய அத்தருணமே, அழகெனும் இராஜ்யமே பக்திபரவசத்தால் தலைவணங்கி, அவ்வழகை ரீங்காரமிடும் குரலில் மகிமைப்படுத்திய, நித்தியம் எனும் தொடுவானத்தின் மீது பிரகாசிக்கும் உமது திருவழகின் பேரில், நான் உடைமையாகக் கொண்டிருக்கும் அனைத்திலும் மரித்து, உமக்குரிய அனைத்திற்காகவும் வாழ்ந்திட எனக்கு அருளுமாறு நான் உம்மிடம் மன்றாடுகிறேன்.

என் கடவுளே, அதி புனிதமும், அதி பிரகாசமும், அதி வலிமையும், அதிவுயர்வும், அதி மேன்மையும், அதி பேரொளியுமிக்க உந்தன் திருநாமத்தை நான் உறுதியாகப் பிடித்துக் கொண்டிருப்பதையும்; இவ்வுலகிலும், வருவுலகிலும் உள்ள அனைத்தையும் சார்ந்துள்ள அங்கியின் விளிம்பினைப் பற்றிக் கொண்டிருப்பதையும் நீர் காண்கின்றீர்.

என் கடவுளே, எந்த நாமத்தின் மூலமாக உமது அன்பர்களின் உள்ளங்கள் ஆட்கொள்ளப்படவும், உலகில் வாழும் அனைவரின் ஆன்மாக்களும் விண்ணில் உயரப் பரந்திடவும் செய்யப்பட்டனவோ, நல்லன்பர் எனும் உமது அந்தத் திருநாமத்தின் வெளிப்பாடு மூலமாக, உமது உயிரினங்களுக்கிடையே உம்மை நினைவு- கூர்ந்திடவும், உமது மக்களிடையே உம்மைப் புகழ்ந்திடவும் எனக்கு உதவிடுமாறு நான் உம்மிடம் மன்றாடுகின்றேன்.

என் கடவுளே, அதி புனிதமும், அதி பிரகாசமும், அதி வலிமையும், அதிவுயர்வும், அதி மேன்மையும், அதி பேரொளியுமிக்க உந்தன் திருநாமத்தை நான் உறுதியாகப் பிடித்துக் கொண்டிருப்பதையும்; இவ்வுலகிலும், வருவுலகிலும் உள்ள அனைத்தையும் சார்ந்துள்ள அங்கியின் விளிம்பினைப் பற்றிக் கொண்டிருப்பதையும் நீர் காண்கின்றீர்.

என் கடவுளே, தெய்வீக விருட்சத்தின் சலசலப்பு மூலமாகவும், உமது திருநாமங்கள் எனும் இராஜ்யத்தில் உமது திருவாய்மொழி தென்றல்களின் முணுமுணுப்பு மூலமாகவும், உமது விருப்பம் வெறுத்திடும் எதனிலிருந்தும் என்னை வெகுதூரம், விலகச் செய்து, உமது அடையாளங்களின் பகல் நட்சத்திரமானவர் மிளிர்ந்திட்ட அந்த ஸ்தானத்திற்கு என்னை உயர்த்திடுமாறு நான் உம்மிடம் மன்றாடுகின்றேன்.

என் கடவுளே, அதி புனிதமும், அதி பிரகாசமும், அதி வலிமையும், அதிவுயர்வும், அதி மேன்மையும், அதி பேரொளியுமிக்க உந்தன் திருநாமத்தை நான் உறுதியாகப் பிடித்துக் கொண்டிருப்பதையும்; இவ்வுலகிலும், வருவுலகிலும் உள்ள அனைத்தையும் சார்ந்துள்ள அங்கியின் விளிம்பினைப் பற்றிக் கொண்டிருப்பதையும் நீர் காண்கின்றீர்.

என் கடவுளே, உமது விருப்பம் எனும் திருவாயிலிருந்து வெளிவந்த அத்தருணமே, சமுத்திரங்கள் பொங்கி எழந்திடவும், காற்று வீசிடவும், நற்கனிகள் வெளிப்படவும், மரங்கள் துளிர்த்து வெளிப்படவும், கடந்தகாலத் தடயங்கள் அனைத்தும் மறைந்திடவும், திரைகள் அனைத்தும் இரண்டாகக் கிழிந்திடவும் செய்திட்ட, உம்மீது பக்திகொண்டோரைக், கட்டுப்படுத்த வியலாதவர் எனும் அவர்களின் பிரபுவின் திருவதனத்தின் ஒளியை நோக்கி விரைந்திடச் செய்த, அந்த அட்சரத்தின் மூலமாக, உமது அறிவெனும் கருவூலங்களுள் ஒளிந்து கிடப்பவற்றையும், உமது விவேகமெனும் களஞ்சியங்களுள் மறைந்துள்ளவற்றையும் எனக்குத் தெரிவித்திடு-மாறு நான் உம்மிடம் மன்றாடுகின்றேன்.

என் கடவுளே, அதி புனிதமும், அதி பிரகாசமும், அதி வலிமையும், அதிவுயர்வும், அதி மேன்மையும், அதி பேரொளியுமிக்க உந்தன் திருநாமத்தை நான் உறுதியாகப் பிடித்துக் கொண்டிருப்பதையும்; இவ்வுலகிலும், வருவுலகிலும் உள்ள அனைத்தையும் சார்ந்துள்ள அங்கியின் விளிம்பினைப் பற்றிக் கொண்டிருப்பதையும் நீர் காண்கின்றீர்.

என் கடவுளே, உம்மால் தேர்ந்தெடுக்கப்பட்டோர், உமது அன்புக்குரியோர் ஆகியோரின் கண்களிலிருந்து நித்திரையைத் துரத்திவிட்ட உமது அன்பெனும் தீயின் மூலமாகவும், அதிகாலை வேளையில் அவர்கள் உம்மை நினைவுகூர்தல், வாழ்த்துதல் ஆகிவற்றின் மூலமாகவும், உமது திருநூலில் நீர் அனுப்பிவைத்தும், உமது திருவிருப்பத்தின் மூலமாக நீர் வெளிப்படுத்தி-யுள்ளவற்றை அடைந்துள்ளவர்களுள் என்னையும் ஒருவனாகக் கணக்கிடுமாறு, நான் உம்மிடம் மன்றாடுகின்றேன்.

என் கடவுளே, அதி புனிதமும், அதி பிரகாசமும், அதி வலிமையும், அதிவுயர்வும், அதி மேன்மையும், அதி பேரொளியுமிக்க உந்தன் திருநாமத்தை நான் உறுதியாகப் பிடித்துக் கொண்டிருப்பதையும்; இவ்வுலகிலும், வருவுலகிலும் உள்ள அனைத்தையும் சார்ந்துள்ள அங்கியின் விளிம்பினைப் பற்றிக் கொண்டிருப்பதையும் நீர் காண்கின்றீர்.

என் கடவுளே, உந்தன்பால் ஈர்க்கப்பட்டோர் உமது ஆணை எனும் கணைகளைச் சந்திக்க அவர்களைத் தூண்டியும், உம் மீது பக்தி கொண்டோரை உமது பாதையில் நீர் எதிரிகளின் வாள்களைச் சந்திக்கச் செய்திட்ட உமது வதனத்தின் ஒளி மூலமாக, உமது அதிமேன்மையான எழுதுகோலைக் கொண்டு, உமது நம்பிக்கைக்குரியோருக்கும், உம்மால் தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கும் நீர் எழுதியுள்ள-வற்றை எனக்கும் எழுதிடுமாறு நான் உம்மிடம் மன்றாடுகின்றேன்.

என் கடவுளே, அதி புனிதமும், அதி பிரகாசமும், அதி வலிமையும், அதிவுயர்வும், அதி மேன்மையும், அதி பேரொளியுமிக்க உந்தன் திருநாமத்தை நான் உறுதியாகப் பிடித்துக் கொண்டிருப்பதையும்; இவ்வுலகிலும், வருவுலகிலும் உள்ள அனைத்தையும் சார்ந்துள்ள அங்கியின் விளிம்பினைப் பற்றிக் கொண்டிருப்பதையும் நீர் காண்கின்றீர்.

என் கடவுளே, எதன் மூலமாக நீர் உமது அன்பர்கள் குரலுக்கும், உமக்காக ஏங்குவோர் பெருமூச்சுக்கும், உமது அண்மையை அனுபவிப்போர் அழுகுரலுக்கும், உம்மீது பக்தி கொண்டோர் புலம்பலுக்கும், செவிசாய்த்துள்ளீரோ, உமது அந்தத் திருநாமத்தின் மூலமாகவும், நிறைவேற்றி; எதன் மூலமாகத் தங்கள் நம்பிக்கைகளை உம்மீது வைத்தோரின் விருப்பங்களை நீர் நிறைவேற்றி, உமது கிருபை, தயை ஆகியவற்றின் வாயிலாக அவர்களின் ஆசைகளை பூர்த்தி செய்தீரோ அந்தத் திருநாமத்தின் பேராலும்; எதன் மூலமாக மன்னிப்பு எனும் சமுத்திரம் உமது வதனத்தின் முன் பொங்கி எழுந்ததோ, மற்றும் உமது வள்ளன்மை எனும் மேகங்கள் உமது ஊழியர்களின் மீது பொழிந்தனவோ, உமது அந்தத் திருநாமத்தின் பேரில், உம்பால் திரும்பியும், உம்மால் விதிக்கப்படுள்ள நோன்பைக் கடைப்பிடித்துமுள்ள ஒவ்வொருவருக்கும், உமது உத்தரவின்றிப் பேசாதிருப்பதும், உமது பாதையிலும், உமது அன்பிலும், அவர்கள் உடைமையாகக் கொண்டிருந்த அனைத்தையும் துறந்திடுவது எனும் சன்மானத்தை வழங்கிடுமாறு நான் உம்மிடம் மன்றாடுகிறேன்.

என் கடவுளே, உம் மூலமாகவும், உமது அடையாளங்கள் மூலமாகவும், உமது தெளிவான சின்னங்கள் மூலமாகவும், உமது அழகு, உமது கிளைகள் ஆகியவற்றின் பகல் நட்சத்திரத்தின் பிரகாசிக்கும் ஒளி மூலமாகவும், உமது சட்டங்களை உறுதியாகப் பற்றிக்கொண்டும், உமது திருநூலில் அவர்களுக்கு நீர் ஆணையிட்டுள்ளவற்றைக் கடைப்பிடித்தோரின் தீயச் செயல்களை இரத்துச்செய்யுமாறும் நான் உம்மிடம் மன்றாடுகின்றேன்.

என் கடவுளே, அதி புனிதமும், அதி பிரகாசமும், அதி வலிமையும், அதிவுயர்வும், அதி மேன்மையும், அதி பேரொளியுமிக்க உந்தன் திருநாமத்தை நான் உறுதியாகப் பிடித்துக் கொண்டிருப்பதையும்; இவ்வுலகிலும், வருவுலகிலும் உள்ள அனைத்தையும் சார்ந்துள்ள அங்கியின் விளிம்பினைப் பற்றிக் கொண்டிருப்பதையும் நீர் காண்கின்றீர்.

#11439
- Bahá'u'lláh

 

என் கடவுளே, இவைதாம், உண்ணா நோன்பினைக் கடைப்பிடிக்குமாறு நீர் உமது ஊழியர்களுக்குக் கட்டளையிட்டுள்ள நாள்கள். அதனுடன், நீர், உமது படைப்பினங்களுக்கு வெளிப்படுத்தியுள்ள உமது சட்டங்கள் என்னும் திருநூலின் முன்னுரையை அழகுப்படுத்தி, உமது விண்ணிலும் மண்ணிலும் உள்ள அனைவரின் பார்வையிலும் உமது கட்டளைகளின் கருவூலங்களை அலங்கரித்திடச் செய்தீர். படைப்பினம் அனைத்தின் அறிவையும் உள்ளடக் கியுள்ள, வேறு எவராலும் ஊடுருவ இயலாத, ஒரு விசேஷ பண்பினை இந் நாள்களின் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் அருளியுள்ளீர். மேலும், நீர், உமது கட்டளை என்னும் நிருபத்திற்கு ஏற்பவும், உமது மாற்றவியலாத தீர்ப்பு எனும் நூல்களுக்கு ஏற்பவும், இப்பண்பிலிருந்து ஒரு பகுதியினை ஒவ்வோர் ஆன்மாவிற்கும் அருளியுள்ளீர். மேலும், மண்ணுலுகிலுள்ள மக்களும் இனங்களுமாகிய மனிதர் ஒவ்வொருவருக்கும், இந் நூல்களிலும் மறை நூல்களிலுமுள்ள ஒவ்வோர் ஏட்டினையும் வழங்கியுள்ளீர்.

ஆட்சியாளர்களுக்கெல்லாம் ஆட்சியாளரே, உமது கட்டளைகளுக்கேற்ப உமது ஆர்வமிகு அன்பர்களுக்கு ஒவ்வொரு நாளின் அதிகாலையிலும், உமது நினைவு என்னும் கிண்ணத்தை ஒதுக்கி வைத்துள்ளீர்! உமது பல்கூறு விவேகம் என்னும் திராட்சை ரசத்தினால் அவர்களை மயங்கச் செய்து உமது புகழைக் கொண்டாடவும், உமது நற்பண்புகளைப் போற்றிப் புகழவும் உமது முன்னிலையை அணுகி உமது அருட்-கொடையினைப் பெறும் ஆர்வத்திலும் தங்கள் துயிலையும் துறந்துள்ளனர். அவர்களின் கண்கள், உமது அன்புப் பரிவு என்னும் பகலூற்றின்பால் எல்லா வேளைகளிலும் பதிக்கப்பட்டுள்ளன; அவர்களின் முகங்கள் உமது அருட்தூண்டல் என்னும் ஊற்றின்பால் திருப்பப்பட்டுள்ளன. ஆதலின், உமது வள்ளன்மை, அருள் என்னும் விண்ணுலகிற்கு ஏற்ப, உமது கருணை என்னும் மேகங்களிலிருந்து எங்கள் மீதும் அவர்கள் மீதும் பொழிவீராக.

என் இறைவா, உமது நாமம் போற்றப்படுமாக! உமது படைப்பினங்களின் முகங்களுக்கு முன் உமது அருட்கொடை என்னும் கதவுகளைத் திறந்து, உமது மண்ணுலகில் வாழ்வோர் அனைவர்பாலும், நீர், உமது மென்கருணை என்னும் வாயில்களை அகலத் திறந்துள்ள நேரம் இதுவே. உமது பாதையில் எவரால் இரத்தம் சிந்தப்பட்டதோ, எவர் உந்தன்பால் கொண்ட ஆர்வ மிகுதியினால் உமது படைப்பினம் அனைத்திடமிருந்தும் தங்களைப் பற்றறுத்துக் கொண்டனரோ, எவரின் உடலுறுப்புகள் ஒவ்வொன்றும் உமது அருட்தூண்டலின் இனிய நறுமணங்களினால் அந்தளவு உற்சாகமடைந்ததன் காரணமாக உமது புகழ்பாடி உமது நினைவினால் அதிர்வுற்றதோ, அவர்களின் பெயரால், நான் உம்மை வேண்டிக் கொள்கிறேன், உம்மிடம் உரையாடிய மோஸஸிடம் அன்று எரிந்திடும் புதர் பிரகடனப்படுத்தியதனை ஒவ்வொரு விருட்சமும் கூக்குரலிடச் செய்திடுமளவு சக்தி பெற்றதானதொரு வெளிப்பாடும் உமது நண்பராகிய முஹம்மதுவின் நாள்களில் கற்கள் உம்மைப் புகழ்ந்துரைத்தது போல் மிகச் சாதாரணமான ஒவ்வொரு கூழாங் கல்லையும் மீண்டும் உமது புகழ்ச்சியினால் ஒலிக்கச் செய்ததொரு வெளிப்பாடுமாகிய இவ் வெளிப்பாட்டினுள் மாற்றவியலாது நீர் கட்டளையிட்டுள்ள பொருள்களை எங்களுக்குக் கொடுக்காதிருந்து விடாதீர்.

என் இறைவா, உம்முடன் தோழமை கொள்ளவும், உம்மை வெளிப்படுத்தியவரான அவருடன் தோழமை கொள்ளவும், நீர் கிருபை கூர்ந்து உதவியவர்கள் இவர்களேயாவர். அவர்களை நீர் உமது நிழலின் கீழ் ஒன்று சேர்த்து உமது அவையினுள் அவர்களை நுழையச் செய்திடும் வரை, உமது விருப்பம் என்னும் காற்றுகள் அவர்களைச் சிதறிச் செல்லுமாறு செய்துள்ளன. இப்பொழுது உமது கருணை என்னும் விதானத்தின் கீழ் இருக்கச் செய்துள்ளதன் காரணமாக அத்தகையதோர் உயரிய ஸ்தானத்திற்குப் பொருத்தமானதனை அடைவதற்கு அவர்களுக்கு உதவிடுவீராக. என் பிரபுவே, உமது அருகிலிருக்கும் பாக்கியம் பெற்றிருந்தும் உமது வதனத்தை அறிந்து கொள்ளத் தவறி, உம்மைச் சந்தித்தபோதிலும் உமது முன்னிலையை அடையத் தவறியும் உள்ளோரின் எண்ணிக்கையில் அவர்களைச் சேர்த்திடாதீர்.

என் பிரபுவே, இவர்கள்தாம் இவ்வதி மேன்மையான சிறையினில் உம்முடன் பிரவேசித்துள்ள ஊழியர்கள்; அதன் சுவர்களுக்குள்ளே, உமது ஆணை என்னும் நிருபங்களிலும் கட்டளை என்னும் நூல்களிலும் ஆணையிட்டுள்ளதற்கேற்ப, உண்ணா நோன்பினைக் கடைப்பிடித்தவர்கள் இவர்களே. நீர் வெறுத்திடும் அனைத்திலிருந்தும் அவர்களை முற்றாகத் தூய்மைப்படுத்தவல்ல ஒன்றினை அவர்கள்பால் அனுப்பியருள்வீராக; அதனால் அவர்கள் முழுமையாக உந்தன்மீது பக்தி கொண்டவர்களாக உம்மைத் தவிர மற்றெல்லா-வற்றிலிருந்தும் தங்களைப் பற்றறுத்துக் கொள்ளக் கூடும்.

எனவே, என் இறைவா, உமது அருளுக்கு உகந்த வற்றையும் உமது வள்ளன்மைக்குப் பொருந்தியவற்றையும் எங்கள் மீது பொழிவீராக. மேலும், என் இறைவா, உமது நினைவில் நாங்கள் வாழ்ந்திடவும் உமது அன்பில் நாங்கள் மரித்திடவும் எங்களுக்கு உதவி புரிந்து, வரவிருக்கும் உலகங்களில் — உம்மைத் தவிர வேறெவருக்குமே விளங்கிடாத உலகங்களில் — உமது முன்னிலை என்னும் அன்பளிப்பினை எங்களுக்கு அருள்வீராக. எங்களின் பிரபுவும் எல்லா உலகங்களின் பிரபுவும், விண்ணுலகிலுள்ள அனைத்திற்கும் மண்ணு-லகிலுள்ள அனைத்திற்கும் இறைவனானவர் நீரே.

என் இறைவா, உமது நாள்களில் உமது அன்பர்களுக்கு நேர்ந்துள்ளதை நீர் காண்கின்றீர். உமது ஒளியே எனக்குச் சாட்சி பகர்கின்றது! உமது இராஜ்யம் முழுவதிலும், உமது தேர்ந்தெடுக்கப்-பட்டோரின் ஓலம் எழுப்பப்பட்டுள்ளது. உமது தேசத்தில் சமய நம்பிக்கையற்றோரிடம் சிலர் சிக்கிக் கொண்டு, உந்தன்பால் நெருங்கு-வதிலிருந்தும், உமது ஒளி என்னும் அரசவையினை அடைவதிலிருந்தும் தடுக்கப்பட்டுள்ளனர். வேறு சிலர், உம்மை அணுக முடிந்தும், உமது வதனத்தைக் கண்ணுறுவதிலிருந்து தடுக்கப்பட்டனர்.

இன்னும் சிலர் அனுமதிக்கப்பட்டனர்; ஆனால், உம்மைக் கண்ணுற வேண்டும், உமது அரசவையினுள் நுழைய வேண்டும் என்ற பேராவலினால் உமது உயிரினங்களின் கற்பனைகள் என்னும் முகத் திரைகளையும் மனிதர்களிடையே உள்ள கொடுமையாளர்கள் இழைத்திட்டத் தீங்குகளையும் அவர்களுக்கும் உமக்கும் இடையே வந்திட அனுமதித்து விட்டனர்.

என் பிரபுவே, நீர் மற்றெல்லா நேரத்தையும் விஞ்சிடச் செய்த நேரம் இதுவே; அதனையே நீர் உமது படைப்பினங்களுக்கு மத்தியில் அதி சிறப்பு வாய்ந்தோருடன் தொடர்புப்படுத்தியுள்ளீர். என் இறைவா, உமது தானெனும் தன்மையின் மீதும், அவர்கள் சாட்சியாகவும், இவ்வாண்டின்போது உமது அன்பர்களை மேன்மையுறச் செய்வதனை அவர்களுக்கு அருளுமாறு உம்மை வேண்டிக் கொள்கிறேன். மேலும், உமது சக்தி என்னும் பகல் நட்சத்திரத்தினை உமது மகிமை என்னும் தொடுவானத்திற்கு மேலாகப் பொலிவுடன் பிரகாசிக்கச் செய்யக் கூடியதனை, உமது இறைமை சக்தியால், உலகம் முழுவதையும் ஒளிரச் செய்திடக் கட்டளையிடுவீராக.

என் பிரபுவே, உமது சமயத்தை வெற்றி பெறச் செய்து, உமது எதிரிகளைத் தாழ்வுறச் செய்வீராக. ஆகவே, இவ்வுலக வாழ்விலும் வருவுலக வாழ்விலும் நன்மை அளிக்கவல்லதனை எங்களுக்கென எழுதி வைப்பீராக. உண்மையாகவே, நீரே, பொருள்களின் இரகசியங்களை அறிந்தவர். என்றும் மன்னிப்பவரும், வள்ளன்மை மிக்கவருமான இறைவன் உம்மையன்றி வேறிலர்.

#11440
- Bahá'u'lláh

 

பிரபுவே எனதாண்டவரே, புகழொளி உமக்கே உரியதாகுக! மனிதர்கள் அனைவரையும் உண்ணா நோன்பைக் கடைபிடிக்கும்படி நீர் கட்டளையிட்டுள்ள நாள்கள் இவையே; இதன் மூலம், தங்கள் ஆன்மாக்களை அவர்கள் தூய்மைப்படுத்தி, உம்மைத் தவிர மற்றனைத்திலிருந்தும் பற்றறுத்திடக் கூடும்; மேலும், உமது மாட்சிமை எனும் அரசவைக்குத் தகுதியுடையதானதும், உமது ஒருமையெனும் வெளிப்பாட்டின் பீடத்திற்கு ஏற்புடையதானதும் அவர்களின் இதயங்களிலிருந்து மேலுயர்ந்திடக் கூடும். என் பிரபுவே, இவ்வுண்ணா நோன்பு உயிர்தரும் நீரைக் கொண்ட ஆறாகி, அதற்கு நீர் வழங்கியுள்ள நற்பண்பை அது வெளிப்படுத்திட அருள்புரிந்திடுவீராக. சர்வ பேரொளிமிக்க உந்தன் திருநாமத்தின்பால் திரும்புவதிலிருந்து அவர்களை உலகின் தீமைகள் தடுத்திட தவறிட, உமது அரசாட்சி, சக்தி, மாட்சிமை, புகழொளி ஆகியவற்றினை நீர் வழங்கியுள்ள, உமது அவதாரமானவரின் வருகையோடு இணையாக வந்த உமது அதி ஒளிமிக்க அடையாளங்களை மறுத்துள்ளோரின் கூச்சல், அமளி ஆகியவற்றால் சற்றும் அசையாதிருந்திட உமது ஊழியர்களின் உள்ளங்களை அதனைக் கொண்டு தூய்மைப்- படுத்திடுவீராக. உந்தன் அழைப்பைச் செவிமடுத்தவுடன், உந்தன் கருணையின்பால் விரைந்துள்ள அவர்களை, இவ்வுலகின் மாற்றங்களோ, வாய்ப்புகளோ, அல்லது எவ்வித மனித வரம்புகளோ உம்மை அணுகுவதிலிருந்து தடுக்கப்படாதிருக்கின்ற ஊழியர்கள் இவர்களே.

என் கடவுளே, உமது ஒற்றுமைக்குச் சாட்சியமளிப்பவனும், உமது ஒருமையை ஒப்புக்கொள்பவனும், உமது மாட்சிமையின் வெளிப்பாடுகள் முன் பணிவுடன் சிரந்தாழ்த்து- பவனும், உமது மேன்மையான மகிமை ஒளியினுடைய பிரகாசத்தைக் கீழ்நோக்கிய வதனத்துடன் கண்டுணர்ந்தவனும் நானேயாவேன். உமது மாட்சிமை, வலிமை ஆகியவற்றின் சக்தி மூலமாக நீர் மனிதர்களின் கண்களுக்கு வெளிப்படுத்தியுள்ள, உமக்கே உரிய இயல்பை அறிந்திட நீர் என்னை இயலச் செய்தபின், உம்மீது நான் நம்பிக்கை கொண்டவனாவேன். அனைத்திலிருந்தும் முழுமையாகப் பற்றறுத்துக்-கொண்டும், உமது வெகுமதிகள், தயைகள் ஆகியவற்றின் கயிற்றை உறுதியாகப் பற்றிக்-கொண்டும், அவர்பால் நான் திரும்பியுள்ளேன்.

அவரது உண்மையையும், அவருக்கென கீழே அனுப்பப்பட்டுள்ள அனைத்து அற்புத சட்டங்கள், கட்டளைகள் ஆகியவற்றின் உண்மையையும் நான் ஏற்றுக்கொண்டுள்ளேன். உமது அன்பிற்-காகவும், உமது ஆணையை நிறைவேற்றிடவும் நான் உண்ணா நோன்பைக் கடைப்பிடித்தும், உமது வாழ்த்தை என் நாவினால் உச்சரித்துக்கொண்டும், உமது அகமகிழ்விற்கு ஏற்பவும் என் நோன்பைத் துறந்துள்ளேன். என் பிரபுவே, பகல் வேளையில் உண்ணா நோன்பிருந்தும், இரவு நேரத்தில் உமது வதனத்தின் முன் சிரம்தாழ்பணிந்தும், மேலும், உமது உண்மையை மறுத்தும், உமது அடையாளங்களை நிராகரித்தும், உமது சான்றுகளை நம்ப மறுத்தும், உமது சொற்களின் உண்மையைத் திரித்துக் கூறுவோருள் ஒருவனாக என்னைக் கணக்கிட்டுக் கொண்டுவிடாதீர்.

என் பிரபுவே, உமது கண்களைக் கொண்டே உம்மைக் கண்டுகொள்ள, எனது கண்களையும் உம்மை நாடிவந்துள்ள அனைவரின் கண்களையும் திறந்திடுவீராக.

உமது கட்டளைக்கிணங்க நீர் தேர்வுச் செய்துள்ளவரும், உமது உயிரினங்கள் அனைத்திற்கும் மேலாக உமது சலுகைகளுக்காக நீர் தனித்து ஒதுக்கியுள்ளவரும், உமது அரசாட்சியை நீர் வழங்கிட விரும்பியவரும், மற்றும், நீர் விசேஷமாக ஆதரித்தும், உமது மக்களுக்கான செய்தியை ஒப்படைத்துமுள்ளவருமான அவரிடம், நீர் கீழே அனுப்பியுள்ள திருநூலில் நீர் எங்களுக்கு வழங்கியுள்ள உமது ஆணை இதுவே ஆகும்.

ஆகவே, என் கடவுளே, அருள்கூர்ந்து நாங்கள் அவரைக் கண்துடுணர்ந்திட எங்களை இயலச் செய்தமைக்காகவும், அவரிடம் கீழே அனுப்பப்பட்டுள்ள எதனையும் ஒப்புக்கொள்ளவும், உமது நூல்களிலும், நிருபங்களிலும் நீர் வாக்களித்துள்ளவரின் முன்னிலையை அடைந்திடுகின்ற பெருமையை எங்களுக்கு வழங்கியுள்ளமைக்காகவும், நீர் போற்றுதலுக்-குரியவரே.

ஆகையால், என் கடவுளே, உம்மை நோக்கித் திரும்பிய முகத்துடன், உமது அருள்மிகு வள்ளன்மை மற்றும் பெருந்தன்மை எனும் கயிற்றினை உறுதியாகப் பற்றிக்கொண்டும், உமது மென்கருணை, தாராளத் தயை ஆகியவற்றின் நுனியை நான் இறுகப் பற்றிக்-கொண்டிருப்பதையும் நீர் காண்கின்றீர்.

உமது அரசவையின் சூழிடங்களை நோக்கியும், உமது முன்னிலை எனும் சரணாலயத்தை நோக்கித் திரும்பியும், உம் மீதுள்ள அன்பினால் உண்ணா நோன்பைக் கடைப்பிடித்துமுள்ள உமது ஊழியர்களுக்கு நீர் விதித்துள்ளதை அடைந்திட வேண்டும் எனும் எனது நம்பிக்கையை அழித்திடாதீர் என நான் உம்மிடம் மன்றாடுகிறேன்.

என் கடவுளே, என்னிலிருந்து வெளிப்படுகின்ற எதுவுமே உமது மாட்சிமைக்குச் சற்றும் பொருத்தமில்லாததாகவும், உமது அரசாட்சிக்கு தகுதியற்றதாகவும் உள்ளது என்பதை நான் ஒப்புக்கொள்கின்றேன்.

இருந்தும், உமது அதிசிறந்த பட்டங்களின் மகிமை வழியாக, இத்திருவெளிப்பாட்டில், உமது பிரகாசமிகு நாமத்தின் வாயிலாக, நீர் உமது அழகைப் படைப்பினங்கள் அனைத்திற்கும் வெளிப்படுத்தியுள்ள, உமது திருநாமத்தின் பேரில், உமது விருப்பம் எனும் வலக் கரத்திலிருந்து வழிந்திடும், உமது கருணை எனும் மதுரசத்தையும், உமது தயை எனும் தூய பானத்தையும் என்னைப் பருகிடச் செய்திடுவீராக; அதனால் எனது பார்வையை நான் உம்மீது நிலைப்படுத்தி, இவ்வுலகமும், அதில் படைக்கப்பட்ட யாவும், நீர் படைக்க விரும்பிடாத விரைந்தோடிடும் ஒரு நாளைப் போன்று என் முன்னே தோன்றிடுமளவுக்கு, உம்மைத் தவிர மற்றனைதிளிருந்தும் பற்றறுத்திருக்கக் கூடும்.

என் கடவுளே, எங்கள் அத்துமீறல்களின் கேடு விளைவிக்கும் விருப்பங்களிலிருந்து எங்களைச் சுத்தப்படுத்தக் கூடியவற்றை உமது விருப்பம் எனும் சுவர்க்கத்திலிருந்தும், உமது கருணை எனும் மேகங்களிலிருந்தும் பொழிந்திடச் செய்திடுமாறு நான் உம்மிடம் மேலும் கெஞ்சிக் கேட்கின்றேன். நீரே உம்மைக் கருணைக் கடவுள் என அழைத்துக் கொண்டவரே! மெய்யாகவே, அதி சக்திமிக்கவரும், சர்வ புகழொளிமிக்கவரும், நலன் பயக்குபவரும் நீரே ஆவீர்.

என் பிரபுவே, உம்மை நோக்கித் திரும்பியுள்ளவனைப் புறக்கணித்திடாதீர், அல்லாமலும் உம்மை அணுகியுள்ளவனை உமது அரசவையிலிருந்து வெகுதூரம் விலக்கிடாதீர். உமது அருளையும் தயைகளையும் நாடி தனது கரங்களை ஏக்கத்தோடு ஏந்திடும் இவ்வேண்டுவோனின் எதிர்ப்பார்ப்புகளைச் சிதைத்துவிடாதீர். உமது நேர்மையான ஊழியர்களை உமது மென்கருணை, அன்புப்பரிவு ஆகிய அற்புதங்களை அடைவதை இழக்கச் செய்திடாதீர்.

என் பிரபுவே, நீரே மன்னிப்பவரும் அதி கொடையாளியும் ஆவீர்! நீர் விரும்பியவாறு செய்திடுவதற்குச் சக்திப்படைத்தவர் நீரே. உமது வல்லமையின் வெளிப்பாடுகள் முன் உம்மைத் தவிர மற்றனைத்தும் வலிமையற்றதாகும்; உமது செல்வத்தின் அடையாளங்களுக்கு எதிரே யாவும் கதியற்றும், யாவற்றுக்கும் மேலான உமது அரசாட்சியின் வெளிப்பாடுகளோடு ஒப்பிடுகையில், யாவும் நிலையற்றவையாகவும், உமது வலிமையின் அடையாளங்கள், சின்னங்கள் ஆகியவற்றோடு நேருக்குநேர் எதிர்படும் போது, யாவும் வலிமை அனைத்தையும் இழந்ததாகவும் இருக்கின்றன.

என் பிரபுவே, நான் விரைந்து ஓடுவதற்கு உம்மையன்றி அடைக்கலம் வேறென்ன இருகின்றது? மேலும் நான் விரைந்து சென்றடைந்திடகூடிய புகலிடம் எங்குகுள்ளது? அல்லாமலும், உமது வலிமையின் சக்தியே எனக்குச் சாட்சியாகின்றது! உம்மையன்றி பாதுகாப்பவர் வேறிலர்; விரைந்தோடுவதற்கு உம்மையன்றி வேறிடம் இல்லை; நாடி வருவதற்கு உம்மையன்றி வேறு தஞ்சமும் கிடையாது.

என் பிரபுவே, உமது நினைவும் போற்றுதலும் எனும் தெய்வீக இனிமையை என்னைச் சுவைத்திடச் செய்திடுவீராக. உமது வலிமையின் மீது ஆணையாக! அதன் இனிமையைச் சுவைத்தவர் எவராயினும், இவ்வுலகமும், அதிலுள்ள அனைத்தின் மீதான பற்றுகளிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொள்வார்; உம்மைத் தவிர வேறெவரின் நினைவிலிருந்தும் தூய்மைப்படுத்திக் கொண்டு, உந்தன்பால் தன் முகத்தை திருப்பிடுவார்.

ஆதலால், என் கடவுளே, உமது அற்புத நினைவினால் எனதான்மாவை உற்சாகம் பெறச் செய்திடுவீராக; அதனால் நான் உமது நாமத்தை மகிமைப்படுத்தக் கூடும். உமது வார்த்தைகளை வாசித்து, நீர் விதித்துள்ளபடி, அதனுள் அடங்கியுள்ள உமது மறைவான பரிசுகளையும், உமது உயிரினங்களின் ஆன்மாக்களையும் உமது ஊழியர்களின் உள்ளங்களையும் உயிர்ப்-பித்திடவல்ல அவ்வார்த்தைகளைக் கண்டறிய தவறிய ஒருவனாக என்னைக் கணக்கிட்டுவிடாதீர்.

என் பிரபுவே, உமது நாள்களில் மிதந்து சென்றிடும் இனிய நறுமணங்களினால் கிளர்ச்சியுறச் செய்ததன் விளைவாக, உமது உயிர்களை உமக்காக அர்ப்பணித்தும், உமது அழகினைக் கண்ணுறுவதற்கான அவர்களின் ஆவலினாலும், உமது முன்னிலையை அடைய வேண்டும் எனும் அவர்களின் ஏக்கத்தினாலும், தங்களின் மரணமேடைக்கு விரைந்தும் உள்ளவர்களுள் ஒருவனாக என்னைக் கருதப்படச் செய்திடுவீராக. அவ்வாறு செல்கையில், “எங்கு செல்கிறாய்?” என யாராயினும் அவர்களிடம் வினவினால், “சகலத்தையும் கொண்டுள்ளவரும், ஆபத்தில் உதவுபவரும், சுயஜீவியருமான இறைவனை நோக்கிச் செல்கிறோம்” என அவர்கள் கூறிடுவர்.

உம்மிடமிருந்து அப்பால் திரும்பியோரும், உம்மிடம் இறுமாப்புடன் நடந்துகொண்டோரும் புரிந்திட்ட அத்துமீறல்கள், உம்மீது அன்பு செலுத்துவதிலிருந்தும், உம்மை நோக்கி அவர்களின் முகங்களைத் திருப்புவதிலிருந்தும், உமது கருணையின் திசையை நோக்கித் திரும்புவதிலிருந்தும் அவர்களைத் தடுத்திட இயலவில்லை.

விண்ணுலகத் திருக்கூட்டத்தினரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களும், நித்திய நகர-வாசிகளால் மகிமைப்படுத்தப்பட்டவர்களும், அதற்கும் அப்பால், உமது அதிவுயரிய எழுதுகோல் அவர்களின் நெற்றியில், “பஹாவின் மக்கள் இவர்களே! வழிகாட்டல் எனும் ஒளியின் சுடர்கள் இவர்கள் மூலமாகவே பொழியப்பட்டுள்ளன”, என பொறிக்கப்பட்டோரும் இவர்களேயாவர். இவ்வாறாகவே, உமது கட்டளைக்கு இணங்கவும், உமது திருவிருப்பத்திற்கேற்பவும்், உமது மாற்றவியலாத ஆணை எனும் நிருபத்தில் விதிக்கப்பட்டுள்ளது.

ஆதலால், என் கடவுளே, அவர்களின் மேன்மையையும், வாழும்போதோ மறைவுக்குப் பிறகோ, அவர்களை வலம் வந்தோரின் மேன்மையையும் பறைசாற்றுவீராக. உமது உயிரினங்களுள், நேர்மையானோருக்கு நீர் விதித்துள்ளவற்றை அவர்களுக்கும் வழங்கிடு-வீராக. யாவற்றையும் செய்திடவல்லவர் நீரே ஆவீர். சர்வ சக்திமிக்கவரும், ஆபத்தில் உதவுபவரும், சர்வ வல்லவரும், அதி வள்ளன்மை மிக்கவருமான கடவுள் உம்மைத் தவிர வேறிலர்.

என் பிரபுவே, இந்த உண்ணா நோன்போடு, எங்களின் உண்ணா நோன்புகளை ஒரு முடிவுக்குக் கொண்டுவந்திடாதீர்; அல்லது, இந்த ஒப்பந்தத்துடன் நீர் செய்துள்ள ஒப்பந்தங்களையும் ஒரு முடிவுக்குக் கொண்டுவந்திடாதீர். எங்களின் தீய, இழிவான ஆசைகளுக்கு அடிமைப்பட்டதனால், நாங்கள் செய்திடத் தவறிய அனைத்திற்குமாக, உம்மீதுள்ள அன்பிற்காகவும், உமது மகிழ்ச்சிக்காகவும், நாங்கள் செய்துள்ள அனைத்தையும் ஏற்றுக்கொள்வீராக. எனவே, உமது அன்பையும் உமது நல்விருப்பத்-தையும் உறுதியாகப் பற்றிக்கொண்டிட எங்களை இயலச் செய்வீராக; மற்றும் உம்மையும், உமது பிரகாசமிகு அடையாளங்களையும் மறுத்துள்-ளோரின் விஷமங்களிலிருந்தும் எங்களைப் பாதுகாப்பீராக. உண்மையாகவே, இவ்வுலகு, மறுவுலகு ஆகியவற்றுக்கான பிரபு நீரே ஆவீர். மேன்மையானவரும், அதி உயர்வானவருமான கடவுள் உம்மைத் தவிர வேறிலர்.

பிரபுவே எனதாண்டவரே, பிரதான புள்ளியும், தெய்வீக மர்மமும், காணவியலாத சாரமும், தெய்வீகத்தின் பகலூற்றும், உமது இறைமையின் அவதாரமானவரும், எவர் மூலமாகக் கடந்தகால அறிவனைத்தும், எதிர்கால அறிவனைத்தும் தெளிவாக்கப்பட்டதோ, எவர் மூலமாக உமது மறைக்கப்பட்ட விவேகம் எனும் முத்துகள் வெளிப்படுத்தப்பட்டதோடு, அரும்பொருளாக மதிக்கப்பட்ட உமது நாமத்தின் மர்மம் வெளிப்படுத்தப்பட்டனவோ, எவர் மூலமாக ‘ஆ’ எனும் அட்சரமும் ‘கு’ எனும் அட்சரமும் இணைக்கப்பட்டு, ஒன்றுசேர்க்கப்பட்டனவோ, எவர் மூலமாக, உமது மாட்சிமை, உமது அரசாட்சி, மற்றும் உமது வல்லமை ஆகியவை அறிவிக்கப்பட்டனவோ, எவர் மூலமாக உமது வார்த்தைகள் கீழே அனுப்பப்பட்டும், உமது கட்டளைகள் தெளிவாக வெளியிடப்பட்டும், உமது அடையாளங்கள் எங்கும் பரவச்செய்யப்பட்டும், உமது திருவாக்கு ஸ்தாபிக்கப்பட்டனவோ, எவர் மூலமாக உமது தேர்தெடுக்கப்பட்டோரின் இதயங்கள் திறந்து காட்டப்பட்டும், விண்ணிலும் மண்ணிலுமுள்ள யாவும் ஒன்றுசேர்க்கப் பட்டனவோ, நீர் உமது நாமங்கள் எனும் இராஜ்யத்தில் அலி முஹம்மது என்றும், உமது மாற்றவியலா ஆணை எனும் நிருபங்களில் ஆவிகளுக்கெல்லாம் ஆவியானவர் என்றும், நீர் அழைத்துள்ளீரோ, எவருக்கு உமது சொந்த பட்டப் பெயரையே வழங்கியுள்ளீரோ, எவரது நாமத்திடமே, உமது கட்டளைக்கிணங்கவும், உமது வல்லமையின் சக்தி வாயிலாகவும், மற்றெல்லா நாமங்களும் திரும்பிட செய்யப்பட்டனவோ, எவருள் உமது பண்புகள், பட்டப் பெயர்கள் அனைத்தையும் அவற்றின் இறுதி நிறைவைப் பெறச் செய்துள்ளீரோ, அவரை மகிமைப்படுத்துவீராக. உமது புலனாகாத உலகிலும், உமது புனித நகரங்களிலும் உள்ள உமது மாசில்லா கூடாரங்களுக்குள் மறைந்து கிடக்கும் நாமங்களும் அவருக்கே உரியவையாகும்.

மேலும், அவர் மீதும், அவரது அடையாளங்களின் மீதும் நம்பிக்கை வைத்தும், அவர்பால் திரும்பியோரையும், அவரது பின்னாளைய அவதாரமான — அவர் தமது நிருபங்களிலும், தமது நூல்களிலும், தமது திருமறைகளிலும் குறிப்பிட்டுள்ள அவதாரத்தின் மீது நம்பிக்கை வைத்தும், அவர் மீது பொழிந்துள்ள அற்புத வசனங்கள் மீதும், இரத்தினம் போன்ற சொற்களின் மீதும் நம்பிக்கை வைத்தோரை மிகைப்- படுத்துவீராக. அவர் தமது சொந்த திருவொப்பந்தத்தை நிறுவுவதற்கு முன்பாக, நீர் ஒரு திருவொப்பந்தத்தை ஸ்தாபிக்கும்படி கட்டளையிட்ட திரு அவதாரமானவர் இவரேயாவார்.

அவரது புகழையே பாயான் திருநூல் போற்றியுள்ளது. அதில், அவரது சிறப்பு புகழ்ந்துரைக்கப்பட்டும், அவரது உண்மை உறுதிசெய்யப்பட்டும், அவரது இறையாண்மை பிரகடனப்படுத்தப்பட்டும், அவரது சமயம் முழு நிறைவாக்கப்பட்டுள்ளது. உலகங்களின் பிரபுவும், உம்மை அறிந்த அனைவரின் ஆவலாகவும் இருப்பவரே! அவர்பால் திரும்பி, அவர் கட்டளையிட்டுள்ளவற்றை நிறைவேற்றிய மனிதன் ஆசி பெறுவானாக!

என் கடவுளே, அவரைக் கண்டுணர்ந்து, அன்பு செலுத்திட எங்களுக்கு உதவியமைக்காக நீர் போற்றப்படுவீராக. ஆதாலால், அவராலும், உமது தெய்வீகத்தின் பகலூற்றுகளாக இருப்ப-வர்களாலும், உமது இறைமையின் அவதாரங்களாலும், உமது வெளிப்பாட்டின் கருவூலங்களாலும், உமது அகத்தூன்டலின் களஞ்சியங்களாலும், அவருக்குச் சேவையாற்றவும், கீழ்ப்படியவும் எங்களை இயலச் செய்தும், அவரது சமயத்தின் உதவியாளர்களாக ஆகிடவும், அவரது எதிரிகளை சிதறியோடச் செய்திடுபவர்களாக ஆகிடவும் எங்களுக்கு சக்தி அளிக்குமாறு நான் உம்மை மன்றாடுகிறேன். நீர் விரும்பிய அனைத்தையும் செய்திடவல்லவர் நீரே. சர்வ வல்லவரும், சர்வ புகழொளிமிக்கவரும், மனிதர் எல்லாரும் உதவிக்காக நாடுகின்ற கடவுள் உம்மையன்றி வெறிளர்.

#11441
- Bahá'u'lláh

 

என் பிரபுவாகிய இறைவா, புகழனைத்தும் உமக்கே உரியதாகட்டுமாக! உமது ஆணைக்கேற்ப நாங்கள் உண்ணா நோன்பைக் கடைப்பிடித்துள்ளோம்; உமது அன்பு, உமது நல்விருப்பம் ஆகியவற்றின் வழி அதை இப்பொழுது முடிக்கின்றோம். என் இறைவா, உம்மைத் தவிர மற்றெல்லாவற்றிலிருந்தும் விடுபட்டு, உமது சமயத்தின்பால் எங்கள் முகங்களைப் பதித்தவர்களாக உமது அழகின் பொருட்டு உமது பாதையில் முழுமையாக நாங்கள் ஆற்றியுள்ள செயல்களை அருள்கூர்ந்து ஏற்றுக்கொள்வீராக. அதற்குப் பிரதிபலனாக எங்கள் மூதாதையர் மீதும், இவ்வதி உயரிய, அதி மகிமை வாய்ந்த வெளிப்பாட்டில் உந்தனிலும், உமது வலிமைமிகு அடையாளங்களிலும் நம்பிக்கை வைத்துள்ள அனைவர் மீதும் உமது மன்னிப்பை வழங்குவீராக. நீர் தேர்ந்தெடுத்ததைச் செய்வதற்கு நீர் ஆற்றல் மிக்கவராய் இருக்கின்றீர். மெய்யாகவே, நீரே, அதி மேன்மை மிக்கவர், எல்லாம் வல்லவர், கட்டுப்படுத்தப்படாதவர்.

#11442
- Bahá'u'lláh

 

இறைவா, என் இறைவா, புகழுக்குரியவர் நீரே. எவ்வாறு கட்டாயப் பிரார்த்தனையை உமது ஒருமைத்தன்மையை ஏற்றுக்கொண்டவர்கள் உயர்வதற்கான ஏணியாக ஆக்கியுள்ளீரோ, அவ்வாறே உம்மால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களையும், உமது அன்புக்குரியவர்களையும், உமது ஊழியர்களையும், உமது இராஜ்யத்தின் மக்களுக்கு ஓர் ஒளியாக ஆக்கியுள்ள உண்ணா நோன்பினைக் கடைப்பிடிக்குமாறு நீர் கட்டளையிட்டுள்ள அந் நாள்கள் இவையே ஆகும். என் இறைவா, மனுக்குல முழுமைக்குமாக நீர் விதித்துள்ள மகிமை, நற்பெருமை ஆகிய இவ்விரு வலிமைமிகு தூண்களின் வழி, இறைப்பற்றற்றோரின் தீமைகளிலிருந்தும், விஷமம் புரிந்திடுவோர் ஒவ்வொருவரின் சதிச் செயல்களிலிருந்தும், உமது சமயத்தைப் பாதுகாத்தருளுமாறு உம்மை இறைஞ்சி வேண்டிக் கொள்கிறேன். இறைவா, உமது சக்தி, உமது வல்லமை ஆகியவற்றின் வழி நீர் வெளிப்படுத்தியுள்ள அவ்வொளியினை மறைத்து விடாதீர். உமது கட்டளை, அரசுரிமை ஆகியவற்றின்வழி கண்ணுக்குப் புலப்படுவதும் கண்ணுக்குப் புலப்படாததுமான விண்ணவர் படையினரைக் கொண்டு உம்மில் உண்மையான நம்பிக்கையைக் கொண்டோருக்கு உதவிடுவீராக. எல்லாம் வல்லவரும், அதி சக்தி மிக்கவருமான இறைவன் உம்மையன்றி வேறிலர்.

#11443
- Bahá'u'lláh

 

பிரபுவே, என் இறைவா, நீர் அதி மேன்மைக்கு உரியவராவீராக! உமது அன்பிற்காகவும் மகிழ்ச்சிக்காகவும் உண்ணா நோன்பைக் கடைப்பிடிக்குமாறு நீர் பணித்துள்ளோர், உமது சட்டத்தின்பால் தங்களின் விசுவாசத்தை மெய்ப்பித்து உமது வாசகங்களையும் விதிகளையும் பின்பற்றுவோர், உமது அண்மையை அடைந்து, உமது வதனத்தைக் கண்ணுற்று, அதே வேளையில் அவர்களின் உண்ணா நோன்பையும் முடித்துள்ளோர் ஆகியவர்கள் சாட்சியாக உம்மை வேண்டிக் கொள்கின்றேன். உமது மகிமை சாட்சியாக! அவர்கள் உமது நல்விருப்பம் எனும் அவையின்பால் திரும்பியுள்ளதால், அவர்களின் வாழ்நாள் அனைத்துமே உண்ணா நோன்புக்குரிய நாள்களாகும். உமது விருப்பம் எனும் திருவாய், “மனிதர்களே, எமது அழகின் நிமித்தம் நோன்பைக் கடைப்பிடிப்பதுடன், அதற்குக் கால வரம்பு எதுவும் நியமிக்காதீர்,” என அவர்களிடம் நீர் கூறுமிடத்து, உமது மகிமை என்னும் மாட்சிமை சாட்சியாக, அவர்கள் ஒவ்வொருவரும் அதை விசுவாசத்துடன் கடைப்பிடித்து, எது உமது சட்டத்தை மீறுகின்றதோ அதில் ஈடுபடாது, உமக்காக அவர்கள் தங்கள் ஆன்மாக்களையே துறக்கும் வரை அவ்வாறே செய்து வருவர்; ஏனெனில் அவர்கள் உமது அழைப்பின் இனிமையைச் சுவைத்துள்ளது மட்டுமன்றி, உமது நினைவு, புகழ்ச்சி, ஆகியவற்றுடன் உமது ஆணை என்னும் உதடுகளிலிருந்து பிறந்த வார்த்தைகளினாலும் மதி மயக்கம் அடைந்துள்ளனர்.

மேன்மைமிக்கவரும், அதி உயர்வானவருமாகிய உமது தன்னகத்தினாலும் பிந்திய கால அவதாரமான எவரின் மூலம் நாமங்களின் இராஜ்யமும், பண்புகளின் ஆதிக்கமும் அதிரச் செய்யப்பட்டனவோ, பூவுலக, சுவர்க்கலோக மக்கள் பேரின்ப மயக்கம் உற்றனரோ, வெளிப்பாடு, படைப்புலகம் ஆகிய இராஜ்யங்களில் வசிப்போர் உமது நல்விருப்பத்திற்கு முரணானவற்றிலிருந்து உண்ணா நோன்பிருந்து, உம்மைத் தவிர மற்றவற்றின்பால் திரும்புவதிலிருந்து தங்களைத் தடுத்துக் கொண்டவர்களைத் தவிர்த்து மற்ற அனைவரும் நடுங்கினரோ, அந்த அவதாரத்தின் வாயிலாகவும், எங்களையும் அவர்களோடு ஒன்று சேர்த்து, அவர்களுடைய பெயர்களை எந்த நிருபத்தில் எழுதியுள்ளீரோ அதே நிருபத்தில் எங்கள் பெயர்களையும் எழுதிடுமாறு மன்றாடுகின்றேன். இறைவா, உமது வல்லமையின் அற்புதங்களாலும், உமது அரசாட்சி, மகோன்னதம் ஆகியவற்றின் அடையாளங்களினாலும் உமது திருநாமங்கள் எனும் கடலிலிருந்து அவர்களின் பெயர்களை அனுப்பி வைத்துள்ளீர்; அத்துடன் உமது அன்பெனும் பொருளினால் அவர்களின் உள் சாராம்சங்களையும், உமது சமயத்தின் உந்து சக்தியினால் அவர்களின் அதி உள்ளார்ந்த நிலைகளையும் படைத்துள்ளீர். பிரிவே தொடரா மீண்டும் ஒன்றிணைதல், தூரமறியா அண்மைய, முடிவே அறியா நித்தியம் ஆகியவை அவர்களுடையதே. மெய்யாகவே, இவர்கள் என்றும் உம்மை நினைவு கூர்ந்திடுவோரும், எக் காலமும் உம்மைச் சுற்றி வலம் வருபவர்களும், உமது முன்னிலை எனும் புகலிடத்தையும் உம்முடன் மீண்டும் ஒன்றிணைதல் எனும் கா’ஆபாவையும் வலம் வந்திடும் ஊழியருமாவர். என் இறைவா, அவர்கள் உமது வதனத்தின் ஒளிகளைக் கண்ணுறுகையில், தங்கள் முகங்களை உமது திசையில் வைத்து, உமது மகத்துவத்திற்கு அடிபணிந்து, உம்மைத் தவிர மற்றதனைத்திலிருந்தும் பற்றறுத்த நிலையில் உமது அழகின் முன் சாஷ்டாங்கமாய் வீழ்ந்து வணங்கியதைத் தவிர, நீர், அவர்களுக்கும் உமக்குமிடையே வேறெந்த வேறுபாட்டையும் நியமித்ததில்லை.

என் பிரபுவே, உமது தெளிவாய்த் துலங்கிடும் நூலில் நீர் வெளிப்படுத்தியுள்ளவற்றிற்கு ஏற்ப உமது கட்டளை, ஆணை ஆகியவற்றிற்கிணங்க நாங்கள் உண்ணா நோன்பிருந்துள்ளோம். இந் நாள் ஒரு முடிவிற்கு வந்து, நோன்பைத் துறக்கும் வேளை வரும் வரையில் எங்களின் ஆன்மாக்களை உணர்ச்சிகளிலிருந்தும், நீர் வெறுப்பன-வற்றிலிருந்தும் தடுத்துள்ளோம். ஆகையால், ஆர்வமிகு அன்பர்கள் இதயங்களின் ஆவலானவரும், உணருந்திறன் பெற்றுள்ள ஆன்மாக்களின் நேசரும் ஆனவரே, உமக்காக ஏங்குவோர்் இதயங்களின் ஆனந்தப் பரவசமும் உம்மைத் தேடுவோரது ஆவலின் குறிக்கோளும் ஆனவரே, உமது அண்மை எனும் சூழலில் உமது முன்னிலை எனும் சுவர்க்கத்திலும் வானளாவப் பறந்து, உமது அன்பு, நல்விருப்பம் என்னும் பாதையில் நாங்கள் ஆற்றியவற்றை எங்களிடமிருந்து ஏற்றுக் கொள்ளுமாறு உம்மை மன்றாடிக் கேட்டுக்கொள்கின்றேன். ஆகவே, உமது ஒருமைத் தன்மையை ஏற்றுக்கொண்டவர்கள், உமது ஏகத்துவத்தை ஒப்புக்கொண்டவர்கள், உமது மாட்சிமையின் அடையாளங்கள் ஆகியவற்றின் முன்னிலையில் தங்களைத் தாழ்த்திக் கொண்டுள்ளவர்கள், உமது அருகில் தஞ்சம் புகுந்து உம்மில் புகலிடம் தேடியவர்கள், உம்மைச் சந்தித்து, உமது முன்னிலை எனும் அவையினை அடைந்திடும் ஆவலில் தங்களின் வாழ்க்கைகளை அர்ப்பணித்தவர்கள், உமது அன்பிற்காக இவ்வுலகையே தங்களின் பின்புறம் வீசி எறிந்து, உமது அண்மையை அடைந்திடும் ஆவலில் உம்மைத் தவிர மற்றெல்லா உறவுகளையும் துண்டித்துக் கொண்டவர்கள் ஆகியோரின் மத்தியில் எங்களின் பெயர்களை எழுதிடுவீராக. எவரின் இதயங்கள் உமது நாமத்தை உச்சரித்ததும் உமது அழகின்பாலுள்ள ஆர்வமிக்க ஆவலினால் உருகினவோ, எவரின் கண்களில் உம்மைக் காணவேண்டும், உமது அரசவையில் பிரவேசிக்க வேண்டும், என்ற பேராவலினால் கண்ணீர் பொங்கி வழிந்ததோ, அவர்கள்தாம் இவ்வூழியர்கள்.

இதுவே உமது ஒற்றுமைக்கும், ஒப்பற்ற நிலைக்கும் சாட்சியமளிக்கும் எனது நா; உமது தாரளத்தன்மை, எண்ணிறந்த கொடைகள் ஆகியவற்றின் ஆசனத்தைத் தரிசிக்கும் எனது கண், உமது அழைப்பையும் உமது வெளியிடுகையையும் செவிமடுக்கத் தயாராக இருக்கும் எனது செவி. ஏனெனில், என் இறைவா, உமது விருப்பம் எனும் திருவாயினின்று வந்திடும் வார்த்தைகள், என்றும் வற்றாதவையென நீர் விதித்துள்ளீர் என்பதிலும், உமது வார்த்தைகளையும், வசனங்களையும் செவிமடுப்பதற்குப் புனிதப்படுத்தப்பட்ட செவிகள் அளிக்கப்பட்டுள்ளோர், எல்லா நேரங்களிலும் செவிமடுத்துக் கொண்டுள்ளனர் என்பதிலும் நான் உறுதியடைந்துள்ளேன். மேலும், என் பிரபுவே, இவையே உமது சலுகை, மென்கருணை என்னும் சுவர்க்கத்தை நோக்கி உயர்த்தப்பட்டுள்ள எனது கரங்கள். அன்றியும் உம்மைத் தவிர்த்து தனக்கென வேறொருவரை அன்பராகவோ, உம்மையன்றி வேறொருவரை அருள் பொழிபவராகவோ, உம்மையல்லாது வேறொருவரை அரசனாகவோ, உமது கருணை எனும் நிழலின் கீழ் அல்லாது வேறோர் அடைக்கலத்தையோ, உமது விண்ணுலகிலும், உமது மண்ணுலகிலும் வாழும் அனைவருக்கும் நீர் திறந்துவிட்டுள்ள இந் நுழைவாயிலின் முன்னிலையைத் தவிர வேறொரு புகலிடம் எதையும் கொண்டிராத இவ்வேழையை நீர் திருப்பி அனுப்பிடுவீரா? உமது மகிமைமீது ஆணை, இல்லை! உமது இராஜ்யம் நீடிக்கும் காலம் வரை நீர் என்னைக் கடுந்துன்பங்களுக்கு உட்படுத்திடினும், உமதன்புக் கருணையில் கொண்டுள்ள உறுதியில் நான் தளராமல் இருப்பவனாவேன்; மேலும் உம்மைக் குறித்து யாரேனும் என்னிடம் வினவுவாராயின் எனதுடலின் ஒவ்வோர் அங்கமும்: “அவர் தமது செயல்களில் நேசிக்கப்படுபவரும், தனது ஆணைகளுக்குக் கீழ்ப்படியப்படுபவரும், தனது இயல்பில் கருணைமிக்கவரும், தனது படைப்பினங்களிடம் இரக்கமுடையவரும் ஆவார்!”, எனப் பிரகடனப்- படுத்திடும்!

உமக்காக ஏங்குவோர் இதயங்களினால் மிகவும் நேசிக்கப்படுபவரே, உமது வலிமையே எனக்குச் சாட்சியம் பகர்கின்றது, உமது நுழைவாயிலில் இருந்து என்னை நீர் திருப்பியனுப்பிடினும், உமது ஊழியர்களிடையே உள்ள கொடுங்கோலர்களின் வாள்களுக்கும், உமது படைப்பினங்களிடையே உள்ள இறைப்பற்றற்றோரின் அடிக்குங் கோல்களுக்கும் என்னைப் பலியாகக் கைவிட்ட போதும், உம்மைக் குறித்து யாரேனும் என்னிடம் வினவுவாராயின் எனதுடலின் ஒவ்வோர் உரோமமும்: “மெய்யாகவே, அனைத்து உலகங்களினால் மிகு நேசிக்கப் படுபவரும் அவரே; அதி வள்ளன்மை மிக்கவரும் அவரே; என்றும் நிலைத்திருப்பவரும் அவரே! தம்மிடமிருந்து என்னைத் தூர வைத்திடும் அதே வேளையில் அவர் என்னைத் தமதருகே ஈர்க்கின்றார்; அவரது முன்னிலையை அடைந்திட எனக்கு அனுமதி மறுக்கும் அதே வேளை எனக்கு அவர் தமது புகலிடத்தையும் அளிக்கின்றார். எவரைத் தவிர்த்து மற்றதனைத்திலிருந்தும் சுதந்திரம் அடைந்தேனோ, எவரைத் தவிர்த்து மற்றெல்லாவற்றிலிருந்தும் உயர்த்தப்பட்டேனோ, அவரை விஞ்சிய கருணையாளர் வேறெவரையும் நான் கண்டிலேன்”, எனப் பிரகடனப்படுத்தும்.

என் இறைவா, மண்ணுலக, விண்ணுலக இராஜ்யங்களிலிருந்து சுதந்திரமடையும் அளவு எவர் உம்மால் வளமாக்கப்பட்டுள்ளாரோ அவர் நலம் பெற்றவராவார். எவர் உமது செல்வம் என்னும் கயிற்றை இறுகப் பற்றி உமது வதனத்தின் முன் அடிபணிந்துள்ளாரோ அவரே தனவந்தராவார்; அனைத்திற்கும் மேலாக அவருக்கு நீரே போதுமானவர். எவர் உம்மைத் தவிர்த்து, உமக்குமுன் செருக்குக் காட்டி உமது முன்னிலையை விட்டு விலகி, உமது அடையாளங்கள் மீது நம்பிக்கையற்று இருக்கின்றாரோ, அவரே வறியவராவார். என் இறைவனும், என் நேசருமானவரே, அகந்தை, தீவிர உணர்ச்சியெனும் காற்று அதன் விருப்பத்திற்கிணங்க இயக்கிடவும், வழிகாட்டிடவும் செய்திடுவோருடன் அல்லாது உமது சித்தம் என்னும் மென்காற்று, தன் விருப்பத்திற்கிணங்க இயக்கிடுவோரின் எண்ணிக்கையில் என்னையும் சேர்த்திடுவீராக. எல்லாம் வல்ல, மேன்மைமிகு, அதி வள்ளன்மை மிக்க இறைவன் உம்மையன்றி வேறிலர் .

என் இறைவா, நீர், உமது திருநாமத்துடன் தொடர்புப் படுத்தியுள்ள ‘அலா (உயர்வு) எனும் இவ்வதி மேன்மைமிகு மாதத்தில் உண்ணா நோன்பிருக்க, எனக்கு அருள் கூர்ந்து உதவியமைக்காக, ஒளியெல்லாம் உமக்கே உரியதாகட்டும். இம்மாதத்தில் உண்ணா நோன்பிருந்து, அதன்வழி உமது அண்மையை அடைந்திட வேண்டுமென, நீர் உமது ஊழியர்களுக்கும், உமது மக்களுக்கும் பணித்துள்ளீர். எவ்வாறு முதல் மாதம் பஹா என்னும் உமது திருநாமத்துடன் தொடங்கியதோ அதே போன்று வருடத்தின் நாள்களும் மாதங்களும் உண்ணா நோன்புடன் உச்ச நிலையை அடைந்தன, அதனால் நீரே முதலும் இறுதியுமானவர், வெளிப்படுத்தப்பட்டவரும், மறைந்துள்ள-வருமென சாட்சியமளித்து, உமது சமயத்தின் மகிமை வாயிலாக மட்டுமே, எல்லா நாமங்களின் மகிமையும் அருளப்படுகின்றது எனவும், உமது திருமொழி, உமது விருப்பம் ஆகியவையின் மூலமாகவே பொருளுரைக்கப்பட்டு, உமது நோக்கத்தின் மூலமாகவே வெளிப்படுத்தப்படவும் கூடும் என அனைவரும் ஐயத்திற்கிடமின்றி உறுதியளிக்கப்படுவர். இம்மாதத்தினை உம்மிடமிருந்து வரும் ஒரு நினைவுகூறலாகவும் கௌரவமுமாகவும் அவர்களிடையே உமது பிரசன்னத்தின் அடையாளமாகவும் இருக்குமாறு விதித்துள்ளீர். இம்மாதத்தினை அவர்கள் மத்தியில் உமது நினைவாகவும், உமது கௌரவமாகவும், அவர்களிடையே உமது இருத்தலின் அடையாள-மாகவும் நியமித்துள்ளீர், அதனால் அவர்கள் உமது மகோன்னதம், உமது மாட்சிமை, உமது இறைமை, உமது மகிமை ஆகியவற்றை மறக்காதிருக்கவும், நினைவுக்கெட்டாத காலந்தொட்டுப் படைப்பு முழுமைக்கும் நீரே ஆட்சியாளராக இருந்து வந்துள்ளீர், இனியும் இருந்து வருவீர் என அவர்கள் நன்கு உறுதியடைந்திடவும் கூடும். விண்ணுலகிலும், மண்ணுலகிலும் படைக்கப்-பட்டுள்ள எதுவுமே உமது ஆளுகையைத் தடை செய்யவோ, வெளிப்பாடு, படைப்பு என்னும் இராஜ்யங்களிலுள்ள எவருமே நீர் உமது நோக்கத்தை நிறைவேற்றுவதைத் தடுத்திடவோ இயலாது.

என் இறைவா, உமது தவறா தற்காப்பின் வழி பாதுகாக்கப்பட்டு உமது அதி விழுமிய கருணையின் நிழலின் கீழ் அடைக்கலம் அளிக்கப்பட்டோரைத் தவிர, பூவுலகின் மனித இனம் அனைத்தையும் புலம்பச் செய்த உமது நாமத்தின் பேரால், உமது ஊழியர்கள் உமக்கெதிராக எழுந்த போதினும், உமது மக்கள் உம்மை விட்டு அப்பால் திரும்பியும், உமது நாமத்தை உச்சரிக்கவோ, உந்தன்பாலான தொடர்புறவு எனும் புகலிடத்தின்பாலும், உமது புனிதம் எனும் கா’ஆபாவின்பாலும் தனது முகத்தைத் திருப்பவோ, எவருமே இல்லாது போயினும், நான் ஒருவனாகவும், தனியனாகவும் முன்னெழுந்து, உமது சமயத்தை வெற்றி பெறச் செய்யவும், உமது திருமொழியினை மேன்மைப்படுத்தவும், உமது இறைமையைப் பிரகடனப்படுத்தவும், உமது மாண்புமிகு தன்னகத் தன்மையின் புகழ்ச்சியினைக் கொண்டாடவும், உமது சமயத்தில் எங்களை உறுதிப்படுத்தவும், உமதன்பில் பற்றுறுதியுடன் இருக்கவும், செய்திடுமாறு, உம்மை மன்றாடிக் கேட்கின்றேன். மேலும் என் பிரபுவே, போற்றுதற்குரிய நாமம் என்று ஒன்றை நான் கருதும் போதெல்லாம் இதனை நான் உம்முடனேயே தொடர்புப்படுத்தியுள்ளதால், எந்த நாமத்தைக் கொண்டு உம்மை நான் போற்றிப் புகழ முயன்றிடினும், நான் குழப்பமே அடைந்துள்ளேன். ஏனெனில், உமது புனித முன்னிலையில், உம்மை வழிபட உம்முடன் நான் தொடர்புப்படுத்தும் உமது அனைத்து மேன்மைமிக்கப் பண்புகளும், உமது அனைத்து அதி சிறந்த நாமங்களும், எனது சுய புரிந்துகொள்ளலின் அளவினையே காட்டுவ-தல்லாது, வேறொன்றுமில்லை என்பதனை நான் முழுமையாக உணர்ந்துள்ளேன். உம்மைத் தவிர வேறெவரின் வருணனைக்கும், அறிவுக்கும் மேலாகவே உமது மெய்ம்மை நிலை அளவிறந்த மேன்மைக்குரியதாகும்; மேலும் உம்மை அடைவதற்கான அவர்களின் முயற்சிகளிலான உமது படைப்பினங்களின் போற்றதலுக்கும் உமது ஊழியர்களின் புகழ்ச்சிக்கும் அப்பால் நீர் புனிதமானவராகவே இருக்கின்றீர். உமது ஊழியர்களிடமிருந்து தோன்றும் எதுவுமே அவர்களின் சொந்த குறை வரம்புகளுக்கு உட்பட்டவையும், அவர்களின் வீண் எண்ணங்கள், கற்பனைகள் ஆகியவற்றிலிருந்து உருவாக்கப்-பட்டவையுமாகும்.

அந்தோ! அந்தோ! என் நேசரே, உம்மைத் தகுந்த முறையில் புகழ்வதற்கான எனது இயலாமைக்-காகவும், உமது நாள்களில் எனது குறைபாடுகளுக்காகவும், நான் வருந்துகின்றேன்! என் இறைவா, நான் உம்மை, எல்லாம் அறிந்தவர் என அறிவித்தேனாகில், உமது விருப்பம் என்னும் ஒரே விரலினால் வாய் பேசாத பாறை ஒன்றினைச் சுட்டி, அதற்கு நீர் கடந்த கால, வருங்கால அறிவனைத்தையும் வெளிப்படுத்திடும் சக்தியை அளித்திடுவீர் என்பதையும், மேலும் உம்மை சர்வ சக்தி வாய்ந்தவர் என நான் புகழ்வேனாகில், விண்ணுலகங்களையும் மண்ணுலகையும் அதிரவைக்கும் அளவிற்கு உமது நோக்கம் என்னும் திருவாயிலிருந்து வெளிப்பட்டிடும் ஒரே வார்த்தை அதற்குப் போதுமானதென்பதையும் நான் தயக்கமின்றி உணர்கின்றேன்.

உம்மை அறிந்து கொண்டோர் அனைவரின் நேசரே, உமது மகிமையே எனக்குச் சாட்சியம் அளிக்கின்றது; உமது அறிவெனும் வெளிப்பாடுகள் முன்னால், கற்றவர் ஒருவர் தனது அறியாமையை ஒப்புக்கொள்ள மறுப்பாராகில், அவர் உமது மக்களிலேயே அதி அறிவிலி எனக் கணித்திடப்படுவார்; மேலும், உமது சக்தியின் ஆதாரங்கள்் முன், சக்திமிக்க ஒருவர், தனது பலவீனத்தை ஒப்புக்கொள்ள மறுப்பாராகில், அவர் உமது படைப்பினங்களிலேயே, அதி பலவீனராகவும், அதி கவனமற்றவராகவும் கருதப்படுவார். இது இவ்வாறானதுதான் என்பது எனது அறிவுக்கும், உறுதிப்பாட்டிற்கும் தெளிவாய் இருக்கையில், நான் எங்ஙனம் உம்மை மேன்மைப்படுத்தவோ, வருணிக்கவோ, புகழவோ இயலும்? ஆதலின் நான், எனது பலவீனத்தை உணர்ந்து, உமது வலிமையெனும் பாதுகாப்பை நோக்கி விரைந்துள்ளேன்; எனது ஏழ்மையை உணர்ந்து, உமது செல்வம் எனும் நிழலின் கீழ் அடைக்கலம் நாடியுள்ளேன்; மேலும் எனது சக்தியின்மையை உணர்ந்து, உமது சக்தி, வலிமை எனும் திருக்கூடாரத்தின் முன் நிற்பதற்கு முன்னெழுந்துள்ளேன். உம்மையன்றி வேறு ஆதரவளிப்பவர் எவரையும் நாடாத இவ்வேழையை நீர் ஒதுக்கித் தள்ளவோ, உம்மையன்றி வேறு எவரையும் தனது உண்மை நேசராகக் கொண்டிடாத இவ்வந்நியனைத் திருப்பி அனுப்பிடவோ செய்திடுவீரா?

பிரபுவே, என்னுள்ளிருக்கும் அனைத்தையும் நீர் அறிவீர், ஆனால், உம்முள் இருப்பது யாதென யான் அறியேன். உமது அன்பான அருள்பாலிப்பின் வழி என்மீது இரக்கம் காட்டி உமது நாள்களில் என் இதயத்திற்கு அமைதியளிக்கக் கூடியதனைக் கொண்டு எனக்குத் தெய்வீக ஊக்கம் அளித்து, உமது புனித முன்னிலையின் வெளிப்பாடுகள் வழி எனதான்மாவுக்குச் சாந்தியளிப்பீராக. பிரபுவே, உமது வதனத்தின் ஒளிகளின் பிரகாசங்களினால், படைப்புப் பொருள்கள் அனைத்தும் ஒளிரச் செய்யப்பட்டு, உமது வெளிப்படுத்துதலை, உமது ஊழியர்களிடையே ஆழ்ந்து உறங்கிக் கொண் டிருப்பவர்களிடமிருந்து மறைக்கப்பட்டிருக்கும் அவ் வெளிப்படுத்துதலைத் தவிர, யாம் வேறெதனையும் அதனுள் கண்டிராத வகையில், உமது ஒப்பற்ற வெளிப்படுத்துதல்களின் மாட்சிமை காரணமாக மண்ணுலக விண்ணுலகவாசிகள் சுடரொளி விட்டுப் பிரகாசிக்கின்றனர்.

என் பிரபுவே, படைப்புலக இராஜ்யங்கள், அவை கண்களுக்குப் புலப்படுபவையோ புலப்- படாதவையோ, அவை அனைத்தையும் சூழ்ந்துள்ள உமது அருளை எனக்குக் கிட்டாது செய்திடாதீர். என் இறைவா, மனுக்குலம் முழுமையும் மீண்டும் திரும்பி, உமதருகினை அடையும்படி அழைப்பு விடுத்து, உமது கயிற்றினைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொள்ளவும் தூண்டிய பிறகும் நீர் வெகு தூரம் விலகி இருக்கலாமா? என் நேசரே, உமது மாசுபடுத்தவியலாத திருநூலிலும், உமது அற்புத வசனங்களிலும், உமக்காக ஏங்குவோர் அனைவரையும் உமது அருட்பேறு எனும் அரங்கத்திலும், உமக்காக ஆவலுறுவோரை உமது வள்ளன்மைமிகு தயையெனும் நிழலின் கீழும், உம்மைத் தேடுவோரை உமது இரக்கம், அன்புக்கருணை என்னும் விதானத்தின் கீழும் ஒன்று திரட்டுவேன் என நீர் வாக்களித்திருந்தும் என்னை மட்டும் ஒதுக்கித் தள்ளிடுவீரா?

என் இறைவா, உமது சக்தி மீது ஆணை, என் புலம்பல்கள் என்னுள், இதயத்தையே நிறுத்தி விட்டுள்ளன, அதன் வேதனைக் குரல்கள் என் கைகளிலிருந்து கடிவாளத்தினைப் பற்றிக் கொண்டுள்ளன! எப்பொழுதெல்லாம் நான் என்னை மீண்டும் உறுதிப்படுத்திக் கொண்டு, உமது கருணையெனும் அற்புதங்களையும், உமது தயைமிகு அருள்பாலிப்பு எனும் அடையாளங்-களையும், உமது தாராளத் தன்மையின் ஆதாரங்களையும் கொண்டு, எனது ஆன்மாவை மகிழ்வுறச் செய்கின்றேனோ, அப்பொழுதெல்லாம் நான் உமது நீதியின் வெளிப்பாடு முன்னும், உமது வெஞ்சினம் என்னும் அடையாளங்கள் முன்னும் நடுக்கமுறுகின்றேன். நீர் இவ்விரு நாமங்களினால் அறியப்பட்டு, இவ்விரு குணவியல்புகளினால் வருணிக்கவும் பட்டுள்ளீர் என்பதை நான் அறிவேன்; எனினும் என்றும் மன்னிப்பவர் எனும் உமது நாமத்தினால் வணங்கி வேண்டப்படுகிறீரோ வெஞ்சினமிக்கவர் எனும் உமது நாமத்தினால் வேண்டப்படுகிறீரோ என்பதைக் குறித்து, நீர் அக்கறை கொள்வதில்லை. உமது மகிமை சாட்சியாக, அனைத்திலும் உமது இரக்கமே விஞ்சி நிற்கின்றது என்பதை நான் அறிந்திலனாகில் எனதுடலின் அங்கங்கள் இலதாகி விட்டிருக்கும், எனது மெய்ம்மை அணைக்கப்பட்டு, எனது உள்ளுருவும் நிர்மூலமாக்கப்பட்டிருக்கும். ஆனால், பொருள்கள் அனைத்தையும் உமது அருள் சூழ்ந்துள்ளதையும், படைப்பு முழுமையையும் உமது கருணை அரவணைத்துள்ளதையும் நான் கண்ணுறும்போது, எனதான்மாவும் எனது அதி உள்ளார்ந்த உருவும் நன்கு உறுதியடைகின்றன.

அந்தோ, அந்தோ! என் இறைவா, உமது நாள்களில் என்னிடமிருந்து நழுவிச் சென்றிட்டவை குறித்து நான் வருந்துகின்றேன்; மேலும், அந்தோ, அந்தோ, எனது இதயத்தின் ஆவலே, உம்மால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும், உமது நம்பிக்கைக்-குரியவர்களும் கண்ணுற்றிராத இவை போன்ற நாள்களில் உமக்குரிய சேவையிலும், கீழ்ப்படிதலிலும் நான் செய்யாமல் விட்டுச் சென்றவைக்காகவும் வருந்துகின்றேன்! என் கடவுளே, உமது தன்னகத்தினாலும் உமது கருணை எனும் அரியணை மீது அமர்ந்துள்ள உமது சமயத்தின் அவதாரத்தினாலும் என்னை உமது சேவையிலும் நல்விருப்பத்திலும் உறுதிப்படுத்துமாறு வேண்டிக் கொள்கின்றேன். உம்மிடமிருந்து அப்பால் திரும்பியும், உமது வாசகங்களை நம்பாதவர்களிடமிருந்தும், உமது உண்மையை மறுத்து, உமது சான்றுகளை ஏற்க மறுத்தோரிடமிருந்தும், உமது ஒப்பந்தத்தையும் இறுதி விருப்ப சாஸனத்தையும் மீறியோரிடமிருந்தும் என்னைப் பாதுகாப்பீராக.

பிரபுவே, எனதாண்டவரே, உமது சாராம்சத்தின் அவதாரம், உமது ஒருமைத் தன்மையின் பகலூற்று, உமது அறிவின் சுரங்கம், உமது வெளிப்பாட்டின் தோற்றிடம், உமது அருட்தூண்டலின் களஞ்சியமும் உமது இறைமையின் அரியாசனம், உமது தெய்வத்தன்மையின் உதயஸ்தலம், மூலாதார மையம், அதி உயரிய வதனம், ஆதி வேர், தேசங்களை உயிர்ப்பிப்பவர், ஆகிய அவருக்கே போற்றுதல் எல்லாம் உரியதாகட்டும்; மேலும் அவரிலும், அவரது வசனங்களிலும், நம்பிக்கை வைப்பதில் முதன்மையானவரும்,* எவரை நீர் உமது அதி விழுமிய திருவாக்கின் மேம்பாட்டிற்கான அரியணையாகவும், உமது அதி மேன்மையான நாமங்களின் குவிமையக் குறியாகவும், உமது அருள்பாலிப்பு என்னும் கதிரவனின் பிரகாசமெனும் பகலூற்றாகவும், உமது நாமங்கள், இயல்புகள் ஆகியவற்றின் தோற்றத்திற்கான உதய ஸ்தலமாகவும், உமது விவேகம், உமது திருக் கட்டளைகள் எனும் முத்துக்களின் கருவூலமாகவும் ஆக்கியுள்ளீரோ, அவர் மகிமையுறுவாராக. அவர்பால் இறுதியாக வந்தவரான** இவர், எல்லா நன்மதிப்புக்கும் உரியவர் ஆவாராக; அவரது வதனத்தின் ஒளிகளினால் ஒளிரப்பட்டு, அவர் முன்னால் இவரே சாஷ்டாங்கமாய் வீழ்ந்து, அவர்பால் இவரது கீழ்ப்படிதலுக்குச் சாட்சியங் கூறியதைத் தவிர, இவரது வருகை அவரது வருகை போன்றே இருந்தது. இவர்** மீதான உமது வெளிப்பாடும் அவர்மீதான*** உமது வெளிப்பாட்டைப் போன்றே இருந்தது. அவரது பாதையில் உயிர்த் தியாகம் செய்தோர் மீதும், அவரது அழகின் மீது கொண்ட அன்பின் பொருட்டுத் தங்களின் வாழ்க்கைகளை அர்ப்பணித்தோர் மீதும் புகழொளி சேரட்டுமாக.

என் இறைவா, இவர்களே உம்மிலும் உமது அடையாளங்களிலும் நம்பிக்கை வைத்துள்ள ஊழியர்கள் என்பதற்கும் உமது முன்னிலை எனும் புகலிடத்தை நாடி, உமது வதனத்தை நோக்கித் திரும்பியுள்ளோர் என்பதற்கும், உமது அண்மைய எனும் அரசவையினை நோக்கித் தங்கள் முகங்களைத் திருப்பி, உமது நல்விருப்பம் எனும் பாதையில் நடந்துள்ளோர் என்பதற்கும் உமது விருப்பத்திற்கேற்ப உம்மை வழிபட்டு, உம்மைத் தவிர மற்றெல்லாவற்றிலிருந்தும் தங்களைப் பற்றறுக்கச் செய்து கொண்டோர் என்பதற்கும், நாங்கள் சாட்சியமளிக்கின்றோம். பிரபுவே, எல்லா வேளைகளிலும் அவர்களின் ஆவிகள், உடல்கள் ஆகியவற்றிற்குச் சகலத்தையும் சூழவல்ல உமது கருணையின் அற்புதங்களிலிருந்து ஒரு பங்கினை வழங்கிடுவீராக. எவரது உதவி மனிதர் அனைவராலும் வேண்டப்படுகின்றதோ அவரைத் தவிர, எல்லாம் வல்லவரும், சர்வ மகிமையும் வாய்ந்த இறைவன், உம்மையன்றி வேறிலர்.

பிரபுவே, அவர் பெயராலும், அவர்கள் பெயராலும், மேலும் நீர் யாரை உமது சமயமெனும் அரியணையில் அமர்த்தி மண்ணுலக விண்ணுலக வாசிகள் அனைவரையும் புகலிடம் பெறச் செய்தீரோ அவர் பெயராலும், எங்களை, எங்களின் அத்துமீறல்களிலிருந்து தூய்மைப்படுத்துமாறும், உமது முன்னிலையில் உண்மையெனும் இருக்கையினை எங்களுக்காக அருளுமாறும், இவ்வுலகின் துன்பங்களும், அதன் துரதிர்ஷ்டங்களும், உம்மை நோக்கித் திரும்புவதிலிருந்து தடுக்கப்படாதாருடன் நாங்கள் தொடர்புறவுக் கொண்டிடச் செய்திடுமாறும் உம்மைக் கெஞ்சிக் கேட்கின்றேன். மெய்யாகவே, நீரே சர்வ சக்திவாய்ந்தவர், அதி மேன்மை மிக்கவர், பாதுகாப்பாளர், என்றும் மன்னிப்பவர், அதி கருணையாளர்.

முல்லா ஹுசேன்

குடூஸ்

பாப் பெருமானார்

#11444
- Bahá'u'lláh

 

உபரி நாள்கள்

உபரிநாள்கள் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் இறுதி நாள்களில் தொடங்கி மார்ச் மாதம் ஆரம்ப நாள்கள் வரை நீடிக்கும். உண்ணா நோன்பினை மேற்கொள்வதற்கு ஒருவர் தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளும் நாள்களாகவும் உபசரித்தல், தர்ம காரியங்கள் செய்தல், பரிசுகள் வழங்குதல் போன்றவற்றிற்கு உகந்த நாள்களாகவும் இவை இருக்க வேண்டும்.

என் கடவுளே, எந்தன் தீச் சுடரே, எந்தன் ஒளியே! நாமங்களுக்கெல்லாம் மன்னரே, நீர், அய்யாம்-இ-ஹா என்று உமது திருநூலில் பெயரிட்டுள்ள உபரி நாள்கள் ஆரம்பமாகிவிட்டன, என் பிரபுவே, உமது படைப்பின் இராஜ்யத்திலுள்ள யாவரையும் கடைப்பிடிக்குமாறு, நீர், உமது அதி மேன்மைப்படுத்தப்பட்ட எழுதுகோலைக் கொண்டு கட்டளையிட்டுள்ள உண்ணா நோன்பு நெருங்கிக் கொண்டிருக்கின்றது. என் பிரபுவே, இந் நாள்களின் பெயராலும், உமது கட்டளைகள் என்னும் கயிற்றினைப் பற்றி, உமது நீதி என்னும் வாசகங்களை அனுசரித்திடுவோர் அனைவரின் பெயராலும், உமது அரசவை என்னும் வட்டாரத்திற்குள் ஒவ்வோர் ஆன்மாவிற்கும் ஓர் இடத்தை நியமித்து, உமது வதனத்தினின்று வெளிப்பட்டிடும் ஒளியின் பிரகாசங்கள் என்னும் ஆசனத்தின் அருகே, அவர்களுக்கு, ஓர் இருக்கையும் வழங்கி அருளுமாறு, நான் உம்மை மன்றாடிக் கேட்டுக் கொள்கின்றேன்.

என் பிரபுவே, உமது திருநூலில் நீர் வழங்கிய வற்றிலிருந்து, எவ்விதத் தூய்மையற்ற ஆசைகளும், தங்களைத் தடைசெய்ய விட்டிராதவர்கள் இவர்களே. அவர்கள், உமது சயத்தின்முன் தலை வணங்கியுள்ளனர்; உம்மிலிருந்தே உதிக்கவல்ல மனவுறுதியுடன், உமது திருநூலை ஏற்றனர், அதனுள், நீர், அவர்கள்பால் ஆணையிட்டுள்ளவற்றைக் கடைப்பிடித்து உம்மால் விதிக்கப்பட்டுள்ளவற்றையே தேர்ந்தெடுத்துப் பின்பற்ற முடிவுசெய்துள்ளனர்.

என் பிரபுவே, எங்ஙனம் இவர்கள், உமது திருநூலில் நீர் வெளியிட்டுள்ளவற்றினை அங்கீகரித்தும், ஒப்புக்கொண்டும் உள்ளனர் என்பதைப் பார்க்கின்றீர். என் பிரபுவே, உமது அருள்மிகு கரங்களிலிருந்து அவர்களுக்கு, உமது நித்தியம் என்னும் நீரினைப் பருக வழங்குவீராக. ஆகவே, நீர், உமது முன்னிலை என்னும் சமுத்திரத்தில் தன்னை மூழ்க வைத்துக் கொண்டுள்ளவருக்கெனவும், உமது சந்திப்பு என்னும் நனிசிறந்த திராட்சை ரசத்தினை அடைந்துள்ளவருக்கெனவும், விதிக்கப்பட்டுள்ள கைம் மாறினை அவர்களுக்கும் எழுதி வைப்பீராக.

மன்னருக்கெல்லாம் மன்னரே, நசுக்கப்பட்டோருக்கு இரங்குபவரே, இம்மையிலும் மறுமையிலும் உள்ள நன்மைகள் அனைத்தையும் அவர்களுக்கு அளிக்குமாறு உம்மை வேண்டிக்கொள்கிறேன். மேலும், உமது படைப்பினங்கள் எதுவுமே கண்டிராதவற்றினை, அவர்களுக்கென எழுதி வைப்பதோடு, உம்மைச் சுற்றி வலம் வந்துள்ளோரையும், உமது உலகங்களின் ஒவ்வோர் உலகிலும், உமது அரியாசனத்தைச் சுற்றி நடமாடுபவர்களின் எண்ணிக்கையில் இவர்களையும் சேர்த்துக் கொள்வீராக.

உண்மையாகவே, எல்லாம் வல்லவரும், சர்வ ஞானியும், அனைத்தும் அறிவிக்கப்பட்டவரும் நீரே ஆவீர்.

#11445
- Bahá'u'lláh

 

நவ்ரூஸ்

என் இறைவா, உம் மீதுள்ள அன்பிற்காக உண்ணா நோன்பினைக் கடைப்பிடித்து, உமது அருவருப்புக்கு ஆளாகிடும் யாவற்றையும் தவிர்த்துள்ளோரின்பால், “நவ்ரூஸ்” என்ற விழாவினை விதித்துள்ளீர் என்பதற்காக நீர் போற்றப்படுவீராக. உமது அன்பெனும் நெருப்பும், உம்மால் கட்டளையிடப்பட்ட உண்ணா நோன்பின் பயனாகத் தோன்றிடும் வெப்பமும், அவர்களை உமது சமயத்தில் எழுச்சியுறச் செய்து, சதா உமது புகழ்ச்சியிலும் நினைவிலும் ஈடுபட்டிருக்கச் செய்திடுமாக.

என் பிரபுவே, உம்மால் உத்தரவிடப்பட்ட உண்ணா நோன்பு என்னும் அணிகலனைக் கொண்டு, அவர்களை நீர் அலங்கரித்திருப்பதனால், உமது அருளின் மூலமாகவும், வள்ளன்மைமிகு தயையின் மூலமாகவும், உமது “ஏற்றுக்கொள்ளல்” என்னும் அணிகலனைக் கொண்டு அவர்களை அலங்கரிப்பீராக. ஏனெனில், மனிதர்களின் செயல்கள் யாவும், உமது நல்விருப்பத்தைப் பொறுத்தும், உமது கட்டளைக்கு உட்பட்டுமே உள்ளன. உண்ணா நோன்பினைக் கைவிட்டுள்ள ஒருவரை, அதனைக் கடைப்பிடித்தவர் என நீர் கருதுவீராயின், அத்தகைய மனிதர் ஊழூழி காலம் முதல் உண்ணா நோன்பினைக் கடைப்பிடித்து வந்திருப்போரின் எண்ணிக்கையில் சேர்க்கப்படுவார். மேலும், உண்ணா நோன்பினைக் கடைப்பிடித்த ஒருவரை, அதனைக் கை-விட்டவரென நீர் தீர்ப்பு அளிப்பீராயின், அந் நபர், உமது வெளிப்பாடு என்னும் அங்கியினைப் புழுதியினால் கறைப்படுத்தி, இவ்வுயிரூற்றின் தெளிந்த நீருக்கப்பால் வெகுதூரம் விலக்கப்- பட்டோரின் எண்ணிக்கையில் சேர்க்கப்படுவார்.

உமது மூலமாகத்தான் “உமது வேலைப்-பாடுகளிலெல்லாம் நீர் போற்றத்தகுந்தவர் ஆவீர்” எனும் விருதுக்கொடி உயர்த்தப்பட்டுள்ளது, “உமது கட்டளைகளில் நீர் அடி பணியப்படுவீர்” எனும் கொடி பறக்க விடப்பட்டுள்ளது. என் இறைவா, உமது இந்த ஸ்தானத்தை உமது ஊழியர்களுக்குத் தெரியப்படுத்துவீராக; அதனால் அனைத்துப் பொருள்களின் உயர்வும், உமது கட்டளைக்கும் உமது திருவாக்கிற்கும் உட்பட்டதே என்பது அவர்களுக்கு உணர்த்தப்படுமாக; ஒவ்வொரு செயலின் மேன்மையும், உமது அனுமதியையும், உமது தீர்மானம் என்னும் நல்விருப்பத்தையும் பொறுத்தே உள்ளது என்பதையும், மனிதர்கள் செயல்களின் ஆட்சி அதிகாரங்கள் யாவும், உமது ஏற்பு, உமது கட்டளை ஆகியவற்றின் பிடியிலேயே அடங்கியுள்ளன என்பதையும், அவர்கள் அடையாளங் கண்டிடுவராக. இந் நாள்களில் உமது அழகினை நோக்குவதிலிருந்து, எதுவுமே அவர்களைத் தடுத்திட இயலாது என்பதனை அவர்கள்பால் அறிவித்திடுவீராக; இது குறித்து கிறிஸ்து உணர்வு ததும்பக் கூறுவதாவது,” ஆவியானவரைத் (இயேசுவைத்) தோற்றுவித்தவரே, ஆட்சி அனைத்தும் உம்முடையதே”; மேலும் உமது நண்பரான (முஹம்மது) உரத்துக் கூக்குரலிடுவதாவது: “அதி நேசிக்கப்படுபவரே, புகழெல்லாம் உமக்கே உரியதாகுக; ஏனெனில், தங்கள் அழகினை வெளிப்படுத்தி, எது உம்மால் தேர்ந்தெடுக்கப்பட்டோரை அதி உயரிய நாமத்தின் வெளிப்பாட்டின் இருக்கையை அடையச் செய்திடுமோ, அதனை அவர்களுக்கு எழுதியருளியுள்ளீர். இவ்வதி உயரிய நாமத்தின் மூலமே, உம்மையன்றி மற்றெல்லாவற்றிலிருந்தும் பற்றறுத்து உம்மை வெளிப்படுத்துபவராகவும், உமது குணங்களின் அவதாரமாகவும் திகழும் அவரை நோக்கித் திரும்பிய உமது தேர்ந்தெடுக்கப்பட்டோரைத் தவிர, மற்றெல்லா மக்களும் அழுது புலம்பினர்.

என் பிரபுவே, உமது விருட்சத்தின் கிளையும், உமது தோழர்களாகிய இவர்களும், உம்மை மகிழ்விக்கும் பேரார்வத்தினால், உமது அரசவையின் சூழிடங்களுக்குள் உண்ணா நோன்பினைக் கடைப்பிடித்தபின், இன்று, அதனை முடித்துக் கொண்டுள்ளனர். அவருக்கும், அவர்களுக்கும், கடந்த காலத்தில் உமது முன்னிலையை அடைந்தோருக்கும், உமது திருநூலில் நீர் விதித்துள்ளவை அனைத்தையும் கிடைக்கச் செய்திடுவீராக. ஆகவே, இம்மையிலும் மறுமையிலும் அவர்களுக்கு நன்மையளிக்கக் கூடியவற்றினை, அவர்களுக்கு வழங்கிடுவீராக.

உண்மையாகவே, நீரே சர்வ ஞானி, சர்வ விவேகி.

#11446
- Bahá'u'lláh

 

Tablets

அப்துல்-பஹாவின் நேர்வு நிருபம்

அப்துல்-பஹாவினால் வெளிப்படுத்தப்பட்டுள்ள இப்பிரார்த்தனை அவரது புனித ஸ்தலத்தில் கூறப்படவேண்டியதாகும். தனிப்பட்ட முறையிலும் இப்பிரார்த்தனையைக் கூறலாம்.

“எவரொருவர் பணிவுடனும், உணர்ச்சியுடனும் இப்பிரார்த்தனையைக் கூறுகின்றாரோ, அவர் இவ்வூழியனின் உள்ளத்திற்குக் களிப்பும் மகிழ்ச்சியும் ஊட்டிடுவார்; அது அவரை நேருக்கு நேர் சந்திப்பது போன்றதுமாகும்.”

அவரே எல்லா மகிமையும் கொண்டுள்ளவர்!

கடவுளே, என் கடவுளே! கற்றோர்களின் அறிவுக்கும், உமது மகிமையை எடுத்துரைப்போரின் புகழ்ச்சிக்கும் எட்டாத உமது வாயிலின் புழுதியில் எனது முகத்தைப் புதைத்துத், தாழ்மையுடனும், நீர் மல்கிய கண்களுடனும், எனது கெஞ்சிடும் கரங்களை உம்பால் உயர்த்துகின்றேன். பணிவுடனும் தாழ்மையுடனும் உமது வாயிலில் நிற்கும் இவ்வூழியனை, உமது கருணை என்னும் கடைக்கண் பார்வையினால் அருள்கூர்ந்து நோக்கி, அவனை உமது நித்திய அருள் என்னும் சமுத்திரத்தினுள் மூழ்கச் செய்வீராக.

பிரபுவே! உந்தன்பால் கவரப்பட்டும், உம்மை வேண்டிக் கொண்டும், உமது கரந்தனில் கைதியாகவும், தணியாப் பற்றுடன் உம்மைப் பிரார்த்தித்துக் கொண்டும், உம்மில் நம்பிக்கை வைத்தும், உமது வதனத்தின் முன்னால் கண்ணீருடனும், உம்மைக் கூவி அழைத்து, உம்மைக் கெஞ்சிய வண்ணமாய், ஏழ்மையான, பணிவான உமது இவ்வூழியன் இவ்வாறு கூறுகின்றான்:

பிரபுவே, என் இறைவா, உமது அன்பர்களுக்கு ஊழியம் செய்ய எனக்கு அருள் புரிவீராக; உமது சேவையில் என்னைப் பலப்படுத்துவீராக, உமது புனிதம் என்னும் அரசவையினில் பூஜித்தல் என்னும் ஒளியினையும், உமது பேரழகு என்னும் இராஜ்யத்தின்பால் பிரார்த்தனையையும் கொண்டு, எனது நெற்றியினை ஒளிரச் செய்வீராக. உமது தெய்வீக நுழைவாயில் என்னும் வாயிற்கதவின் முன்னால், நான் தன்னலமற்றவனாய் ஆவதற்கு உதவி புரிவீராக; உமது புனிதச் சுற்றெல்லைக்குள் உள்ள அனைத்துப் பொருள்களின்பாலும் பற்றற்றவனாய்த் திகழ்வதற்கு எனக்கு உதவி புரிவீராக. பிரபுவே! தன்னலமின்மை என்னும் கிண்ணத்திலிருந்து என்னைப் பருகச் செய்வீராக; அதன் அங்கியினைக் கொண்டு, எனது உடலைப் போர்த்துவீராக; அதன் சமுத்திரத்தில் என்னை மூழ்கச் செய்வீராக. அதி உயர்விலுள்ள ஒளியின் அதிபரே, உமது அன்பர்களின் பாதையில் என்னைத் தூசாக்கி, உம்மால் தேர்ந்தெடுக்கப்பட்டு, உமது வழியில் நடப்போரின் பாதங்கள் பட்டு, அதனால் உயர்வடைந்துள்ள நிலத்திற்கு, நான் எனதான்மாவை அர்ப்பணிக்க அருள் புரிவீராக.

காலை வேளைகளிலும், இரவுக் காலங்களிலும், உமது ஊழியன், இப்பிரார்த்தனையைக் கொண்டு உம்மை அழைக்கின்றான். பிரபுவே! அவனது உள்ளத்தின் ஆவலைப் பூர்த்தி செய்வீராக. அவனது உள்ளத்தை ஒளிபெறச் செய்வீராக, அவனது நெஞ்சத்தை மகிழ்வுறச் செய்வீராக, அவனது சுடரினைத் தூண்டுவீராக, அதனால் அவன் உமது சமயத்திற்கும் உமது ஊழியர்களுக்கும் சேவை செய்திடக் கூடும்.

நீரே வழங்குபவர், இரக்கமிக்கவர், அதிவள்ளன்மையாளர், அருள்மிகுந்தவர், கருணைமிக்கவர், தயாள குணமுடையவர்.

#11451
- `Abdu'l-Bahá

 

அஹம்மது நிருபம்

“அன்றாடக் கட்டாயப் பிரார்த்தனைகளான இவற்றுடன் நீண்ட கட்டாயப் பிரார்த்தனை, அஹம்மதுவின் நிருபம் போன்ற சில குறிப்பிட்ட பிரார்த்தனைகள் பஹாவுல்லாவினால் ஒரு விசேஷ சக்தியும் முக்கியத்துவமும் அளிக்கப்பட்டுள்ளன. அதனால் அவ்வாறே அவை ஏற்றுக் கொள்ளப்பட்டு ஐயத்திற்கிடமற்ற நம்பிக்கையுடனும் மாறாப் பற்றுறுதியுடனும் நம்பிக்கையாளர்களால் அவை கூறப்பட வேண்டும்; அதனால் அவற்றின் மூலமாக, அவர்கள் இறைவனுடனான தொடர்புறவில் மேலும் அணுக்கமான முறையில் அவருடன் தொடர்பு கொள்வதுடன், அவரின் சட்டங்களுடனும் கட்டளைகளுடனும் இன்னும் முழுமையாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளலாம்.”

— ஷோகி எஃபெண்டியின் சார்பில் எழுதப்பட்ட ஒரு கடிதத்திலிருந்து

அரசரும், எல்லாம் அறிந்தவரும், விவேகியும் அவரே! இதோ, நித்தியம் என்னும் விருட்சத்தின் சிறு கிளைகளின் மீதமர்ந்து, விண்ணுலக இராப்பாடி, தெய்வீக, இனிய, கீதங்கள் எழுப்பி, உண்மையானவர்களுக்கு, இறைவனின் அருகாமையெனும் நற்செய்தியினைப் பிரகடனஞ் செய்து, தெய்வீக ஒருமைத் தன்மையின் நம்பிக்கையாளர்களைத், தாராளக் குணமுடை-யோனின் முன்னிலை என்னும் அரசவையின்பால் அழைத்து, பற்றறுத்தோருக்கு, இறைவனால், அரசனால், ஒளிமயமானவரினால், ஒப்பற்ற வரினால், வெளிப்படுத்தப்பட்ட செய்தியினை அறிவித்து, அன்பர்களைப் புனிதத் தன்மை என்னும் பீடத்தின்பால், இப்பிரகாசமிகு அழகின்பால், வழி நடத்திச் செல்கின்றது.

மெய்யாகவே, எவர் மூலமாக, தவறிலிருந்து உண்மை பிரித்தறியப்படுகின்றதோ, ஒவ்வொரு கட்டளையின் விவேகமும் சோதிக்கப்படுகின்றதோ, அவரே, எல்லாத் தூதர்களின் நூல்களிலும் முன்கூறப்பட்டுள்ள இவ்வதிபெரும் அழகானவர். மெய்யாகவே, அவரே, உயரிய, சக்திமிக்க, மகத்தான, இறைவனின் கனிகளைக் கொண்டு வரும், உயிர் விருட்சம்.

அஹம்மதுவே! மெய்யாகவே அவரே கடவுள் என்பதற்கும், அரசரும், பாதுகாப்பாளரும், ஒப்பற்றவரும், எல்லாம் வல்லவரும் ஆகிய அவரைத் தவிர கடவுள் வேறிலர் என்பதற்கும், நீ, சாட்சியம் அளிப்பாயாக. மேலும், எவரது கட்டளைகளுக்கு நாமெல்லாரும் அடிபணி-கின்றோமோ, அவர், அலி, என்ற பெயருடன் அனுப்பிவைக்கப்பட்டுள்ள அவர், உண்மையாகவே இறைவனிடம் இருந்து வந்தவராவார்.

கூறுவீராக: மனிதர்களே, விவேகியும், ஒளிமய மானவருமான அவரால், பாயானில் கொடுக்கப்-பட்டுள்ள இறைவனின் விதிகளுக்குக் கீழ்ப்படியுங்கள். உண்மையாகவே அவர்தான் தூதர்களுக்கெல்லாம் மன்னர்; மெய்யாகவே, நீ இதனை அறிந்திடுவாயாயின், அவரது நூலே நூல்களுக்கெல்லாம் தாய்நூலாகும்.

அவ்வாறுதான், இவ்விராப்பாடி, இச்-சிறையிலிருந்து அவரின் அழைப்பை விடுக்கின்றது. அவர் இத்தெளிவான செய்தியினை வழங்க வேண்டியதுதான். யாரொருவர் விரும்பாதாரோ, அவர் இவ்வறிவுரையிலிருந்து அப்பால் திரும்பட்டும்; விரும்பியவர் அவரது பிரபுவின்பால் செல்லும் வழியைத் தேர்ந்தெடுக்கட்டும்.

மனிதர்களே, இவ் வசனங்களை நிராகரித்தீரென்றால், எவ்வித ஆதாரத்தைக் கொண்டு நீங்கள் கடவுளிடம் நம்பிக்கை வைத்திருக்கின்றீர்? அதனைக் காண்பியுங்கள், போலிக் கூட்டத்தினரே.

இல்லை, எவரது கைகளில் எனது ஆன்மா இருக்கின்றதோ, அவர்மேல் ஆணை, அவர்களால் முடியாது, ஒருவர் மற்றொருவருக்கு உதவும் பொருட்டு ஒன்று சேர்ந்திடினும், இதனை அவர்கள் செய்யவே இயலாது.

அஹம்மதுவே! யாம் உன்முன் இல்லாதபோது எமது அருட்கொடைகளை மறந்து விடாதே. உனது நாள்களில் எமது நாள்களையும், இத்தூரச் சிறையினில் எமது துன்பங்களையும், நாடு கடத்தலையும், நினைவு படுத்திக்கொள். எமது அன்பில் உறுதியாயிரு. எதிரிகளின் வாள்கள் உன்மீது மழைபோல் தாக்குதலைச் சொரிந்தபோதும், விண்ணுலகும் மண்ணுலகும் உன்னை எதிர்க்க எழுந்தபோதும், எம்பால் உறுதியாய் இருப்பாயாக, அதனால் உனது உள்ளம் தடுமாறாது இருக்கக் கூடும்.

எனது பகைவர்களுக்கு ஒரு தீச் சுடராகவும் எனது அன்பர்களுக்கு ஒரு நித்திய ஜீவ நதியாகவும் இருப்பாயாக, ஐயுறுவோரில் ஒருவனாகி விடாதே.

எம் வழியில் உனக்குத் துன்பங்கள் நேரினும், எம் பொருட்டு தாழ்வு வரினும், கலக்கமுறாதே.

இறைவனில், உனது இறைவனில், உனது முன்னோர்களின் பிரபுவில், நம்பிக்கை வைப்பாயாக. ஏனெனில் மனிதர்கள் தங்களின் சொந்தக் கண்களைக் கொண்டு கடவுளைக் கண்ணுறும் தன்மையையும், தங்களின் சொந்தச் செவிகளைக் கொண்டு அவரின் கீதங்களைக் கேட்கும் தன்மையையும் இழந்து, மாயை என்னும் பாதையில் அலைந்து கொண்டிருக்கின்றனர். நீ அவர்களைக் கண்ணுறுவது போன்றே, யாமும் அவர்களைக் கண்ணுற்றோம்.

அவ்வாறுதான் அவர்களின் மூட நம்பிக்கைகள், அவர்களுக்கும் அவர்களின் உள்ளங்களுக்கும் இடையே திரைகளாகி, அவர்களை, மேன்மையான, உயரிய, இறைவனின் வழியில் செல்ல விடாமல் தடுத்து விட்டுள்ளன.

மெய்யாகவே, இவ்வழகிலிருந்து அப்பால் திரும்பிடும் ஒருவன் கடந்த காலத் தூதர்களிடமிருந்தும் அப்பால் திரும்பி, நித்தியம் முதல் நித்தியம் வரை இறைவன்பால் கர்வம் காட்டுபவன் என்பதை, நீ உன்னுள் உறுதியாக நம்புவாயாக.

அஹம்மதுவே, இந் நிருபத்தை நன்குக் கற்பாயாக. உனது நாள்களில் அதனை ஓதுவாயாக, அதிலிருந்து உன்னை விலக்கிக் கொள்ளாதே. ஏனெனில், மெய்யாகவே, அதனை ஓதிடும் ஒருவருக்கு இறைவன், நூறு உயிர்த் தியாகிகளுக்கான சன்மானத்தையும், இரு உலகங்களில் சேவையையும் நியமித்துள்ளார். அதனால், நீயும் எம்மிடம் நன்றியுடையோருள் ஒருவனாக இருக்கக் கூடும் என்பதற்காக, இவ்வருள்பாலிப்புகளை, யாம் உன் மீது, எம்மிடமிருந்து ஓர் அருட்கொடையாகவும், உனக்கு எமது முன்னிலையிலிருந்து ஒரு கருணையாகவும் வழங்கியுள்ளோம்.

இறைவன் சாட்சியாக! துன்பத்திலோ, துக்கத்திலோ அவதியுறும் ஒருவன், பூரண உண்மை உள்ளத்துடன், இந் நிருபத்தை வாசிப்பானாயின் கடவுள் அவனது துயரைப் போக்கி, இடர்களைக் களைந்து, இன்னல்களையும் அகற்றுவார்.

மெய்யாகவே அவரே கருணையாளர்; இரக்கக் குணமுடையவர். உலகங்களுக்கெல்லாம் அதிபதியாகிய இறைவனுக்கே போற்றுதல் உரியதாகுக.

#11448
- Bahá'u'lláh

 

தெய்வீக திட்டத்தின் நிருபங்கள் எனும் நூலிலிருந்து எடுக்கப்பட்ட போதனைக்குரிய

ஐக்கிய அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளிலுள்ள பஹாய்களுக்காக வெளிப்படுத்தப்பட்டவை

ஒப்புவமையற்றக் கடவுளே! இராஜ்யத்தின் அதிபதியே! இவ்வான்மாக்கள் உமது வான்படைகள். அவர்களுக்கு உதவி புரிந்து, உமது அதிமேலான தெய்வீகச் சேனைகளைக் கொண்டு அவர்களை வெற்றி பெறச் செய்வீராக; அதனால் அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு படையைப்போல் ஆகி, ஆண்டவனின் அன்பின் வழியாகவும் தெய்வீகப் போதனையின் பிரகாசத்தின் வழியாகவும் இந் நாடுகளை வெற்றிகொள்ளக் கூடும்.

கடவுளே! நீர் அவர்களது ஆதரவாளராகவும் அவர்களது உதவியாளராகவும் ஆகி, வனாந்திரங்களிலும், மலைகளிலும், பள்ளத்தாக்கு-களிலும், காடுகளிலும், புல் வெளிகளிலும், கடல்களிலும் அவர்களின் அந்தரங்கத் தோழராவீராக; அதனால் அவர்கள் இராஜ்யத்தின் சக்தியாலும், உமது பரிசுத்த ஆவியின் சுவாசத்தினாலும் கூக்குரலிடக் கூடும்.

மெய்யாகவே, சக்தி மிக்கவரும், வலிமையுடையவரும், சர்வ வல்லவரும் நீரே; விவேகியும், செவிமடுப்பவரும், கண்ணுறுபவரும் நீரே.

#11408
- `Abdu'l-Bahá

 

ஐக்கிய அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளிலுள்ள பஹாய்களுக்காக வெளிப்படுத்தப்பட்டது

எவரேனும் எந்த இடத்திற்காவது போதனை செய்யப் பயணப்படுவாராயின், அவர் இந்தப் பிரார்த்தனையைப் பகலிலும் இரவிலும் அந்நிய நிலங்களில் அவர் பயணம் செய்கையில் ஒப்புவிக்கட்டுமாக.

கடவுளே, என் கடவுளே! நான் உமது மகத்துவமிக்க இராஜ்யத்தின்பால் வசீகரிக்கப்பட்டும், கவரப்பட்டும் இருப்பதை நீர் காண்கின்றீர். மனிதர்களிடையே உமதன்பெனும் நெருப்பினால் தூண்டப்பட்டு, இவ் விசாலமான பரந்த நிலங்களில் உமது இராஜ்யத்தின் முன்னோடியாக, உம்மைத் தவிர மற்றெல்லாவற்றிலும் இருந்து பற்றறுத்து, உம்மையே நம்பி, ஓய்வையும் சுகத்தையும் கைவிட்டு, என் தாயகத்திலிருந்து வெகு தூரமாக, இப்பகுதிகளில் ஒரு நாடோடியாக, மண்ணில் வீழ்ந்த ஓர் அந்நியனாக, உமது மேன்மை படுத்தப்பட்ட வாசலில் பணிவாக, உமது எல்லாம் வல்ல மேன்மை எனும் சுவர்க்கத்தின்பால் தாழ்மையுடன், நடு இரவிலும் வைகறையிலும் உம்மை இறைஞ்சி வேண்டி, காலை வேளையிலும் அந்திச்சாய்விலும், உமது சமயத்திற்குச் சேவை செய்திடவும், உமது போதனைகளை அயல்நாடுகளில் பரப்புவதிலும், கிழக்கு, மேற்கு அனைத்திலும் உமது திருமொழியை மேன்மைப்படுத்திடவும், எனக்குக் கருணைகூர்ந்து உதவுமாறு, உம்மைக் கெஞ்சி பிரார்த்திக்கின்றேன்.

பிரபுவே! என் முதுகைப் பலப்படுத்துவீராக, முழு முயற்சியோடு உமக்கு ஊழியம் செய்ய என்னை வலுப்படுத்துவீராக; இந்த நிலங்களில் என்னை தனியொருவனாகவும் துணையில்லாமலும் விட்டுவிடாதீர்.

பிரபுவே! எனது தனிமையில் உம்மோடு தொடர்பு கொள்ள எனக்கு வாய்ப்பளிப்பீராக; இந்த அந்நிய நிலங்களில் எனக்குத் துணைவனாக இருப்பீராக.

மெய்யாகவே, உமக்கு விருப்பமான எவர் ஒருவரையும் நீர் விரும்புகின்றவற்றில் உறுதிபடுத்துபவர் நீரே. மெய்யாகவே சர்வ-வலிமையுள்ளவரும், சர்வபலம் பொருந்தியவரும் நீரே ஆவீர்.

#11409
- `Abdu'l-Bahá

 

ஐக்கிய அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளிலுள்ள பஹாய்களுக்காக வெளிப்படுத்தப்பட்டது

போதனை செய்வதற்காக மலை, பாலைவனம், நிலம் கடல் போன்ற வெவ்வேறு பகுதிகளுக்குப் பயணம் செய்பவோர் இப்பிரார்த்தனையைக் கூறட்டும்:

கடவுளே! கடவுளே! உமது உயிரினங்கள் முன் எனது பலவீனத்தையும், தாழ்வையும் பணிவையும் நீர் காண்கின்றீர்; இருப்பினும், உமது சக்தியையும் வலிமையையும் எதிர்பார்த்து, நான் உம்மீது நம்பிக்கை வைத்து, உமது பலம்பொருந்திய ஊழியர்களின் மத்தியில் உமது போதனைகளை மேம்படுத்திட எழுந்துள்ளேன்.

பிரபுவே! சிரகொடிந்த ஒரு பறவையான நான், உமது எல்லையில்லா வானத்தில் உயரப் பறந்திட ஆவல் கொண்டுள்ளேன். உமது தெய்வாதீனம், கிருபை, உமது உறுதிப்பாடு, உதவி ஆகியவற்றின் வாயிலாகவலல்லாது எங்ஙகனம் நான் இதைச் செய்திட இயலும்.

பிரபுவே! எனது பலவீனம் மீது பரிவு காட்டுவீராக; உமது சக்தியைக் கொண்டு என்னை பலப்படுத்துவீராக. பிரபுவே! எனது வலுவின்மை மீது பரிவு காட்டி, உமது வலிமை, மாட்சிமை ஆகியவற்றின் வாயிலாக எனக்கு உதவிடுவீராக.

பிரபுவே! பரிசுத்த ஆவியின் மூச்சு மிக வலுவற்ற ஜீவனை உறுதி செய்திடுமாயின், தான் அவல்கொண்ட அனைத்தையும் அடைந்து, தான் விரும்பிய எதனையும் அவன் பெற்றிடுவான். மெய்யாகவே, கடந்த காலங்களில் நீர் உமது ஊழியர்களுக்கு உதவிப் புரிந்துள்ளீர்கள்; அவர்கள் உமது உயிரினங்களுள் மிக வலுவற்றவர்களாக இருப்பினும், உமது ஊழியர்களுள் மிகத் தாழ்ந்தவர்களாக இருப்பினும், உலகில் வாழ்ந்தவர்களுள் மிக அற்பமானவர்களாக இருப்பினும், உமது ஒப்புதல், ஆற்றல் ஆகியவை வாயிலாக அவர்கள் உம் மக்களிலேயே மிகப் போற்றத்தக்கவர்களுக்கு மேலாகவும், மனிதர்களுள் மிக உன்னதமானவர்களுக்கும் மேலாகவும் முதலிடத்தை அடைந்துள்ளனர். முன்னர் விட்டிற் பூச்சாக இருந்த அவர்கள், உமது அருட்கொடையினாலும், உமது கருணையின் வாயிலாகவும் அவர்கள் அரசு வல்லூறாக ஆகினர்; முன்னர் ஓடைகளாக இருந்த அவர்கள், கடல்களாக ஆகினர், உமது அதிபெரும் தயையின் வாயிலாக, அவர்கள் வழிகாட்டல் எனும் தொடுவானத்தின் மீது பிரகாசிக்கும் விண்மீன்களாக ஆகினர், இறவாமை எனும் ரோஜா தோட்டங்களில் பாடும் பறவைகளாக ஆகினர்; அறிவு, விவேகம் எனும் காடுகளில் கர்ஜிக்கும் சிங்கங்களாக ஆகினர்; வாழ்வென்னும் சமுத்திரங்களில் நீந்திடும் திமிங்கிலங்களாக ஆகினர்.

மெய்யாகவே, நீரே அருளிரக்கமுடையவர், சக்திமிக்கவர், வலிமைமிக்கவர், இரக்க-முள்ளோர்களுள் அதி இரக்கமுடையவர் ஆவீர்.

#11410
- `Abdu'l-Bahá

 

ஐக்கிய அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளிலுள்ள பஹாய்களுக்காக வெளிப்படுத்தப்பட்டது

கடவுளே! என் கடவுளே! எல்லாப் பிரதேசங்களையும் காரிருள் சூழ்ந்திருப்பதை நீர் காண்கின்றீர், எல்லா நாடுகளும் உடன்பாடின்மை என்னும் தீப்பிழம்பினால் பற்றி எரிகின்றன; பூமியின் கிழக்கிலும் அதன் மேற்கிலும் போர், படுகொலை என்னும் தீ கொழுந்து விட்டு எரிகின்றது. இரத்தம் சிந்தப்படுகின்றது, பிணங்கள் எங்கும் பரவிக் கிடக்கின்றன, தலைகள் துண்டிக்கப்பட்டுப் போர்க்கள மண்ணில் வீழ்கின்றன.

பிரபுவே! அறியாமையில் இருக்கும் இவர்கள்மீது இரக்கங் காட்டுவீராக, மன்னிப்பு, பிழை பொறுத்தல் என்னும் கண்ணால் அவர்களை நோக்குவீராக. இத்தீயினை அணைத்திடுவீராக; அதனால் தொடுவானத்தை மூடி மறைத்துள்ள இருண்ட மேகங்கள் கலைக்கப்படக்கூடும், மெய்ம்மைக் கதிரவன் இணக்கம் எனும் ஒளிக் கதிர்களைக் கொண்டு பிரகாசித்திடக் கூடும், இக்கடும் இருள் அகற்றப்பட்டு தேசங்கள் எல்லாம் சமாதான ஒளிகளால் பிரகாசிக்கக் கூடும்.

பிரபுவே! கடும் வெறுப்பு, பகைமை என்னும் கடலின் ஆழத்திலிருந்து அவர்களை மீட்டு, இவ்வூடுருவ இயலா இருளிலிருந்து அவர்களை விடுவிப்பீராக; அவர்களது இதயங்களை ஒன்றுபடுத்தி, அவர்களின் கண்களைச் சமாதானம், இணக்கம் என்னும் ஒளியினைக் கொண்டு பிரகாசிக்கச் செய்வீராக. போர், இரத்தம் சிந்தல் எனும் ஆழத்திலிருந்து அவர்களைக் காப்பாற்றி, பிழையெனும் இருளிலிருந்து அவர்களை விழித்தெழச் செய்வீராக. அவர்களது கண்களிலிருக்கும் திரையை அகற்றி, வழிகாட்டுதல் என்னும் ஒளியினால் அவர்களின் இதயங்களைத் தெளிவுப்படுத்துவீராக. உமது மென்கருணை, இரக்கம் ஆகியவற்றின் மூலம் அவர்களை நடத்தி, வலியவர்களின் அவயவங்களை நடுக்கமுறச் செய்திடும் உமது நீதி, உக்கிரம் ஆகியவற்றின்வழி அவர்களை நடத்தாதிருப்பீராக.

பிரபுவே! மெய்யாகவே போர்கள் நீடித்துள்ளன, மனவேதனைகளும் கவலைகளும் பெரிதும் அதிகரித்துள்ளன, ஒவ்வொரு வளமான பிரதேசமும் பாழ்படுத்தப்பட்டுக் கிடக்கின்றது.

பிரபுவே! நெஞ்சங்கள் துயருற்றிருக்கின்றன; ஆன்மாக்கள் கடும் மனவேதனையில் இருக்கின்றன. இப்பரிதாபத்திற்குரிய ஆன்மாக்களின் மீது கருணை காட்டுவீராக; அவர்களை உமது ஆசைகளின் தகாத செயல்களுக்கு விட்டு விடாதீர்!

பிரபுவே! அவர்களின் முகங்கள் வழிகாட்டுதல் எனும் ஒளிக் கதிர்களினால் பிரகாசமடைந்து, உலகப் பற்றினைத் துறந்து, உமது நினைவையும், புகழையும் எடுத்தியம்பி, இப்புனித நறுமணத்தினை உமது தேசங்கள் முழுவதிலும் பரவச் செய்திடும் பணிவான, கீழ்ப்படியுந் தன்மையுடைய ஆன்மாக்களை மனித இனத்தின் மத்தியில் அனுப்பியருள்வீராக.

பிரபுவே! உமது அன்பின் அதிவலிமைமிகு அடையாளத்தின் மூலமாக அவர்களின் முதுகினை வலுப்பெறச் செய்வீராக; அவர்களது இடைகளை உறுதியடையச் செய்து அவர்களின் நெஞ்சங்களைப் பரவசம் அடையச் செய்வீராக.

பிரபுவே! மெய்யாகவே, அவர்கள் பலவீனர்கள், நீரே சக்திமிக்கவர், வல்லவர்; அவர்கள் ஆற்றலற்றவர்கள், உதவுபவரும், கருணை-மிக்கவரும் நீரே.

பிரபுவே! கிளர்ச்சி என்னும் சமுத்திரம் பொங்கி யெழுகின்றது, எல்லாப் பிரதேசங்களையும் தழுவியுள்ள உமது எல்லையற்ற அருளின்றி இச்சூறாவளிகள் தணிக்கப்பட மாட்டா!

பிரபுவே! மெய்யாகவே இம்மனிதர்கள் வெறியுணர்ச்சி என்னும் பாதாளத்தில் கிடக்கின்றனர், உமது எல்லையற்ற வள்ளன்-மையைத் தவிர வேறெதுவுமே அவர்களைக் காப்பாற்ற இயலாது.

பிரபுவே! துர் ஆசைகள் என்னும் இருளை அகற்றி, நாடுகள் அனைத்தையும் விரைவிலேயே ஒளி பெறச் செய்திடக் கூடிய உமது அன்பெனும் தீபத்தினால், இதயங்களைப் பிரகாசிக்கச் செய்வீராக. மேலும், உமது அழகின் மீதான அன்பின் பொருட்டும், உமது நறுமணங்களைப் பரப்புவதற்காகவும் உமது போதனைகளைப் பிரகடனம் செய்வதற்காகவும், தங்கள் தாய் நாடுகளையும், குடும்பங்களையும், குழந்தை- களையும் விட்டு, அயல்நாடுகளுக்குப் பயணம் செய்திடும் அந்நம்பிக்கையாளர்களை உறுதிப்படுத்துவீராக.

தனிமையில் நீர் அவர்களுக்குத் தோழனாகவும், முன்பின் அறியா நிலங்களில் அவர்களின் உதவியாளராகவும், அவர்களின் துக்கத்தைப் போக்குபவராகவும், அவர்களின் பேரிடரில் ஆறுதல் அளிப்பவராகவும் ஆவீராக. அவர்களின் தாகத்திற்குப் புத்துயிரளிக்கும் ஒரு மிடறு நீராகவும், அவர்களின் பிணிகளைக் குணப்படுத்துபவராகவும், அவர்களின் இதயங்களின் பேரார்வ வெந்தனலுக்கு நோயகற்றும் களிம்பாகவும் ஆவீராக.

மெய்யாகவே, நீரே அதி தாராள குணமுடையவர், மிகுதியான அருளுக்குப் பிரபுவானவர், மேலும், நீரே இரக்கமிக்கவர், கருணையாளர்.

#11411
- `Abdu'l-Bahá

 

வடகிழக்கு மாநிலங்களிலுள்ள பஹாய்களுக்காக வெளிப்படுத்தப்பட்டது

கீழ்க் காணப்படும் பணிவான வேண்டுதல் போதகர்களாலும் நண்பர்களாலும் தினசரி வாசிக்கப்பட வேண்டும்.

கருணைமிக்கப் பிரபுவே! வழிகாட்டுதலெனும் நெடுஞ்சாலையை எங்களுக்குக் காட்டியமைக்கும், இராஜ்யத்தின் கதவுகளைத் திறந்தமைக்கும், மெய்ம்மைச் சூரியனின் வாயிலாக உம்மை அவதரித்துக் கொண்டதற்கும் நீர் போற்றப்படுவீராக. பார்வையற்றோருக்கு நீர் கண்கள் தந்துள்ளீர்; செவியற்றோருக்கு நீர் செவிப்புலனை வளங்கியுள்ளீர்; இறந்தோரைத் நீர் உயிர்பித்துள்ளீர்; ஏழையை நீர் செல்வந்தனாக்கியுள்ளீர்; வழி தவறியோருக்கு நீர் வழிகாட்டியுள்ளீர்; தாகம் கொண்டவர்களை வழிகாட்டுதல் எனும் ஊற்றுக்கு நீர் வழிகாட்டியுள்ளீர்; தாகம் கொண்ட மீனை மெய்மை என்னும் சமுத்திரத்தை அடைந்திடச் செய்துள்ளீர்; உலாவும் பறவைகளைத் உமது தயை எனும் ரோஜா வனத்திற்கு வரவேற்றுள்ளீர்.

சக்திவாய்ந்தவரே! நாங்கள் உமது சேவகர்களும் எளியோர்களும் ஆவோம்; நாங்கள் தூர விலகி இருந்து உமது அண்மையை நாடுகிறோம், உமது ஊற்றின் நீருக்காகத் தாகம் கொண்டுள்ளோம், நோயுற்று உமது குணப்படுத்துதலுக்காக ஆவல்கொண்டுமுள்ளோம். உமது பாதையில் நாங்கள் நடந்து செல்கின்றோம், உமது நறுமணத்தைப் பரப்பி, அதனால் எல்லா ஆன்மாக்களும்: “இறைவா, நேர்வழியை நோக்கி எங்களுக்கு வழிகாட்டுவீராக” எனும் கூக்குரலை எழுப்பிடக் கூடும் என்பதைவிட எங்களுக்கு வேறெந்த ஆவலும் இல்லை. ஒளியைக் காண்பதற்காக அவர்களின் கண்கள் திறக்கப்படுமாக, அறிவின்மை எனும் இருளிலிருந்து அவர்கள் விடுவிக்கப்- படுவார்களாக. உமது வழிகாட்டுதலெனும் ஒளியைச் சுற்றி அவர்கள் ஒன்றுகூடுவார்களாக. தனக்கென பங்கு இல்லாத ஒவ்வொருவரும் ஒரு பங்கினைப் பெறுவாராக. இல்லாதார் உமது இரகசியங்களைப் பாதுகாப்போராவார்களாக.

சர்வவல்லமை பொருந்தியவரே! மன்னித்-தருளும் பார்வையைக் கொண்டு எங்களை நோக்கிடுவீராக. தெய்வீக உறுதிப்படுத்தலை எங்களுக்கு அளிப்பீராக. பரிசுத்த ஆவியின் சுவாசங்களை எங்கள் மீது பொழிவீராக. அதனால் உமது சேவையில் நாங்கள் உதவப்பட்டும், உமது வழிகாட்டுதலெனும் ஒளியைக் கொண்டு பிரகாசமான நட்சத்திரங்களைப் போன்று, இந்த நகரங்களில் நாங்கள் பிரகாசிகக்கூடும்.

மெய்யாகவே, சக்திவாய்ந்தவரும், வலிமை-யுள்ளவரும், ஞானியும், கண்ணுறுபவரும் நீரே ஆவீர்.

#11412
- `Abdu'l-Bahá

 

தெற்கு மாநிலங்களிலுள்ள பஹாய்களுக்காக வெளிப்படுத்தப்பட்டது

இந்த நாடுகளிலுள்ள நகரங்கள், கிராமங்கள் மற்றும் சிற்றூர்களின் வழி பயணம் செய்து, இறைவனின் நறுமணங்களைப் பரப்புவதில் ஈடுபட்டிருக்கும் ஒவ்வோர் ஆன்மாவும் இந்தப் பிரார்த்தனையை ஒவ்வொரு காலையிலும் வாசித்திட வேண்டும்.

என் கடவுளே! என் கடவுளே! என் எளிமையிலும் வலிமையின்மையிலும், அதி பெரும் பணியாகிய, உமது திருமொழியை மக்களிடத்தில் உயர்த்துவதில் உறுதியாகவும், உமது போதனைகளை உமது மக்களிடையே பரப்புவதிலும் நான் ஈடுபட்டிருப்பதை நீர் காண்கின்றீர்.

பரிசுத்த ஆவியின் சுவாசத்தைக் கொண்டு நீர் எமக்கு உதவாவிடில், உமது புகழ்வாய்ந்த இராஜ்யத்தின் சேனைகளைக் கொண்டு எனக்கு உதவாவிடில், தன்னிச்சையாக ஒரு கொசுவைக் கழுகாக மாற்றக் கூடிய, ஒரு துளி நீரை அருவிகளாகவும் கடல்களாகவும் மாற்றவல்ல, ஓர் அணுவை ஒளிகளாகவும் சூரியன்களாகவும் மாற்றவல்ல உந்தன் உறுதிப்பாடுகளை என் மீது பொழியாவிடில் நான் எவ்வாறு வெற்றிபெற இயலும்? என் பிரபுவே! உந்தன் வெற்றிகரமான, திறன்பாடும் மிக்க வல்லமையைக் கொண்டு எனக்கு உதவிடுவீராக; அதனால் உந்தன் புகழையும் நற்பண்புகளையும் எல்லா மக்களிடையே எனது நா உச்சரித்திடக் கூடும், மேலும் உந்தன் அன்பு மற்றும் அறிவு எனும் மதுரசத்தினால் என் ஆன்மா பொங்கி வழிந்திடக்கூடும்.

சர்வ வல்லமை பொருந்தியவரும், நீர் விரும்பிய யாவற்றையும் செயல்படுத்துகின்றவரும் நீரே ஆவீர்.

#11413
- `Abdu'l-Bahá

 

மத்திய மாநிலங்களிலுள்ள பஹாய்களுக்காகவெளிப்படுத்தப்பட்டது

இறைவனின் நறுமணங்களைப் பரப்புவோர் ஒவ்வொரு காளை வேளையிலும் இப்பிரார்த்தனையை வாசிக்கட்டுமாக.

என் பிரபுவே, எனதாண்டவரே! உமது இராஜ்யத்தின் பெருஞ்சாலையை நோக்கி என்னை வழிநடத்தியதற்கும், இந்த நேரான, நீன்ட பாதையில் என்னை நடக்கச் செய்ததற்கும், உமது ஒளியின் பிரகாசங்களைக் கண்ணுறுவதற்காக என் கண்களைத் தூய்மைப்படுத்தியற்கும், இரகசியங்கள் இராஜ்யத்திலிருந்து தோன்றும் புனிதத் தன்மை என்னும் பறவைகளின் கீதங்களுக்கு என்னைச் செவிசாய்த்திட வைத்ததற்காகவும், நேர்மைமிக்கோரின் மத்தியில் உமது அன்பின்பால் என் இதயத்தை ஈர்க்கச் செய்தமைக்கும் புகழும் நன்றியும் உம்மைச் சார்ந்திடுமாக.

பிரபுவே, பரிசுத்த ஆவியினைக் கொண்டு என்னை உறுதிப்படுத்துவீராக, அதனால் நான் எல்லா நாடுகளிடையிலும் உமது நாமத்தைதின் பேரில் அறைகூவலிட இயலும், மற்றும் உமது இராஜ்யம் தோன்றியுள்ளது என்னும் நற்செய்திகளை மனித இனத்தினிடையே வழங்கிட இயலும்.

பிரபுவே! நான் வலுவற்றிருக்கின்றேன், உமது சக்தியையும் வலிமையையும் கொண்டு என்னைப் பலப்படுத்துவீராக. எனது நா தடுமாறுகின்றது, உம்மைப் போற்றவும் புகழவும் எனக்கு ஆற்றலளிப்பீராக. நான் தாழ்ந்தவன், உமது இராஜ்யத்தினுள் நுழைந்திடச் செய்வதன் மூலம் எனக்கு மதிப்பளிப்பீராக. நான் தூர விலகியுள்ளேன், என்னை உமது கருணை என்னும் வாசலை அடையச் செய்வீராக.

பிரபுவே! என்னை ஒரு பிரகாசமான ஒளிவிளக்காகவும், ஒளிவீசும் ஒரு விண்மீனாகவும், கனிகள் நிறைந்ததும், எல்லாப் பகுதிகளுக்கும் நிழல்தரும் கிளைகளைக் கொண்டுள்ளதுமான ஒரு புனித விருட்சமாக்குவீராக. மெய்யாகவே, வல்லமை பொருந்தியவரும், சக்திவாய்ந்தவரும், கட்டுப்படுத்தவியலாதவரும் நீரே ஆவீர்.

#11414
- `Abdu'l-Bahá

 

மேற்குமாநிலங்களிலுள்ள பஹாய்களுக்காக வெளிப்படுத்தப்பட்டது

பின்வரும் பிரார்த்தனை ஒவ்வொரு நாளும் வாசிக்கப்பட வேண்டும்:

கடவுளே, கடவுளே, இது ஒரு சிறகொடிந்த பறவை; அவன் பறக்கும் வேகம் மிக மெதுவாக உள்ளது — அவனுக்கு உதவிடுவீராக, அதனால் அவன் வளம், விமோசனம் என்னும் சிகரத்தை நோக்கிப் பறக்கவும், உமது எல்லையற்ற பரவெளியில் அதிமிகு மகிழ்ச்சியுடனும் உவகையுடனும் சிறகடித்து உயரவும், உமது அதி உயரிய நாமத்தினால் தனது இன்னிசையினை எல்லாப் பகுதிகளிலும் எழுப்பவும் உதவி புரிவீராக. இவ்வழைப்பால் செவிகளை மகிழ்வுறச் செய்து, வழிகாட்டுதல் என்னும் அடையாளங்களைக் கண்ணுறுவதன்வழி கண்களை ஒளிபெறச் செய்வீராக.

பிரபுவே! நான் ஒருவனாகவும் தனியனாகவும், தாழ்ந்தவனாகவும் இருக்கிறேன். எனக்கு, உம்மையல்லாது ஆதரவு வேறில்லை, உம்மைத் தவிர உதவுபவர் எவருமிலர், உம்மையல்லாது பேணி வளர்ப்பவர் யாருமிலர். உந்தன் சேவையில் என்னை உறுதிப்படுத்துவீராக, உமது தேவதூதர் படையினைக் கொண்டு எனக்கு உதவி புரிவீராக, உமது போதனைகளைப் பரப்புவதில் என்னை வெற்றி பெறச்செய்து, உமது உயிரினங்கள் மத்தியில் என்னை உமது விவேகத்தினைத் துணிவுடன் எடுத்துரைத்திட அனுமதிப்பீராக. மெய்யாகவே, நீரே நலிந்தோரின் உதவியாளரும் வலுக்குறைந்தோரின் பாதுகாப்பாளரும் ஆவீர், மெய்யாகவே, நீரே ஆற்றல் மிக்கவர், வல்லவர், நிபந்தனைக்குட்படாதவர்.

#11415
- `Abdu'l-Bahá

 

கனடாவிலுள்ள பஹாய்களுக்காக வெளிப்படுத்தப்பட்டது

என் கடவுளே, புகழ் உமக்கே உரியதாகட்டும்! இவர்கள்தாம் உமது கருணை என்னும் நறுமணங்களினால் கவரப்பட்ட உமது ஊழியர்கள், உமது தனித்தன்மை என்னும் விருட்சத்தினுள் எரிகின்ற நெருப்பினால் தூண்டப்பட்டவர்கள்; அவர்களின் கண்கள் உமது ஒருமைத்தன்மை என்னும் சைனாயில் பிரகாசிக்கும் விளக்கின் பேரொளியைக் கண்ணுற்றதனால் ஒளிர்கின்றன.

பிரபுவே! உமது மக்களிடையே உம்மைப் பற்றிப் பேசச் செய்திட அவர்களின் நாவுகளைத் தளரச் செய்வீராக, உமது அருள், அன்புக் கருணை ஆகியவற்றின் வாயிலாகவும் அவர்கள் உமது புகழைப் பாடிடச் செய்வீராக. உமது தேவாகணங்களைக் கொண்டு அவர்களுக்கு உதவிபுரிவீராக, உமக்குச் சேவை புரிவதற்காக அவர்களை ஆயத்தமாக்குவீராக, மற்றும் உமது படைப்பினங்களிடையே அவர்களை உமது வழிகாட்டுதல் என்னும் அடையாளங்களாக ஆக்குவீராக.

மெய்யாகவே, சர்வ சக்திவாய்ந்தவரும், அதி மேன்மை மிக்கவரும், என்றும் மன்னித்தருள்-பவரும், சர்வகருணையாளரும் நீரே ஆவீர்.

#11416
- `Abdu'l-Bahá

 

கனடாவிலுள்ள பஹாய்களுக்காக வெளிப்படுத்தப்பட்டது

கடவுளின் நறுமணங்களைப் பரப்புவோர், ஒவ்வொரு காலைவேளையிலும் இப்பிரார்த்தனையை ஒப்புவிக்க வேண்டும்.

கடவுளே, என் கடவுளே! இந்த பலமற்றவன் தெய்வீக வலிமைக்காக மன்றாடுவதையும், இந்த வறியவன் உமது விண்ணுலகச் செல்வங்களுக்காகக் கெஞ்சுவாதையும், இந்தத் தாகமுற்றவன் மரணமிலா வாழ்வென்னும் ஊற்றுக்காக ஏங்குவதையும், இந்த நோயுற்றவன் நீர் உம்மால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களுக்காக உமது அளவற்ற கருணையின் வாயிலாக உமது வாக்களிக்கப்பட்ட குணப்படுத்துதலுக்காகப் பேராவல் கொண்டிருப்பதை நீர் கண்ணுறுகின்றீர்.

பிரபுவே! உம்மைத் தவிர எனக்கு உதவுபவர் வேறிலர் , உம்மைத் தவிர புகலிடம் எதுவுமில்லை, உம்மை மட்டுமின்றி ஆதரவாளர் எவருமிலர். உமது புனித நறுமணங்களைப் பரப்புவதற்கும், உமது மக்களிடையே மிகச் சிறந்தவர்களுக்கு உமது போதனைகளை எங்கும் பரப்புவதற்கும் உமது தேவதூதர்களைக் கொண்டு எனக்கு உதவிருவீராக.

என் பிரபுவே! உம்மைத் தவிர வேறெல்லாவற்றிலிருந்தும் என்னைப் பற்றறுத்-திருக்கச் செய்வீராக, உமது தயை என்னும் விளிம்பினை இறுகப் பற்றிக்கொள்ளச் செய்வீராக, உமது சமயத்தின்பால் முழு பக்தியுள்ளவனாய் இருந்திடச் செய்வீராக, உமது அன்பில் உறுதியாகவும் நிலையாகவும் இருக்கச் செய்வீராக, மற்றும் நீர் உமது திருநூலில் விதித்துள்ளவற்றை நிறைவேற்ற உதவிடுவீராக.

மெய்யாகவே, சக்திவாய்ந்தவரும், வலிமை-மிக்கவரும், எல்லாம் வல்லவரும் நீரே ஆவீர்.

#11417
- `Abdu'l-Bahá

 

நெருப்பு நிருபம்

அதி தொன்மையும், அதி மேன்மையும் வாய்ந்த இறைவனின் பெயரால்.

உண்மையாகவே, நேர்மையாளரின் இதயங்கள், பிரிவெனும் நெருப்பினில் எரிக்கப்படுகின்றன: உலகங்களின் நேசரே! உமது வதனத்தின் பளிச்சிடும் ஒளி எங்கே?

உமதருகில் உள்ளோர் அழிவெனும் இருளில் கைவிடப்பட்டுள்ளனர்: உலகங்களின் ஆவலே! மீண்டும் ஐக்கியமாதல் என்னும் உமது அதிகாலை எங்கே?

உமது தேர்ந்தெடுக்கப்பட்டோரின் உடல்கள் தொலைவிலுள்ள மணல் வெளியில் துடித்துக் கொண்டிருக்கின்றன: உலகங்களை மயக்குபவரே! உமது முன்னிலை என்னும் சமுத்திரம் எங்கே?

உமது அருள், உதாரகுணம், என்னும் விண்ணுலகை நோக்கி ஏங்கும் கரங்கள் உயர்த்தப்பட்டுள்ளன: உலகங்களுக்குப் பதிலளிப்பவரே! உமது அருட்கொடை என்னும் மழை எங்கே?

சமய நம்பிக்கையற்றோர், எல்லாத் திசைகளிலிருந்தும், கொடுமை புரிய எழுந்துள்ளனர்: உலகங்களை வென்றவரே!

உமது ஆணையிடும் எழுதுகோலின் நிர்ப்பந்திக்கும் சக்தி எங்கே?

ஒவ்வொரு திசையிலும், நாய்களின் குரைப்பு உரக்க ஒலிக்கின்றது: உலகங்களைத் தண்டிப்பவரே! உமது வலிமையெனும் கானகத்தின் சிங்கம் எங்கே?

மனித இனம் முழுமையையும் குளிர் பற்றிக் கொண்டுள்ளது: உலகங்களின் நெருப்பே! உமது அன்பின் வெம்மை எங்கே?

பேரிடர், அதன் உச்சத்தை அடைந்துவிட்டது: உலகங்களின் மீட்பாளரே, உமது பரிபாலிப்பெனும் அடையாளங்கள் எங்கே?

பெரும்பான்மை மனிதர்களை இருள் சூழ்ந்து கொண்டுள்ளது: உலகங்களின் பொலிவே, உமது பிரகாசத்தின் துலக்கம் எங்கே?

வன்மம் புரிவதில் மனிதர்களின் கழுத்துகள் நீட்டப் பட்டுள்ளன: உலகங்களை அழிப்பவரே, உமது பழி வாங்கிடும் வாள்கள் எங்கே?

இழிவு அதி பாதாளத்தை அடைந்து விட்டது: உலகங்களின் ஒளியே! உமது ஒளியின் சின்னங்கள் எங்கே?

கருணை உருவாகிய உமது நாமத்தை வெளிப்படுத்துபவரைக் கவலைகள் துயருறச் செய்துள்ளன; உலகங்களின் பெருமகிழ்ச்சியே! உமது வெளிப்பாடு என்னும் பகலூற்றின் உவகை எங்கே?

உலக மக்கள் அனைவரையும் மனவேதனை பாதித்துள்ளது; உலகங்களின் உவகையே! உமது மகிழ்ச்சியெனும் விருதுக்கொடிகள் எங்கே?

உமது அடையாளங்களின் உதயபீடம் தீய தூண்டுதல்களினால் மறைக்கப்பட்டுள்ளதை நீர் பார்க்கின்றீர்; உலகங்களின் சக்தியே! உமது வலிமையெனும் விரல்கள் எங்கே?

மனிதர் அனைவரையும் கடுந்தாகம் ஆட்கொண்டுள்ளது. உலகங்களின் கருணையே! உமது வள்ளன்மை என்னும் நதி எங்கே?

மனித இனம் முழுவதையும் பேராசை அடிமைப் படுத்தியுள்ளது; உலகங்களின் பிரபுவே! உமது பற்றின்மையின் திருவுருவம் எங்கே?

இத்தவறிழைக்கப்பட்டோன் நாடு கடத்தப்பட்டுத் தனியனாய் இருப்பதை நீர் காண்கின்றீர்; உலகங்களின் அரசரே! உமது ஆணையெனும் சுவர்க்கத்தின் சேனைகள் எங்கே?

நான், அந்நிய நிலந்தனில் ஆதரவற்றவனாய்க் கைவிடப்பட்டுள்ளேன்; உலகங்களின் நம்பிக்கையே! உமது விசுவாசத்தின் சின்னங்கள் எங்கே ?

மனிதர்கள் அனைவரையும் மரணவேதனைகள் பற்றிக்கொண்டுள்ளன; உலகங்களின் உயிரே! உமது நித்திய வாழ்வெனும் சமுத்திரத்தின் அலையெழுச்சி எங்கே?

சாத்தானின் குசுகுசுப்புகள் ஒவ்வொரு சிருஷ்டிக்கும் ஓதப்பட்டுள்ளன; உலகங்களின் ஒளியே! உமது நெருப்பெனும் எரி நட்சத்திரம் எங்கே?

உணர்ச்சிப் போதை மனித இனத்தின் பெரும்பான்மையினரை நெறி தவறச் செய்துள்ளது; உலகங்களின் ஆவலே! தூய்மை என்னும் பகலூற்று எங்கே?

நீர், இத்தீங்கிழைக்கப்பட்டோன், ஸிரியாவின் மக்கள் மத்தியில் கொடுங்கோன்மை என்னும் திரையினில் மறைக்கப்பட்டிருப்பதைப் பார்க்கின்றீர்; உலகங்களின் ஒளியே! உமது உதய ஒளியின் பிரகாசம் எங்கே?

நான் பேசுவதிலிருந்து தடைசெய்யப்-பட்டிருப்பதை நீர் காண்கின்றீர்; உலகங்களின் இராப்பாடியே! பின், உமது இன்னிசைகள் உதயமாவது எங்கே?

மக்களில் பெரும்பான்மையினர் கற்பனை-களிலும், வீண் கனவுகளிலும், மூழ்கிக் கிடக்கின்றனர்; உலகங்களின் உறுதிமொழியே! உமது உறுதியினை விளக்குபவர்கள் எங்கே?

துன்பக் கடலினில் பஹா அமிழ்ந்து கிடக்கின்றார்; உலகங்களின் இரட்சகரே! உமது இரட்சிப்பு என்னும் கலம் எங்கே?

நீர், உமது திருவாக்கு எனும் பகலூற்றினைப் படைப்பின் இருளில் காண்கின்றீர். உலகங்களுக்கு ஒளி கொடுப்பவரே! உமது அருள் என்னும் சுவர்க்கத்தின் சூரியன் எங்கே?

உண்மை, தூய்மை, விசுவாசம், கௌரவம் எனும் விளக்குகள் அணைக்கப்பட்டுவிட்டன; உலகங்களை இயக்குபவரே! உமது பழி தீர்க்கும் உக்கிரத்தின் அடையாளங்கள் எங்கே?

உம் சார்பாக எவராவது போராடுவதையோ, உமது அன்பின் பாதையில் எவராவது அவருக்கு நேர்ந்தவற்றைச் சிந்திப்பதையோ உம்மால் காண முடிகின்றதா? உலகங்களின் நேசரே, எனது எழுதுகோல் இப்பொழுது அசைவிழந்துள்ளது.

தெய்வீக விருட்சம் எனும் மரத்தின் கிளைகள், வேகமாய்த் தாக்கிடும் விதி என்னும் புயலினால் முறிந்து கிடக்கின்றன: உலகங்களின் வீரரே! உமது பரிபாலிப்பெனும் விருதுக்கொடி எங்கே?

இவ் வதனம், அவதூறு எனும் புழுதியில் மறைக்கப்பட்டிருக்கின்றது: உலகங்களின் கருணையே! உமது இரக்கம் என்னும் தென்றல் எங்கே?

தூய்மை எனும் அங்கி, வஞ்சக மனிதர்களால் கறைப்படுத்தப்பட்டுள்ளது: உலகங்களின் அலங்கரிப்பாளரே! உமது புனிதத்தன்மை எனும் ஆடை எங்கே?

மனிதனின் கரங்கள் ஆற்றியவற்றினால் கருணை என்னும் கடல் அசைவற்றிருக்கின்றது: உலகங்களின் ஆவலே! உமது வள்ளன்மை எனும் அலைகள் எங்கே?

உமது பகைவர்களின் கொடுங்கோன்மையினால் தெய்வீக முன்னிலைக்கு வழிகாட்டிடும் கதவு பூட்டப்பட்டுள்ளது: உலகங்களைத் திறப்பவரே! உமது அருள்பாலிப்பு என்னும் திறவுகோல் எங்கே?

துரோகம் என்னும் நச்சுக் காற்றினால் இலைகள் மஞ்சளாகி விட்டுள்ளன: உலகங்களுக்கு வழங்குபவரே! உமது அருட்கொடை எனும் மேகங்களின் அடை மழை எங்கே?

பாவம் என்னும் தூசியினால் பிரபஞ்சமே இருளடைந்துள்ளது; உலகங்களின் மன்னிப்பாளரே! உமது மன்னிப்பு எனும் தென்றல் எங்கே?

இவ்விளைஞன், தன்னந் தனியனாய் இப்பாழ் நிலத்தில் இருக்கின்றான். உலகங்களின் கொடையாளியே! உமது வானுலகக் கிருபை என்னும் மழை எங்கே?

அதி மேன்மையான எழுதுகோலே, நித்திய இராஜ்யத்தினில், யாம், உமது அதி இனிய அழைப்பினைச் செவிமடுத்தோம்: உலகங்களால் தவறிழைக்கப்பட்டோனே! உன்னதத்தின் நா மொழிவதன்பால் செவி சாய்ப்பீராக.

உலகங்களின் விளக்கவுரையாளரே! குளிர் என்ற ஒன்றில்லை எனில், எங்ஙனம் உமது வார்த்தைகள் எனும் வெப்பம் நிலைபெற்றிட இயலும்?

உலகங்களின் ஒளியே! பேராபத்து என்பது இல்லையெனில், எங்ஙனம் உமது பொறுமை என்னும் சூரியன் பிரகாசிக்க இயலும்?

உலகங்களின் பொறுமையே! கொடியவர்களின் காரணமாகத் துயருற வேண்டாம். சகித்துக் கொள்வதற்கும், பொறுத்துக் கொள்வதற்குமே நீர் படைக்கப்பட்டீர்.

உலகங்களின் அன்பே! ஒப்பந்தம் எனும் அடிவானத்தில் உமது உதயமும், இறைவன்பால் உமது ஏக்கமும், சூழ்ச்சிக்காரர்கள் மத்தியில் எத்துணை இனிமை மிக்கதாய் இருந்தது.

உலகங்களின் பரவசமே! உம் மூலம்தான் சுதந்திரம் எனும் கொடி, அதி உயரமான சிகரங்களின் உச்சியில் ஊன்றப்பட்டது, அருட்கொடை எனும் கடல் பொங்கி எழுந்தது.

உலகங்களால் நாடு கடத்தப்பட்டவரே, பொறுமையாய் இருப்பீராக. உமது தனிமையினால்தான், ஒருமைத் தன்மை என்னும் சூரியன் பிரகாசித்தது. உமது நாடு கடத்தலினால்தான், ஒற்றுமை எனும் பூமி அலங்கரிக்கப்பட்டது.

உலகங்களின் பெருமையே, இழிவை, மகிமையின் ஆடையாகவும், துன்பத்தை, உமது நெற்றியின் ஆபரணமாகவும், ஆக்கியுள்ளோம்.

உலகங்களின் பாபங்களை மறைப்பவரே, இதயங்கள், வெறுப்பினால் நிரப்பப்பட்டுள்ளன, அதனைக் கவனியாதிருப்பதே உமக்குப் பொருத்தமாகும்.

உலகங்களின் பலிப்பொருளானவரே! வாள்கள் பளிச்சிடும்போது முன்னோக்கிச் செல்வீராக! கணைகள் பாய்ந்திடும் போது, முன்னேறிச் செல்வீராக!

உலகங்களின் புலம்பலைத் தூண்டியவரே, நீர் அழுகின்றீரா, அல்லது நானே அழுவதா? மாறாக, உமது ஆதரவாளர்களின் எண்ணிக்கைக் குறைவிற்காக யாம் கண்ணீர் விடுவதா.

கனலொளிமயமான நேசரே; மெய்யாகவே, யாம், உமது அழைப்பினைச் செவிமடுத்தோம்; இப்பொழுது, பஹாவின் வதனம் கடுந் துன்பமெனும் வெப்பத்தினாலும், உமது ஒளிர்ந்திடும் வார்த்தை எனும் நெருப்பினாலும், பிரகாசிக்கின்றது; மேலும், உலகங்களின் ஆணையாளரே! உமது சித்தத்திற்கிணங்க, இவன், விசுவாசத்துடன், உமது பலிபீடத்தை நோக்கி எழுந்துள்ளான்.

அலி அக்பரே, அதிலிருந்து நீ, எமது பணிவென்னும் நறுமணத்தை நுகரவும், எல்லா உலகங்களின் வழிபாட்டுக்குரியவரான இறைவனது பாதையில் எம்மைச் சுற்றி வளைத்துக் கொண்டுள்ளவற்றைத் தெரிந்து கொள்ளவும் இயலும்.

ஊழியர்கள் யாவரும் இதனை வாசிக்கவும், ஆழ்ந்து சிந்திக்கவும் செய்வராயின், அவர்களின் நாளங்களில் தூண்டப்படும் நெருப்பானது உலகங்களையே பற்றி எரியச் செய்திடும்.

#11449
- Bahá'u'lláh

 

நேர்வு நிருபம்

இந் நிருபம் பஹாவுல்லா, பாப் ஆகியோரின் புண்ணிய ஸ்தலங்களில் வாசிக்கப்படவேண்டும். அவர்களின் ஆண்டு நினைவு நாள்களை நினைவு கூர்வதற்கும், இந் நிருபம் பயன்படுத்தப்படுகின்றது.

பேரழகின் வெளிப்படுத்துதலே, நித்தியத்தின் மன்னரே, மண்ணுலகிலும், விண்ணுலகிலும் உள்ளோர் அனைவருக்கும் பிரபுவானவரே! உமது அதி மேன்மைமிகு தானெனும் தன்மையிலிருந்து உதித்துள்ள புகழ்ச்சியும், உமது ஜோதிமிகு அழகிலிருந்து பிரகாசித்திடும் ஒளியும் உம்மீது இலயித்திடுமாக! உம் மூலமாகவே ஆண்டவனின் இறைமையும் அவரது அரசும், அவரது மகிமையின் மேன்மையும், வெளிப்படுத்தப்பட்டு, பூர்வீக ஒளியின் விடிவெள்ளிகள் உமது மாற்றவியலாத கட்டளையெனும் வானத்தைப் பிரகாசமடையச் செய்து, படைப்புகளின் மீது, அரூபியானவரின் அழகினை வியாபிக்கச் செய்துள்ளீர் என்பதற்கு நான் சாட்சியம் கூறுகின்றேன். உமது எழுதுகோலின் ஒரே அசைவினால் உமது “ஆகு” என்னும் கட்டளை நிறைவேற்றப்பட்டுள்ளது, இறைவனின் மறைந்துள்ள மர்மங்கள் வெளிப்படுத்தப்-பட்டுள்ளன; படைப்புப் பொருள்களெல்லாம் சிருஷ்டிக்கப்பட்டு, வெளிப் படுத்துதல்கள் யாவும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன என்பதற்கு, நான் மேலும் சாட்சியம் பகர்கின்றேன்.

உமது அழகின் வாயிலாக, அன்புக்குப் பாத்திரமானவரின் அழகு வெளிப்படுத்தப்-பட்டுள்ளது என்பதற்கும், உமது வதனத்தின் மூலமாக ஆவலுக்குரியவரான அவரின் வதனம் ஒளிர்வுற்றுள்ளது என்பதற்கும், உம்மிடமிருந்து ஒரே சொல்லினால் நீர் படைப்புப் பொருள்கள் அனைத்திற்கும் இடையே தீர்ப்பளித்து, அதன்மூலம் உந்தன்பால் பக்தி கொண்டோரை, ஒளி என்னும் உச்சத்தை அடையவும், சமய நம்பிக்கையற்றோரை அதிபாதாளத்தில் தள்ளவும் செய்துள்ளீர் என்பதற்கு நான் சாட்சியம் அளிக்கின்றேன்.

உம்மை அறிந்தவர் கடவுளை அறிந்தவர் என்பதற்கும், உமது முன்னிலையை அடைந்தவர் இறைவனின் முன்னிலையை அடைந்தவர் என்பதற்கும், நான் சாட்சியளிக்கின்றேன். உம்மிலும் உமது அடையாளங்களிலும் நம்பிக்கை வைத்து, உமது ஆட்சியின் முன் தன்னைத் தாழ்வுப்படுத்திக் கொண்டு, உம்மைச் சந்திக்கும் பெருமை வழங்கப்பட்டு, உமது சித்தம் என்னும் நல்விருப்பத்தினை அடைந்து, உம்மை வலம் வந்து, உமது அரியாசனத்தின் முன் நிற்பவரின் ஆசி உயர்வானதாகும். உமக்கு எதிராக நடந்தவர்கள், உம்மை நிராகரித்தவர்கள், உமது அடையாளங்களை மறுத்தவர்கள், உமது ஆட்சியை எதிர்த்துப் பேசியவர்கள், உமக்கெதிராக எழுந்துள்ளவர்கள், உமது வதனத்தின்முன் செருக்கை வளரவிட்டவர்கள், உமது சான்றுகளைக் குறித்து வாதிட்டவர்கள், உமது ஆட்சியிலிருந்தும், உமது அரசிலிருந்தும் ஓட்டமெடுத்திட்ட இவர்கள், உமது கட்டளை என்னும் விரல்களினால், உமது புனித நிருபங்களில் பொறிக்கப்பட்டுள்ள சமய நம்பிக்கை அற்றோரது பெயர்களின் எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டுப், பெருந் துயருக்குள்ளாவர்.

என் கடவுளே, என் நேசரே, உமது கருணை எனும் வலது கரத்திலிருந்தும், உமது அன்புப் பரிவிலிருந்தும், உமது தயை என்னும் தெய்வீக மூச்சினை என்பால் மிதந்து வந்திடச் செய்வீராக, அதனால் என்னை, என்னிடமிருந்தும், இவ்வுலகிலிருந்தும் விடுவித்து, உமது முன்னிலை என்னும் அரசவையை அடையச் செய்வீராக. நீர் விரும்பியதைச் செய்திடும் சக்தி படைத்தவர் நீரே. நீர், உண்மையாகவே, அனைத்துப் பொருள்களையும் விட அதி மேன்மையானவராக இருந்து வந்திருக்கின்றீர்.

அவரின் அழகானவரே! இறைவனின் நினைவும், அவரின் புகழ்ச்சியும், கடவுளின் ஒளியும் அவரின் பிரகாசமும், உம் மீது இலயித்திடுமாக. படைப்பின் கண்கள் உம்மைப்போல் தீங்கிழைக்கப்பட்ட ஒருவரைக் கண்டதே இல்லை என்பதற்கு, நான் சாட்சியம் அளிக்கின்றேன். நீர், உமது வாழ்நாள் முழுவதும், கடுந் துன்பம் என்னும் கடலின் ஆழத்தில் அமிழ்ந்திருந்தீர். ஒரு வேளையில் சங்கிலியாலும், விலங்கினாலும் பிணைக்கப்பட்டுக் கிடந்தீர்; மற்றொரு வேளை, பகைவர்களின் வாளேந்திய அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டிருந்தீர். இருந்தும், அவையனைத்திற்கும் மாறாக, நீர், சர்வ ஞானியும், சர்வ விவேகியுமானவரினால் கட்டளை இடப்பட்டிருந்தவற்றை, எல்லா மனிதர்களையும் கடைப்பிடிக்குமாறு விதித்திட்டீர்.

நீர் அனுபவித்திட்டத் தீமைகளுக்காக எனது ஆவி பலியிடப்படுமாக; நீர் தாங்கிக் கொண்ட தொல்லைகளுக்காக எனது ஆன்மா பிணைமீட்பாகுமாக. உம் மூலமாகவும் உமது வதனத்தினின்று தோன்றும் ஒளியினால் பிரகாசமுற்ற முகங்களினாலும், உம் மீதுள்ள அன்பினால், தங்களுக்கு இடப்பட்ட கட்டளைகள் அனைத்தையும் கடைப்பிடித்தவர்கள் மூலமாகவும், உமக்கும், உமது உயிரினங்களுக்குமிடையே தோன்றியுள்ள திரையினை விலக்கி, இவ்வுலகிலும், வருவுலகிலும் உள்ள எல்லா நன்மைகளையும் எனக்களிப்பீராக. நீர், உண்மையாகவே, எல்லாம் வல்லவர், அதி உயர்வானவர், ஒளிமயமானவர், என்றும் மன்னிப்பவர், அதி இரக்கமுடையவர்.

பிரபுவே, எனதாண்டவரே, உமது அதி உயர்வான பட்டங்கள் நிலைத்திருக்கும் வரையிலும், அதி நேர்த்தியான பண்புகள் நீடிக்கும் வரையிலும் இப்புனித விருட்சத்தினையும் அதன் இலைகளையும், அதன் கிளைகளையும் கொப்புகளையும், நடுத்தண்டுகளையும் தளிர்களையும், ஆசீர்வதிப்பீராக. ஆகவே, அதனைத் தாக்குவோரின் விஷமத்திலிருந்தும், கொடுங்கோன்மைப் படைகளிடமிருந்தும் அதனைப் பாதுகாப்பீராக. மெய்யாகவே, நீர், எல்லாம் வல்லவர், அதிசக்திவாய்ந்தவர். பிரபுவே, என் இறைவா, உம்மை அடைந்துள்ள உமது ஊழியர்களையும், பணிப்பெண்களையும், ஆசீர்வதிப்பீராக. நித்திய அருளினைக் கொண்டுள்ள நீர், உண்மையாகவே, வள்ளன்மையே உருவானவர். என்றும் மன்னிப்பவரும், அதி தாராள குணமுடையவருமான இறைவன், உம்மையன்றி வேறிலர்.

#11450
- Bahá'u'lláh

 

புனித மாலுமிக்குரிய நிருபம்

“தெய்வீக மாலுமியின் நிருபத்தினைக் கருத்தூன்றிப் படியுங்கள்; அதனால், நீங்கள், உண்மையை அறிந்துகொள்ளக் கூடும்; மேலும், ஆசீர்வதிக்கப்பெற்ற அழகரானவர் நிகழவிருப்பவற்றை முழுதும் முன்னறிவித்துள்ளார் என்பதைக் கவனமாக எண்ணிப் பார்க்கவும் இயலும். புரிந்து கொள்வோர் எச்சரிக்கையாக இருக்கட்டும்!”

— அப்துல்-பஹா

அவரே கருணையாளரும் நல்லன்பு மிக்கவரும் ஆவார்!

தெய்வீக மாலுமியே! நித்தியம் என்னும் உமது மரக்கலத்தைத், தெய்வீக வான்்படையினருக்கு முன்னால், தோன்றிடச் செய்வீராக;

பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!

அவ்வதிவியப்புக்குரியவர் பெயரில், அதனைத், தொன்மை வாய்ந்தக் கடலின் மீது, பயணத்தைத் தொடங்கச் செய்வீராக.

பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப்படுத்தப் படுவாராக!

அதி மேன்மைமிகு இறைவன் பெயரால், புனித ஆவியானோரை, அதனுள் நுழைய விடுவீராக.

பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!

ஆகவே, நங்கூரக் கயிற்றினை அவிழ்த்து விடுவீராக; அதன்வழி, அது, ஒளி என்னும் சமுத்திரத்தினில் தன் கடற்பயணத்தைத் தொடங்கக் கூடும்.

பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!

அதனால், ஒரு வேளை, அதனில் வசிப்போர், நிரந்தர உலகில், அணிமை எனும் ஓய்விடங்களை சென்றடையக் கூடும்.

பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!

புனிதமிகு செங்கடற்கரையினைச் சென்றடைந்த பின்,

பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!

அவர்களை வெளிவரச் செய்வீராக; அதன்வழி, அவர்கள், புலன்கடந்ததும் காணவியலாததுமான நிலையை அடைந்திடக் கூடும்;

பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!

அந்நிலையில் பிரபுவானவர், அவர்தம் சுடரொளியின் பேரழகினில், அழிவற்ற விருட்சத்தினுள், தோற்றமளித்திட்டார்.

பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!

அதனில், அவரது சமயத்தின் திருவுருவானோர், தங்களைத், தானெனுந் தன்மையிலிருந்தும், உணர்ச்சிகளில் இருந்தும் தூய்மைப் படுத்திக்கொண்டனர்;

பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!

எதனைச் சுற்றி மோஸஸின் பேரழகு என்னும் நிலையான சைனியம் வலம் வருகின்றதோ ;

பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!

அதனில் இறைவனின் திருக்கரம் மாட்சிமைமிகு நெஞ்சத்தினின்று வெளிக் கொணரப் பட்டது;

பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!

சமயத்தின் மரக்கலத்தில் வசிப்போருக்கு எல்லாத் தெய்வீகத் தன்மைகளும் பிரகடனஞ் செய்யப்பட்டிருந்த போதிலும், அது அசைவில்லாமலேயே இருக்கின்றது.

பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!

மாலுமியே! யாம் மர்மத் திரைக்குப் பின்னால் உமக்குப் போதித்தவற்றை மரக்கலத்தினில் இருப்போருக்கும் போதிப்பீராக.

பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!

ஒரு வேளை, அவர்கள், புனித வெண்பனித் தளத்தினில் தங்காதிருக்கக் கூடும்;

பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!

ஆனால், ஒரு வேளை, பிரபுவானவர், ஆவியின் இறக்கை மீது பறந்தெழுந்து, கீழுலகத்தில், போற்றுதலுக்கெல்லாம் மேலாக பெருமைப்-படுத்தியுள்ள ஸ்தானத்தை அடையக் கூடும்;

பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!

பரந்த வெளியிலெல்லாம் பறந்து மீண்டும் ஒன்றிணைதல் என்னும் தனிச்சலுகை பெற்ற பறவைகளைப் போல்,

பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!

ஒளி என்னும் கடல்களில் மறைந்திருக்கும் மர்மங்களை அறிந்திடக் கூடும்.

பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!

அவர்கள் உலகக் கட்டுப்பாடுகளின் வரம்புகளைக் கடந்து சென்று, அத் தெய்வீக வழிகாட்டுதல் என்னும் மையத்தை அடைந்தனர்.

பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!

பிரபுவானவர் அவர்களுக்கென விதித்துள்ள ஸ்தானங்களுக்கும் மேலான நிலைக்குத் தங்களை உயர்த்திக்கொள்ள ஆவல் கொண்டுள்ளனர்.

பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!

அதன் விளைவாக, எரியும் நட்சத்திரம், அவரது முன்னிலை என்னும் இராஜ்யத்தில் உறைவோரை வீசியெறிந்து விட்டது;

பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!

அவர்கள் கண்களுக்குப் புலப்படாத காட்சி மேடையில் எழுப்பப்பட்டக் கம்பீரமானக் குரலைப் பின்னாலிருந்து கேட்டனர்;

பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!

பாதுகாக்கும் தேவதைகளே! கீழுலகத்திலுள்ள அவர்களின் இருப்பிடத்திற்கே அவர்களைத் திருப்பி அனுப்பிடுங்கள்;

பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!

ஏனெனில், விண்ணுலகப் புறாவின் சிறகுகளே அடைந்திராத அக்கோளத்திற்கே உயர்ந்திட அவர்கள் உளங் கொண்டுள்ளனர்;

பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!

அதனால், கற்பனை என்னும் கப்பல் அசைவற்று நிற்கின்றது; அதனைச் சிந்திப்போரின் உள்ளங்களால் அதனைப் புரிந்துகொள்ள இயலாது.”

பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!

அதன் பேரில், விண்ணுலக் கன்னி தனது மேன்மை மிகு மண்டபத்திலிருந்து அதனைக் கண்ணுற்றாள்;

பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!

தனது புருவத்தினால் விண்ணுலகக் கூட்டத்தைக் காட்டிச் சைகை செய்திட்டாள்;

பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!

தனது வதனத்தின் பிரகாசத்தினைக் கொண்டு விண்ணுலகையும் மண்ணுலகையும் ஒளியில் மூழ்கச் செய்திட்டாள்;

பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!

அவளது அழகு மண்ணாலான மக்களின் மீது பிரகாசித்திட்டபோது,

பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!

உயிரினங்கள் அனைத்தும் மடிந்திடு-வோருக்குள்ள சவக்குழியில் ஆட்டங் கண்டன.

பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!

அவள், நித்திய காலமும் காதே கேட்டிறியாத குரலில் ஒலி எழுப்பினாள்;

பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!

“பிரபுவானவர் சாட்சியாக! எவரது உள்ளம் மதிப்பு மிக்கவரும் ஒளிமயமானவருமாகிய அராபிய இளைஞரின் அன்பின் நறுமணத்தினைக் கொண்டிருக்க வில்லையோ,

பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!

அவர், அதிவுயர் விண்ணுலகின் ஒளியை நோக்கி உயர்ந்திடவே இயலாது.”

பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!

அதன் விளைவாக அவள் தனது தோழிகளிடையே ஒருத்தியை தன்பால் அழைத்து,

பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!

“நித்தியம் என்னும் மாளிகைகளில் இருந்து பரந்த வெளியில் இறங்கி,

பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!

அவர்கள் தங்கள் உள்ளத்தின் ஆழத்தில் மறைத்து வைத்துள்ளதன்பால் திரும்பிடுவாயாக.

பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!

“தீயோனின் கைகள் ஆற்றியுள்ள கொடூரச் செயல்களின் காரணமாக, ஒளியெனும் கூடாரத்தினுள் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் இளைஞனது மேலங்கியின் நறுமணத்தினை முகர்ந்திடுவீராயின்,

பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!

நீர் மனதுக்குள்ளேயே குரல் எழுப்புவீராக, அதனால், நித்திய செல்வத்தினைக் கொண்டிருப்போர், விண்ணுலகின் அறைகளுள் வாழ்வோர், அனைவரும் புரிந்துகொள்ளவும் செவிமடுக்கவும் செய்திடுவர்;

பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!

அதனால் அவர்கள் அனைவரும் தங்களின் நித்திய அறைகளிலிருந்து கீழிறங்கி வந்து நடுக்கமுற்றிடுவர்;

பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!

உமது பற்றுறுதி என்னும் உச்சத்திலிருந்து இறங்கி வந்ததற்காக அவர்களின் கைகளையும் கால்களையும் முத்தமிடுவர்;

பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!

அதனால், ஒரு வேளை, அவர்கள் அங்கிகளிலிருந்து அன்புக்குப் பாத்திரமானோரின் நறுமணத்தினைக் கண்டிடக் கூடும்.”

பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!

அதன் விளைவாக, அன்புக்குரிய கன்னியின் வதனம் தெய்வீக அறைக்கு மேல், இளைஞனின் இறவா உடலுக்குமேல், பிரகாசிக்கும் ஒளியைப் போல் பளிச்சிட்டது.

பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!

பிறகு, அவள், விண்ணுலகையும் அதனுள் இருக்கும் அனைத்தையும் அந்தளவு ஒளிபெறச் செய்திடும் ஆடையில் கீழிறங்கி வந்தாள்.

பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!

அவள், தன்னையே எழுச்சியூட்டிக் கொண்டு, அனைத்தையும் புனிதமிக்கப் பிரதேசங்களிலும் நேர்த்திமிகுப் பகுதிகளிலும் நறுமணம் கமழச் செய்திட்டாள்.

பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!

அவ்விடத்தை அடைந்ததும், அவள், படைப்பின் அதி மையத்தில் அதிவுயரிய நிலைக்கு எழுந்திட்டாள்;

பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!

ஆதி அந்தமே அறிந்திராத நேரத்தில் அவற்றின் நறுமணத்தினை நுகர்ந்திட முயன்றிட்டாள்.

பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!

அவற்றுள், தான் விரும்பியதைக் கண்டிடவில்லை; மெய்யாகவே, இதுவே, அவரது அற்புதமான கதைகளில் ஒன்றாகும்.

பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!

அவள் கூக்குரலிட்டுக் கதறி அழுதாள்; புலம்பினாள்; தனது மேன்மைமிகு உயரிய மாளிகைக்குள் இருக்கும் தனது ஸ்தானத்திற்கே திரும்பிச் சென்றாள்;

பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!

அதற்குப் பின் மர்மமான வார்த்தை ஒன்றை உச்சரித்திட்டாள்; தனது தேன் வடியும் நாவினால் காதோடு காதாகக் கூறினாள்;

பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!

தெய்வீக வான்படையினரின் முன்பாகவும் விண்ணுலகின் இறப்பற்றக் கன்னியரின் முன்பாகவும், அழைப்பு விடுத்திட்டாள்;

பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!

பிரபுவின் மீது ஆணை! உரிமை கோரிடும் இவ்வீணர்களிடம் இருந்து யான் பற்றுறுதி என்னும் மென்காற்றினைக் கண்டிலேன்!

பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!

பிரபுவின் மீது ஆணை! இளைஞர், தனிமையானவராகவும் கைவிடப்பட்டவராகவும் நாடுகடத்தப்பட்ட தேசத்தில், இறைப்பற்றற்றோரின் கைகளில் அடைப்பட்டுக் கிடந்தார்.”

பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!

பிறகு, அவள், தன் மனதுக்குள்ளேயே கதறினாள்; அதன் பேரில், தெய்வீக சைனியங்களெல்லாம் கதறி அழுதன;

பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!

அவள் மண் தரையில் வீழ்ந்து ஆவி துறந்திட்டாள். அவளுக்கு மேலுலகிலிருந்து அழைப்பு வந்து, அவளும் தன்னை அழைத்தோனுக்குச் செவிசாய்த்திட்டது போல் தோன்றுகின்றது.

பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!

தனது அதி மேன்மைமிகு விண்ணுலகின் மையத்திலிருந்து, பாசத்தின் சாரத்தினைக் கொண்டு அவளைப் படைத்தோன் உயர்வெய்துவாராக.

பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!

அதன் விளைவாக, விண்ணுலகக் கன்னிகள் தங்களின் அறைகளிலிருந்து வெளிவந்தனர்; அப்பொழுது அவர்களின் முகங்களில் காணப்பட்டதை அதி உயரிய சுவர்க்க வாசிகளின் எந்தக் கண்ணுமே கண்டதில்லை.

பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!

அவர்கள் அனைவரும் அவளைச் சுற்றி நின்றனர்; அந்தோ! அவளது உடல் மண் தரையில் வீழ்ந்து கிடப்பதைப் பார்த்தனர்.

பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!

அவளது நிலையைக் கண்ணுறும்போது, இளைஞரால் கூறப்பட்டக் கதையில் ஒரு வார்த்தையை, ஆழ்ந்து புரிந்து கொண்டனர்; தலைப்பாகைகளை அவிழ்த்திட்டனர்; உடையைக் கிழித்துக் கொண்டனர்; முகங்களில் அடித்துக் கொண்டனர்; தங்களின் மகிழ்ச்சியை மறந்தனர்; கண்ணீர் வடித்தனர்; தங்களின் கைகளினால் கன்னத்தில் அறைந்து கொண்டனர்: மெய்யாகவே, இதுவே மர்மமான, கொடூரம் மிகுந்த வேதனைகளில் ஒன்று —

பேரொளி மயமான எந்தன் பிரபு மேன்மைப் படுத்தப் படுவாராக!

#11452
- Bahá'u'lláh